நன்மை ஏவு

தமிழர் சமயம்  


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (இல்வாழ்க்கை குறள் 48)

பொழிப்பு மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

 இஸ்லாம் 


காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). - 103:1-3

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தர்களிலெல்லாம் மிக்க மேலான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் அவர்களை தடுக்கிறீர்கள்.” (ஆலுஇம்ரான்:110)

“உங்களில் ஒருவர் ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைக் கண்டால் தனது கை மூலம் மாற்ற முயற்சிக்கட்டும். அதற்கவர் சக்தி பெறாவிட்டால் தனது நாவைக் கொண்டு மாற்ற முயற்சிக்கட்டும். அதற்குமவர் சக்தி பெறாவிட்டால் தனது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். அதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த நிலையாகும்.” (முஸ்லிம்)

“விலக்கப்பட்டவைகளிலிருந்து மக்களைத் தடுப்பவர்களுக்கும் விலக்கியவைகளைச் செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப் போட்டுக் கொண்டவர்களைப் போன்றாகும்.சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும் சிலர் கப்பலின் கீழ்த் தளத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மேல் தளத்தில் உள்ளவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ‘நாம் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் எங்கள் பகுதியிலேயே ஒரு துவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொண்டனர். மேல்தளத்தில் உள்ளவர்கள் அவர்கள் நாடியபடி செய்ய விட்டு விட்டால் அனைவரும் அழிந்து விடுவர். மாறாக மேலுள்ளவர்கள் தடுத்து நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள் மற்றவர்களும் தப்பிப்பார்கள்” (புஹாரி)

நன்மையை செய்யாமல் மற்றையவர்களுக்கு சொல்வதன் விபரீதம்

அல்லாஹ் கூறுகிறான் “விசுவாசம் கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிக பெரிதாகி விட்டது." (61:2,3)

அதே போன்று செய்யாத அமல்களை மற்றயவர்களுக்கு சொல்வதன் விபரீதத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எச்சரித்திருக்கின்றார்கள்.

“கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகில் போடப்படுவான். அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியாகிவிடும். கழுதை திருகையை சுற்றுவது போல (வேதனையால்) அவன் தன் குடலைச் சுற்றுவான். நரகவாதிகள் அவனிடம் ஒன்று கூடி ‘மனிதனே! உனக்கு என்ன ஆனது? நீ நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டிருக்கவில்லையா’ எனக் கேட்பார்கள். அதற்கவன் ‘ஆம்’ நான் நன்மையை செய்யாமல் அதை ஏவக்கூடியவனாக இருந்தேன். தீமையை செய்து கொண்டு அதைத் தடுப்பவனாக இருந்தேன்’ என விடையளித்தான். (புஹாரி முஸ்லிம்)


கிறிஸ்தவம்


சகோதரர்களே, உங்களில் பலர் போதகர்களாக ஆகக் கூடாது, ஏனெனில் போதிக்கும் நாம் மிகவும் கண்டிப்புடன் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். - (ஜேம்ஸ் 3:1)

இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும். - (நீதிமொழிகள் 27:17)

நீதியுள்ளவன் தன் அண்டை வீட்டாருக்கு வழிகாட்டியாக இருக்கிறான், ஆனால் துன்மார்க்கரின் வழி அவர்களை வழிதவறச் செய்கிறது. - (நீதிமொழிகள் 12:26)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக