விருந்தோம்பல்

தமிழர் சமயம்  


'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்' - ஔவையார் தனிப்பாடல்கள்

பொருள்: செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன். திரிகடுகம் 64

பொருள்: விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும். ஏலாதி 48

பொருள் பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.

இஸ்லாம் 


“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்” என்று கேட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் (அபூதல்ஹா (ரலி) எழுந்து) , “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.
அதற்கு அவர் (உம்மு சுலைம்) மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், “(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாüக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்” என்று சொன்னார்.
அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தüத்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக்கொண்டான்’ என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…” எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4889)

 கிறிஸ்தவம் 

தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். - தீத்து 1:8 

என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.  - உன்னதப்பாட்டு 2:4

14 கருத்துகள்:

  1. தொல்காப்பியம் - 231
    "விருந்தே தானும்புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"

    உரை:
    வீட்டிற்கு வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளிப்பது உயரிய பண்பாகும்.
    பொருநராற்றுப்படை,74-78

    "கேளிர்போல கேள் கொளல் வேண்டிவேளாண்
    வாயில் வேட்பக் கூறிகண்ணில் காண நண்ணுவழி
    இரீஈபருகு அன்ன அருகா நோக்கமொடு"

    உரை:
    விருந்தினர்களிடம் நண்பர்கள் போல உரையாடி, அவர்கள் நமக்கு நெருக்கமானவர்கள் என்று உணர வைத்து , " ஈன்ற கன்றிடம் காட்டும் பசுவின் அன்பைப் போல " அவர்களுக்கு அன்பைப் பரிமாறி எலும்பு குளிரும்படி அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் என்று விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கூறுகிறது


    குறள் 82:

    "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெ
    னினும் வேண்டற்பாற் றன்று"

    உரை:
    விருந்தினர் வீட்டின் வெளிய இருக்க, சாவாமருந்தாகிய அமிழ்தமே வைத்திருந்தாலும் அதை தானே உண்பது நல்ல பழக்கம் அல்ல.
    பெரும்பாணாற்றுப்படை

    ''மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
    மகமுறை மகமுறை நோக்கி,
    முகன்அமர்ந்துஆனா விருப்பில் தான்நின்று ஊட்டி !''

    உரை:விண்மீன்கள் போல பல வகை உணவுகளை கிண்ணத்தில் நிரப்பி,
    விருந்தினரின் விருப்பத்தை அறிந்து அவர்கள் விரும்பியதை அன்போடு நோக்கி பரிமாற்ற வேண்டும்.
    புறநானூறு - 316

    "நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன்;
    இன்றுஇக்கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்".

    உரை:

    நேற்று வந்த விருந்தினருக்கு தலைவன் , தன் குடிப்பொருளான வாளை விற்று விருந்து படைத்தான். இன்று நான் ( தலைவி) யாழைப் பணையமாக வைத்து விருந்து படைத்தேன்" என்று வறுமையிலும் விருந்தோம்பல் படைத்தனர்.

    http://lifeoftamil.com/hospitality-of-tamil-culture/#:~:text=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%2D%20231%20%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4,%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.

    பதிலளிநீக்கு
  2. சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்
    - நவம்பர் 18, 2008
    சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி
    இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்
    சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.
    பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,
    அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே
    பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து
    வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
    'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்
    குறித்து வழங்கலாயிற்று.
    'விருந்து தானும்
    புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)
    என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.
    இல்லற நெறி
    'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.
    விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்
    பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.

    தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.
    \
    'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'(கற்பியல்,11)

    இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப
    வேண்டும் என்பதை,இளங்கோவடிகளும்,கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.

    கண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்த நிலையில்,

    அறவோர் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை(சிலம்பு)

    எனக் கூறி வருந்துகின்றாள்.இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று
    விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம்

    என்பதும்,முன்னோர் வகுத்த முறைப்படி விருந்தல் வேண்டும் என்பதும் புலனாம்.

    இராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால்,அவர்களை ஓம்ப இயலா
    நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனக் கலக்கமுறுகிறாள்

    'விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்'
    என்பது கம்பர் கூற்று.

    விருந்திற்கான காரணம்

    பழங்காலம் உணவு விடுதிகள் இல்லாத காலம்.வெளியூர்க்குச் செல்வோர் பலநாளுக்கு
    வேண்டிய உணவினைக் கொண்டு செல்ல இயலாது.செல்வர்களும்,வணிகர்களும் தேர்களிலும்,
    மற்ற ஊர்திகளிலும் செல்லும் போது உணவிற்குத் தேவையானப் பொருள்களைக் கொண்டு செல்ல
    முடிந்தது.மற்றவர்கள் உணவையோ,உணவுப் பொருள்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையிருந்தது.

    அதனால் உணவின்றி வருந்துவோருக்கு உணவளித்தல் இன்றியமையாத அறமாகப் போற்றப்பெற்றது.
    இக்காலத்தில் உணவு விடுதிகள் பெருகியுள்ளன.எப்பொருள் எங்கு வேண்டுமென்றாலும்
    பெறலாம்.பல நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்படியான பல உணவு வகைகள் கிடைக்கின்றன.

    அதனால் இப்பொழுது விருந்தோம்பல் என்பது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும்,
    பயனை எதிர்பார்த்துச் செய்வதற்காவும் மேற்கொள்ளப்பெறுகிறது.இக்காலத்தில் புதியவர் யாரையும்
    நம்பும் படியான சூழ்நிலையில்லை.'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற நிலைதான் இன்று காணப்பெறுகின்றது.

    பதிலளிநீக்கு

  3. அதனால் விருந்தோம்பவும் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    விருந்தோம்பும் முறை
    விருந்தை விருந்தினர் மனம் மகிழும்படி ஓம்புதலே சிறப்பு.மலர்கள் வெம்மையால்
    வாடும்,அனிச்சம் மிக மென்மையானது ஆதலால் முகர்ந்தாலே அது வாடிவிடும்.விருந்தினர் மிக
    மென்மையானவர்கள்,சேய்மைக்கண் முகம் திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர்,

    மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து(குறள்,90)

    என்று குறள் கூறும்.இக்குறளுக்குப் பரிமேலழகர்,விருந்தினரைச் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும்
    அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும்,அவை பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலுமென விருந்தோம்புவாருக்கு
    இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக் கண்ணே வாடி நீங்குதலின் தீண்டிய வழியல்லது
    வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்று விளக்கம் தருவர்.இதனால் விருந்தோம்புவாருக்கு முதற்கண்
    இன்முகம் வேண்டுமென அறியலாம்.

    விருந்தினர் ஓம்பும் முறையைப் பொருநராற்றுப்படை விரித்துக் கூறும்.
    விருந்தினரிடம் நண்பனைப்போல உறவு கொண்டு,இனிய சொற்களைக் கூறி,கண்ணில் காணும்படி
    தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து,கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம்
    அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் எனப் புகலும்.

    கேளிர்போல கேள் கொளல் வேண்டி
    வேளாண் வாயில் வேட்பக் கூறி
    கண்ணில் காண நண்ணுவழி இரீஈ
    பருகு அன்ன அருகா நோக்கமொடு (பொருநராற்றுப்படை,74-78)


    பல வகையான உணவினை விண்மீன்கள் போல கிண்ணத்தில் பரப்பி விருந்தினரை அன்போடு
    நோக்கி,அவர்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்து ஓம்ப வேண்டும் என்பதைப் பெருபாணாற்றுப்படை வழி
    அறியலாம்.

    மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
    மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து
    ஆனா விருப்பின் தானின்று ஊட்டி (477-479)
    ' தானின் றுட்டி' என்ற அடியை நோக்குழி, விருந்து படைப்பவரே அருகில் இருந்து,

    விருந்தினர் விரும்பும் உணவினை வழங்க வேண்டும் என்பதைக் காணலாம்.
    அதியமான் ஒருநாள் சென்றாலும், இருநாள் சென்றாலும்,பலநாள் பலரோடு சென்றாலும்,

    முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை ஔவையார் பாடல்
    மூலம் அறியலாம்.

    இக் காலத்தில் மகளிர் விருந்தினரை வரவேற்று ஓம்புதலைப் பாவேந்தர் பாரதிதாசனும்

    ' பொன்துலங்கு மேனி
    புதுமெருகு கொள்ள மேனி
    அன்றலர்ந்த செந்தா
    மரையாக-நன்றே
    வரவேற்பாள்' (குடும்ப விளக்கு)

    விருந்தோம்பலின் சிறப்பு

    'மருந்தே யாயினும் விருந்தோடு உண்' என்ற ஔவையின் வாக்குக்கேற்ப வாழ்ந்த இனம் தமிழினம்.
    ' விழுப்புண் படாத நாறலெல்லாம் வீழ்நாள்' என்று மறவன் கருதுவது போல விருந்தினர் வாரா நாளெல்லாம்
    வீண்நாளாகப் பண்டையோர் கருதினர்.

    கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினர்களோடு பகுப்பு
    உண்டார்கள் என்பதை,

    'இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
    இனிதெனத் தமியர் உண்டலும் இலரே'(182)

    எனப் புறநானூறு காட்டும்

    அதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக் கனி கிடைத்தும் தான் உண்டு ந்டிது வாழாமல் ஔவைக்கு
    ஈந்தது ,விருந்தோம்பலின் சிறப்பினைக் காட்டுவதாகும்.
    ஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை மூங்கில் குழாயில் இட்டு,

    மாட்டின் கழுத்தில் கட்டிக்கொண்டு காட்டு வழியே செல்வர்.அங்கு யாரும் பசியோடு வந்தால்
    தாம் மட்டும் உண்பதற்கு வைத்திருக்கும் உணவினை அவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பர்
    என்று அறிகிறோம்.

    ' கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
    செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
    புல்லிநன்னாடு '(அகம் 311,9-12)
    விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர்(நற்றிணை,142)இரவில்
    வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து
    உணவளிப்பர்.(குறுந்தொகை,205,12-14)விருந்தினருக்கு விடைகொடுத்து அனுப்பும்போது

    குதிரை பூட்டிய தேரினைக்கொடுத்து,ஏழடி பின் தொடர்ந்து சென்று வழியனுப்புதல் பண்டைய
    வழக்கமாகும்.(பொருநராற்றுப்படை,165,166)விருந்தோம்பலில் விருப்பம் கொண்டு

    அதற்காகவே பொருளிட்டச் சென்றுள்ளனர்(அகம்,205,12-14)
    பொருளையெல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்தும்,விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச்
    சங்க மக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.
    வறுமையுற்று விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய
    வாளை விற்றும்,அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான்.(புறம்,316,5,7)
    வரகும் தினையும் இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை,அந்நிலையில்
    விதைக்கு இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர்.(புறம்,333)


    அதியமான் வறுமையுற்ற காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது(103)(95).
    இவ்வாறு சங்க இலக்கியங்கள் விருந்தோம்பும் முறையைப் பரக்கப் பேசுகிறது. https://sekalpana.blogspot.com/2008/11/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  4. பி.சேதுராமன், ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் விருந்தோம்பல் என்ற கருத்து விருந்தோம்பல் உருவான காரணத்தை ஆராய்ந்துள்ளது. விருந்து என்னும் சொல்லுக்குப் ‘புதுமை’ என்ற பொருண்மையைத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

    ‘விருந்தோம்பல்’ என்பது இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.

    “விருந்தே தானும்
    புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” (தொல்காப்பியம்.செய்யுள்.231)

    உறவினரும் நண்பரும் அல்லாதவராகப் புதியவராக நம்மிடம் வரும் அனைவரையும் ‘விருந்தினர்’ என்கிறோம். அகநானூற்றில் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் ‘விருந்து’ என்ற சொல்லை ‘புதியவர்’ என்ற பொருளில் கையாண்டுள்ளார்.

    “விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
    வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகம்.54)

    புதிய மன்னர்கள் கொடுத்த திறைப்பொருளால் மன்னன் பகை தணிந்தான் எனச் சுட்டப்பட்டுள்ளது. விருந்தோம்பல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் Hospitality என்பதாகும். ‘விருந்தோம்பல்’ என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை நடத்துவது” எனச் சுட்டுகின்றது. இல்லறத்தின் தலையாயநெறி விருந்தோம்பல் என்பதனைச் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் புலப்படுத்துகின்றது. இளங்கோவடிகள் விருந்தோம்பலை இல்லற வாழ்வில் இணைத்துள்ளார்.

    “மறட்பருங் கேண்மையோ டயப்பரி சாரமும்
    விருந்துபுறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்” (சிலம்பு,மனை.காதை:85-86)

    மேலும், கோவலன் பிரிவால் கண்ணகி விருந்து செய்ய முடியாத நிலை பெற்றதற்கு வருந்துவதாகக் குறிப்பிடுகின்றார்.

    “அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு,கொலை.காதை:71-73)

    ‘தொல்லோர் சிறப்பு’ என்பது அறவோருக்கு அளித்தல், அந்தணருக்கு ஓம்பல், துறவோருக்கு உதவுதல் போன்றன. விருந்தோம்பல் ‘தொல்லோர் சிறப்பு’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இராமனைப் பிரிந்த சீதையின் நிலையானது, “விருந்து கண்ட போது என்னுறுமோவென்று விம்மும்” ( கம்ப.சுந்தர காண்டம்,கா.ப,15:2) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவியைப் பிரிந்த இராமன் விருந்தோம்பும் தகுதி இழந்து துன்புறும் நிலைக்குச் சீதை வருந்துகின்றாள். மேற்கண்டவை கணவன் துணையோடுதான் விருந்தோம்பல் நிகழ்ந்ததற்கான சான்றாதாரங்கள். அகநானூற்றில் பெருந்தேவனார் பாடிய பாலைத்திணைப் பாடல் விருந்தோம்பலை ‘இல்வாழ்க்கைத் தொழில்’ என்றே சுட்டுகின்றது.

    “... ... ... ... ... நாளும்
    மனைமுதல் வினையொடும் உவப்ப,
    நினை - மாண்நெஞ்சம் நீங்குதல் மறந்தே” (அகம்.51)

    பொருள்வயிற் பிரிவு கடைகூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் கூறும் கூற்றில் இடம்பெறும் ‘மனைமுதல் வினை’ என்ற சொல்லாடல் விருந்தோம்பல் என்னும் குறியீட்டு நிகழ்வாகும். மேலும், கணவன் - மனைவி இணைந்து நிகழ்த்தும் தொழிலாக விருந்தோம்பல் கூறப்பட்டுள்ளது. https://groups.google.com/g/kandankavimalar/c/FjY9-VQcZ-U

    பதிலளிநீக்கு
  5. விருந்து ஏன் – தொல்காப்பியம் கூறும் உளவியல்

    ஏன் அவர்களை நன்றாகக் கவனித்து அனுப்ப வேண்டும்? நாகரிகமடைந்த சமூகத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்பது சரியானதா? என்று தோன்றினாலும் கேள்வி எழுந்த பின் அதற்கான விடையைத் தேடுவது தானே முறை. தேடுவோம் வாருங்கள்!

    தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் விருந்தினர் ஒருவர்.
    தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
    பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோ ர்
    யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. (தொல்காப்பியம் கற்பியல் 52)
    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப.(தொல்காப்பியம் கற்பியல் 4) இங்கு தான் வருகிறது.

    கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
    மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (தொல்காப்பியம் கற்பியல் 12) பாடுகிறது.

    பதிலளிநீக்கு

  6. எட்டுத்தொகை பத்துப் பாட்டில் மட்டும் 81 இடங்களில் விருந்து என்னும் அடிச்சொல்லோடு தொடர்புடைய சொற்கள் காணப்படுகின்றன. (விருந்து (60) விருந்திற்கு (2) விருந்தின் (13) விருந்தினம் (1) விருந்தினன் (2) விருந்துற்ற (1) விருந்துறத்து (1) விருந்தொடு (1)) விருந்து என்பதற்கு புதுமை என்னும் பொருளே பெரும் பான்மை வழக்காக உள்ளது.

    சங்கப் பாடல்களில் ஓர் இனக்குழு மற்றோர் இனக்குழுவிற்கு விருந்து அளித்த செயற் பாடும் காணப்படுகிறது. அவை, குறிப்பாகப் புலப் படும்படியாகவே அமைந்துள்ளன. புதிதாக வந்த விருந்தினரை வரவேற்று நெய்யுடன் கூடிய இறைச்சி உணவினைச் சமைத்து அளித்துள்ளனர். எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு இழை அரிவை நெய்துழந்து அட்ட / விளர் ஊன் அம்புகை எறிந்த நெற்றி- (நற். 41:6-8) என்னும் பதிவுகள் காணப்படுகின்றன. இரவு நேரத்தில் வந்த விருந் தினருக்கு நெய் பெய்து அடுதலால் கொழுவிய தசையிடத்து எழும் நறிய புகை படிந்து, சிறிய நுண்ணிய பல வியர்வை நெற்றியில் உண்டாக்கும் என்னும், பதிவில் யாருக்கு உணவு அளித்தனர் என்னும் குறிப்பு இல்லை.

    மேலும் தலைவி விருப்பத் துடன் விருந்தோம்புவாள் எனக் குறிப்பிட்டு உள்ளது. சங்கப் பாடல்களில் எந்த இடத்திலும் தலைவன் விருந்தோம்பியதாகக் குறிப்புகள் இல்லை. தலைவியின் விருந்தோம்பல் தோழி கூற்றில் அமைந் தவை மிகுதியாகக் காணமுடிகின்றன. தலைவி விருந்தோம்பிய நிலையை சங்கப் பதிவுகள் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றன. விருந்தயர் விருப்பொடு வருந்தினள் (நற். 81). எல்விருந்தயரும் மனையோள் (நற். 121).

    விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் (நற். 221), வரு விருந்தயர்மார் பொற்றொடி மகளிர் (நற். 258). என்நல்மனை நனிவிருந்து அயரும் (நற். 280), விருந்து அயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை (நற். 374). விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே (நற். 361). ஆகிய பதிவுகள் தலைவி விருந்தோம்பிய நிலையை எடுத்துரைக்கின்றன. இரவு நேரமாக இருந்தாலும் விருந்தினர்க்கு உவந்து உணவளித்ததாகப் பல இடங்களில் நேரடியாகவும் குறிப்பாகவும் காணப்படுகின்றன. மணல் பரப்பப்பட்ட அகலமான முன்றிலில் வரையறை இன்றிப் பெருகிய தமது பொருளைத் தம்மை நோக்கி வரும் விருந்தினர்க்குப் பகுத் துண்டு வாழும் சிறுகுடி (நற். 135) இது ஒரே இனக்குழுவைச் சேர்ந்தோர் அல்லாத புதிதாக வந்த வேறோர் இனக்குழுவிற்கு அல்லது விருந்தினருக்கும் உணவு அளித்துள்ளனர் என் பதைக் குறிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. திருவள்ளுவர் – விருந்தோம்பல்

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)
    வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். அந்தக் காலச் சூழலுடன் இதைப் பொருத்திப் பார்க்கும் போது இல்வாழ்க்கையின் பயனே விருந்தோம்பல் தான் என்று திருவள்ளுவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய ஊரடங்குக் காலத்திலும் இதை நாம் பொருத்திப் பார்க்க முடிகிறது.

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.(82)
    விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

    இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம். 182:1-3) என்று பாடுகிறது புறநானூறு.

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று. (83)
    தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல். (84)
    செய்யாள் – திருமகள்
    நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம். (85)
    விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நவருந்து வானத் தவர்க்கு. (86)
    வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
    வானத்தவர் – வான் சிறப்பு – ஒப்பீட்டை இங்கு நினைத்துப் பார்ப்பது வான்சிறப்பைப் பற்றிய சரியான பார்வையைக் கொடுக்கும்.

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன். (87)
    விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார். (88)
    விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு. (89)
    செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து. (90)
    அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

    பதிலளிநீக்கு
  8. ‘விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்ற தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றுள்ள ‘விருந்து’ என்னும் சொல் வருகிறது. அங்கு விருந்து என்பதைத் தொல்காப்பியர் ‘புதுமை’ என்னும் பொருளில் கையாள்கிறார். எனவே விருந்து என்பது புதுமையைக் குறித்தால், அந்த அடிச்சொல்லைக் கொண்டு உருவாகியிருக்கும் விருந்தினர் என்பது யாரைக் குறிக்கும்? புதிதாக வருபவர்களை என்பது பொருத்தமாக இருக்கிறது அல்லவா! அதாவது விருந்தினர் என்போர் தெரிந்தவராக, சுற்றத்தாராகத் தாம் இருக்க வேண்டும் என்பது இல்லை. புதியவர்களாகவும் இருக்கலாம்.

    ஓம்பல் என்பது கடைபிடித்தல், செய்தல் என்னும் பொருளில் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார்.

    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
    ஐம்புலத்தார் ஓம்பல் தலை (43)

    என்பதிலும்
    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு. (1155)
    என்பதிலும் ஓம்பல் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர்.

    விருந்து + ஓம்பல் = விருந்தோம்பல். அதாவது வந்த புதியவர்களைக் கவனித்து அனுப்புவது!

    புறநானூற்றின் 266ஆவது பாடல்,
    பாடியவர்: பெருங்குன்றுார் கிழார். பாடப்பட்டோன். சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி வல்லே களைமதி அத்தை – உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே!

    என்று விருந்தினரைக் கவனிக்க முடியாத வறுமையைப் புலவன் வருந்திப் பாடுவதாக வருகிறது.

    உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் தான் கரிகால்வளவன் என்று அறியப்படுகிறான். கரிகால்வளவனின் விருந்து உண்டு பல் தேய்ந்து விட்டதாகவும் கிளம்புகிறேன் என்று சொன்னதும் யானை முதலிய பரிசில்களைக் கொடுத்தான் என்றும் பொருநன் பாடுவதாகச் சங்க இலக்கியம் சொல்கிறது.

    ‘அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும்
    முல்லை சான்ற கற்பின்
    மெல்லயற் குறுமகள் உறைவின் ஊரே’ என்று பாடுகிறது நற்றிணை (142).

    பதிலளிநீக்கு
  9. இயேசுபெருமான் – விருந்து

    வரிவசூலிப்பவர்களைக் கண்டாலே யூதர்களுக்குப் பிடிக்காது. வரிவசூலிக்கும் இந்த அதிகாரிகள் ரோமானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். யூதர்களிடம் வரிவசூலித்து ரோமானியப் பேரரசர்க்கு அனுப்பிவைப்பது அவர்கள் வேலை. யூதர்கள் ரோமானியரின் அடிமை என்பதை நினைவுபடுத்தும் அவமானச் சின்னங்களாக இந்த வரி வசூலிக்கும் அதிகாரிகள் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிகாரிகள் நாணயமும் ஒழுக்கமும் நேர்மையும் மனிதாபிமானமும் அற்ற விலங்குகளாகவும் இருந்தார்கள். எனவே யூதர்கள் இவர்களைப் பாவிகளாகவே கருதினார்கள். இந்தப் பாவிகளின் வீட்டு வாயிற் படியில் காலடி எடுத்து வைப்பதே கேவலம் என்று நினைப்பவர்கள் யூதர்கள்.

    சமுதாயத்தினால் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த வரிவசூலிக்கும் பாவிகளிடமும் இயேசு நாதர் அன்பாகப் பழகினார். நரகத்திலே இடம்பிடிக்க வேண்டிய அந்தப் பாவிகளும் சொர்க்கத்தை அடைய மார்க்கமுண்டு என்று இயேசுநாதர் கூறியது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. தாங்கள் செய்த பாவங்களுக்காக வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்புப் பெற்று நல்வாழ்க்கை வாழத் தொடங்கினால் அவர்கள் இன்ப உலகம் பெறலாம் என்று கூறிய இயேசு நாதரை அவர்கள் போற்றினார்கள். தங்கள் வீடுகளுக்கு வரவேற்று விருந்தளித்தார்கள்.

    “பாவிகளுடனும் வரிவசூலிப்பவர்களுடனும் இவர் ஏன் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும்?” என்று பழைய மதவாதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

    “நேர்மையானவர்களை அழைப்பதற்காக நான வரவில்லை; பாவிகளைத் திருந்தி வாழச் செய்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். கூட்டங் கூட்டமாகவரும் நல்லவர்களைக் காட்டிலும், திருந்திவரும் ஒரு பாவியைத் தான் விண்ணுலகம் மிகுந்த களிப்புடன் வரவேற்கக் காத்திருக்கும்” என்று இயேசுநாதர் தம்மைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினரிடம் கூறுவார்.

    பதிலளிநீக்கு
  10. ஆய்வு: இலக்கியங்கள் போற்றும் விருந்தோம்பல்! - முனைவர் மூ.சிந்து -

    தமிழர்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த சிறப்பிற்குரியது தொல்காப்பியம். பெண்களுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக விருந்தோம்பல் அமைந்தமையை,

    “விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோர்மாண்புகள்” (தொல்.1102)

    தொல்காப்பியர்சுட்டுகிறார்.

    விருந்து

    ‘விருந்து’ என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகிறது. ‘ஓம்பல்’ என்ற சொல் பாதுகாத்தல், சிறப்புச் செய்தல் முதலிய பொருள்களில் வழங்கப்படுகிறது. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவு அளித்துச் சிறப்பு செய்த நிலமையைக் குறிக்கும்.

    “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலன்” (குறள்-85)

    வீட்டுக்கு வந்த விருந்தினரை முதலில் உணவு உண்ணச் செய்து மீத உணவை உண்பவர்களது நிலத்தில் விதைக்காமலே பயிர்விளையும் என்பதை கூறிய வள்ளுரின் வாக்கு சிந்திப்பதற்குரியதாகும்.

    விருந்து போற்றல்

    தமிழர்கள் நாகரித்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். இல்லறத்தின் மாண்பு விருந்தோம்பலாகும். நம்மை நாடி வரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உண்டி முதலியவைகளை அளித்து மிக்க அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது வாழ்க்கையில் தலைச்சிறந்த பண்பாகக் கருதப்படுகிறது.

    விருந்தின் மூலம் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலும் தீர்வதைக் காணமுடிகிறது. சங்க காலத்தில் அரசராலும், சமுதாய மக்களாலும், விருந்தோம்பப் பட்டவர்கள் முன்பின் அறியாதவர்களாக இருந்தனர்.

    ‘மன்னன் புறந்தர வரசிருந்தோம்பி’ (கலி-8)

    என்ற வரிகள் அரசன் தன்னை நாடி வருகின்ற விருந்தினரைப் போற்றிப் பாதுகாத்தான் என்பது தெரிகிறது.

    சிலப்பதிகாரத்தில் கோவலன் நீ என்னைப் பிரிந்திருந்தமையின் விருந்தினரைப் பேணும் வாய்ப்பை இழப்பாய் எனக் கண்ணகியிடம் கூறுவதனை,

    ‘விருந்தெதர்கோடலின் மறப்பல் விருந்தொடுபுக்க
    பெருந்தோட் கணவரோடு உடனுறைவு மரீஇஒழுக்
    கொடுபுணாந்து வடமீன் கற்பின் மனைஉறை மகளிர் (சிலம்பு.224)

    என்பதனை அறியலாம். தமிழர்பண்பாட்டு நெறி அவர்தம் வாழ்க்கை முழுவதும் உயர்ந்த நிலையினதாக இருந்து வந்துள்ளது. அரசன் முதல் குடிமக்கள் வரை தமிழர்மாண்பு உயர்ந்த நிலையினதாகவே காணப்படுகிறது. நல்லறம் ஓம்புதல் இல்லற வாழ்க்கையில் இருந்ததைக் காணமுடிகிறது.

    மக்களின் உணவு, உடை பழக்கவழக்கம் திருமணம் இறை நம்பிக்கைகள் பொழுது போக்குகள் போன்ற நடைமுறை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே பண்பாடானது அமைகின்றது. சங்க காலச்சமூகம் உயர்ந்த பண்பாட்டினைக் கொண்டிருந்தமையை அறியலாகிறது.

    விருந்தோம்பலின் சிறப்பு

    இல்வாழ்க்கையில் இணைந்து வாழும் கணவன், மனைவியரின் தலையாயப் பண்பு விருந்தோம்பல் ஆகும். நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டிலே திருமகளானவள் அகமலர்ந்து அவர்கள் வீட்டிலே வாசம் செய்வாள். மேலும் தன்னைக் காணவரும் விருந்தினரை நாள்தோறும் விருந்தோம்பல் செய்து போற்றுகின்றவனுடைய வாழ்க்கை என்றும் துன்பத்தால் வருந்தி கெட்டுப் போவதில்லை என்பதை வள்ளுவன்,

    “வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவருந்து பாழ்படுதல் இன்று” (குறள்.83)

    என்ற விருந்தோம்பல் சிறப்பைத் தம் நூலானத் திருக்குறளின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.

    உணவு

    இன்றைய வாழ்க்கைச் சூழலில் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக அமையக்கூடிய ஒன்று உணவு ஆகும். மனிதனுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் இன்றியமையாததாக உணவு இருந்ததையும், இருப்பதையும் உணரலாம்.

    ஆதி மனிதன் காய், கனி, மாமிசம் என உணவை உட்கொண்டான். பின்பு நிலத்திற்கேற்ப உணவு முறையானது அமைந்த போக்கினை அறியமுடிகிறது.

    குறிஞ்சி - மலைநெல், திணை
    முல்லை - வரகு,சாமை
    மருதம் -செந்நெல்
    நெய்தல் - மீன்,முதலை, சுறா, உப்பு விற்றுப் பெற்ற பொருள்
    பாலை - பிறரிடம் இருந்து கவர்ந்த பொருட்கள்

    நற்றிணையில் விருந்து

    விருந்தினர் இரவு நேரத்தில் வந்தாலும் அதைத் துன்பமாகக் கருதாது நிலை

    “அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
    முல்லை சான்ற கற்பின்
    மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே” (நற்.142)

    இரவு நேரத்தில் வீட்டின் வாயிற்கதவை அடைக்கும் முன்பு தம் வீட்டிற்க்கு யாரேனும் உறவினர்கள் வருகின்றார்களா? எனப் பார்த்து, இருப்பின் அவர்களை அழைத்துச் சென்று உபசரித்த நிலையினை நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

    பதிலளிநீக்கு
  11. ஐங்குறுநூற்றில் விருந்து

    தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்ட தலைவியானவள் மீண்டும் கணவன் மனைவியுமாகத் தம் இல்லம் வந்து விருந்துண்ண வேண்டும் என விரும்பும் செவிலித்தாயின் மன உணர்வினை,


    “மறுஇல் தூவிச் சிறுகருங் காக்கை!
    அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்

    பச்சூன் பெய்த பைந் நிண வல்சி
    . . .அம்சில் ஓதியை வரக் கரைந் தீமே ” (ஐங் - 391)

    என்ற பாடல் வாயிலாக அறியமுடிகிறது. தலைவியானவள் தன் இல்லத்தாரை விட்டு தன் தலைவனோடு சென்ற தலைவியின் திருமணக் கோலத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை எனினும், தலைவன் தம் மகளை அழைத்துக் கொண்டு விருந்தினராக வர வேண்டும் என விரும்பும் செவிலியின் எண்ணம் நிறைவேறும் வகையாக காக்கையைத் தன் வீட்டிடத்தே கரைய எண்ணுகிறாள். காக்கை கரைந்தால் இல்லத்திற்கு விருந்தினர்வருவர் என்ற குறிப்பிற்க்கு இது சான்றாக அமைகிறது.

    அகநானூற்றில் விருந்து

    விருந்தோம்பல் என்பது தன் இல்லிற்குப் புதிதாக வரும் நபர்களை வரவேற்று அவர்களது பசி தீர உணவு கொடுப்பது என்பது தமிழர்களின் பண்பாடு என்பதை, பரதவ மகளானவள் நெல்லினது அரிசிச் சோற்றில் அயிரை மீனை இட்டும் புளிக்கறியையும், கருவாட்டையும் உணவாக அளித்தால் என்பதை,

    “உப்ப நொடை நெல்லின் முரல் வெண்சோறு
    அயிரை சூழ்ந்த அம்புளிச் சொரிந்து

    கொடுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்” (அகம் - 60)

    என்ற பாடல் வாயிலாக மீனுக்குப் புளியிட்டு சமைத்த வழக்கம் இருந்தமையை அறியமுடிகிறது.

    “ஒலி கழை நெல்லின் அரிசியொடு லுராங்கு
    ஆன் நிலைப்பள்ளி அளைப் பெய்து அட்ட
    வாய் நிணம் உருக்கிய வா அல்வெண்சோறு
    புகர்அரைத் தேக்கின் அகல் இலைமாந்தும்” (அகம் - 107)

    என்ற பாடல் வாயிலாக மூங்கில் அரிசியுடன் தயிர் இட்டு, இறைச்சி கூட்டி சமைத்த வெண்சோற்றை தேக்கிலையில் வைத்து தம் இல்லம் தேடி வந்தவருக்கு உண்ணக் கொடுத்த நிலையானது அறியமுடிகிறது.

    கலித்தொகையில் விருந்து

    பொருளீட்டச் சென்ற தலைவன் திரும்பும் இளவேனிற் காலம் வந்தமை அறிந்து தலைவன் திரும்ப வருவதை எண்ணி மகிழ்ந்து இளவேனிற்கு விருந்து படைப்பதை,

    “இன்னுயிர் செய்யும் மருந்தாகிப் பின்னிய
    காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறுமுல்லைப்
    -----துயர்அறு கிளவியொடு! அயர்ந்தீகம் வீருந்தே!” (கலி.31.15-20)

    என்ற வரிகள் உணர்த்துகிறது. தலைவன் திரும்ப வரும் தருணம் மகிழ்ச்சி என்பதும் அதைத் தெரிவிக்கும் பொருளாக இளவேனிற் அமைந்தது என்பதும் அதற்கு விருந்து படைத்தல் வாயிலாக இயற்கைக்கும் விருந்தளித்த குணமானது இங்கு புலப்படுகிறது.

    புறநானூற்றில் விருந்து

    பண்டைய தமிழர்கள் கிடைத்தற்கரிய அமுதம் கிடைத்தாலும் அதை தான் மட்டும் உண்ணாது அனைவரும் பகிர்ந்து உண்ட நிலையினையை

    “உண்டாலம்ம இவ்வுலகம்
    இந்திரர்அமிழ்தம் இயைவதாயினும்
    இனிதெனத் தமியார் உண்டலும் இலரே” (புறம்.182)

    என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.

    மேலும், அதியமான் என்ற மன்னன் இரவலர்கள் ஒருநாள் சென்றாலும் இருநாள் சென்றாலும் பலநாள் சென்றாலும் முதல் நாள் போலவே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை,

    “ஒருநாள் செல்லலாம் இருநாள் செல்லலாம்
    பன்னாள் பயின்று பலரோடு செல்லிலும்
    தலைநாள் போன்றே விரும்பினன் மாதோ!” (புறம்.101)

    என்ற புறப்பாட்டு விளங்குகிறது. பண்பாடு உடைய மக்கள் வாழ்வதாலேயே இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகிறது.

    திருக்குறளில் விருந்து

    ஒருவன் தான் பெற்ற உணவைப் பழிக்கு அஞ்சிப் பகுத்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பானேயானால், அவனது வாழ்க்கையில் எப்போதும் எக்குறையும் வராது என்பதனை,

    “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள்.44)

    என்ற குறளிள் வள்ளுவர்பகுத்துண்ணும் பாங்கு முறையினை விளக்குகிறார்.

    நாலடியார்

    எளியோரிடத்து இனிமையாகப் பேசுவதும் புதிதாக வந்த அயலோரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கு இடுவதும், இயன்றவரை பிறருக்கு உதவுவதும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் குறிப்பிடத்தக்கவையாகும். விருந்தினர் வீட்டுக்கு வந்தால் இல்லறத்தார் இருக்கையை விட்டு எழுந்து வரவேற்றனர் என்பதை,

    “இருக்கையெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடின்ன குடிப்பிறந்தோர்குன்றா வொழுக்கமாகக் கொண்டார்” (நாலடி.143)

    நாலடியார் பாடல் வரிகள் விளக்குகிறது.
    https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/6636-2021-05-09-18-08-51

    பதிலளிநீக்கு

  12. அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
    மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து
    நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும்
    பெறுமாறு அரிய பொருள். திரிகடுகம் 69


    உழவுச் செயலைச் செய்யும் எருதும், நெடுநாள் மணமின்றி இருந்த கன்னியும், பசித்து வந்த விருந்தினரும், பெறற்கரிய பொருள் ஆகும்.

    பதிலளிநீக்கு
  13. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.
    (அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:84)

    பொழிப்பு (மு வரதராசன்): நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

    மணக்குடவர் உரை: திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
    இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

    பரிமேலழகர் உரை: செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
    (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

    இரா இளங்குமரனார் உரை: விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று நன்முறையில் பேணுபவன் இல்லத்தில் செல்வம் என்னும் மகள் தன் முகத்தோடு அகமும் மலரத் தங்கியிருப்பாள் (விருந்தோம்பலால் செல்வம் குறையாது.)

    பதிலளிநீக்கு
  14. நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
    இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
    மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்
    கற்புடையாள் பூண்ட கடன். - திரிகடுகம் 64


    விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு