மறுமையில் இறைவனை யார் சந்திப்பார்?

கிறிஸ்தவம் :

 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். - மத் 5:8 
__________________________________________________

இஸ்லாம் :

அந் நாளில் சில முகங்கள் மலர்ந்திருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கோண்டிருக்கும். (குர்ஆன் 75 : 22, 23)

சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
(பின்னர்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக,
(சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக,
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக, வானத்தின் மீதும்
அதை (ஒழுங்குற) அமைந்திருப்பதன் மீதும் சத்தியமாக
பூமியின் மீதும் இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
ஆத்மாவின் மீதும் அதை ஒழுங்குபடுத்தியதன் மீதும் சத்தியமாக
அவன் (ஆத்மாவாகிய) அதற்கு அதன் தீமையையும் அதன் நன்மையையும் உணர்த்தினான் (ஆத்மாவாகிய) அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார் - 91:1-8
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (புகாரீ - 52)
_____________________________________________________________

திருமந்திரம் :

2819. முத்தியுஞ் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலாற்
சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே.

(ப. இ.) முத்தியாகிய வீடும் சித்தியாகிய பேறும் கைகூடிய ஆருயிர்க்கிழவன் ஞானத்தோனாவன். ஞானம் - திருவடியுணர்வு. ஞானத்தோன் - திருவடிசேர் அடிமை; நாயன்மார். அத் திருவடியுணர்வு கைவந்தபின் பேரன்பாம் பத்திநிலை கைகூடும். அப் பத்தியுள் நின்றபின் பரத்தினுள் நிற்பன். பின் திருவருட் பெருந்திருவுள் நிற்பன். அவ்வாறு நிற்கும் நல்லோர்க்கு இயற்கை யுண்மைச் சிவன் கைகூடுவன். அதனால் பொருள் அருள் தூய்மையும் அகன்றோராவர். அவரே பேரின்பப் பேரறிவினராவர்.

குறள் : 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற  (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)

உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.

சான்று :
http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2571
https://www.bible.com/ta/bible/339/MAT.5.8.TAMILOV-BSI
http://ulahawalam.blogspot.com/2013/11/blog-post_9.html

உலகில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்கக் காரணம் என்ன?

  • மக்களில் பலர் இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பது
  • இறை நம்பிக்கையுள்ளோரில் பலர் அறைகுறை நம்பிக்கையுடன் இருப்பது
  • முழுமையான நம்பிக்கை உள்ளோரில் பலர் அரைகுறை அறிவுடன் இருப்பது
  • இறை நம்பிக்கை இல்லாதவர் இறைவன் பெயரில் இயக்கம் துவங்கி இலக்கை நிர்ணயித்து, தான் ஏற்ற சமய அறநெறிகள் கூட ஏதுமில்லாமல் அதை அடைய முயல்வது, அதே வழியில் லட்ச கணக்கான மக்களை வழி நடத்துவது (such as RSS, Zionist, ISIS & etc)

இவைகள் தான் உலகில் மனிதாபமாற்ற செயல்களுக்கு காரணம்.

இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட முழு அறிவுடைய முழு நம்பிக்கையுடைய மனிதன் மனிதாபிமானத்தின் மொத்த உறுவமாக இருப்பர் என்பது வரலாறு தரும் சான்று.

சான்று: https://ta.quora.com/உலகில்மனிதாபிமானமற்ற 

இறைவன் எங்கே இருக்கிறான்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்பது மிக சிக்கலான கேள்வியாக சமகாலத்தில் உள்ளது. ஆனால் மறைநூல்களில் உதவியை நாடினால் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்த கருத்தாகும்.

சமகாலத்தில் இறைவனின் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டே சில பிரிவுகள் உள்ளது. அவையாவன,
  1. இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  
  2. நல்லோர் உள்ளத்தில் இருக்கிறான் 
  3. இறைவன் மேலே இருக்கிறான், அவன் அங்கிருந்தே அனைத்தையும் கட்டுப் படுத்தும் ஆற்றல் உடையவன்.
வாருங்கள் எந்த கருத்து சரி என்று ஆராய்வோம்.

கடவுள் வானங்களுக்கு மேலுள்ளான்!


தமிழர் சமயம் 


ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
ஏழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே - (திருமந்திரம் 01)

ஒன்றவன் தானே - அவன் ஒருவன், தானே இருப்பவன் (எவரும் அவனை உருவாக்கவும் படிக்கவும் பெற்றெடுக்கவும் இல்லை)

இரண்டவன் இன்னருள் - அறக்கருணை(நன்மை), மறக்கருணை(தீமை) அனைத்தும் அவனிடமிருந்தே

நின்றனன் மூன்றினுள் - ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார்

நான்குணர்ந் தான்- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது

ஐந்து வென்றனன்- மரணம், உறக்கம், சோர்வு, மறதி  மற்றும் பசி என்ற ஐந்தும் இல்லாதவன்.

ஆறு விரிந்தனன் - ஆறு நாட்களில் உலகம் அனைத்தையும் விரித்தான் (படைத்தான்)

ஏழும்பர்ச் சென்றனன் தான்- ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும். (உம்பர்-வானம்)

இருந்தானுணர்ந் தெட்டே - உணர்வார்ல் அனைத்தையும் எட்டக்கூடியவனாய், அடையக்கூடியவனாய் இருந்தான்.

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று.வேண்டுறோம்.

இஸ்லாம்


நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வானகளுக்கு அப்பால் உள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் -(7:54)

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். - (2:29)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். - (அல்குர்ஆன் 2:255) 
 
ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? என்றும் கேட்பீராக. - (23:86)

"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) 
 
நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி) 

கிறிஸ்தவம் 


.... “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்... - (1 இராஜாக்கள் 22:19)

தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். - (சங்கீதம் 20:6)

பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார். - (சங்கீதம் 103:19)


இந்துமதம்


அவனது கண்கள் மிக உயர்ந்த வானத்தில் இருந்து இந்த உலகை கட்டுப்படுத்துகிறது. - (ரிக் 129:7)

 

கடவுள் தனது ஞானத்தினால் எங்கும் நிறைந்து இருக்கிறான்!


இஸ்லாம் 

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 20:46)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186) 

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (குர்ஆன் 57: 04) 

கிறிஸ்தவம் 

"கர்த்தர்தாமே உமக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பர்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்." - (உபாகமம் 31:8)

நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். (உபாகமம் 4:7)

தமிழர் சமயம்  

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்;
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடிஇருந் தானே. (திருமந்திரம் 579)

பொருள்: உந்திச்சுழிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கிறது "உள்ளம்" என்கிற மூலாதாரம். அதை நெறிப்படுத்தும் மந்திர சொல்லை அவர்கள் அறிவதில்லை. அறிந்தபின் கூவிக்கொண்டு வந்து அங்கே குடியிருப்பான் ஈசன்.   
 
நாலுவேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்றறிவிரோ?
நாலு சாமமாகியே நவின்ற ஞானபோதம் 
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. (திருமந்திரம் 411)

சொற்பொருள்: சாமம் - கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்; நவின்ற - சொன்ன; போதம் - அறிவு; ஆலம் - ஆகாயம்; கண்டன் - தலைவன்; அயன் - படைப்பவன்; மால் - அருகன்; சால - மிக மிக; உன்னி - தியானத்திற்குரிய பொருள்; தரித்த - அடைந்த;
 
பொருள்நான்கு வேதங்களும் அதன் நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்று அறிவீர்களா?. நாலு வகையாக ஓதப்படும் ஞான போதனைகள், ஆகாயத்தில் இருக்கும் தலைவனுமாய், படைப்பவனுமாய், அருகனுமாய் தியானத்திற்குரிய பொருளாக நெஞ்சுக்குள்ளே அடைந்த சிவன் ஆகும்.
 
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

பொருள்: ஆகாயத்தில் இருக்கும் தலைவனாகிய சிவன் அகத்துள் இருக்கிறான், அவன் உயிர் எடுக்கும் காலன் என்று கூறுவது பிழை.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் - (நல்வழி வெண்பா : 38)

விளக்கம்: நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது

உள்ளத்தில் குடியிருக்கும் இறைவன்

தமிழர் சமயம்  


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' - (திருமூலர் திருமந்திரம்

நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே (சிவவாக்கியம் 14)

கிறிஸ்தவம்  

அல்லது உங்கள் உடல் உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? நீ உனக்கு சொந்தமில்லை - (1 கொரிந்தியர் 6:19

இஸ்லாம்   

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் அதிகாரத்தில் கூறினார்: அல்லாஹ் (வல்லவனும் உன்னதமானவனுமாக) கூறினான்: யார் எனக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருவருக்கு விரோதம் காட்டுகிறாரோ, அவருடன் நான் போரில் ஈடுபடுவேன். என் அடியான் அவனுக்கு நான் விதித்துள்ள மார்க்கக் கடமைகளை விட எனக்குப் பிரியமான எதையும் என்னிடம் நெருங்குவதில்லை, மேலும் நான் அவனை நேசிப்பதற்காக என் அடியேன் மிகையான செயல்களால் என்னிடம் நெருங்கி வருகிறான். நான் அவரை நேசிக்கும்போது, ​​அவர் கேட்கும் செவிப்புலன், அவர் பார்க்கும் பார்வை, அடிக்கும் கை, அவர் நடக்கிற கால். அவன் என்னிடம் [ஏதாவது] கேட்டால், நான் அதை அவனுக்கு நிச்சயமாகக் கொடுப்பேன், அவன் என்னிடம் அடைக்கலம் கேட்டால், நான் அவனுக்கு நிச்சயமாக அதை வழங்குவேன். என் உண்மையுள்ள அடியானின் ஆன்மாவைப் பற்றி நான் தயங்குவது போல் எதற்கும் நான் தயங்குவதில்லை: அவன் மரணத்தை வெறுக்கிறான், அவனை காயப்படுத்துவதை நான் வெறுக்கிறேன். (ஹதீஸ் 25, 40 ஹதீஸ் குத்ஸி)

இதன் பொருளும் அவன் தனது ஞானத்தால் நிறைந்திருக்கிறான் எனபதாகும்.  

முடிவுரை 

இறைவனின் இருப்பிடம் ஏழாவது வானத்திற்கு மேல், அனைத்து உலகங்களுக்கும் அப்பால் உள்ளது என்பதும், அவன் ஞானத்தினால் ஒவ்வொன்றையும் பார்க்கிறான் சூழ்ந்தது இருக்கிறான் என்பதும் நான்மறைகளின் கூற்று.

  • ஏழு வானங்கள் உண்டு என்பது அனைத்து சமய வேதங்களும் ஏற்கும் உண்மை.
  • இறைவன் இருப்பிடம் அவை அனைத்திற்கும் மேலுள்ளது என்பதையும் அவைகள் ஏற்கின்றன.
  • இறைவனின் பார்வையும் ஞானமும் நுணுக்கமாக ஒவ்வொரு பொருளின் மீதும் எப்பொழுதும் பதிகிறது என்று அனைத்து மறைநூல்களும் சாட்சி கூறுகிறது.

இதற்கு முரணான கடவுள் கொள்கை அனைத்தும் பிழையானது. அவற்றில் சில,

    • கடவுள் (தனது உருவுடன்) எங்கும் நிறைந்தவன் 
    • கடவுள் மனிதனாக அவதரிப்பான் 
    • மனிதன் சில நல்ல குணங்களால் தெய்வமாக முடியும் 
    • தாயும் தந்தையும் தெய்வம் 
    • இயற்கைதான் தெய்வம் 
    • இறந்தவர்கள் தெய்வமாகி விடுவார்

ஏனென்றால் இறைவனின் இருப்பிடம் தொடர்பான செய்தியில் இவை அனைத்தும் முற்றிலும் முரணானவை.

உலகம் கொண்டாடப்பட வேண்டிய இடமல்ல!

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள் :10)

பிறவி - பிறப்பு. இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது;

பெரும் கடல் - இந்த வாழ்க்கையின் அளவையும் அதில் உள்ள துன்பங்களையும், உவமை படுத்த பெரிய கடல் என்கிற பதம் பயன்படுத்த படுகிறது;

நீந்துவர் - நீந்துவார்கள்; வாழ்க்கை கடலில் நீந்தும் பொழுது கேளிக்கைகளுக்கும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பில்லை. 

நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; அதாவது கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு நோக்கத்தை மறைந்தவர்.

இறைவன் - தனக்கு உவமை இல்லாத ஒருவன்

அடி-தாள்; சேராதார்-சென்றடையாதார். இங்கு இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

இஸ்லாம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். (முஸ்லிம்: 5663)

கிறிஸ்தவம்:

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். - ரோமர் 12:2

முடிவுரை:

 இவ்வுலகில் வாழக்கூடிய குறுகிய காலம் என்பது மறுமை என்னும் முடிவில்லா வாழ்க்கையில் வீடுபேறு அலல்து நரகத்தை அடைவதற்கான பரீட்சை ஆகும். எனவே இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் கடலில் நீந்துவதை போலவோ, சிறையில் இருப்பதை போலவோ தேவைகளையும் இன்பங்களையும் தவிர்த்து பயணியை போல வாழ வேண்டும். 

புனிதநூல்கள்

புனித நூல்கள் பல்வேறு மொழிகளில் வெவ்வேறு காலங்களில் பல்வேறு பெயரில் பெயரில் கையாளப் பட்டுள்ளது. தமிழ் நூல்களைப் பொறுத்த வரையில் தொடக்கத்தில் வேதங்களை தவிர ஏதும் இல்லை என்கிற நிலை இருந்த பொழுது "நூல்" என்று குறிப்பிடப் பட்டு அது முதல் மற்றும் வழி நூல் என்று வகை படுத்தப் பட்டது. பிறகு அனுபவத்தைக் கொண்டு உலகம் தொடர்பான நூல்கள் மனிதர்களால் எழுத தொடங்கிய பொழுது அவைகளை உலக நூல்கள் என்றும் அல்லாததை "மறை நூல்கள்" என்றும் குறிப்பிடப் பட்டது. பிறகு வட மொழி நூல் மற்றும் மதம் ஊடுருவ துவங்கிய பிறகு "வேதம்" மற்றும் "ஆகமம்" (முதல்வன் வாக்கு) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   
 

 வெவ்வேறு சமயங்களில் புனித நூல்கள் என்னென்ன பெயரில் அறியப்படுகின்றன?

தமிழர் சமயங்கள் நூல், மறை, மந்திரம், காப்பியம்வேதம், ஆகமம்

இந்து மதம் வேதம் (ரிக், யஜுர், சாம, அதர்வனா), உபநிஷம் (எ.கா - ஈஷா உபநிஷம் உட்பட மொத்தம் 108), புரணம் (கருட புராணம் உட்பட மொத்தம் இந்து மத பெரியோர்களால் அங்கீகரிக்கப் பட்ட 18 புராணங்கள் உண்டு), இதிகாசம் (ராமாயனம், மகாபாரதம்), கீதை மற்றும் மனுஸ்ம்ரிதிகள் (வேதத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள்)

இஸ்லாம் அல் கிதாப் (நூல்), அல் குர்ஆன் (ஒதப்படுவது), திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது), தன்சீல் (வெளிப்படுத்தப் பட்டது) போன்ற பல பெயர்கள் உள்ளன.  

கிறிஸ்தவம் இதில் பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் அல்லது புத்தகம் என்று பெயர். மேலும் அதன் பெயர்களாக Book of the Law (Deuteronomy 31:26)Gospel (Romans 1:16), Holy Scriptures (Romans 1:2) Law of the Lord (Psalm 19:7), Living Words (Acts 7:38), Scriptures (2 Timothy 3:16), The Scroll (Psalm 40:7), Truth (John 17:17),  Word of God (Luke 11:28)

வேதம் என்பதன் வரையறை என்ன?

 
பல சமய புனித நூல்களை சிறிதளவேனும் வாசித்த பிகு வேதம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும் என்று யூகித்து அறிய முற்படும் பொழுது கீழ்கண்ட இலக்கணங்கள் வேதங்களுக்கு பொருந்தும் என தோன்றியது.
  1.  முன்னறிவிப்புகள்: பின்வருபவனவற்றை முன்னமே அறிவிக்கக் கூடியது (Prophecy) - உதாரணமாக பின்வரும் சம்பவங்கள் தீர்க்கதரிசிகள் பற்றிய செய்திகள்.   
  2.  கடந்த கால வேதத்தை மெய்ப்பிக்கக் கூடியது: எடுத்துக்காட்டாக, அவ்வையாரின் நன்னூல்,குறளையும், திருமந்திரத்தையும் ஒரே வாக்கு என்று கூறுவதும், ஆபிரகாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் முன் தோன்றிய வேதங்களை குறித்து கருத்துக்களை சொல்வதும், ரிக் யஜுர் சாம வேதங்கள் அதே போல முன் வந்த தூதர்களை பெருமை படுத்துவதும் இதில் அடங்கும்.
  3.  மனிதன் அறியாத உண்மைகளை விளக்குவது: கடவுளின் வரையறை, கடவுள் துதி முறைகள் மற்றும் மனித அறிவுக்கு எட்டாத விதி, சொர்கம் நரகம், உயிர், பிறப்பு இறப்பு தொடர்பான செய்திகள் உள்ளடக்கியதாக இருக்கும்.
  4.  நன்மை தீமையை வரையறுப்பது: மனிதனின் வாழ்க்கையில் எவையெவை அறம் எவையெவை  மறம் என்று பிரித்து வரையறுத்து கூறக்கூடியதாகவும், அறம் செய்தால் விளையும் நன்மையையும் மறம் செய்வதால் ஏற்படும் தீமையையும் விளக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆனால் இந்த வரையறை முறையானதல்ல. இந்த வரையறை குறள் மற்றும் தொல்காப்பியம் என்ற இருவேறு பண்புகளை கொண்ட ன்னோர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாது.! இவை இரண்டையும் வேதம் என்று மனதில் எண்ணிக்கொண்டு வரையறையை ஏற்படுத்த முயன்றதாக நீங்கள் கருதினால் அதில் பிழை ஏதும் இல்லை. 
 
குறள் ஒரு மறை நூல் என்பது "தேவர் குறளும்.....,மூலர் சொல்லும்....ஒன்றே என்றுனர்" எனும் அவ்வையார் வாக்கிலிருந்து புலப்படுகிறது. ஏனென்றால் மூலர் தனது திருமந்திரத்தில் "வேதம் செப்ப வந்தேனே" என்கிறார். இதன் மூலம் குறள் ஒரு மறைநூலாக இருக்க வாய்ப்புள்ளது.
தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் என்பதை அறிவோம். ஆனால் தமிழ் மொழிக்கு மட்டுமன்றி அது எவை எவைக்கெல்லாம் இலக்கணம் சொல்கிறது என்று நாம் அறிந்தால் அதுவும் ஓர் மறைநூல் என்று நாம் கருதாமல் இருக்க முடியாது. 
  • தெய்வம் பாலினமற்றது: தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே - (சொல்லதிகாரம் 1:4)
  • மறைநூலுக்கான வரையறை: முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  • உலகத்தின் இயற்க்கை: நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் (தொல். பொருள். மரபியல் - 635)
எனவே மனிதன் அறியாத பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதால் தொல்காப்பியமும் மறைநூல் எனக் கருதலாம். சொல்லும் எழுத்தும் புணரும் விதி உட்பட தொல்காப்பியத்தின் பல சூத்திரங்கள் மனித வாழ்வுக்கும் பொருந்தும் என தொல்காப்பிய அறிஞர்கள் கூறுவார். ஒரு சூத்திரம் பல இடங்களுக்கும், இனங்களுக்கும் பொருந்தும்என்றால் அதை மறைநூலாக கருதாமல் இருக்க  முடியவில்லை. எனவே வேதத்தின் வரையறையை தேடும் முயற்சியில் கீழ்கண்ட செய்திகள் கிடைத்த்துள்ளது.

தமிழர் சமயம்

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

பொருள்: உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் முனைவனுக்கு வெளிப்பட்டு மக்களுக்கு போதிக்கப்பட்டு பின்பற்ற பட்டு நின்றது நூல் என உணர்க. 

குறிப்பு: இன்று புத்தகமாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நூல் என்பது மறை நூலையே குறிக்கும். எனவே திருக்குறள் உட்பட அனைத்து வேதத்திலும் நூல் என்று குறிப்பிடப்படுவது வேதத்தையே ஆகும்.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)
    • வினை-யின்: செயல்-இன் 
    • நீங்கி: அதை நீக்கி (அ) இல்லமால் 
    • விளங்கிய: உணரும் உணர்ச்சி 
    • அறிவு: அறிவு ஞானம் 
    • முனைவன்: முந்தியவன், மூத்தவன் 
    • கண்டது: "எழுதப்பட்டது" என்பது இதற்க்கு பொருந்தாது. ஏனென்றால் மனிதன் எழுத துவங்கும் முன்பே அறிவு நூற்கப் பட துவங்கி விட்டது. எனவே கண்டது என்பதே இங்கே குறிப்பிட சிறப்பான சொல், "எழுதப்பட்டது" என்பது "கண்டது" என்கிற சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று. எடுத்துக் காட்டாக, கீதை - பாடல், வேதம் என்பது கீர்த்தனைகளின் தொகுப்பு, அத்-திக்ர் (நினைவில் கொள்ள வேண்டியது) திருக்குர்ஆன் அழைக்கப் படுகிறது. அகத்தியம் (அகம்+இயம்) என்பதும் அகத்தில் ஒலிப்பது , பைபிள் என்கிற கிரேக்க வார்த்தைக்கு நூல் என்று பெயர்.
    • முதல்: ஆதி, ஆரம்ப, தொடக்க
    • நூல்: (கோர்வையாக, வரிசைப் படுத்தி) நூற்கப்பட்டது 

பேராசிரியர் உரை: வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். 
 
முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது. 
 
மற்று மேலே சொல்லப் பட்ட சூத்திரத்தின்படி நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம். (தொல்.பொருள்.649.பேரா.)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641) 

பேராசிரியர் உரைஎன்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். 
 
கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். விக்கி 

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)

பேராசிரியர் உரைமுதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு. 

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

உலக வழக்கமும் ஒருமுக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் (அகத்தியம் 381)

நூற்பா விளக்கம்: உலக வழக்கமும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும் நிலைபெற உணர்வை தருபவன் முதுமறை நெறியை வழங்குபவனாவான்.

குறிப்பு: மேற்கண்ட இந்த அடிப்படை வரையறையோடு திருமந்திரம் கூறும் "நான்மறை"-யை வாசித்து தெளிவு பெற்றால், உலக வேதங்கள் அனைத்தும் ஒரே தெய்வத்தின் ஏற்பாடு என்பதை அறியலாம். உலக சமயங்கள் எத்தனை, தமிழர் சமயங்கள் எத்தனை, அவைகள் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறது என்கிற தெளிவு பிறக்கும்.  

இஸ்லாம்


தமிழர் சமயம் கூறுவது போல "நூல்" (அல் கித்தப் - The Book) என்றும் குர்ஆன் தன்னை அடையாள படுத்துகிறது.

இது, சந்தேகத்துக்கு இடமில்லா அல் கிதாப் (நூல்) ஆகும். பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். - (குர்ஆன்  2:2)

குர்ஆன் நூலானது அவரின் அனுபவமன்றி அவருக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் ஆகும். அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். இதில் வஹீ என்பது சில முறைகளில் வழங்கப் பட்டது.

(நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (தேவதூதர்) என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? - (குர்ஆன் 6:50)

1) வஹீயின் மூலமோ 2) திரைக்கப்பால் இருந்தோ அல்லது 3) ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன்:42:51)

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.
  1. வஹீயின் மூலம் பேசுவது - உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக (அசரீரியாகவோ, கனவிலோ ) அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. (திருக்குர்ஆன்:53 : 2, 3, 4.)
  2. திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது - அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (திருக்குர்ஆன்:4:164.)
  3. வானவர் (ஜிப்ரீல்) மூலம் செய்தியைத் தெரிவிப்பது - என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (திருக்குர்ஆன்:16:2.)
ஆகியவை அம்மூன்று வழிகளாகும். 

சுருக்கமாக, முகமது நபி, தான் செய்த வினையின் மூலம் விளைந்த அறிவின்றி, அதாவது அனுபவத்தின் மூலமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை கொண்டு குர்ஆனை மக்களுக்கு போதித்தார்.

மறைநூல் தொடர்ந்து வரக்கூடிய ஒன்று 
 
என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” - (குர்ஆன் 2:38)  
 
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே மொழியை பேசினார்கள்
 
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213) 

பிற்காலத்தில் மொழிகள் வேறுபட்டதும், ஒவ்வொரு மொழிக்கும் வேதம் வழங்கப் பட்டது (ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முதல் நூல் உண்டு) 

 "ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" - (குர்ஆன் 14:4)

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (குர்-ஆன் 10:47)

வழிநூலை புறக்கணித்தவர்கள்

அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். - (குர்ஆன் 40:83)

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்ஆன் 2:101)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது. (குர்ஆன் 5:46)  

அனைத்து மறைநூல்களும் நம்பப்பட்ட வேண்டும்  

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (குர்-ஆன் 2:4) 

"(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்". 

(நபியே!) இன்னும் இறைநம்பிக்கை உடையவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். [அல்குர்ஆன் 2:4] 

 “வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 5:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும்,  அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். [அல்குர்ஆன் 4:136.]  

குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது  

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.  (குர்ஆன் 25:1) 

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - அவரு(நபியு)டைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். [அல்குர்ஆன் 69:44] 

குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது 

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (குர்-ஆன் 15:9) 

இஸ்லாத்தை பொறுத்தவரை குர்ஆன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது, அவற்றில் சில

1 அல் கிதாப் (புத்தகம் (அ) நூல்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது).... etc.

அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன,

– நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “தௌராத்”
– நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “ஸபூர்”
– நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட “இன்ஜீல்”
– நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட “அல்குர்ஆன்"


இந்து மதம்

மாறாத அது மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண்டது. ஆலமரம் போன்ற அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான். -  (கீதை - 15.1)

குறிப்பு: ஒரே மூல நூலிலிருந்து அனைத்து வேதங்களும் வழங்கப்பட்டதை இந்த வசனம் மறைமுகமாக கூறுகிறது. மேலும் வேர்கள் அழியாது, இலைகள் அவ்வப்பொழுது உதிரும், மறையும். புதிய இலைகள் துளிர்க்கும். காய்ந்த பழைய இலைகளை நம்பி இருத்தல் அறிவுடைமை அல்ல. 

 நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே. - (Bg 15.15)

குறிப்பு: அனைத்து வேதங்களும் பிறப்பு இறப்பு இல்லாத தன்னை பற்றியே பேசுவதாகவும்அவை அனைத்தையும் வழங்கியது தான்தான்இறைவன் கூறுவதாக இந்த வசனம் அமைந்து இருக்கிறது.  

கிறிஸ்தவம்

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49) 
 
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நல்லறம் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி - (II தீமோத்தேயு 3 அதிகாரம் 16) 
 

 பௌத்தம்


புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் இருந்தபொழுது ஞானம் கிடைத்தது என்று நாம் படித்துள்ளோம். யாரிடமிருந்து? புத்தமதம் நாத்தீக மதம் என்று சொல்லப்படுகிறது. முதலில் பகுதி தொலைந்த  அரைகுறை தகவல் உள்ள நூலையோ, அதன் முழு வரலாறு அறியாத நிலையிலோ அந்த முடிவுக்கு நாம் வர முடியாது.  
 

முடிவுரை

எனவே மனிதனின் அனுபவ அறிவுமின்றி ஒரு கல்வி எல்லா காலங்களிலும், எல்லா மொழயிலும், எல்லா  நிலத்திலும் வழங்கப் பட்டுக் கொண்டே இருந்து இருக்கிறது. அவைகள்தாம் மறை நூல்களாகும், அவைகள் ஒரே இறைவனிடமுள்ள ஒரே மூல நூலின் சிறு சிறு பகுதிகளாம்.