நோன்பு

தமிழர் மதம்


பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. -திருமந்திரம் 1.6.2

விளக்கம்: உள்ளிருக்கும் பண்டங்களை மறைக்கும் கூரை என்ற உடல் வயதாகி விழுந்தால் அவரது பொருளை உண்ட மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள். அவர் செய்த விரதமும் அவர் பெற்ற ஞானமும் மட்டுமே அவருடன் வரும் என்கிறார் திருமூலர்.


திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. - (முதுமொழிக் காஞ்சி 5:9)

விளக்கம்: தனது தகுதிக்கேற்ற வகையில் நோற்காதது நோன்பு அல்ல.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். - நாலடியார் 57

விளக்கம் முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர்.  


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. குறள் 267

 விளக்கம்  சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும் - நோன்பு நோற்கின்றவருக்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து - குறள் 344

விளக்கம் நோன்பு செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். குறள் 160

விளக்கம் உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர் பெரியவர், ஆனாலவர் பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான். 
 

கிறிஸ்தவம்


"மோசே அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் கர்த்தருடனே இருந்தார். மேலும் அவர் உடன்படிக்கையின் வார்த்தைகளை - பத்துக் கட்டளைகளை பலகைகளில் எழுதினார்." யாத்திராகமம் 34:28 (NIV)

"நீங்கள் நோன்பு நோற்கும்போது, ​​நயவஞ்சகர்களைப் போல சோகமாக இருக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் நோன்பு நோற்பதை மனிதர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் தங்கள் முகங்களைச் சிதைக்கிறார்கள், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாகப் பெற்றனர். ஆனால் நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் பூசவும். நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்பது மனிதர்களுக்குத் தெரியாமல், கண்ணுக்குத் தெரியாத உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியாமல் உங்கள் முகத்தைக் கழுவுங்கள்; மறைவில் நடப்பதைக் காணும் உங்கள் தந்தை உங்களுக்குப் பலன் அளிப்பார்.". - (மத்தேயு 6:16-18)

      நோன்பு எல்லா மக்களுக்கும் எல்லா வேதங்களிலும் கொடுக்கப்பட்டன ஒன்று.எனவே அதை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், ஆய்ந்து அறிந்து பின்பற்றுவதே சான்றோருக்கு அழகு.

பொய் தீர்க்கதரிசிகள்

சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள்


யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்

 

திருமூலர் கூறும் பொய்க் குருக்கள்


குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கிய
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே
அணிகுவார் கரன்யாசம் அங்கரனியாசம்
ஆனபின்பு கை அலம்பிக் கண் மூக்குயந்து
முணிகுவார் முண்முணென்று தொட்டுப் பின்பு
முழம் அளவு தாவத்தைக் கையில் தாங்கி
பணிகுவார் கை கூப்பி சூட்டிக் கொள்வார்
பட்டதனால் மூடி ஜெபம் பண்ணுவார் பின்
குணகுணென மந்திரத்தைக் குளறுவார்பின்
குருக்கள் என்று உலகோர்கள் மகிழுவாரே 285.  

விளக்கம்: பூஜை கிரமங்களை ஒரு சடங்காக செய்யும் ஒருவரைப் பற்றி அகத்தியர் இங்கே கூறுகிறார். இந்த மனிதர் அங்கன்யாசம் கரன்யாசம் ஆகிய தூய்மைப்படுத்திக்கொள்ளும் சடங்குகளை செய்து முழ நீள ருத்திராட்ச மாலையை அணிந்துகொண்டு முணுமுணுவென்று மந்திரத்தைச் சொல்லியவாறு தன்னை பட்டால் மறைத்துக்கொண்டு மந்திரங்களைக் கூறுவர். இவ்வாறு பூஜையை அனைவரையும் கவரும் ஒரு சடங்காகச் செய்யும் அவர்களை உலக மக்கள் பெரிய குருக்கள் என்று கூறி மகிழ்வர் என்கிறார் அகத்தியர்.

உலகோர் பிரமிக்கக் கண்ணை மூடி
ஓம் நம சிவாயமென்று தியானம் செய்வார்
கலகோரை தெட்சணை தாம்பூலம் கேள்ப்பான்
கருத்துடனே நல்முகூர்த்தம் போகுதென்பார்
அலகோரை விரதம் யார் என்று கேட்பான்
ஆராரிவார் பேர் வாரும் என்பன்
இலகோரைக் கைபிடித்து திரைக்குள் வைத்து
எழுத்தஞ்சும் அவர்க்குரைத்துப் பொருள் கேட்பாரே 286.  

பொய் குருக்களைப் பற்றி இங்கு அகத்தியர் மேலும் கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல நமசிவய என்று முணுமுணுத்து விட்டு “இங்கே யார் விரதம் செய்யப்போகிறார்?” என்று உலகோரைப் பார்த்துக் கேட்பார். அவர்களை அருகில் அழைத்து ஒரு திரை மறைவில் நமசிவாய ஐந்தெழுத்தை அவர்க்கு மந்திர தீட்சை என்று ஓதி அவரிடம் பொருள் தருமாறு கேட்பார்.

கேட்பாரே (உலக) தாரை உடல் பொருள் ஆவித்தான்
கிருபையுடன் தந்துவிட்டால் சண்ணுவான்பின்
கேட்பானே சோமன் சோடாடு மாடு
கிருபையுடன் கொடுத்தவருக்கு வருத்திச் சொல்வான்
கேபானே பெண்டிர்க்குச் சேலை பூசல்
கிருகையிலே தவறாத புத்தி சொல்வான்
கேட்பானே வேதாந்தம் பாரா சந்தம்
கிருபையுடன் வேதம் சொல் உரைசொல்வானே 287.  

மேற்கூறிய பொய் குருக்களைப் பற்றி இப்பாடல் தொடருகிறது. அத்தைய குருக்கள் மக்களிடம் அவரது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பறிக்க முனைவான். மக்களுடன் சண்டைபிடித்து அவற்றைப் பெறுவான். மக்களிடம் தானமாக பல பொருட்களை- பாதணிகள், ஆடுமாடுகள், பெறுவான். அவர்களுக்கு பெரும் தொல்லை தந்தபிறகு அவர்களுக்கு ஐந்தெழுத்தைக் கூறுவான். பெண்களுக்காக சீலை, ஆபரணங்கள் கேட்பான். அவற்றைக் கொண்டு வந்தவர்க்கு பெரிதாக அறிவுரை கூறுவான். வேதம் வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக உபன்யாசம் செய்வான். இந்தக் கருத்து அடுத்த பாடலிலும் தொடர்கிறது.

உரை சொல்வான் பொருள் வாங்கிப் போக மட்டும்
உத்தமனே மனை விடுத்தால் மனதுள் வையான்
கரைசொல்வான் பின் ஒருக்கால் வந்தானானால்
காதலைந்து எழுத்துக்கோ நிலைதான் என்பான்
இரைதேடும் பக்ஷியைப் போல் இவ்வண்ணம் தான்
இறந்திறந்து இவன் மாண்டான் சீஷன் கூட
பரையேது சிவம் ஏது என்பான் பேயன்
பஞ்செழுத்தைக் காட்டி அவன் பலுக்குவானே 288.  

மேலே கூறிய பொய் குருக்கள் இவ்விதம் பொருள் பெறவே பல உபநியாசங்களையும் நிகழ்த்தி தனது நிலையை உயர்த்திக்கொள்ளவே முயல்வர். இரைதேடி அலையும் பறவையைப் போல எப்போதும் தனது நிலையில் முன்னேற்றம் என்ற குறியையே விடாமல் பற்றிக்கொண்டும் தானும் இறப்பர், தனது சீடரையும் இந்த முடிவை நோக்கியே அழைத்துச் செல்வார். இந்த பேய்ப் பிறவிகள் பரை என்றால் என்ன சிவம் என்றால் என்ன என்று கேட்பவர்களாக ஐந்தெழுத்து மந்திரத்தைக் காட்டி பிறரை ஏய்த்து வாழ்வர்.

பலுக்கினதால் என்ன பயன் அடிதான் முன்னே
பத்தினதும் லாபம் ஓர் லாபம் கேளு
கிலுக்கிமிகத் திரியாமல் காலந்தோறும்
கிரியையிலே நில்லென்றான் இதுவே லாபம்
குலுக்கி நீ திரியாதே அதனுள் தானே
குருமொழிதான்போகுதென்று மலைத்திடாதே
வலுத்து நீ கிரியை விட்டு யோகம் பாரு
வசப்பட்டால் ஞானத்தில் மாட்டும் தானே 289.  

மேலே கூறியபடி குலுக்கித் திரிவதால் எவ்வித பயனுமில்லை என்றும் அதனால் பெறக்கூடிய ஒரே பயன் அடி மட்டுமே என்கிறார் அகத்தியர். பொய்க்குருக்கள் மக்களை கிரியைகளை மட்டுமே செய்து கொண்டிருக்குமாறு கூறுவார். ஏனெனில் அதனால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் கிரியையுடன் நின்றுவிடக் கூடாது என்கிறார் அகத்தியர். ஒருவர் கிரியையை அடுத்து யோகத்தை மேற்கொள்ளவேண்டும். அப்போது ஞானம் தானாக ஏற்படும்.

மாட்டுவான் உலக குரு மயக்கம் செய்து
மாளமட்டும் கிரியையிலே மாளச் சொல்வான்
காட்டுவான் அந்த மொழி வேதச் சொல்லில்
கண்டு நீ மகிழாதே குருவைத் தேடு
சூட்டுவார் ஞானகுரு வந்தாரானால்
சொல்லுவார் கிரியையெல்லாம் தள்ளச் சொல்லி
பாட்டிலே இவர் அனந்தம் பாட்டுச் சொல்வார்
பசுந்த மண்ணின் தண்ணீரின் பயன் சொல்வாரே 290.  

உலக குரு பசு பதி பாசம் என்பதைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டார். அவர் உலக மக்களை கிரியையை மட்டும் சாகும்வரை செய்துகொண்டிருக்குமாறு கூறுவார். தனது வார்த்தைகளுக்கு வலுவேற்ற அவர் வேதவாக்கியன்களைக் காட்டுவார். அந்த வார்த்தைகளைப் பார்த்து மகிழ வேண்டாம், சரியான குருவைத் தேடு என்று அகத்தியர் புலத்தியரை/நம்மை எச்சரிக்கிறார். தேடலுக்குப் பிறகு தகுந்த ஞான குரு வாய்த்தால் அவர் கிரியையைத் தள்ளிவிட்டு யோகத்துக்குச் செல்லுமாறு கூறி பல பாடல்களைப் பாடுவார் என்கிறார் அகத்தியர். இவ்விதத்தில் அகத்தியர் தான் ஒரு ஞானகுரு என்று நமக்குக் குறிப்பால் உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது! அந்த ஞான குரு பசும் மண் தண்ணீர் ஆகியவற்றைப் பற்றிய உண்மையைக் கூறுவார் என்கிறார் அகத்தியர். தண்ணீர் என்பது ஆணின் விந்துவையும் மண் என்பது அந்த விந்து வளரும் இடமான கருப்பையையும் குறிக்கும் என்று நாம் முன்னமே பார்த்தோம்.

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே. - அகத்தியர் பாடல் 11

கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு


பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே. 
 

சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்


உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே

பதஞ்சலியார் கூறும் பொய் குரு


கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேன தொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே

காகபுஜண்டர் கூறும் பொய் குரு


பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவிபணம்
பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !

கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு


புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.
பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.

பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப் பேசிப்
பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித சாலங் கற்றே

ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?
ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :
மோசமது போகாதே முக்கால் பாரே ! 
 

 பாம்பாட்டி சித்தர் கூறும் பொய் குரு


பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே !

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே :
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே !
கொண்ட கோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார் ;
கூத்தாடிக்கூத் தாடியே நீ ஆடு பாம்பே

வள்ளுவர்கூறும் போலித் துறவிகள்

அக்காலத்தில் தவம் செய்யும் துறவிகளில் சிலர், தலைமயிரை நீளமாக வளர்த்துச் சடையாகப் பின்னி, முடியாகக் கொண்டிருந்தனர். சிலர் தலை மயிரைப் போக்கி மொட்டையாக இருந்தனர். இத்தகைய புற வேஷம் கொண்டு வாழ்ந்த துறவிகளுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருந்தது. மன்னனும், வலிமையும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்களைக் கண்டு அஞ்சினான். பல பேரரசுகளின் வீழ்ச்சிக்குத் துறவிகளே காரணமாக இருந்தனர். வள்ளுவர் இத்தகையப் போலித் துறவறத்தை, போலித் துறவிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்.

உலகில் உள்ளோர், பழித்துச் சொல்லக் கூடிய தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே தவம் செய்யும் துறவிகளும், உயர்ந்தோரும் செய்யும் செயல். இதை விட்டு விட்டு, வீணாகச் சடை வளர்த்தலும், மொட்டை அடித்தலும் ஆகிய புறச் சடங்குகள் எதற்கு? என்று வினவுகிறார் வள்ளுவர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (குறள் எண்: 280)

 (மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக வளர்ப்பது)

உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள் எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர்.

இன்றைக்கும், அறிவியலில் முன்னேறிய இந்தக் காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள் போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே மாசு கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப் போன்றோர் வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை அடையாளம் காட்டவே, வள்ளுவர், மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார்.  
 

அறநெறிச்சாரம் கூறும் பொய் குருக்கள் 


பாசண்டி மூடம் பாடல் - 63 
 
தோல்காவி சீரைத் துணிகீழ் விழஉடுத்தல்
கோல்காக் கரகம் குடைசெருப்பு - வேலொடு
பல்என்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப்படும்.

விளக்கவுரை தோலையும், காவியாடையையும், மரவுரியையும் துணியையும், கீழே விழும்படி உடுத்திக்கொள்ளலும் தண்டையும், காவடியையும், கமண்டலத்தையும், குடையையும், செருப்பையும், வேலையும், பல்லையும் எலும்பையும் தாங்குதல் ஆகியவை புறச் சமயங்களின் அறயாமையாகப் பொய்வரால் கூறப்படும்.

பயன் அற்ற வெளிக்கோலம் பாடல் - 64

ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
மாஅரணம் இன்றி மலைவானும் - தாஇல்
கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு.

விளக்கவுரை கேடயம் இல்லாது பகைவரைக் கொல்கின்ற வாளும், யானைப்படையும், தேர்ப்படையும், குதிரைப்படையும், அரணும் இல்லாமல் போர்செய்யும் வீரன் செயலும், குற்றம் இல்லாத கழுதையின் மீது ஏறிச் சென்றும் சுமையைத் தன் தலையில் தாங்கிச் செல்பவள் செயலும் போல் போலித் துறவியர்க்கு அவர் மேற்கொண்டுள்ள வேடமும் பயன் அற்றதாகும்.
 

இயேசு கூறும் போலி போதகர்கள் 

இருந்தாலும், பூர்வ காலத்தில் மக்கள் மத்தியில் போலித் தீர்க்கதரிசிகளும் வந்தார்கள், அப்படியே உங்கள் மத்தியிலும் போலிப் போதகர்கள் வருவார்கள். அழிவை ஏற்படுத்துகிற மதப்பிரிவுகளை அவர்கள் தந்திரமாக உண்டாக்குவார்கள். அதோடு, தங்களை விலைகொடுத்து வாங்கியb உரிமையாளரை ஒதுக்கிவிட்டு, சீக்கிரத்தில் தங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்வார்கள். 2 பேதுரு 2:1-2

23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன். 26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும். (மத்தேயு 24:23-28
 

எரேமியா கூறும் பொய் தீர்க்கதரிசி  

“‘கர்த்தர் எங்கே?’ என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுது கொண்டார்கள்.” - (எரேமியா 2:8)  

மோசஸ் கூறும் பொய் தீர்க்கதரிசி  

உபாகமம் 13 பொய்த் தீர்க்கதரிசிகள்

1 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். 

2 அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். 

3 அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். 

4 உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! 

5 அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான்.  

 

ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான குழப்பவாதிகள் தோன்றாதவரை மறுமைநாள் வராது, அவர்களில் ஒவ்வொரு வரும் தம்மை “அல்லாஹ்வின் ரசூல்” என்று வாதிடுவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூர்கள் : புகாரீ 3609, திர்மிதி 2144

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “தூதுத்துவம் (ரிசாலத்) நபித்துவமும் (நுபுவ்வத்) முற்றுப்பெற்றுவிட்டன. (நானே இறுதித் தூதர் ஆவேன்) எனக்குப் பின் எந்த ரசூலும் இல்லை எந்த நபியும் இல்லை” என்று கூறினார்கள். நூல் : திர்மிதி 2198

நபியே! கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனை விட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப் படாமலிருக்க தனக்கும் வஹீ வந்தது என்று கூறுபவனை விட அல்லது அல்லாஹ் இறக்கியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?  குர்ஆன்: 6:93

தெய்வத்தின் வரையறை

தெய்வத்த்துக்கு நாம் வரையறை தர முடியுமா? முடியாது.

ஏன்? நம்மில் தெய்வத்தை கண்டவர் யாரும் இல்லை.

பிறகு தெய்வத்தை எப்படி அறிவது? அவன் வழங்கிய மறைநூலில் அவனே அவனை எப்படி வரையறுக்கிறான் என்பதை கற்று அறிவதன் மூலம் தெய்வத்தை அறியலாம்.

அவன் வழங்கிய மறைநூல் எவை என்று எவ்வாறு அறிவது? அவற்றை அவனது மறைநூல்கள் மூலமே அறிய முடியும். இதை தேடி கற்று தெளிவத்தைத்தான் கல்வி என்பர்.  

எத்தனை தெய்வம் உண்டு? உண்மை தெய்வம் ஒன்று மற்றதெல்லாம் பொய் தெய்வங்கள் - அதையும் மறைநூல்கள் வாயிலாகவே அறிய முடியும். தெய்வத்தின் வரையறையாக தெய்வமே கூறியவற்றை சரியான மறைநூல்கள் வாயிலாக அறிய முடியும்.

இந்நூலின் அடுத்து வரும் பக்கங்கள் இதை விவரித்து கூறுகிறது. 


சரி பிழை-களை வரையறுப்பது யார்?

தமிழர் மதம்

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - நல்வழி 38

விளக்கம்நல்லது இது என்றும், கெட்டது எது என்றும்இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் அதுதான் உண்மை என்றும் எண்ணாதே. கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது. 

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)

விளக்கம்புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!

இஸ்லாம்


(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா? (குர்ஆன்:90:10)

"அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?'” (குர்ஆன் 10:59)

கிறிஸ்தவம் & யூத மதம்


எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17