பிறர்மனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறர்மனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிறர்மனை விரும்பாமை

தமிழர் சமயம்:


அறநெறிச்சாரம்:

பெண்விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாதுஊன்
உண்விழைவார்க்கு இல்லை உயிர்ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தம்விழைவார்க்கு இல்லை தவம். (பாடல் - 104)

விளக்கவுரை அயலார் மனைவியை விரும்புபவர்க்கு மிக்க தூய்மை இல்லை. அருளை விரும்பாது புலால் உண்பதை விரும்புபவர்க்கு உயிரைக் காக்கும் தன்மை இல்லை. எப்போதும் அயலவரின் நாட்டை விரும்புபவர்க்கு அறம் இல்லை. பெருமைக்குத் தகாத செயல்களைச் செய்வதால் தவ ஒழுக்கம் உண்டாகாது. 
 
கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையில்
செல்வதூஉம் செய்வன கால்அல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பால்சென்று
அறவுரை கேட்பிப்ப கால். (பாடல் 202)

விளக்கவுரை மற்ற உயிரைக் கொல்லவும் பிறர் பொருளைத் திருடவும் அல்லாது பிறர் மனைவியை விரும்பிக் கூடச் செல்வதற்கும் உதவுபவை கால்கள் அல்ல; துன்பம் தரும் பிறவிப் பிணியைப் போக்கும் பெருந்துறவியா¢டம் போய் அவர் கூறும் அறிவுரையைக் கேட்கச் செய்வன கால்கள் ஆகும்.

ஏலாதி:

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. (ஏலாதி 42)

விளக்கவுரை பிறிதோருயிரைக் கொல்லாது, கொல்லுதற்குடன்படாது, கொல்லுவா ரினத்தைச் சேராது, பிறர் மனையாளை விரும்பாது, ஊனுண்டலோடு, கலவாது,பிறருடைய குடிகளை நிறுத்திக் கூழை யீந்தவன் கொல்யானையேறி மண்ணையாண்டிடப்படுவன்.

இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. ஏலாதி 45 
 
விளக்கவுரை தானொழுகுநெறியைத் தப்பாது பிறர்க்கு இன்னாதனவற்றைச் செய்ய விரும்பாது, பிறன் மனை பிழையாது, பிறர் பொருள் வௌவாது தானொழுகுங்கா லொழுகி, குற்றமில்லாத வுணவினை யீவான், அரசாண்டு பகைவரை விரைந்து நீக்கி வெல்வான்.

திரிகடுகம்:

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர். . . . .[திரிகடுகம் 19]

விளக்கம்: யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.  
 
நல்வழி:

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். - நல்வழி 36

விளக்கம் நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.  

குறள் : பிறன் இல் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்: அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்: அறத்தின் பக்கம் நிற்பவர் யாரும் பிறன் மனைவியை நாடி நிற்கும் பேதையர் இல்லை.

143. விளிந்தாரின் வேறல்லார் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.

பொருள்: நன்கு தெரிந்தவர் வீட்டில் தீமை ஏற்படுத்துபவர் பிணத்துக்கு ஒப்பானவர்

144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பொருள்: தன் தவறான செயலைப் பற்றி திணையளவும் ஆராயாமல் பிறன் மனையில் நுழைபவருக்கு எவ்வளவு துணை இருந்தும் பழியிலிருந்து மீள முடியாது

145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பொருள்: எளிதாக தன் இழி செயலை நிறைவேற்றலாம் என அடுத்தவர் வீட்டிற்கு செல்பவருக்கு என்றும் விலகாத பழி நேரும்

146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்: அடுத்தவன் மனைவியை கவர நினைப்பவனுக்கு வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி அகிய நான்கும் விலகாது

147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பொருள்: அறத்தினின்று வழுவாத இல்வாழ்க்கை நடத்துபவன், பிறன் மனைவியை நாடுவதில்லை.

148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்: பிறர் மனைவியை தவறாக நோக்காமை சான்றோருக்கு பேராண்மை மட்டுமன்றி அறன் சார்ந்த ஒழுக்கமும் ஆகும்.

149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பொருள்: கடல் சூழ் உலகில் பிறன் மனைவியின் தோள் தீண்டாதவரே நம் நலத்துக்குரியவர் ஆவார்.

150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பொருள்: அறன் வழி நில்லாவிட்டாலும் பிறன் மனைவியை வேண்டாமை நன்று.

திருமந்திரம்  - 8. பிறன் மனை நயவாமை

1 ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே.

வி. உரை: ஊரார் உறவினர் உற்றார் பெற்றோர் சான்றோர் ஆசான் தெய்வம் சான்றாகப் பொற்றாலி புனைந்து கைக்கொண்ட மனையாளே ஆத்த மனையாளாவள். ஆத்த - புனைந்த; கட்டிய. அத்தகைய கற்பு நிறை ஆர்ந்த பொற்புறு மனையாள் மதிற்காவலும் வாயிற்காவலும் ஆகிய புறக் காவலமைந்த வீட்டகத்துத் தங்கியிருக்கவே, பிறரால் அப் புறக் காவலுடன் அகக் காவலாகிய நிறைக்காவலும் சேர்ந்து காக்கப்படும் பிறன் மனையாளைக் காமுறுவர் விளைவதறியாக் காளையர். முப்பழங்களுள் ஒன்றாய் இன்பப் பகுதியாய்க் காணப்பெறுவது பலாப்பழம். அது செவ்வியுறக் காய்ந்து நன்கு கனிந்தால் மிக்க இன்பந்தரும். அத்தகைய பலாமரத்தின் கனியை எவ்வகை அச்சமுமின்றிப் புகழும் புண்ணியமும் பெருகவும் நிலையாம் சிவனடி எய்தவும் நுகரலாம். அவ் இன்பத்தை உலைவின்றி நுகரமாட்டாத கொடியோரும் சிலராவர். அவர் எக்காலமும் நீங்கா அச்சமும், பெருகும் பழியும் பாவமும், நரகிடை வீழ்தலும், இன்ப மின்மையும், துன்ப நீங்காமையும், பிறப்பினைத் தருதலும் ஆகிய நுகர்வல்நுகர்வை நுகர்வதற்கு முயல்வர். அஃது ஈச்சம் பழத்தினை உண்ண விரும்பிக் கிட்டாது இடருற்று எய்த்தலை ஒக்கும்.

3 பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே.

உரை: அன்பும் அருளுமின்றி முறை கடந்து பொருள் அவாவினால் குடிகொன்று இறைகொள்ளும் கோமகனாகிய கண்டன் எனப்படும் மன்னனும் பிறன் மனைவிழைந்து அறந்திறம்பி மயலுற்று வாழ்வான். அதுபோல் மெய்யுணர்வு எழாவண்ணம் அறிவினை அடக்கி ஆணவ முனைப்பாம் இருளினூடே மின்னொளி போன்று தோன்றிய புல்லறிவாளரும் பிறன்மனைவேட்டு மயலுறுவர். அத்தகைய பெண்டிரும் கற்பழிந்து பழிசேர் இழிகுலத்தவராவர். அறந்திறம்பிய செல்வமும் சிற்றினச் சார்பாம் புல்லறிவும் மருள் கொள்ளவும் மாதர் மயலுறவும் செய்யும் கருவிகளாகும்; இத்தகையோர் தாமாகவே மருள்கொண்ட சிந்தையை மாற்றிக் கொள்ளும் வன்மையிலாதவராவர்.
 
நாலடியார் : பிறர்மனை நயவாமை

81. அச்சம் பெரிதால்; அதற்கு இன்பம் சிற்றளவால்;
நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால்; நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால்;-பிறன் தாரம்
நம்பற்க, நாண் உடையார்!

(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ?

(க-து.) காமத்தால் வரும் அச்சம் பொ¢து! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!
 
82. அறம், புகழ், கேண்மை, பெருமை இந் நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா; பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும், பகை, பழி, பாவம் என்று
அச்சத்தோடு இந் நாற் பொருள். 

(பொ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ் தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா ; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.

(க-து.) புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் வந்து சேரும்.

83. புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்?  

(பொ-ள்.) புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?

(க-து.) பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?

84. காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்;
ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட
இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு. 

 (பொ-ள்.) காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி - தீயொழுக்க முடையோய் ; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.

 (க-து.) அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!

85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,
அலி ஆகி, ஆடி உண்பார். 

(பொ-ள்.) செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர்.

(க-து.) சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.
 
86. பல்லார் அறியப் பறை அறைந்து, நாள் கேட்டு,
கல்யாணம் செய்து, கடி புக்க மெல் இயல்.
காதல் மனையாளும் இல்லாளா, என், ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு?  

(பொ-ள்.) நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ?
 
(க-து.) பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்)

87. அம்பல் அயல் எடுப்ப, அஞ்சித் தமர் பரீஇ,
வம்பலன் பெண் மரீஇ, மைந்துற்று, நம்பும்
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு-பாம்பின்
தலை நக்கியன்னது உடைத்து. 

(பொ-ள்.) அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித் தம் உறவினரினின்றும் நீங்கி வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று - அயலான் மனைவியைச் சேர்ந்து களிப்படைந்து, நம்பும் நிலைமை இல்நெஞ்சத்தான் துப்புரவு - எவராலும் நம்புதற்குரிய நிலைமையில்லாத நெஞ்சத்தையுடையானது அக் காமநுகர்ச்சி, பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து - பாம்பின் மழமழப்பான தலையை நாவினால் தடவி இன்புற்றத்தைப் போன்ற தன்மையையுடையது.
 
(க-து.) அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது)..

88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா,
உரவோர்கண் காம நோய்,-ஓஒ கொடிதே!-
விரவாருள் நாணுப்படல் அஞ்சி, யாதும்
உரையாது, உள் ஆறிவிடும். 

(பொ-ள்.) பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும்.
 
(க-து.) காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவா¢டம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தா¢டம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்

89. அம்பும், அழலும், அவிர் கதிர் ஞாயிறும்,
வெம்பிச் சுடினும், புறம் சுடும்; வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப்படும்.  

(பொ-ள்.) அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச் சுடினும் புறம் சுடும் - வெதும்பிச் சுட்டாலும், வெளிப்பொருளையே சுடும், வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப்படும் - அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும்.
 
(க-து.) அம்பும், தீயும், ஒளிவீசும் கதிர்களையுடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்திச் சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத்தக்கதாம்.

90. ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்
குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி
ஒளிப்பினும், காமம் சுடும்.

(பொ-ள்.) ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள் குளித்தும் உயலாகும் - அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள் குளிப்பினும் காமம் சுடும் குன்று ஏறி ஒளிப்பினும் காமம் சுடும் - நீருள் மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும்.
 
(க-து.) ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும்; மலைமீது ஏறி ஒளிந்துகொண்டாலும் அது சுட்டு எரிக்கும். 
 

யூதம்:


பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான்.  (உபாகமம் 5:21)

15-16 உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. 17 உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே.18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. 19 அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். 20 ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.  (நீதிமொழிகள் 5:15-20)

அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார். (யாத்திராகமம் 20:17)

5 என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப்பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து. 2 பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய். 3 அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். 4 ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். 5 அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். 6 அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல். (நீதிமொழிகள் 5: 1-6)

கிறிஸ்தவம்: 

 கற்பைக் குறித்த போதனை

27 ,“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று. (மத்தேயு 5:27-29)

இஸ்லாம்: 

(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (17:32)

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்’ என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் ‘நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்’ என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி) (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ) 
 
திருமணம் ஆனபின்பு விபசாரம் செய்பவருக்கு (ஆண் பெண் இருவருக்கும்) தண்டனை கல்லெறி கொள்ளப்படுத்தல் - நூல்: புஹாரி 3635

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 424)

முடிவுரை 

இன்று பாலியல் உறவு தொடர்பான பல்வேறான அசிங்கமான நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளது.

  • நடைமுறையில் பிறருடைய மனைவியியுடன் பலர் உறவு வைத்து இருப்பதை இந்த நூல்கள் கண்டித்து பேசுவதுடன் அதன் விளைவுகளை கூறும் அதே நேரத்தில், இதுபோன்ற உறவுகள் இருவரும் சம்மதித்து செய்தால் தவறல்ல என்று இன்றைய சட்டம் சொல்கிறது. 

  • திரைப்படத்தில் இதுபோன்ற உறவுகள் தமாஷாக காட்டப்படுகிறது. 

  • "ஆன்டி வெறியன்" என்று சினிமாவில் பிரபலப்படுத்துகிறார்கள், 

  • யூடூயூபில் எடுக்கப்படும் பல காணொளிகள் பிறரின் மனைவியை எப்படி கவர்வது என்ற அமைப்பில் தான் எடுக்கப்படுகிறது. 

  • திருப்தி இல்லா மனைவிகளுடன் பேச வென்றுமா என்று விளம்பரங்கள் இணையத்தில் வருகிறது, அதற்கு என்று இன்று மொபைல் ஆப் கள் உள்ளன. 

  • ஆபாச படங்களின் தாக்கம் வேறு. 

இந்த பாவத்தை செய்யும் தனிமனிதனின் எதிர்காலம், மறுமை வாழ்கை மிக மோசமாக அமையும் என்பதைத் தாண்டி, இது எப்படிப்பட்ட சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சீரழியும் சமுதாயம் நமது சந்ததிகள் வாழப்போகும் சமுதாயம் என்பதை நினைவில் கொள்வோம்.