தவத்தின் பலன் *

தமிழர் சமயம்

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே. - (மூன்றாம் தந்திரம் - 8. தியானம், பாடல் எண் : 7)

பொழிப்புரை: ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

இஸ்லாம்

(கடமையானவற்றுடன்) மேலதிகமான தொழுகைகளை கொண்டு எனதடியான் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை. நான் அவனை நேசித்துவிட்டால், அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆகிவிடுவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆகிவிடுவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். (ஹதீதுல் குத்ஸி, புஹாரீ 6502) 
 

முடிவுரை

மனிதன் கடவுளாக முடியும் என்று இவைகள் கூறவில்லை.  மனிதர்களுக்கு இவைகள் கடவுளுடன் அந்த அளவு நெருக்கத்தை கொடுக்கும் என்கிற பொருளில் கூறப்பட்டது.

முகமது நபி ﷺ அவர்களின் மீது கிறிஸ்தவர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு!

இரண்டு முரணான குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவர்கள் முகமது நபி அவர்கள் மீது காலம் காலமாக கூறிவருகின்றனர். அவைகளாவன, 

1) தங்களுக்கு என்று எதுவும் சொந்தமாக கொண்டிராமல் பைபிளை காப்பி அடித்து உள்ளார் முகமது

உபாகமத்த்தில் மோசஸ் இவ்வாறு கூறுகிறார்:

“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். - (உபகாமம் 18:20

மோசேவின் போதனைக்கு எதிரான எந்தவொரு போதனையும் முகமது நபி ﷺ அவர்களால் செய்யப் படவில்லை. உதாரணமாக மோசேயின் பத்து கட்டளைகளைக்கு முகமது நபியின் உபதேசங்கள் எங்கும் வேறுபடவில்லை. 

மேலும் மோசே கூறியுள்ளார்: 

கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்து கொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. (உபகாமம் 8:22)

முகமது நபி  கூறிய 1000-க்கும் மேற்பட்ட முன்னறிவிப்புகள் அவர் வாழ்ந்த சமகாலத்திலும் இப்பொழுதும் நடந்துவந்து உள்ளது. அவற்றில் சில,

    • முசுலிம்களின் நம்பிக்கையின் படி குர்ஆனே மிகப்பெரும் அற்புதமாகும். ஏனெனில் மற்ற இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் போலல்லாமல் குர்ஆன் முகம்மது நபியின் வாழ்நாளைக் கடந்தும் நிலைபெற்றுள்ளது.
    • முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு
    • இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்
    • அலி இபின் சகல் ரப்பான் அல் தபரி அவர்கள் கூற்றுப் படி முகம்மது நபி தனது எதிரிகள் அனைவரையும் வென்றது அற்புதங்களில் ஒன்றாகும். இதைப் போன்ற பல நவீன முசுலிம் வரலாற்றாசிரியர்கள், முகம்மது நபி குறுகிய காலத்தில் மதம், சமூகம், அரசியல், இராணுவம் மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு உலகியல் துறைகளில் மாற்றங்களை நிகழ்த்தியதும், "நாடோடி குழுக்களாகவும் கல்வியறிவற்றவர்களாவும் இருந்த அரேபியர்களை உலகை வென்றவர்களாக மாற்றியதும் அற்புதமாகக் கருதப்படுகின்றது.
    • பல சந்தர்ப்பங்களில் இறைவன் அருளால் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது.
    • அழுத ஈச்ச மரம் முகம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தும் போது அதன் மீது சாய்ந்ததால் ஆறுதல் அடைந்தது.
    • அவரது கட்டளையை ஏற்று இரண்டு மரங்கள் நகர்ந்தது.
    • அவரது முன்னறிவுப்புகள்: எய்ட்ஸ், ஹெட் போன், பூகம்பங்கள், ஜெருசலேம் வெற்றிகொள்ளப் படும், அரபு தேசம் உயரமான கட்டிடங்களை போட்டிப் போட்டு கட்டும்.  
    • மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரா பயணம் செய்தது.
    • முகம்மது நபி தபுக் யுத்தத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் நீர் சுரக்கச் செய்த நிகழ்வு.
    • முகம்மது நபி ஹுதைபியா உடன்படிக்கை போது மக்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் வறண்ட கிணற்றை ஊற்றெடுக்கச் செய்தது.
    • பத்ர் யுத்தம் போது அவர் கையினால் எறிந்த தூசியினால் சில எதிரிகளைக் குருடாக்கினார். இந்நிகழ்வு குர்ஆனில் சூரா அல்-அன்ஃபால், வசனம் 17 (8:17) இல் கூறப்பட்டுள்ளது.
    • முகம்மது நபியின் தோழர் உஸ்மானுக்கு பிற்காலத்தில் பேராபத்து ஏற்படும் எனக் கூறினார். அதே போல் உஸ்மான் அவர்கள் கலிபா பதவி ஏற்றபின் அவருக்கு பேராபத்து ஏற்பட்டது.
    • முகம்மது நபியின் தோழர் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் நீதியில்லா குழுவால் கொல்லப்பட நேரும் எனக் கூறினார். அதே போல் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.
    • முகம்மது நபி, பிற்காலத்தில் இறைவன் அவரது பேரன் ஹசன் மூலம் இரண்டு பெரிய முஸ்லீம் குழுக்கள் இடையே சமாதானம் ஏற்படச் செய்வார் என முன்னறிவிப்புக் கூறினார். பிற்காலத்தில் ஹசன்-முஆவியா குழுக்களுக்கிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.
    • அவர் முஸ்லிம்களின் எதிரிகளின் பிரபலமான ஒருவரை கொல்வேன் என்று கூறினார். அதே போல் உஹது போரில் உபை இப்னு கலப் கொல்லப்பட்டார்.
    • பத்ரு போர் ஆரம்பிக்கும் முன்பே எதிரிப்படையின் தலைவன் எவ்விடத்தில் கொல்லப்படுவான் என சுட்டிக்காட்டினார். அதேபோல அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எதிரிப்படையின் தலைவர் கொல்லப்பட்டார்.
    • அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த அவர் பிற்காலத்தில் தமது நாட்டில் கடல் பகுதியும் இருக்கும் எனக்கூறினார். அதே போல் கலிபாக்கள் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் விரிந்து கடல் பகுதியும் நாட்டின் எல்லையில் வந்தது.
    • அவர் தமது மனைவிகளிடம் தாம் இறந்த பிறகு மனைவிகளில் அதிகத் தொண்டு செய்யும் ஒருவரே விரைவில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் அவர் இறந்த பிறகு அதிக தொண்டுள்ளம் கொண்ட அவரது மனைவியான ஜைனப் இறந்தார்.
    • அப்துல்லா இப்னு மஸ்ஊத் அவர்களின் பால் வற்றிய ஆடு முகம்மது நபி நிகழ்த்திய அற்புதத்தால் அதிகமாக பால் கொடுத்தது.
    • கைபர் போரில் நோயுற்ற அலீயின் கண்ணைக் குணப்படுத்தினார்.
    • வறண்டு கிடந்த மதீனா நகரில் மழை பொழிய காரணமாக இருந்தார்.
    • அவரது விரல்களுக்கு இடையே இருந்து தண்ணீர் வரச் செய்தது அற்புதமாகக் கருதப்படுகிறது.
    • முகம்மது நபி தபுக் போரில் கையளவு பேரித்தம் பழங்கள் மூலம் பல வீரர்களின் பசியைத் தணிக்க வைத்தார்.
    • முகம்மது நபி அவர்கள் தான் இறந்த பிறகு எனது குடும்ப உறவினர்களில் தனது மகள் பாத்திமா தான் முதலில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் முகம்மது நபி இறந்த பிறகு அவரது மகள் பாத்திமா தான் முதலில் இறந்தார்.
    • ஹுனைன் போரில் அயத் பின் அம்ரு என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது முகம்மது நபி அவர்கள் தன் கையால் இரத்தத்தைத் துடைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர் காயம் ஆறி நெற்றி பளபளப்பாக மாறியது.
மேலும் முன்னறிவிப்பு தொடர்பான தகவலுக்கு  

இயேசு கூறினார்:  “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார்அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார். (யோவான் 14:15-16) 
 
எனவே பைபிளை முகமது காப்பி அடித்தார் என்று சுருக்குவது பிழை. மோசேயின் மற்றும் இயேசுவின் போதனைகளை கூறவே அவர் வந்துள்ளார் என்கிற பொழுது அவைகள் ஒன்றுபோல அல்லாமல் வேறெப்படி இருக்கும்?  
 

 2) இன்றைய தோராவுக்கும், பைபிளுக்கும் எதிராக முகமது நபி சில செய்திகளை கூறுவதால் அவர் பொய் தீர்க்க தரிசி ஆவார். 

“ஆனாலும், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; நான் போவது உங்களுக்கு உகந்தது, ஏனென்றால் நான் போகவில்லை என்றால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார். ஆனால் நான் புறப்பட்டால், நான் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)

12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.” (யோவான் 16:12-15)

இயேசுவுக்கு பிறகு அவர் வருவார் என்பதும், இயேசு கூறிய செய்திகள் அனைத்தையும் மேலும் அதோடு சேர்த்து மேலதிகமான செய்திகளையும் அவர் மக்களுக்கு வழங்குவார் என்பதும் மேலும் அவர் அவைகளை தனது சொந்த விருப்பப்படி அல்லாமல் கர்த்தரின் விருப்பப்படியே சொல்லுவார் என்பது இவ்வசனத்தின் மூலம் அறியப்படுகிறது. 

எனவே கிறிஸ்தவர்களின் இந்த முரண்பாடான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  

இறைவன் அனுப்பும் தீர்க்கதரிசிகளுக்கு ஏன் கட்டுப்பட்டு பின்பற்ற வேண்டும்? *

 யூதம் & கிறிஸ்தவம்  

மோசே கூறினார் "அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்." (உபாகமாம் 18:19)

அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை. (யோவான் 14:23-24)  

இஸ்லாம் 

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:24

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். (அல்குர்ஆன் 33:6) 

“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-14)

“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவர் ஆவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திருப்பிச் செல்வதை வெறுப்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அனஸ் (ரலி), நூல்: புகாரி-16)

உரிமையுள்ள உறவுகள் *

தமிழர் சமயம் 


கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,
வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! -
யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்
காப்பர், கருதும் இடத்து. - (சிறுபஞ்சமூலம் 52)

கோதை - மாலை
கருதும் - நினைக்கும் 
 
விளக்கம்: கணவனும், அவள் உடன் பிறந்தவனும், மாமனும், வண்டுகள் மொய்க்கின்ற பூமாலையை அணிந்த மகனும், தந்தையும் ஒரு பெண்ணைக் காக்கத் தக்கவராவார்.

இஸ்லாம் 


ஆண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தாய் அல்லது தந்தையின் மனைவி (தாய்கள்)
2) பெண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரிகள்
• உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி!
• தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள் (மாமி / அத்தை)
5) தாயின் உடன் பிறந்த சகோதரிகள் (பெரியம்மா / சின்னம்மா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் பெண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்கள்
8) பால்குடிச் சகோதரிகள்
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
 9) மனைவியின் தாய் (மாமியார்)
10) மகன்களின் மனைவியர்கள் (மருமகள்கள்)
11) இரண்டாவதாக திருமணம் செய்த மனைவியின் பெண் பிள்ளைகள்
• இரண்டாவது மனைவியுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளாமல் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது மனைவியின் பெண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு ஆணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய பெண்களே!

 பெண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தந்தை அல்லது தாயின் இரண்டாவது கணவன்!
2) ஆண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரர்கள்
• தாய் இன்னொரு ஆணை திருமணம் செய்து அந்த ஆணின் மூலம் பிறந்த ஆண் பிள்ளைகள்! இவர்களும் நமக்கு சகோதரர்கள் ஆவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரர்கள் (மாமா / சித்தப்பா)
5) தாய் உடன் பிறந்த சகோதரர்கள் (பெரியப்பா / சிச்சா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் ஆண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களின் பிள்ளைகள் (பால்குடிச் சகோதரர்கள்)
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை தான் பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
8) கணவனின் தந்தை (மாமனார்)
9) மகள்களின் கணவன்மார்கள் (மருமகன்கள்)
10) இரண்டாவதாக திருமணம் செய்த கணவனின் ஆண் பிள்ளைகள்
• இரண்டாவது கணவனுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளுவதற்கு முன் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது கணவனின் ஆண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு பெண்ணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய ஆண்களே!

 

தூய மனிதன் உண்டா?

தமிழர் சமயம்


ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல். (சிறுபஞ்சமூலம் 29)

விளக்கம்: எல்லாம் அறிந்தவனும், ஏதும் அறியாதவனும், நற்குணமே இல்லாதவனும், குற்றமில்லாதவனும், எல்லா நூல்களையும் கற்றவனும் இவ்வுலகில் இல்லை

இஸ்லாம் 

ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. தவறு செய்பவரில் சிறந்தவர், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுகிறவர்தாம்” (இப்னுமாஜா)   

கிறிஸ்தவம் & யூதம் 

"எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள்" (ரோமர் 3)

“ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12)

தூதர்கள் ஆண்களே

தூதர்கள் என்பவர்கள், முந்தய வேதங்களில் முன்னறிவிக்கப் பட்டவர்களாகவும், பின்வரும் வேதங்களில் உறுதி செய்யப்பட்டவர்களாகவும், மக்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகளை போதிப்பவர்களாகவும்,  ஒரு தனி வேதமோ அழல்தி ஏற்கனவே உள்ள வேதத்தில் ஒரு பகுதியாகவோ அந்த போதனைகள் இருக்கும். வேதம் பற்றிய விளக்கம் புனித நூல்கள் தலைப்பில் விரிவாக எழுதப்பட்டுளள்து. 

அவ்வாறு அனுப்பப் படும் தூதர்கள் ஆண்கள் மட்டுமே என்று சில மதங்களும், சில சமயங்கள் பெண்களும் அதில் உள்ளனர் என்றும் வாதிடுகின்றனர். பெண்களில் தூதர்கள் இல்லை என்ற உண்மையை கூறினால் ஆணாதிக்க சிந்தனையாளனை நோக்குவது போல நோக்குவது இயல்பாகிவிட்டது. அது ஒவ்வொரு ஆணின் உடல் வலிமையுடன் இன்னபிற இயல்புகளை பொறுத்து வழங்கப் பட்ட பொறுப்பு அவ்வளவுதான். இப்பொழுது உண்மையை ஆதாரங்களுடன் நோக்குவோம். 

தமிழர் சமயம் 


ஆண், ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். (சிறுபஞ்சமூலம் 27)

இயைந்த - பின்தொடர் 
கடிந்தான் - ஒழித்தவன்

பொருள்: ஆசான் என்பவன் விளக்கம் பெற வினை ஆற்றும் தேவை அற்ற ஆண்மகன் ஆவான், அவனை பின் தொடர்பவன் மாணாக்கன் ஆவான். மாணாக்கன் ஆசானை அன்பு செய்வான், கட்டுப்படுவான். மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட்டுவிடுவான். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

குறிப்பு: வேத நூலுக்குஇலக்கணம் வகுத்து தரும் இப்பாடல், வேதம் முனைவனுக்கு அதாவது ஆணுக்கு தான் வழங்கப்படுமே தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று கூறவில்லை. எனவே சித்தர்கள்/ரிஷிகள்/நபிகள்/தூதர்கள் ஆண்களே. 

அவ்வையார் சில முக்கிய நூல்களை எழுதிய பெண் ஆசிரியர் என்றும், அவர் இவ்வாறு முனைவி-யாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சிலர் கூறுவார்.  
 
முதலில், பாடல் பாடுவோரெல்லாம் முனைவரல்ல, தொல்காப்பியம் மரபியல் பாடல் 60-இல் சொன்னபடி நூலை எழுதினால் மட்டுமே முனைவர்.  
 
இரண்டாவது, வரலாற்றில் அவ்வையார் ஒருவரல்ல, இருவர் என்றும், மூவர் என்றும், நால்வர் என்றும், ஆறு பேர் என்றும், எட்டு பேர் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அவ்வையார் பெண் அல்ல என்று கூறுவோரும் உண்டு. மொத்தத்தில் அவ்வை பற்றிய நேரடியான உறுதிபட கூறும் செய்திகள் ஏதுமில்லை. எனவே இவரை விதிவிலக்காக குறிப்பிட முடியாது.
 

இஸ்லாம்  

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 16:43)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 21:07)

உமக்கு முன் (பல்வேறு ஊர்களுக்கு அந்தந்த) ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். (குர்ஆன் 12:109)

யூத கிறிஸ்தவ மதங்கள் 

கிறிஸ்தவத்திலும் யூதமதத்த்திலும் சில பெண் தூதர்கள் இருந்தததாக வாதிடுவார்கள். அவர்கள் தூதர்கள் என்ற வார்த்தையின் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து வரும் தூத்துச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறுபவர்களாகவும், அந்த போதனைகள் ஒரு தனி வேதமாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வேதத்தின் ஒரு பகுதியாகவோ அமைந்து இருக்கும். 

யூத கிறிஸ்தவ மதத்தில்கீழே குறிப்பிடப் படுவோர்கள் பெண் தீர்க்கதரிசிகனாக அறியப்படுகிறார்கள்.

1. சாரா
2. மிரியம்
3. டெவோரா
4. ஹன்னா (ஷ்முவேலின் தாய்)
5. அவிகாயில் (அவர் தாவீது மன்னரின் மனைவியானார் )
6. ஹல்தா ( எரேமியாவின் காலத்திலிருந்து )
7. எஸ்தர்
8. மர்யம் - இயேசுவின் தாய்

ஆனால் இவர்கள் எழுதிய அல்லது இவர்கள் மூலம் வழங்கப்பட்ட உபதேசங்கள் அடங்கிய நூல்கள் ஏதும் உண்டா? "இல்லை" என்பதே பதில். இவர்கள் மதிப்பிற்க்குரிய பெண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் இவர்கள் தூதர்கள் அல்ல என்பதே நிதர்சனம். மேலும் மோசே செய்த மற்றும் இயேசு தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிவிப்புகள் அனைத்தும் ஆண்களைப் பற்றியே. 

கீழுள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றாலும் யூத கிறிஸ்தவர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. 

“ஒரு பெண் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ நான் அனுமதிக்கவில்லை; மாறாக, அவள் அமைதியாக இருக்க வேண்டும்” (1 கொரி. 14:33-35)

ஒரு பெண் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுவதில்லை என்பது உண்மை என்ற போதிலும் அவர் தான் கற்றதை மக்களுக்கு கற்பிக்க கூடாது என்கிற கருத்தில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. இஸ்லாத்தில் அன்னை ஆயிஷா நபிமொழிகளை மக்களுக்கு அறிவிப்பவராகவும், படையை வழி நடத்துபவராகவும் இருந்துள்ளார்.

நேரமும் காரணமும் தெரியாது, ஆனால் நிச்சயம் வரும் : மரணம்

தமிழர் சமயம்  

அடப்பண்ணி வைத்தார்; அடிசிலை உண்டார்;
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்;
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்;
கிடக்கப் படுத்தார்; கிடந்து ஒழிந்தாரே! (திருமந்திரம் 148)
 
பொருள்: அருமையாய்ச் சமைத்து வைத்துவிட்டுச் சாப்பிடக் கூப்பிட்டாள் மனைவி. வந்தவர் உண்டார். மனைவியைக் கமுக்கமாகக் கொஞ்சினார். ‘இடப் பக்கம் லேசாக வலிக்கிறது’ என்றார். ‘வாய்வுப் பிடிப்பாக இருக்கும்; சற்றுப் படுத்துக்கொள்ளுங்கள்’ என்றாள் மனைவி. படுத்தார். போய்விட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுதான் கதி. 
 
நாட்டுக்கு நாயகன்; நம்ஊர்த் தலைமகன்;
காட்டுச் சிவிகைஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. (திருமந்திரம் 153)
 
பொருள்: இந்த நாட்டுக்கே நாயகன்; நம் ஊரின் தலைமகன்; காலால் நடந்து அறியாதவன். ஏறினால் பல்லக்கு; இறங்கினால் அரசுக் கட்டில். புடை சூழ வருவதற்குப் படை உண்டு. வருகை அறிவிக்க முன்னே முரசொலிக்கும். போகும் வழியெல்லாம் பூச்சொரிந்து வரவேற்பார்கள். முன்னறிவிப்பில்லாமல் எங்கேயும் போகாத அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சாவு வந்தது. கிளம்பினான். நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை: இப்போதும் புடைசூழ ஆட்கள் வந்தார்கள்; போகும் வழியெல்லாம் பூச்சொரிந்தார்கள். மாற்றம் சிலவற்றில்தான்: பல்லக்கு, பாடை ஆகிவிட்டது; முரசு, பறை ஆகிவிட்டது. அவ்வளவே.

பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;
கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,
தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;-
வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. (சிறுபஞ்ச மூலம் 24
 
கழிமின் - விடுங்கள்

விளக்கம்: நன்மைக் குணமுடையவர்களைச் சேரவேண்டும். பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தீக்குணத்தாருடன் நட்பு விடவேண்டும். தீய சொற்களைச் சொல்லாதிருக்க வேண்டும். எமன் நிச்சயம் வருவான். இஃது உலக வழக்கமாகும். 
 

இஸ்லாம் 

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (குர்ஆன் 62 : 8

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (குர்ஆன் 4 : 78) 

மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (குர்ஆன் : 50:19) 

கிறிஸ்தவம் & யூதம் 

உயிருள்ளவர்கள் தாங்கள் இறப்பதை அறிவர்; ஆனால் இறந்தவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் அவர்களுக்கு ஒரு வெகுமதியும் இல்லை, ஏனென்றால் அவர்களின் நினைவகம் மறந்துவிட்டது.  (பிரசங்கி 9:5)

என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.. (சங்கீதம் 73:26)

உங்கள் தந்தையர், அவர்கள் எங்கே? மேலும் தீர்க்கதரிசிகள், அவர்கள் என்றென்றும் வாழ்கிறார்களா? (சகரியா 1:5)

அவன் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணமாக வந்ததைப் போல, அவன் வந்தபடியே திரும்புவான். அவர் தனது உழைப்பின் பலனில் இருந்து எதையும் கையில் எடுத்துச் செல்ல மாட்டார். (பிரசங்கி 5:15)

எந்த மனிதனுக்கும் காற்றினால் காற்றை அடக்குவதற்கு அதிகாரம் இல்லை, அல்லது மரண நாளின் மீது அதிகாரம் இல்லை; மேலும் போரின் போது எந்த வெளியேற்றமும் இல்லை, அதைச் செய்பவர்களை தீமை விடுவிக்காது. (பிரசங்கி 8:8)

விபச்சாரியை மணத்தல் கூடாது

தமிழர் சமயம் 


வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;
கொடும் புலி கொட்கும் வழி. (சிறுபஞ்ச மூலம் 78)

கொட்கும் - சுழன்று திரிகின்ற
நள்ளார் - நட்புக் கொள்ளார்

விளக்கம்: அறிஞர்கள் பொதுப் பெண்டிரை மணம் கொள்ள மாட்டார். புற்றின் மேல் ஏறமாட்டார். தமக்கு நிகரில்லாதவரோடு நட்பு கொள்ளார். போர்த் தொழிலில் வல்ல அரசனின் மலைபோன்ற உருவத்தினையுடைய கடுமையான குணம் கொண்ட யானையை விட்ட இடத்தில் செல்ல மாட்டார். கொடும்புலி செல்லும் வழியில் செல்ல மாட்டார். 
 

இஸ்லாம் 

ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது. (குர்ஆன் 24:3)

 உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 4:25) 

கிறிஸ்தவம் 

 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது (லேவியராகமம் 21:7)

நல்ல மனைவி

தமிழர் சமயம் 


கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. (சிறுபஞ்ச மூலம் 2
 
விளக்கம்கற்புடைய பெண் அவன் கணவனுக்கு அமிர்தம் போன்றவள், கற்றுப் பொறி களைந்தையும் அடக்கியவன் உலகத்திற்கு அமிர்தம் போன்றவன், நற்செய்கைகளையுடைய நாடுகள் அந்நாட்டிற்கு நன்மையைச் செய்யும் வேந்தனுக்கு அமிர்தம் போன்றது, அவனுக்கு நன்மை செய்யும் சேவகன் அவனுக்கு அமிர்தமாகும். 
 

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ), (நூல்: அபூதாவூத் 1412
 

கிறிஸ்தவம் 


நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள் (நீதிமொழிகள் 12:4)

அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான். “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான். (நீதிமொழிகள் 31:28-29)

ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள். (நீதிமொழிகள் 31:30)

ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள். (நீதிமொழிகள் 14:1

கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள். (நீதிமொழிகள் 11:16)

நிர்வாணம்

தமிழர் சமயம் 


உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்
காண அரிய, என் கண். (திரிகடுகம் 71)

விளக்கம்: ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல
 

இஸ்லாம் 

அறைக்குள் ஒருவர் தனியாகக் குளிக்கும் போது ஆடையின்றி குளிக்கலாம்; ஆனால் மறைத்துக் கொண்டு குளிப்பது சாலச் சிறந்தது. ஒருவர் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதைவிட, அல்லாஹ்விடம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா பின் ஹைதா (ரலி) அறிவித்துள் ளார்கள்.

இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை` என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து `கல்லே! என்னுடைய ஆடை!` என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு `அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை` என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (புஹாரி 278)

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.  (அல்குர்ஆன் 7:26)

''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், ''உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள்.  ''ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், ''முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள்.  ''ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு, ''அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),  (நூல் : திர்மிதி 2693)  

இந்து மதம்  


 ஒரு ஆடையை மட்டும் உடுத்தி அவன் உண்ணக் கூடாது; அவர் நிர்வாணமாக குளிக்க வேண்டாம்; சாலையிலோ, சாம்பலிலோ, மாட்டுத் தொழுவத்திலோ சிறுநீர் கழிக்கக் கூடாது (ந நாக்ன ஸ்நானம் ஆச்சரேத்) - (மனு ஸ்மிருதி, அத்தியாயம் 4 வசனம் 45)

நிலையான தர்மம் *

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

விளக்கவுரை:
  1. மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், 
  2. கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், 
  3. கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்
எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். 
 

இஸ்லாம் 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
  1. நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா)
  2. பயன்பெறப்படும் கல்வி 
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3358)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
  1. "ஒருமுஃமினான மனிதன் கற்பித்த கல்வியும்,
  2. (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் ,
  3. அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும்,
  4. (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும்,
  5. அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும்,
  6. வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும்,
  7. அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும்,
  8. அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும்
கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (இப்னுமாஜா : 242)

விதவை மறுமணம்

இந்து மதம்


ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்தில், இந்த வாழ்நாளில் சந்ததி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கிறார்:: 
 
ஓ பெண்ணே, வாழும் உலகத்திற்கு மேலே செல்; இறந்த இவருக்காக நீ நிற்கிறாய்; வா! உங்கள் கையைப் பிடித்தவருக்கு, உங்கள் இரண்டாவது மனைவி ( திதிசு) , நீங்கள் இப்போது மனைவியுடன் கணவன் உறவில் நுழைந்துவிட்டீர்கள்.  ரிக் (x.18.8) 

புதிய கணவர் விதவையை அழைத்துச் செல்லும் போது, ​​அவரது மனைவி கூறுவது போல்: 
 
நம்மைத் தாக்கும் அனைத்து எதிரிகளையும் முறியடித்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வீரமும் வலிமையும் கொண்ட புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம்.

தனுர் ஹஸ்தாத் ஆதாதானோ ம்ருதஸ்யாஸ்மே க்ஷத்ராய வர்சஸே பாலாய |
அத்ரைவ த்வம் இஹ வயம் சுவீரா விஸ்வா ஸ்ப்ருதோ அபிமதிர் ஜயேம || ரிக் (X.18.9)

 விதவை தற்போதைய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசீர்வதிக்கிறது: 
 
ஓ மீற முடியாதவரே! (விதவை) உன் முன் ஞானத்தின் பாதையை மிதித்து, இந்த மனிதனை (மற்றொரு பொருத்தனை) உன் கணவனாகத் தேர்ந்தெடு. அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருவரும் மகிழ்ச்சியின் உலகத்தை ஏற்றுங்கள்.

ப்ரஜானதி அக்னியே ஜீவலோகம் தேவானம் பந்தம் அனுஸஞ்சரந்தி |
அயந் தே கோபதிஸ் தஸ் ஜுஷஸ்வ ஸ்வர்கம் லோகம் அதி ரோஹயீனம் ||4 AV( XVIII.3.4)
 

தமிழர் சமயம் *

கணவனை இழந்த பெண்களை,

    1. ஆளில் பெண்டிர் (நற்.353)
    2. கழிகல மகளிர் (புறம்,280)
    3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)
    4. தொடிகழி மகளிர் (புறம்.238)
    5. கைம்மை (புறம்.125, 261)
    6. படிவமகளிர் (நற்.273)
    7. உயவற்மகளிர் (புறம்.246)
    8. பேஎய்ப் பெண்டிர் (ஐங்.- 70) என்று பல்வேறு பெயர்களில் தமிழ் நூல்கள் குறிப்பிடுகிறது. 
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்
சால்போடு பட்டது இல. (திரிகடுகம் 66)

விளக்கம் புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும். (இவை மூன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படவேண்டும் என்று இப்பாடல் மறைமுகமாக கூறுகிறது.) 

கிறிஸ்தவம் & யூதம் 


ஒரு மனைவி தன் கணவன் வாழும் வரை அவனுக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அவள் கணவன் இறந்துவிட்டால், அவள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. (1 கொரிந்தியர் 7:39)

அதனால் நான் இளைய விதவைகளை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களது குடும்பங்களை நடத்தவும், எதிரிக்கு அவதூறு சொல்ல வாய்ப்பளிக்கவும் செய்வேன். (1 தீமோத்தேயு 5:14)

திருமணமாகாதவர்களிடமும், விதவைகளிடமும், என்னைப் போலவே தனிமையில் இருப்பது நல்லது என்று கூறுகிறேன். ஆனால் அவர்களால் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உணர்ச்சியுடன் எரிவதை விட திருமணம் செய்வது நல்லது. (1 கொரிந்தியர் 7:8-9)

இஸ்லாம் 

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 24:32)

(விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:235)

விவாகரத்து

விவாகரத்து என்று இந்துமதத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுக்கு மணமுறிவு, மணவிலக்கு, தள்ளி வைத்தல், தலாக், குலா என்று பல்வேறு பண்பாடுகளில் குறிப்பிடப் படுகிறது.
 

தமிழர் சமயம் 


திருக்குறளில் மணவிலக்கு மறைமுகமாக உள்ளது 
 
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (குறள் 887)

விளக்கம்: செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

 கிறிஸ்தவம் & யூத மதம்


அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும், அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளி விட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணாயாக. (உபகாமம் 24:1-4) 
 

இஸ்லாம்  


மணமுறிவை தடுக்க முயற்சி செய்யும் இஸ்லாம்.  
 
“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 4:35)

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் “(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி. (நூல் : புகாரி 5283)

ஆனால் இணக்கம் ஏற்படாத நிலையில் விகாரத்துக்கு அனுமதிக்கிறது  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) - (நூல் : புகாரி 5273)

பெண்ணுக்கும் விவாகரத்து செய்ய உரிமை உண்டு. 

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி). (நூல் : நஸயீ  3441

ஹிஜ்ரத் *

கிறிஸ்தவம் 


மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். (மத்தேயு 19:29)

இஸ்லாம் 


“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ என்று (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்:29:26)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:8:72.)

கற்பழிப்பு

தமிழர் சமயம் 


கற்பழித்தவனுக்குத தண்டனை அகநானூறு 256

1.       பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! 
 
விளக்கம்: பழமையான சேற்று வயலில் ஆமை மேயும் ஊரனே!
வள்ளைக்கொடி மண்டிக்கிடக்கும் நீர்ச்சோலை.
அதில், வளைந்த நகம் கொண்ட ஆமை உறங்கும்.
கல்லில் மோதிய கல் போல் அது நகரும்.
கிழிந்த வாய் நிறையக் கள் உண்டவன் தள்ளாடி நடப்பது போல அது நடக்கும்.
வயல்களை நாசமாக்கும்.
ஆம்பல் இலைக்கடியில் பதுங்கிக்கொள்ளும்.
இப்படிப்பட்ட நிலம் கொண்ட ஊரன் நீ. 
 
2.       பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை 
 
விளக்கம்: பொய் சொல்லாதே.
உன் மாயம் எனக்குத் தெரியும்.
கையும் களவுமாக நீ பிடிபட்டுக்கொண்டது எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது. 

3.       மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் 
 
விளக்கம்: நேற்று வையைப் புனலில் உன்னவளோடு நீராடி அவளை உரிய முறையில் துய்த்தாய்.
அதனை அவளது உடன்பரத்தைத் தோழிமார் மறைத்தனர்.
என்றாலும் அதனை ஊரெல்லாம் பலபடப் பேசுகிறது. 
 
4.       தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், 15
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை, 20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 
 
விளக்கம்கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான்.
அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான்.
ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர்.
அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது.
ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர்.
அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர்.
அப்போது ஊரே ஆரவாரம் செய்தது.
அந்த ஆரவாரம் போல உன் பரத்தை-உறவு பற்றி ஊரார் பேசிக்கொள்கின்றனர். 
 

இஸ்லாம் 


இஸ்லாத்தில் கற்பழிப்புக்கான (இத்திஷாப் / ஜினா பில்-ஜப்ர்) தண்டனையும் விபச்சாரத்திற்க்கான (ஜினா) தண்டனையும் ஒன்றுதான். குற்றவாளி திருமணம் செய்தவராக இருந்தால் கல்லெறியும் தண்டனையும், திருமணம் ஆகவில்லை என்றால் நூறு கசையடிகளும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்படுதலும் ஆகும். 
 
பலாத்காரம் கத்தி முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ நடத்தப்படாவிட்டாலும், கற்பழிப்பாளர் ஜினாவுக்கான ஹுதுத் தண்டனைக்கு உட்பட்டவர். இஸ்லாமிய சட்டத்தில்,  ஹத் என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அல்லது சுன்னாவால்  விதிக்கப்படும் தண்டனையைக் குறிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு ஹத்  உத்தரவாதம் அளிக்கப்பட்டால், நீதிமன்றம் அல்லது அரசு அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்தத் தண்டனைகளைச் செயல்படுத்துவதில் எந்தச் சலுகையும் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயுதம் பயன்படுத்தப்படுவது அச்சுறுத்தப்பட்டால், அவர் ஒரு முஹாரிப் ஆவார், மேலும் அல்லாஹ் கூறும் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஹத் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் (விளக்கம்): 
 
“அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் செய்து, தேசத்தில் அக்கிரமம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் கூலி அவர்கள் கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்களின் கைகளும் கால்களும் எதிரெதிர் பக்கங்களிலிருந்து துண்டிக்கப்படுவதும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் மட்டுமே. அதுவே இவ்வுலகில் அவர்களுக்கு இழிவு, மறுமையில் பெரும் வேதனை அவர்களுக்கு உண்டு” [அல்-மாயிதா 5:33] (IslamQA
 

கிறிஸ்தவம் & யூதம் 

“ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் (கல்லெறிந்து) கொன்றுவிட வேண்டும். அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம். (உபாகமம் 22:25-27)