சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சங்க இலக்கியம் தெய்வத்தை போதிக்கவில்லை என்கிற கூற்று உண்மையா?


மன்னர் மன்னன் அவர்கள் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய அறிவாளி. பேச்சாளர்களை விடுத்து அறிஞர்களை தேடி அவர்களுது உரையை கேட்க ஆரம்பித்த பிறகு பேராசிரியர்கருணானந்தம், வி அரசு, சொல்லியல் அறிஞர் மா.சோ.விக்டர் மற்றும் மன்னர் மன்னன் உட்பட சிலரை கண்டறிய முடிந்தது. 

இவர்களை தொடர்ந்து கண்டு வந்தாலும், அவர்களோடு பல கருத்து முரண்பாடும் உள்ளது. முற்றும் அறிந்தவர் யாருமில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலுள்ள காணொளியில் மன்னர் மன்னனோடு முரண்படும் சில கருத்துக்களுக்கு பதில் இங்கே குறிப்பிட்டு உள்ளேன். 


முரண் 1

(பரிபாடல் அடிகள்: 1 முதல் 19 வரை)
தொல் முறை இயற்கையின் மதிய………..
……………………………………………………. மரபிற்று ஆக
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி            (5)
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு               (10)
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும்  வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை               (15)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நிற் பேணுதும் தொழுதும்            (19)

5:35  இதில் பரிபாடல் சமயத்தையும் கடவுளையும் சொன்னது பிழை, ஆனால் அது உலகின் உருவாக்கத்தை சொன்னது சரி என்கிற உங்களது கருத்து ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. அறிவியல் பின்புலத்திலிருந்து சமய பின்புலத்துக்கு மாறியபொழுது எஞ்சிய அறிவியல் அறிவு இதில் இடம் பெற்று இருக்கிறது என்ற கருத்தும் ஏற்புடையது அல்ல. ஏனென்றால் தமிழ் கூறும் நல்லுலகம் எப்பொழுது ஆன்மீகத்துடனேயே இருந்து இருக்கிறது. 

சங்க இலக்கியத்தில் கடவுளை பற்றி இல்லை என்கிற கூற்று சரியா?, தமிழ்நூல்களிலேயே மிகப் பழமையான நூல் "தொல்காப்பியம்" தெய்வம் பற்றி பேசுகிறது.

489. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.

543. காலம் உலகம் உயிரே உடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன.

968.  தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ் வகை பிறவும் கரு என மொழிப.

987.  தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
தோழி தேஎத்தும் கண்டோ ர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ் வழி உரிய.

998.  உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே.

1061.  களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்
காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்
தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்.

1217.  தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல்
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல்
புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம்
அருள் மிக உடைமை அன்பு தொக நிற்றல்
பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல்
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ
சிறந்த பத்தும் செப்பிய பொருளே.

1364.  வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.

1033.  கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

1093.  கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்
நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
நாமக் காலத்து உண்டு எனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்..
.
"இவைகளெல்லாம் மதங்களை குறிக்கவில்லை" என்ற பதில் வரக்கூடும். ஆனால் "ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்" என்ற பைபிளின் கூற்றுப் படியும், "யாதும் ஊரே யவருங் கேளீர்" என்ற உட்பொருள் படியும் "நிச்சயமாக உங்களை ஒரே ஆதாமாவிலிருந்து படைத்தோம்" என்ற குர்ஆன் கூறும் தகவல் படியும் நாம் புரிந்து கொள்வது, ஆரம்ப காலத்தில் மக்கள் அனைவரும் பேசிய தமிழ் மொழியில் மதப் பிரிவு கிடையாது, எனவே தெய்வமும் பொதுப் பெயரில் வழங்கப் பட்டது. பிற்கலத்தில் மக்கள் பல்கிப் பெருகும் பொழுது மொழிகளும் பண்பாடுகளும் வேறுபட்டு போனது, எனவே அப்பொழுது ஒவ்வொரு திசைக்கும் ஒரு கருப்பொருளோடு வேதங்கள் வழங்கப்பட்டது இது பற்றி திருமந்திரம் பேசுகிறது. 

இறுதியாக இன்று இத்தனை நவீன கருவிகள் மூலம் மனிதர்கள் கண்டறிந்த உலகம் உருவான முறையை, பரிபாடலை எழுதிய மனிதர் உலகம் உருவான நிகழ்வை அருகில் அமர்ந்துகண்டிருக்க வைய்ப்பில்லை ஆனால் கண்டவர் அல்லது நிகழ்த்தியவர் கற்றுக் கொடுத்து எழுதினார் என்ற முடிவுக்கே வர முடிகிறது. நிகழ்த்தியவனை கடவுள் என்றே நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்.

அனைத்து உண்மை சமய நூல்களிலும் இது போல அறிவியல் செய்தி வழங்கப்படுவதன் காரணம் இறைவனின் இருப்பை உணர்த்துவதற்காக. தொல்காப்பியத்திலும் உலக அமைப்பின் இலக்கணம் உண்டு.

தொல்காப்பியம் கூறும் முதல்நூல் வழிநூல் வரையறையையும் அது உள்ளடக்கிய செய்திகளையும் நாம் அனைவரும் முறையாக கற்று அறிவது அவசியம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை வில்லனாகவே பார்க்காதீர்கள். இறைவன் பெயராலும் மதம் பெயராலும் அநீதிகள் நடக்கிறதென்றால் அவைகளை முற்றும் முழுதாக வெறுப்பது அறிவுடைமை அல்ல, சரியானதை பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.

முரண் 2

12:30 தமிழர்களை பொறுத்தவரையில் இலக்கியத்தை படிப்பவர்களும் அறிவியலை படிப்பவர்களும் மட்டுமல்ல, ஆன்மீகத்தை படிப்பவர்களும் வெவ்வேறாக உள்ளனர். எப்படி கணிதமும் அறிவியலும் சமூகஅறிவியலும் மொழியியலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதோ அவ்வாறு முதல் சொன்ன மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த விடயங்கள் என்பதையும் நாம் உணர வேண்டும். கீழ் சொன்னவைகளை வசதிக்காக பிரித்துக் கொண்டோம், மேற் சொன்ன ஒன்றை பிடிக்காமல் பிரித்து விட்டோம், அதுவும் மிகச் சமீப காலத்தில்.

முரண் 3

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி–தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். - (மூதுரை பாடல் 19)

பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது விதியை பொறுத்தது

14:00 அவ்வையார் சொன்ன உவமையில் உள்ள அறிவியல் ஆச்சரியமூட்டுகிறது ஆனால் முரண்பாடாக அது எதற்காக சொல்லப்பட்டதோ அந்த "விதி" பொய்யாக தோன்றுகிறது?

இப்பாடலின் பொருள், பாத்திரத்தின் கொள்ளளவுதான் அது கொள்ளும் நீரின் அளவை தீர்மானிக்கும். அது போல ஒரு மனிதனால் எவ்வளவு தாங்க முடியுமோ (நன்மையோ, தீமையோ) அவ்வளவு தான் அவனுக்கு விதிக்கப்படும் என்பதாகும்.

இப்போது விதியின் தன்மையை பற்றி மற்ற சமயங்களின் விளக்கத்தை பார்ப்போமா?

கிறிஸ்தவம் 
 
உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். - (1 கொரிந்தியர் 10.13)

இஸ்லாம்  
 
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்  - (குர்ஆன் 23.62)

முரண்கள் இன்னும் உள்ளன - நேரமிருக்கும் பொழுது எழுதுவோம்.