quora லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
quora லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகின் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவும் உள்ளதா?

எமது கோணமும் பதிலும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் சத்தியம் நிறைந்தது.

உலகின் பொதுமறை என்று திருக்குறளை யார் முதன் முதலில் அழைத்தது என்று தெரியவில்லை. எந்த சங்க நூலிலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. தமிழின் மீள் எழுச்சிக்கு பிறகு அதாவது கடந்த நூற்றாண்டில் பலர் இவ்வாறு கூற கேள்விப்படுகிறோம். காரணம் அதில் சொல்லப்படும் அறங்கள் அனைத்தும் ஞாலம், உலகம் முழுமையையும் குறிப்பிட்டு கூறப்படுவதால் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் எந்த கடவுளின் பெயரையும் தனியாக குறிப்பிடாமல் கடவுள், இறைவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று பண்புகளை குறிப்பிட்டு பொதுப்படையாக பேசுவதால் கூட இருக்கலாம்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் குறளின் சுருக்கமான ஆத்திசூடியும், குறளின் விரிவுரையான நாலடியாரும் உலகப் பொதுமறை என்று அழைக்கப்பட வேண்டுமே?

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் தேவாரமும், திருவாசகமும், திருமந்திரமும், உலக நான்மறைகள் அனைத்தும், சித்தர்கள் நூல்களும் உலகப்பொதுமறையாக இருத்தல் வேண்டுமே? ஆதாரம்?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

திருக்குறள் சிறந்த நூல், மறை நூல் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உலகப்பொதுமறை என்று அதை மட்டும் குறிப்பிடுவதை விட உலகில் உள்ள அனைத்து நூல்களையும் உலகப்பொதுமறை என்று அழைப்பதுதன் சரியான வாதம் ஆகும்.

ஆனால் திருக்குறளையும் மேலே குறிப்பிட்டு உள்ள நூல்களையும் மறைநூல்களாக அதாவது வேதமாக ஏற்க்காதோர் பலர் உண்டு. இந்து என்ற பெயரில் அவர்களை பின்பற்றுவோர் தான் இங்கே அதிகமாக உள்ளனர். இவைகள் ஞானம் தரும் மறைநூல்கள்கள், வாழ்க்கையின் பிரச்னைக்கு தீர்வு தரும் நூல்கள், மன அமைதிக்கு வழி தரும் நூல்கள், படித்தால் புரியும் நூல்கள் எனபதை அவர்கள் உணர்வதில்லை.

இதனை நாம் படிக்காததால் ஏற்படும் ஒரே ஒரு நஷ்டத்தை கூறுகிறேன், மற்றதை நீங்களே கணித்து கொள்ளுங்கள். சைவம் தமிழரின் சமயம், சிவன் தமிழின் கடவுள், சிவ ஆகமங்கள் தமிழில் மட்டும்தான் உள்ளது ஆனால் நம்மவர்கள் வடக்கில் உள்ள காசிக்கு செல்கின்றனர். திருமந்திரம் கொண்ட நாம், சிவாகமம் இல்லாத அவர்கள் எழுதிய அமரகோஷ் நாவலை நாம் படித்து கொண்டு இருக்கிறோம். வேடிக்கை.

குறளுக்கு இணையான நூல்கள் தமிழில் மட்டுமல்ல, உலகில் வெவ்வேறு மொழிகளிலும் உண்டு. அதை அறியாமல் (அ) காழ்ப்புணர்வுடன் (அ)  தற்பெருமை கொண்டு நாம் அதை ஏற்பதில்லை, அவ்வளவுதான்.

ஒரு அறிவுரை என் வாழ்க்கையையே மாற்றி விட வேண்டும். அப்படி இருந்தால் ஏதேனும் ஒன்று கூறுங்கள்?

சிறந்த கேள்வி

அறிவுரை எளிமையாக கிடைப்பதால், மலிவாக பார்க்கப் படுகிறது.

"ஒருவர் அறிவுரை வழங்கும் பொழுது பொறுமையாக முழுமையாக கேட்கவும்" என்பதுதான் எனது அறிவுரை. இதற்குத்தான் இன்று பெரும் பஞ்சம் நிலவுகிறது.

யார் அறிவுரை கூறினாலும் செவி கொடுத்து பொறுமையாக கேட்க வெண்டும். கூறப்படும் அறிவுரை அர்த்தமற்றதாக தோன்றினாலும், கூறும் நபர் உங்கள் பார்வையில் சரியானவராக இல்லை என்றாலும்.

எந்த அறிவுரை உங்களுக்கு தேவை உள்ளதாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் அறிவுரை கூறப்படுவதை வெருப்பவர் என்று மக்களுக்கு தெரிய வரும் பொழுது உங்களுக்கு அறிவுரை கூற முன் வர மாட்டார்கள். அது பல நல்ல விடயங்கள் உங்களுக்கு கிடைப்பதிலிருந்து தடுத்து விடும். இலவசமான மலிவான அறிவுரைகள் உங்களுக்கு விலைமதிப்புள்ள பொருளாக மாறிவிடும்.

ஒருவர் அறிவுரை தரும்பொழுது பொறுமையாக கேட்டு அவருக்கு நன்றி கூறி புன்னகையோடு கடந்து செல்ல வேண்டும். ஒருவேளை அவர் உங்களுக்கு வேண்டுமென்றே தவறான அறிவுரை கூறினாலும், அல்லது அவர் அறியாமல் தவறாக உபதேசம் செய்பவராக இருந்தாலும் அவர் அறிவுரை கூறுவதை நாம் தடுக்க கூடாது. அறிவுரை பெற்ற பின்பு அதை ஆய்வு செய்து ஏற்ப்பதும் தவிர்ப்பதும் நமது கைகளில் உண்டு. ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்பது உங்களுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.

அறிவுரை பெறுவது தொடர்பான கருத்துக்களை உலக சமய நெறி நூல்கள் என்ன கூறுகிறது என்று காண்போம் வாருங்கள்.

தமிழர் சமயம்

அறவுரையின் இன்றியமையாமை

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். (அறநெறிச்சாரம் பாடல் - 2)

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அறம் கேட்டற்குத் தகாதவர்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை

ஏன்றுஇருந்தும் கேளாத ஏழை எனஇவர்கட்கு

ஆன்றவர்கள் கூறார் அறம்.(அறநெறிச்சாரம்பாடல் பாடல் - 7)

விளக்கவுரை: தான் கூறும் சொல்லையே சிறந்தது எனக்கூறுபவனும், கர்வம் உள்ளவனும் மிக்க மாறுபாடு கொண்டவனும் பிறர்கூறும் இழிவான சொற்களையே எதிர்பார்த்திருப்பவனும், இன்பம் தரும் உறுதிமொழிகளை, கேட்கக்கூடிய இடம் வாய்த்தும் கேளாத மூடனும் என்ற இவர்களுக்குப் பொரியோர்கள் அறத்தைக் கூறமாட்டார்கள். 

கிறிஸ்தவம்

ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. - (நீதிமொழிகள் 25:12)

முட்டாளின் வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையானது, ஆனால் ஞானி அறிவுரையைக் கேட்கிறான். - (நீதிமொழிகள் 12:15)

அறிவுரைகளைக் கேளுங்கள், அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் ஞானத்தைப் பெறுவீர்கள். - (நீதிமொழிகள் 19:20)

ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. - (நீதிமொழிகள் 29:1)

கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்; முட்டாள்கள் ஞானத்தையும் போதனையையும் வெறுக்கிறார்கள். - (நீதிமொழிகள் 1:7)

ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான் - (நீதிமொழிகள் 16:20) 

இஸ்லாம்

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (குர்ஆன் 87:9-12)

(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:269.)

திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம், ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? - (திருக்குர்ஆன் 54:17) 

சியோனிச பயங்கரவாதிகளின் சிந்தனையும் திட்டமும்

முடிவுரை

இன்றைய இளைஞர்கள் உபதேசம் செய்வோரை "பூமர்அங்கிள்" என்று இளித்து கூறுவதை கண்டால் பரிதாப மட்டுமே படமுடியும். அறநூல்கள் உபதேசம் கேட்பதின் அவசியத்தை கூறுவதையும், இவ்வுலகை கெடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ள சியோனிச பயங்கரவாதிகள் மக்களிடம் இதில் உள்ள சிறிய சுனக்கத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவலும் உபதேசத்தின் அவசியத்தை உணர்த்துகிறது

'நண்பனில் ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பன் என்றாலே நல்லவன் தான்' - இது உண்மைதானா?

தவறான கருத்து.

நண்பர்களை உருவாக்கி கொள்ளும் பொழுதே நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.


 தமிழர் சமயம்  

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (குறள் - 791)

உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

இஸ்லாம்  

ந‌பிக‌ர் நாயக‌ம் (ஸ‌ல்) கூறு‌கிறா‌ர், "ம‌னித‌ன் த‌ன்னுடைய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌‌யிலேயே செ‌ல்‌கிறா‌ன். ஆகவே யாருட‌ன் ந‌ட்பு கொ‌ண்டு இரு‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்." (நூல்:திரிமிதி)

(அன்றி) “என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 25:28)

கிறிஸ்தவம்  

தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப் பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். (நீதிமொழிகள் 12:26)

ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும் (நீதிமொழிகள் 13:20)

நட்பை ஏற்படுத்தி கொள்ளும் முன் / ஏற்படுத்திய பின் நோக்க வேண்டியது.


1) நண்பர்கள் பண்புடையவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர் சமயம் 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.(குறள் 783)

உரை: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

இஸ்லாம்  

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (குர்ஆன்: 9:71)

கிறிஸ்தவம் / யூதம் 

 நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9


2) வழி தவறும் பொழுது நேர்வழிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.

தமிழர் சமயம் 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (குறள் 784)

உரை: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்து உரைப்பதற்காகும்.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787)

உரை: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

இஸ்லாம்  

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (குர்ஆன்: 5:2)

கிறிஸ்தவம் / யூதம்

 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப் படுத்துங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:11)

நறுமணமும் தூபமும் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் ஒரு நண்பரின் இன்பம் அவர்களின் இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து உருவாகிறது. —நீதிமொழிகள் 27:9 


3) எண்ணம் ஒத்து இருக்க வேண்டும்

தமிழர் சமயம் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (குறள் 785)

உரை: ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

இஸ்லாம்  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (புகாரி 3336)

அந்த (விசாரணை) நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள். (அல்குர்ஆன் : 43:67)

கிறிஸ்தவம் / யூதம் 

"...ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள்." - (பிலிப்பியர் 2:2)

4) ஆபத்தில் உதபுபவனே நண்பன்

 

தமிழர் சமயம்


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. குறள் 788

உரை: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

இஸ்லாம்  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு இறை அடியானுக்கு மற்றொரு அடியான் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு அடியானின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான்… (புகாரி 2442)

கிறிஸ்தவம் / யூதம் 

நண்பனிடம் கருணை காட்டாதவன் (உதவாதவன்) எல்லாம் வல்ல இறைவனின் பயத்தை விட்டுவிடுவான். - (யோபு 6:14)

5) முட்டாளோடு நட்பு கொள்ள முடியாது, கூடாது.


தமிழர் சமயம் 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (குறள் 782)

உரை: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

இஸ்லாம் 

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப் படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6133)

கிறிஸ்தவம் / யூதம்  

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை. (நீதிமொழிகள் 14:7)

இந்த பண்புகள் இல்லாத நட்பை அறியாமல் ஏற்படுத்தி கொண்டால்?

மேல்சொன்ன தகுதிகள் எல்லாம் உள்ளனவா என்று ஆய்ந்து நட்பு பாராட்ட வேண்டும். சில சமயங்களில் அவ்வாறு முயன்றும் கெட்டவர்களை நபர்களாக்கி கொள்ள நேரிடும். அப்பொழுது என்ன செய்வது இந்த நாலடியார் பாடல் பதில் சொல்கிறது.

தமிழர் சமயம் 

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.- (நாலடியார் 75)

பொருள்: மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

இஸ்லாம்  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப் பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்து இருப்பவரிடம் இருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர். (நூல்: புகாரி-2101)

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

எனவே தீய நட்பை விட்டுவிட வேண்டும் என்கிறது இந்த செய்திகள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ரகசியமாக எதையோ சொல்ல அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ரகசியத்தை நான் பரப்பமாட்டேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ஃபாத்திமா (ரலி) ஒன்றும் கூறவில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : புகாரி-3623)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி). (நூல் : முஸ்லிம்-2833)

அதே போல ஒருவர் கூறிய இரகசியத்தை எப்பொழுதும் வெளிய கூறக்கூடாது என்று சொல்கிறது இந்த செய்திகள்.

கிறிஸ்தவம் 

மிக சீக்கிரத்தில் கோபம் கொள்கிறவர்களோடு நட்பு கொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். (நீதிமொழி 22:24–25)

நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை. அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன் (சங்கீதம் 26:4–5)

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப் போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான் (சங்கீதம் 1-1)

முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள். (1 கொரி 15:33)  

பகுத்தறிவை விட வேதங்களை நம்பும் மனிதர்கள் முட்டாள்களாக மாறுகிறார்களா?

 பகுத்தறிவு என்றால் மனிதன் தனது அறிவு மற்றும் ஆற்றலை கொண்டு, எந்த ஒன்றையும் பல்வேறு கூறுகளை அடிப்படையாக கொண்டு, சரியான முறையான அணுகுமுறை மூலம் பகுத்து அறிதல் ஆகும். அதாவது கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் விளையும் அறிவு ஆகும்.

வேதம் எனும் சமய நெறி நூல்கள் என்பது மனிதனின் அனுபவத்தின் மூலம் விளைவதல்ல. மேலும் இது மனித கண்களிலிருந்து மறைந்த விடயங்கள் என்பதால் இது மறைநூல் என்றும் அறியப்படுகிறது.

இரண்டும் முற்றிலும் முரண்படுவது போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் மனித வாழ்வில் பயணிக்க முடியும்.

மனித முயற்சியின் மூலம் விளையாத அறிவை (இறைவனால் வழங்கப்பட்ட வேதம்) மனித முயற்சியை கொண்டு பகுத்து அறிவது அவசியம், ஏனென்றால் பெறப்படும் அறிவு எதுவும் வாழ்வின் நெறிகளாக பயன்படுத்தப்படவே வழங்கப்படுகிறது.

வேதங்களை பகுத்தறியாத மனிதர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியாது. எதிர்ப்படும் எதையும் பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆவர்.

  • ஒரு சில செய்திகளை மட்டும் அறிந்து கொண்டு, அல்லது
  • ஒருசில மதத்தில் நிகழும் நிகழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, அல்லது
  • அறிவியல் ஆதாரங்கள் எனும் மனிதன் ஆய்ந்து அறிந்த உலகியல் விதிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு

இறை மறுப்புக்கு செல்வோர் எவரும் இறை மறுப்பாளர்கள் மட்டுமே, பகுத்தறிவாளர்கள் அல்ல.

உதாரணமாக,

  • இந்து மத மக்கள் பின்பற்றுவதில் பிரச்சனை என்றால், இந்து மத போதனையில் அந்த பிரச்சனை உண்டா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்ய துவங்கும் பொழுது இந்து மதத்துக்கு என்று தனியாக மறைநூல் கிடையாது ஏனென்றால் இந்துமதம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் உருவானது என்று அறிய வருவோம். இந்து மதம் எனபது அரசியல் காரணங்களுக்காக, தத்துவங்களில் முரண்பட்ட பல சமயங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததன் மூலம் உருவானது என்று ஆய்வில் கண்டறிந்தால், அவைகளை தனித்தனியே பிரிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அதில் உள்ள சமணம், சைவம், வைணவம், சனாதனம் உட்பட பல சமயங்களின் வரலாறு மற்றும் மறைநூல்கள் ஆகியவற்றை அறிந்து, அதை கற்று, பகுத்து அறிய வேண்டும்.
  • அதே போல சமகாலத்தில் நம்முடன் வாழும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமயத்தை வாசிக்க வேண்டும். ஒரே உலகத்துக்கு ஒரே கடவுள்தான் என்றால் ஏன் இத்தனை சமயங்கள், ஏன் கடவுளின் பெயர் வேறுபடுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும். அவைகளின் வரையறைகள் மறைநூலின் படி வேறுபடுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • உலக சமயங்கள் அனைத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா? அதற்கான விதிகள் எதேனும் உண்டா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
  • இயற்பியலுக்கான விதியும் மெய்யியலுக்கான விதியும் வேறு படும் ஏனென்றால் இரண்டின் இயல்பும் வேறு வேறு என்று பகுத்து அறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுளை நம்ப வேண்டும் என்றால் நான் என் கண்களால் பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுவது பொருத்தமற்றது என்று உணர வேண்டும். ஏனென்றால் மெய்யியல் விதியின் இயல்பும் இயற்பியல் விதியின் இயல்பும் வெவ்வேறு தன்மைகளை உடையது ஆகும்.
  • இதையெல்லாம் பகுத்து அறிந்த பிறகு கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஒரு முடிவுக்கு வந்து இருக்க வேண்டும்.

வேற வேலை இல்லையாப்பா என்று கேட்டால், இவைகளை செய்பவர்தான் பகுத்தறிவாளர், இல்லையேல் வெரும் நாத்திகர் மட்டுமே.

சரி, ஒருவர் வேதத்தை நம்பும் பொழுது ஒருவர் முட்டாளாக ஆகிறாரா என்று கேட்டால்…

  • வேதம் என்றால் என்ன என்று பகுத்து அறியாமல்,
  • எது வேதம் என்று பகுத்து அறியாமல்,
  • வேதம் கூறும் அறம் என்ன என்பதை கற்று அறியாமல்,
  • அதை சரியான இடத்தில் பயன்படுத்தாமல்,

வேதத்தை நம்பினால் மூட்டாள் என்ற நிலைக்குத்தான் செல்ல நேரிடும்.

சரியான வேதத்தை கண்டறிந்து, அதை ஓதி, உணர்ந்து, தானும் அடங்கி, பிறருக்கும் உரைத்தல், ஒவ்வொரு பகுத்தறிவு ஆன்மீகவாதிக்கும் அடிப்படை ஆகும்.

ஒவ்வொரு பகுத்தறிவாளரும் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு தான் வரமுடியும். வேதத்தை நம்பும் ஒவ்வொருவரும் பகுத்து அறிந்தால் தான் முட்டாள் ஆவதை தவிர்க்க முடியும்.

இந்து மதத்தில் உள்ள நபிமார்கள் யார்?

மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.

சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!

முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)

ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

சொற்பொருள்:

நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.

நாதன்: ஆசிரியன், குரு  

குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.

எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.

கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > >  மக்கள்

அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார். 

மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.

அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.

    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. திருவள்ளுவர்
    4. அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
    5. புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
    6. அகநானூறு எழுதியவர்கள்
    7. முனைப்பாடியார்
    8. அருஞ்செக்கலப்பு எழுதியவர்
    9. காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
    10. கபில தேவர்
    11. பூதஞ் சேந்தனார்
    12. நாதகுத்தனார்
    13. காரியாசான்
    14. கணி மேதாவியார்
    15. நல்லாதனார்
    16. அப்பர்
    17. சுந்தரர்
    18. ஞானசம்பந்தர்
    19. திருமூலர்
    20. மாணிக்கவாசகர்
    21. சிவவாக்கியர்

போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.

இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

ஹிந்துக்களாகும் முன் சைவம், வைணவம், சமணம் மற்றும் புத்தம் என்று ஒருவருக்கொருவர் வன்முறைகளை செய்துகொண்டிருந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

  • தெற்கில் இருந்த சைவம் வைணவம் சமணம் மட்டுமல்ல,
  • மேற்கில் உள்ள யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயங்களுக்கும்,
  • வடக்கே இருந்த வேத மதம், புத்தம் Tengris சமயங்களுக்கும்,
  • கிழக்கில் இருந்த Confucianism, Daoism, Shinto போன்ற மதங்களுக்கு இடையிலேயேயும்,
  • திசைகளை மீறி மேலே குறிப்பிட்ட சமயங்களுக்கு இடையிலேயேயும்,
  • கடவுளை நம்பும் மக்களுக்கும் நம்பாத மக்களுக்கு இடையிலேயேயும்,

போர்கள் நடைபெற்றது, நடைபெறுவது வரலாறு.

இதற்கு காரணம் அறிய வேண்டுமென்றால் வாசிக்க வாய்மை

ஒரு வரியில் சொல்வதென்றால் இது நமைக்கும் தீமைக்குமான யுத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் தங்களை நன்மையின் பக்கம் இருப்பதாகவும் எதிரியை தீமையின் பக்கம் இருப்பதாகவும் கருதுவர். ஆனால் தத்தம் மறைநூல் வாசிக்கப்பட்டு தங்களை தாங்களே எடை போடும் பொழுது அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று அவர்களே அறிந்துகொள்ளலாம். மற்றொருவர் கூறும் பொழுது ஏற்க்கும் மனநிலை எவருக்கும் இருக்காது. இந்த உலகம் இருப்பதன் நோக்கமான இந்த யுத்தத்தை உலகம் முடியும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளமல் (கருத்தை மறுத்து பிழை என்று நிருவாமல்) தனிநபரை வசைபாடும் அணுகுமுறை சரியா? பிழையா? இவ்வாறு செய்யும் ஒருவரை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 100% பிழையான அணுகு முறை.

அவர்களை மன நோயாளிகளாக பார்க்கிறேன். முற்றிய மன நோயாளிகள்தான் எதிர் இருப்பவர் யார்? என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? என்று எதையும் நோக்காமல் அவரை எதிரியாக கருதி அவரை காயப்படுத்துவத்திலே குறியாக இருப்பார். அவர்களுக்காக பரிதாப பாட்டு கடந்து செல்வதே சிறந்தது.

சமயங்கள் கூறும் அறநெறிகளான பணிவு, அன்பு, மறைநூல் வரி சான்றுகள் ஆகியவற்றை கொண்டு அவர்களிடம் பேசினாலும் தொடர்ந்து வசை சொற்களையே பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடம் வெகுவாக இருக்கிறது.

அதீத வெறுப்பு ஆன்மாவுக்கும், அமைதிக்கும், ஆரோக்கியத்துக்கும் தீங்கு தரும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைத்துவிட முடியாது.

ஆன்மீக ஈடுபாடு உடைய ஒருவர் இன்னொரு ஆன்மீக தத்துவத்தை நம்புகிறவரை வெறுப்புடன் கையாள முடிகிறதென்றால் அவரின் ஆன்மீகமும் அவர் வாசிக்கும் மறை நூல்களும் அவருக்கு எவ்வித பலனையும் தரவில்லை என்று பொருள்.

எந்த சமயத்தை சார்ந்தவராயினும் அது இன்னொருவரை வசைபாடுவதால் எந்த ஒன்றையும் சாதித்து விட முடியாது என்று அவரவர் மறைநூல் கூறுகிறது.

கிறிஸ்தவம்

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

உங்களை எல்லா வகையிலும் நல்ல செயல்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுங்கள், உங்கள் போதனையில் நேர்மை, கண்ணியம் மற்றும் கண்டிக்க முடியாத தெளிவான பேச்சைக் காட்டுங்கள் - டைட்டஸ் 2:7-9

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் இறை நமபிக்கையினுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். - நூல் : திர்மிதி (1950)

வீணா­ன­வற்றைக் கடக்­கும்­போது கண்­ணி­ய­மாகக் கடந்து விடு­வார்கள். அல்­குர்ஆன் (25 : 72)

அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.” நூல்: புகாரி (6018)

தமிழர் சமயம்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் - (நல்வழி வெண்பா : 33)

விளக்கம்: பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று. (௱ - 100)

பொருள்: இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!

நாம் பிழை என்று கருதுவதை இன்னொருவர் சரி என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நமது அடுத்த நகர்வு, நமது நம்பிக்கையை நாம் ஏன் சரி என்று கருதுகிறோம் என்று ஆரயாவதும், அவரது நம்பிக்கை ஏன் பிழை என்று நாம் கருதுகிறோம் என்பதையும் முறையாக தெரிவிப்பதும் என்றவாறு இருக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பில் வசைபாடுவது, அவரது கல்வி அவருக்கு எந்த வித பயனும் அளிக்கவில்லை என்பது கண்கூடாக வெளிப்படும் நிலை ஆகும். அவருக்கு பதில் அளிக்காமல் கடந்து செல்வது தான் அனைத்து சமய மறை நூல்களும் தரும் வழிகாட்டுதல் ஆகும், அதை செய்வது தன் நமது கடமை.