நாத்திகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாத்திகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாத்திகம்

நாத்திகம் என்றால் கடவுளும், அவன் வழங்கிய மறை நூல்களும், அதை போதிக்கும் குருமார்களும் இல்லை என்று நம்பிக்கை கொள்வதாகும். இது நாஸ்தீகம், இறைமறுப்பு, Atheism, குஃப்ர் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு பண்பாடுகளில் அழைக்கப் படுகிறது.

நாத்திகம் பொதுவாக இரண்டு வகைப்படும்
    • கடவுளின் இருப்பை ஏற்காமலும் மறுக்காமலும் இருத்தல் 
      • கடவுள் உண்டா இல்லையா என்று குழப்பமாக உள்ளது (Agnosticism)
      • கடவுள் உண்டா இல்லையா என்ற கவலை இல்லை (Apatheist)
    • கடவுளின் இருப்பை உறுதியாக மறுத்தல் 
      • இறைவனென்று எதுவுமில்லை (Atheism)
      • அரசியல் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட தத்துவங்களை பின்பற்றுவது (Capitalism, Socialism, Communism, Liberalism, Populism, and Nationalism)
      • அறிவியலையும் சமயத்தையும் இணக்கமாக புரிந்துகொள்ள முயலாமல் எதிரெதிராக சித்தரித்து அறிவியலை மட்டும் பின்பற்றுவது. (Scientism, Antheism)
நாத்திக சிந்தனை பல காரணங்களால் தோன்றுகிறது. அவைகளில் சில அடிப்படையான காரணங்களாவன,
    • அறியாமை - கல்வி வாடையே இல்லாமல் இருப்பதும், உலக நூல்களை மட்டும் கற்பதும் மனிதனை அறியாமையில் விட்டு விடுகிறது.
    • பெருமை - பணம், பதவி, அதிகாரம், புகழ், கல்வி, அறிவீனம் ஆகியவை மனிதனை பெருமையில் கொண்டு போய் சேர்க்கிறது.
    • பொறுமையின்மை - இன்ப துன்பம் ஏற்படும் பொழுதும், சோதனைக்கு உட்படுத்தப்படும் பொழுதும் பொறுமையை இழக்கும் நிலைக்கு மனிதன் செல்கிறான்.
    • பொறாமை - தன்னை விட சகமனிதன் செழிப்புடன், வெற்றியுடன், புகழுடன், அறிவுடன் வாழ்வதை தாங்கமுடியாத நிலை பொறாமை ஆகும். நல்லவரோ கெட்டவரோ, அழகானவரோ அசிங்கமானவரோ, கருப்பரோ வெள்ளையரோ, தமிழரோ மற்ற மொழிக்காரரோ, சொந்தக்காரரோ அந்நியரோ, நமது மதத்தை சார்ந்தவரோ மற்ற மதத்தை சார்ந்தவரோ, நம்மினத்தவரோ மற்ற இனத்தவரோ, ஏழையோ பணக்காரரோ, எவராயினும் அவருக்கு கிடைத்த அருட்கொடைகளை கண்டு நாம் விரும்பாமல் பெருமூச்சு விடுவது பொறாமை ஆகும்.
நாத்தீகம் பேசும் மனிதன் எக்காரணத்தை முன்வைத்தாலும் அக்கராணத்தை ஆராய்ந்தால் அதன் மூல காரணம் இவற்றில் ஒன்றாக தான் இருக்கும். இந்த பட்டியலில் உள்ள குணங்கள் எதுவும் கடந்து போகுமளவு சிறிய தவறல்ல.
 
சமயங்களை எளிதில் விமர்சிப்பது போல நாத்திகத்தை விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சமயத்தை விமர்சிக்க முயன்றால் 
    • அச்சமய மறைநூல்கள், 
    • அச்சமய மக்களிடம் புழக்கத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், 
    • அவர்களிடம் புழக்கத்தில் உள்ள மூட பழக்கங்கள், 
    • அவர்கள் வரலாற்றில் செய்த பிழை 
போன்ற சமய அடிப்படை செய்திகளை கொண்டு அச்சமயத்தின் மீது விமர்சனம் செய்ய முடியும், அது மூடத்தனமான வாதமாக இருந்தாலும் சரியே. ஆனால், நாத்தீக சிந்தனையை நீங்கள் விமர்சிக்க எண்ணி நீங்கள் ஒரு வாதத்தை முன் வைத்தால், "அது தவறுதான் என்றும் அது அந்த  தனிமனிதனின் பிழை" என்று கூறி, அல்லது "அதில் என்ன பிழை" என்று கூறி நாம் வைத்த அந்த வாதத்தை அவர் எளிதில் கடந்து சென்றுவிடுவார். ஏனென்றால் அறம் தொடர்பாக ஒட்டுமொத்த நாத்தீகர்களும் ஏற்கும் எந்தவித அடிப்படையும், மூலமும், வரைவிலக்கணமும் கிடையாது. மேலும் தனது நிலைப்பாட்டிற்க்கான காரணத்தையம் பெரும்பாலான நாத்திகர்கள் வெளிப்படுத்துவதில்லை. எனவே அவர்களின் நிலைப்பாடு சரியா பிழையா என்று நாம் விவாதிக்க முடியாது. 
 
ஆனால் அதிலும் சில நேர்மையாளர்கள் உள்ளனர். அவர்கள் சரியான விளக்கம் கிடைக்கப் பெற்றால், உண்மை என்று விளங்கச் செய்தால் அதை நேர்மையாக எதிர்கொள்வர். அவர்களுக்கு இந்நூலில் கடவுளின் இருப்பை விளக்க முயற்சிப்போம்.  
 
நாத்திக மக்களின் இருப்பை பற்றி சமய நெறி நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டு இருந்தாலும், நவீன காலத்தில் கூறப்பட்ட சில  அறிவியல் கோட்பாடுகள் இறைமறுப்பு கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.
    • டார்வினின் பரிணாமக் கோட்பாடு 
    • பெருவெடிப்பு கோட்பாடு 
    • இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியல் - பொதுவுடைமை தத்துவம் 
பரிணாம கொள்கை 
 
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஒருவர் ஏற்கும் பொழுது அது சமயங்கள் கூறும் படைப்பு தத்துவத்துக்கு எதிராக அவரை நகர்த்துகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் கடவுளையும் பரிணாமக் கோட்பாட்டையும் நம்பிக்கை கொள்ள முடியாது. 
 
எளிமையாக சொல்வதென்றால், பொதுவாக பரிணாமம் என்பது, படிப்படியான முன்னேற்றம் அல்லது மாற்றத்தை குறிக்கும். உயிரியலில் பரிணாமம் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் ஆகும். இதுவரை சமய நூல்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் மதங்கள் இதை சில இடங்களில் குறிப்பிடுகிறது.  
 
இஸ்லாம்
 
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்." (குர்ஆன்: 49:13)
 
"இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன."(குர்ஆன் 30:22)

கிறிஸ்தவம்

"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." (அப்போஸ்தலர் 17:26)

தமிழர் சமயம்

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந்திரம் 2104)

பொருள்: "ஒன்றே குலம்" என்பது மனிதர்கள் அனைவரும் ஒரே மனிதனிலிருந்து தழைத்தவர்கள் என்று பொருள் படுகிறது.  

மனிதர்களின் தோற்றம் ஒரே மனிதனிடமிருந்து இருந்ததென்றும் அவரிடமிருந்து இத்தனை நிறங்களாக, இனங்களாக பரிணமித்தது என்று மேலும் சில வசனங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆனால் இந்த இயற்கை இயல்பை சற்று நீட்டித்து திரித்து ஒருசெல் உயிரிலிருந்துதான் அனைத்தும் வந்ததென்ற முரண்பட்ட வாதத்தை ஏறக்குறைய உண்மை என்கிற அளவுக்கு நிலைநிறுத்தியதுதான் மோசடியின் உச்சம். பரிணாம கொள்கை உண்மை எனில் வெவ்வேறு இட 
 
 

 
இன்று பரிணாமக் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசினால் அவர் அறிவியலுக்கு முரணாக பார்க்கப்படுவது எதார்த்தமாகிவிட்டது. எத்தனை எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் சமய நூல்களினால் நிகழ்ந்துள்ளது என்ற பட்டியலை நீங்கள் காண நேரிட்டால் ஆச்சரியமடைந்து போவீர்கள். வேதங்கள் முழுக்க முழுக்க அறிவியலை பேசவில்லை என்றாலும் சரியான அறிவியலை பேசாத வேதங்கள் இல்லையெனலாம். அறிவியல் பேசுவது வேதத்தின் நோக்கமல்ல, மனிதர்கள் அறியாத உண்மைகளை அவைகள் பேசுவதன் மூலம் அது யாரிடம் வந்தது என்று நிறுவ முயல்கிறது.
 
பெருவெடிப்பு கொள்கை 

திடீரென்று ஒருநாள் மனிதன் உலகம் படைக்கப்பட்டதல்ல என்று பேசுவான் என்று அறிந்த இறைவன் தனது வேதங்களில் உலகம் படைக்கப்பட்ட முறையினை விவரித்து உள்ளான். 

 தமிழர் சமயம் : பரிபாடல் உலகம் தோன்றிய விதத்தை பேசுகிறது 

(பரிபாடல் அடிகள்: 1 முதல் 19 வரை)
தொல் முறை இயற்கையின் மதிய………..
…………………………………………… மரபிற்று ஆக
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி            (5)
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு               (10)
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும்  வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை               (15)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நிற் பேணுதும் தொழுதும்            (19)

பொருள்‌ ஒன்றுமில்லாத இடத்தில்‌ அண்டத்‌ தோற்றத்துக்குக்‌ காரணமான கரு -பரமாணு பேரொலியுடன்‌ தோன்றியது. உருவம்‌ அறிய இயலாத வளி முதலான பூதங்களின்‌ அணுக்களுடன்‌ வளர்கின்ற வானம்‌ என்னும்‌ முதல்‌ பூதத்தின்‌ ஊழி தோன்றியது. அந்த அணுக்களின்‌ ஆற்றல்‌ கிளர்ந்து பருப்பொருள்கள்‌ சிதறும் படியாகப்‌ பல ஊழிக்‌ காலங்கள்‌ கடந்து சென்றன. பிறகு நெருப்புப்‌ பந்துபோலப்‌ புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம்‌ தோன்றியது. பின்னர்ப்‌ பூமி குளிரும் படியாகத்‌ தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம்‌ கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால்‌ பூமி வெள்ளத்தில்‌ மூழ்கியது. மீண்டும்‌ மீண்டும்‌ சிறப்புடன்‌ வெள்ளத்தில்‌ மூழ்குதல்‌ நடந்த இப்பெரிய உலகத்தில்‌, உயிர்கள்‌ உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல்‌ என்னும்‌ உள்ளீடூ தோன்றியது. அச்சூழலில்‌ உயிர்கள்‌ தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய பூமியில்‌ ஊழிக்காலம்‌ கடந்தது.

திருமந்திரம்  
 
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. (திருமந்திரம் 5)

பொருள்: நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே! 

இஸ்லாம்  

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (குர்ஆன் 41:11

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (குர்ஆன் 21:30)

கிறிஸ்தவம் 

ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமும் வெற்றிடமும் இல்லாமல் இருந்தது, ஆழத்தின் முகத்தில் இருள் இருந்தது. மேலும் தேவன் நீரின் மேல் இருந்தார். கடவுள், "ஒளி உண்டாகட்டும்" என்று கூறினார், அங்கே வெளிச்சம் ஏற்பட்டது. வெளிச்சம் நன்றாக இருப்பதைக் கடவுள் கண்டார். மேலும் கடவுள் ஒளியை இருளிலிருந்து பிரித்தார். கடவுள் ஒளிக்கு பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் வந்தது... (ஆதியாகமம் 1:1-5)

மேற்சொன்ன வசனங்களெல்லாம் பெருவெடிப்பு கொள்கையினை ஒத்ததாக  அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதில் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அறிவியலை மட்டும் நம்பும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஒரு ஆராய்ச்சியாளரால் நிறுவப்பட்ட பிறகு மக்கள் நம்பும் ஒரு கோட்பாட்டை சமய நம்பிக்கை கொண்ட மக்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக நம்பி வந்துள்ளனர். 

துவக்கத்தில் என்ன இருந்தது என்று சாத்திய கூறுகளை கொண்டு யூகித்து கூறும் ஒரு அறிவியலாளரை காட்டிலும் அப்பொழுது அதை நிகழ்த்தியவனின் கூற்றே நம்புவதற்கு தகுதியானது. ஏனென்றால் மனிதனின் ஆயுட்காலம் 60 - 100 வரை, இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன். இருவரின் அறிவின் அளவையும், ஆற்றலையும் ஒப்பு நோக்கினால் இரண்டில் ஒன்றுதான் சிறந்ததாக சரியானதாக இருக்க முடியும் என்பதை அறியலாம்.

மேலும் அமீபாவிலிருந்து மனிதன் பரிணமித்த நிகழ்வை கண்ட சாட்சியோ, உலக பெருவெடிப்பின் மூலம் தோன்றிய நிகழ்வை கண்ட சாட்சியோஇருக்க முடியாது. இத்தனை கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை வெறுப்பதே மதவாதிகளின் இயல்பு என்று சுருக்கினால், ஒவ்வொரு நிலத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மொழியிலும் மறை நூல் வழங்கப்பட்டு அதில் இதுபோல மனிதன் முன்பு அறியாத அறிவியல் ஆதாரங்களை சான்றாக கொடுத்தும் இறைவன் இல்லை என்று மீண்டும் மீண்டும் பிதற்றி அறிவாளியாக தன்னை கருதும் அறிவிலிகளுக்கு இதுதான் இயல்பு என்று சுறுக்குவதில் பிழையில்லை.

Thesciencebehindit.org கூற்றுப்படி பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனை செய்ய முடியாத வெப்பமான மற்றும் அடர்த்தியான புள்ளியிலிருந்து (அதாவது சிங்குலாரிட்டி-யிலிருந்து) உருவானது என்று கூறுகிறது. கற்பனை செய்ய முடியாத ஒன்றிலிருந்து அனைத்தும் படிப்பபடியாக தோன்றியது என்ற கூற்று கடவுள் கோட்பாட்டுக்கு எப்படி முரண்படமுடியும்?

கடவுளை கற்பனை செய்யமுடியுமா? முடியாது! என்றுதானே நான்மறைகளும் கூறுகிறது. 

buffalo.edu கூற்றுப்படி பெருவெடிப்புக்கு முன் - பிரபஞ்சம் ஒரு வினாடியின் ஒரு பகுதியிலேயே குறைந்தது 80 மடங்கு அளவு இரட்டிப்பாகி, மூச்சடைக்கக்கூடிய அண்ட விரிவாக்கத்திற்கு உட்பட்டது. இந்த வேகமான விரிவாக்கம், வெற்று இடத்தையே ஊடுருவிய ஒரு மர்மமான ஆற்றல் வடிவத்தால் தூண்டப்பட்டு, பிரபஞ்சத்தை தனித்தனியாக்கியது மற்றும் குளிர்ச்சியாகக்கியது.

ஒரு மர்மமான ஆற்றல்? 

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதன் பொருள் ஆற்றலுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது என்பதாகும். ஒன்றுமே இல்லாததிலிருந்து உலகமும் அதில் உள்ள ஆற்றலும் தோன்றியது என்று கூறும் முரண்பாடுள்ள பெருவெடிப்பு கொள்கையை ஏற்கும் நாம், எப்பொழுதும் இருக்கும் இறைவனிடமிருந்து உலகமும் அதிலுள்ள அழிவில்லா ஆற்றலும் வந்தது என்றால் நம்ப முடிவதில்லை. வேடிக்கை! 

ஆற்றல் இறைவனிடம் இருந்து வந்தது என்பதால்தான், ஆற்றல் பெற இறைவணக்கம் அவசியம் என்கிறது அனைத்து மறைநூல்களும். வாசிக்க.

பொருள் முதலா? கருத்து முதலா? 

மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட தத்துவமாகும்.

"இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும். அதன் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருகின்றன. மேலும் இயற்கையின் உள்ளே காணப்படும் முரண்பாடுகளின் வளர்ச்சி காரணமாகவும் நேர் எதிரான சக்திகள் மோதிக் கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என இயங்கியல் அணுகுமுறை கருதுகிறது. இந்த இயங்கியல் அணுகுமுறை Metaphysics எனப்படும் மாறாநிலைத் தத்துவத்திற்கு நேர் எதிர் தத்துவமாக வளர்ச்சி பெற்ற ஒன்றாகும்."

சமயங்கள் மாறாநிலைத் தத்துவத்தை போதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த கருத்து எப்படி தோன்றியது என்று தெரியவில்லை. அநேகமாக மேலைநாடுகளில் இருந்து இந்த சொல்லாடல் தோன்றியதால் பைபிளில் அல்லது கிறிஸ்தவத்தில் முரண்பட்டு இது தோன்றி வளர்ச்சி பெற்று இருக்கும் என்று கருதுகிறேன்.

ஆனால் சமயங்கள் அதை போதித்தால், முதல்நூல் வழிநூல் கொள்கையே தேவையில்லை. முதல் நூலோடு நிறுத்தி இருக்கலாம், அதுவே உலகம் முடியும் வரை போதுமான அறமாக இருக்கும் என்று போதித்து இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழும் அதுதான் இறைவன் படைத்த இயற்கையின் பண்பு என்பதை காட்டும் விதமாக, பைபிளில் வெவேறு காலகட்டத்தில் தோன்றிய தீர்க்கதரிசிகளால் 40 நூல்களும், சமஸ்கிருதவேத நூல்களில் ஒன்றான ரிக் வேதம் வெவ்வேறு காலகட்டத்தில் 356 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும், தமிழர் சமய நூல்களில் ஒன்றான புறநானூற்றில் 150 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டமும் திருத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்பொழுது யாரால் எவ்வாறு திருத்தப்படும் என்பதும் தீர்க்க தரிசனமாக முந்தய நூல்களில் கொடுக்கப்பட்டு உள்ளது.

மெய்யியல்கள் எல்லாம் நிலையில்லா இவ்வுலகில் பொறுப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் நிலையில்லா உலகில் கிடைக்கும் வெற்றியை விளக்குவதையே முதன்மை நோக்கமாக கொண்டிருக்க, புரட்சி மூலம் இவ்வுலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தியல் ஆயுதமாக அதை பின்பற்றுபவர்களால்  கருதப்படுகிறது.


ஆனால் 1800-களின் கடைசியில் எழுதப்பட்ட "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை"-யில் கூறப்பட்ட  இந்த மேற்சொன்ன கருத்து 1950-களில் ரஷ்யாவிலும் இன்று சீனாவிலும் தென்கொரியாவிலும் கண்முன் நடைபெறுவதை காணலாம். இந்த தத்துவம் பிழை என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா?

அறிவியல் என்பது பொருட்களின் பண்புகள், அது உருவாகும் அல்லது அழியும், அதன் பரிமாணம் மற்றும் பரிணாமத்தை விளக்குகிறது. இவற்றை கொன்று பொருட்களை கையாளும் அறிவை நம் பெறுகிறோம். ஆனால் ஆன்மிகம் அப்பொருள் ஏன், எப்பொழுது, யாரால் வழங்கப்பட்டது என்பதை விளக்குகிறது. உதாரணமாக, ஒரு உணவு என்பது எதை சேர்த்து என்னென்ன பக்குவத்தில் எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கமும் முறையை அறிவியல் எனக்கொண்டால், அதை அந்த பக்குவத்தில் எதை, எப்படி, யார் செய்தார்என்று விளக்குவதை ஆன்மிகம் எனக்கொள்ளலாம். இரண்டும் ஒன்றை ஒன்று நிறுவும் கூறுகள். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று இணக்கமாக பயணித்த, பயணித்து கொண்டு இருக்க வேண்டிய ஒற்றை வண்டியின் இரட்டை மாடுகள். அதை திட்டமிட்டு பிரித்ததுதான் நாத்திக சிந்தனையின் வளர்ச்சிக்கு காரணம். மேற்கத்திய கல்விமுறையின் கட்டமைப்பு, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிறுவனர்கள் போன்றவைகளின் பின்புலங்கள் ஆராயப்படும் பொழுது திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

கடவுள், மறுமை போன்ற ஐம்புலன்களால் நேராடியாக தொட்டு உணரமுடியாத பல விடயங்களை Material-விதிகளை கொண்டே அணுகுவதால் இவைகளை நாத்தீகர்கள் எளிதாக நிராகரிக்கின்றனர். ஆனால் நாம் அணுகும் விடயத்தின் பண்பு நிலை மாறும் பொழுது அதற்க்கு ஏற்றாற்போல விதிகளும் அணுகும் முறையும் மாறும் எனபது அடிப்படை. இவ்வாறு புலன்களுக்கு எட்டாத விடயங்களை எந்த விதியின் அடிப்படையில் அணுகுவது என்பதும் இந்நூலில் ஆங்காங்கே விவரிக்கப் படுகிறது. 

காலவோட்டத்தில் மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத்துவங்கிய பிறகும் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாப்பு பெற இயற்கையை வணங்க துவங்கி, பிற்கலத்தில் முன்னோர்களை வணங்க துவங்கி, பின்பு மனிதனை நெறிப்படுத்த அனைத்தையும் மிஞ்சிய கடவுள் என்கிற சிந்தனை பிறந்தது என்றெல்லாம் இம்மூன்று கோட்பாட்டை நேரடியகவோ மறைமுகமாகவோ ஏற்ப்பவர்களால் கூறப்படுகிறது. ஆனால் அவற்றின் அடிப்படையே பிழை என்று இங்கே நிறுவப்பட்டுள்ளது. 

"அறிவியலும் தொழில்நுட்பமும் இவ்வளவு முன்னேறிய பிறகும் சாமி, பேய், வேதம் என்று எப்படி உங்களால் நம்பவோ பேசவோ முடிகிறது, அதெல்லாம் வெறும் superstecious" என்று கூறுவோர் உண்டு. தொழிற்கல்வியில் முன்னேற்றம் அடைந்ததால் மட்டுமே இக்கல்வி அற்றுப் போகும் என்று வாதிடுவது பொருத்தமற்றது. இரண்டுமே கல்வி என்கிற பொழுது, இரண்டிலும் உள்ள சரி பிழையை பிரித்து அறிவது நம் கடமை ஆகிறது. மேலும் இரண்டிலும் உள்ள புறக்கணிப்பு மற்றும் அதிதீவிரம் போன்ற எல்லைகளை அடையாமல் நடுநிலையை கையாள்வது அவசியம். ஆனால் அந்த நடுநிலையினை நாம் வரையறுக்க முடியாது, அதை நூல்களின் உதவியோடு பெறவேண்டும். 

சமயங்களில் உட்புகுத்தப்பட்ட பிழையான தகவல்களையும், நடைமுறைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் விமர்சிக்கும் மக்களிடமிருந்து நாத்திகம் உருவெடுக்கிறது. அறிவியலில் ஒரு தவறான கொள்கை சொல்லப் பட்டால் அதை பகுத்து அறிவது போல ஆன்மீகத்திலும் உள்ளது. எனவே அம்முறையை கொண்டு பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு ஆகும். முற்றிலும் இறைவனையும் மறைநூலையும் புறந்தள்ளுவது அறிவீனம் ஆகும். 

இறைநம்பிக்கையற்றவர்கள் கெட்டவர்களாக பார்க்கப்படுவது ஏன்?

கடவுள் நம்பிக்கை அல்லாதவர்களை கெட்டவர்களாக பார்ப்பது யார் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒன்று கடவுளாக அல்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகதான் இருக்க முடியும். ஏன் என்றால் கடவுள் இல்லை என்று நம்புவது உண்மைக்கு புறம்பானது. 

ஒவ்வொரு சமயத்தின் மறைநூல்கள் இறை மறுப்பாளர்களை என்ன சொல்கிறதென்றும், அதை ஏன் சொல்கிறதென்றும் பார்ப்போம்.

தமிழர் சமயம்


கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 0002 - திறன்)

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவால் ஆகக்கூடிய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

கருத்து: கடவுள் வணக்க வழிபாடு இல்லாதவர்க்கு கல்வியின் பயன் என்ன?)
 
“மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலும்
குண்டல முதல் கண்டோர் பொற்கொல்லனுண் டென்னல் போலும்
ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும்
அண்டமற் றகண்டம் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே” - (நீதிநூல் 1)

“தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் திகழ்பொற் பாவை
ஆட்டுவோ னின்றித் தாமே ஆடுமோ திவவி யாழின்
மீட்டுவோ னின்றிக் கீதம் விளையுமோ சரா சரங்கள்
நாட்டுவோ னொருவனின்றி கன்கமைந் தொழுகுங் கொல்லோ” - (நீதிநூல் 2)

“மரமுதல் அசைதலால் காலுளதென மதிப்பார் எங்கும்
பரவிய புகையால் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீயுள தென்று தேர்வார்
பரனுளன் எனும் உண்மைக்குப் பாரெலாம் சான்று மன்னோ” - (நீதிநூல் 3)

“வானின்றி மழையுமில்லை வயலின்றி-விளைவு மில்லை
ஆனின்றிக் கன்றுமில்லை அரியின்றி ஒளியுமில்லை
கோனின்றிக் காவலில்லை குமரர் தாயின்றி யில்லை
மேனின்ற கடவுளின்றி மேதினி யில்லை மாதோ” - (நீதிநூல் 4)

எனவே, தர்க்க (Logical) வாதத்தின்படி நுணுகி நோக்குங்கால், யாதோ ஒர் ஆற்றல் இன்றி யாரோ ஒருவர் இன்றி, உலகங்களும் உயிர்களும் தோன்றி யிருக்க முடியாது. யதோ ஒர் ஆற்றல் எனில், அந்த ஆற்றல்தான் கடவுள் ஆகும். எனவே, கடவுள் என ஒரு பொருள் உண்டு என்பது உறுதி-இவ்வாறாக, இன்னும் பலவாறாக, ஆத்திக வாதம் பேசப்பட்டுப் பீடு நடை போடுகிறது நன்னூல்.
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)
 
பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.

இஸ்லாம்


நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (குர்ஆன் 2:28)

யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)

கிறிஸ்தவம்


தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. - (சங்கீதம் 53: 1)

முடிவுரை  


இது போல ஒவ்வொரு வேதமும் இறைவனை நம்பாதவர்களை சாடியே இருக்கிறது.

தர்க்க ரீதியாக யோசித்தால் இறைவன் இல்லை என்பவர்கள், இறைவனை ஏன் இல்லை என்கிறார்கள்? அதற்கு சில காரணங்களை பட்டியலிடலாம்.
    • இறைவனை பூவுலகில் எங்கும் காண முடிவில்லை,
    • கடவுள் பெயரால் நடக்கும் சண்டை சச்சரவுகள், யுத்தங்கள், தீவிரவாத செயல்பாடுகள்
    • மறை நூல்களில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில பகுதிகள்,
    • இறைவனை நம்புபவர்களின் மூட நம்பிக்கையம் அதன் பின் விளைவுகளும்,
    • மதங்களில் சொல்லப்பட்ட சில செய்திகள் அறிவியலுக்கு முரண் என்று கருதுவது,
    • புராணங்களில் உள்ள ஒழுக்க கேடான யதார்த்தத்திற்கு முரணான கட்டு கதைகள்,
    • தற்பெருமை மற்றும் பொறாமை 
ஆனால் இந்த கரங்களுக்காக மறை நூல்களையும் இறைவனையும் மறுப்பது அறிவுடைமையா? அல்லது பொய்களை களைந்து உண்மையை கண்டறிவது அறிவுடைமையா? 

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை ஏற்கும் நாம், ஒருவகை ஆற்றல் இனொன்றாக மாறும் பொழுது அது என்னவாக இருக்கும் என்கிற அறிவு நமக்கு முழுமையாக இல்லை என்று நாம் உணர வேண்டும். மனிதனின் அறிவுக்கு எட்டாத விடயத்தை சான்றுகளோடு மறைநூல்கள் சொல்லும் பொழுது அதை ஏற்க மறுப்பது ஏனோ? ஆற்றல் என்பது என்றென்றும் இருப்பதற்கான காரணம் அது என்றென்றும் இருக்ககூடிய இறைவனிடமிருந்து வெளிப்பட்டது.

மக்களுக்கு பாவ புண்ணியத்தை விளக்கி கூற, எல்லோர் மீதும் கருணையும் இரக்கமும் அன்பும் கொண்ட இறைவனின் மறைநூல்கள் இருக்கும் பொழுதே அதில் முரண்படும் சுயநலம் கொண்ட மனிதர்கள், தாமாக தனது அறிவை கொண்டு, தனது அனுபவத்தை கொண்டு, நம்மை தீமையை வரையறுத்து அதில் ஒருவொருக்கொருவர் முரண்படாமல் அதை பின்பற்றி சமநிலை சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்று கற்பனை செய்வது எத்தனை பெரிய அறிவீனம்?

இவ்வாறு மனிதர்களால் உருவான கொள்கைகளில் ஒன்றான பொதுவுடைமை தத்துவம் ஆட்சி செய்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனி மனித மதிப்பையும் மற்றும் சமூக மதிப்புகளையும் அகற்றி மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவில்லையா? இவ்வாறு ஏற்படும் கொள்கைகளில் சீர் திருத்தம் செய்து அதை ஏற்று நடந்து அதில் உள்ள நிறை குறைகளை அறிந்து, மீண்டும் அதை சீர்திருத்தம் செய்ய தயாராகும் மக்கள், அதே விடயத்தை இறைவனால் வழங்கப்பட்ட சமய நடைமுறைகளில் செய்ய தயங்குவது ஏன்? 

இறைவனால் வழங்கப்பட்ட சமயங்களில் உள்ள கலாச்சாரத்திலும் பண்பாடுகளிலும் மொழியிலும் பல வேறுபாடுகள் உள்ளது ஆனால் அவற்றில் உள்ள வேறுபாடுகளை களைந்து மக்கள் அனைவரையும் நேர்க்கோட்டில் இணைக்கும் வழிமுறை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேறுபாடுகளையும் அதை களைவதற்கான வழிமுறையையும் பின்னொரு கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

வேகமாக ஓடும் இயந்திர வாழ்க்கையில் சற்று நின்று நிதானமாய் யோசித்து நாம் எதற்க்காக ஓடுகிறோமோ அந்த கரணம் சரியா? இப்படி நிதானமில்லாமால் நில்லாமல் ஓடுவதால் அந்த இலக்கை நாம் அடைகிறோமா? அந்த இலக்கு பெறுமதியானதா? போன்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண்பது அவசியம். 

நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட தத்துவங்களும் சட்டங்களும் மகிழ்ச்சியாகவும் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் வாழ வகைசெய்கிறதா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் பொழுது இறைவனின் வழிகாட்டுதலின் அவசியம் புரியும்.