கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடன் துன்பமாகும்

கிறிஸ்தவம் 


கொடுப்பவருக்கு உபதேசம்: 
 
ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள். (மத்தேயு 5:42)

“எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். (லூக்கா 6:35) 

அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். (எசேக்கியேல் 18:7)

ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான்(நீதிமொழிகள் 22:7) 

என் மகனே! அடுத்தவனது கடனுக்கு நீ பொறுப்பாளி ஆகாதே. அடுத்தவன் தன் கடனைச் செலுத்த முடியாதபோது நீ அக்கடனைச் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாயா? அடுத்தவன் வாங்கும் கடனுக்கு உன்னைப் பொறுப்பாளியாக ஆக்கிக்கொண்டாயா? 2 அப்படியானால் நீ அகப்பட்டுக்கொண்டாய். உன் சொந்த வார்த்தைகளாலேயே நீ அகப்பட்டுக்கொண்டாய். 3 நீ அடுத்தவனது அதிகாரத்தின் கீழ் இருக்கிறாய். எனவே அவனிடம் போய் உன்னை விடுவித்துக்கொள். உன்னை அக்கடனிலிருந்து விடுவிக்கும்படி வேண்டிக்கொள். 4 அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. 5 வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு. (நீதிமொழிகள் 6:1-5) 

கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு : “ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்." (உபாகமம் 15:1)

“நாங்கள் ஓய்வுநாளில் வேலைச் செய்யமாட்டோம். எங்களைச் சுற்றியிருப்பவர்கள் அந்நாளில் தானியங்களையோ மற்ற பொருட்களையோ கொண்டுவந்து விற்றால் நாங்கள் அவற்றை அச்சிறப்பான நாளிலும் மற்ற ஓய்வுநாட்களிலும் வாங்கமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், நாங்கள் எங்கள் பூமியில் நாத்து நடுதல் அல்லது வேறு வேலைகளைச் செய்யமாட்டோம். ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும், மற்றவர்கள் எங்களுக்குத் தர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்(நெகேமியா 10:31)

கடன்களை ரத்து செய்யும் ஏழாவது ஆண்டு சமீபமாக வந்துவிட்டது என்பதால், ஏழைக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. இப்படிப்பட்ட ஒரு கெட்ட சிந்தை உன் மனதில் நுழைய இடம் கொடாதே. தேவை உள்ள ஏழையைக் குறித்து ஒருபோதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே. அவனுக்கு உதவிச்செய்ய மறுத்துவிடாதே. அப்படி நீங்கள் உதவவில்லையென்றால், அவன் உங்களுக்கு எதிராக கர்த்தரிடத்தில் முறையிடுவான். அப்போது கர்த்தர் அதை உங்கள் மேல் குற்றமாகச் சுமத்துவார். (உபாகமம் 15:9)

கடன் வாங்குவோருக்கு உபதேசம் 

எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள்(ரோமர் 13:8)

இஸ்லாம் 


ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (குர்ஆன் : 2 : 282 
 
அதாவது கடன் பெறுபவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுப்பார் என்பதற்கு ஒருவர் பொறுப்பேற்று கொள்ள வேண்டும்! ஒரு வேளை கடன் வாங்கியவர் கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால், தானே கடனை திருப்பி கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டும்! (நூல் : புகாரி : 2291) 
 
ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (நூல் : புகாரி 2295)

உங்களிடம் ஒருவர் கடன் பெற்று அதை திருப்பி அடைக்க கஷ்டம் பட்டால் நீங்கள் விருப்பம் பட்டால் கடனை பாதியாக தள்ளுப்படி செய்து கொண்டு மீதி பாதியை மட்டும் பெற்று கொள்ளலாம்! (நூல் : புகாரி : 471)

கடன் கொடுத்தவர் கடுமையாக பேசவும் அனுமதி உண்டு 

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு' என்று கூறினார்கள்' (நூல் : புகாரி : 2401) 

 கடன் வாங்கியவர்க்கு அவகாசம் அளித்தல்

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் : 2:280)

தமிழர் சமயம் 

கடன் என்கிற தமிழ் சொல்லின் மூலமே (கடமை) கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள முக்கியத்துவம் புரிகிறது.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. [பொருட்பால், குடியியல், இரவு குறள் 1053]

பொருள் ஒரு பொருளோ அல்லது உதவியோ அல்லது கடனோ நாடும் பொழுது யாரிடம் நாடவேண்டும் என்பதை கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கேட்டுவிட கூடாது.

தற்புகழ்தல் புறங்கூறன் மிகஇருணம்
வாங்குதல்பொய்ச் சான்று ரைத்தல்
பற்பலவாக் கட்சாடை சிரகரகம்
பிதஞ்செய்து பசுமை பொய்போற்
பிற்பயன்றோன் றிடச்செய்தன் மெய்யுரைக்க
வஞ்சிவாய் பேசி டாமல்
சற்பனையா யிருத்தல்பொய்க் கதைகூறல்
கேட்டலெலாஞ் சலங்க ளாமோ. (நீதிநூல் 206)

பொருள்: தன்னையே புகழ்ந்து கொள்ளல், புறஞ் சொல்லுதல், அளவுக்கு மிஞ்சிக் கடன் வாங்குதல், பொய்ச்சான்று கூறல், கண் தலை கை முதலியவற்றால் (ஒப்புக்கொள்ளும் அடையாளமாகிய) சாடை செய்து உண்மையைப் பொய்போல் பயனிலதாக்கல், மெய்சொல்ல அஞ்சி ஊமைபோல் வஞ்சித்திருத்தல், பொய்க்கதை சொல்லல், கேட்டல் இவைகளெல்லாம் பெரும்பழி தரும் பொய்க்குற்றங்களாம்.

பதவுரை: இருணம்-கடன். சற்பனை-வஞ்சனை. சலம்-பொய். 

உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல். (இன்னா நாற்பது 11)

பதவுரை : யாத்த - பிணித்த; தொடர் - சேர்க்கை

பொருள்: உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம். 

தெய்வத்துக்கு கடன் 


ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார். (நீதிமொழிகள் 19:17)
அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? (கடன் கொடுக்கும்) அவருக்கு அல்லாஹ் அதனை (திருப்பிக் கொடுக்கும் போது) பன்மடங்குகளாகப் பெருக் கிக் கொடுப்பான். அல்லாஹ் குறைத்தும் வழங்குகிறான் தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (குர்ஆன் 2:245).