கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்வி

தமிழர் சமையம் 


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள்:391

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நல்ல நெறியில் நிற்க வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. குறள்:392

விளக்கம்: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். குறள்:393

விளக்கம்: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். குறள்:394

விளக்கம்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். குறள்:395

விளக்கம்: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. குறள்:396

விளக்கம்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. குறள்:397

விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. குறள்:398

விளக்கம்: இம்மையில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு மறுமையிலும் உதவும் தன்மை உடையது.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். குறள்:399

விளக்கம்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. குறள்:400

விளக்கம்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

குறள் :  கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். குறள்:401

விளக்கம்: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கல்லாமல், ஒருவன் அவையின் கண் ஒரு பொருளைப் பற்றிக் கூறுதல் என்பது சூதாடும் களத்தை வகுத்துக் கொள்ளாமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. குறள்:402

விளக்கம்: கல்வி அறிவில்லாதவன் கற்றோர் அவையில் பேச விரும்புதல், இரண்டு தனங்களும் இல்லாத பெண், பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். குறள்:403

விளக்கம்: கற்றவர் உள்ள சபையில் யாதொன்றையும் பேசாதிருப்பின், கல்லாதவரும் மிக நல்லவராகக் கொள்ளப் படுவார்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். குறள்:404

விளக்கம்: நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாகவிருப்பினும், அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். குறள்:405

விளக்கம்: கல்லாத ஒருவன் தன்னைத்தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு கற்றவன் அவனைக் கண்டு உரையாட, அப்பேச்சினால் கெடும்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். குறள்:406

விளக்கம்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. குறள்:407

விளக்கம்: நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டு ஆராயும் அறிவில்லாதவனது அழகின் சிறப்பு, மண்ணால் மாண்புறச் செய்யப்பட்ட பாவையின் அழகு போன்றதாகும்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. குறள்:407

விளக்கம்: கற்றவரிடத்தில் உண்டான வறுமையைவிடக் கல்லாதவனிடத்தில் உண்டான செல்வம் மிக்க துன்பத்தைக் கொடுக்கும்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள்:409

விளக்கம்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். குறள்:410

விளக்கம்: விலங்கோடு நோக்க மக்கள் எவ்வளவு மேன்மையுடையவரோ, அவ்வளவு தாழ்ந்தவர் நூலைக் கற்றவரோடு நோக்கக் கல்லாதவர்.


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. 131

விளக்கம்: தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132

விளக்கம்: கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும். 133

விளக்கம்: களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134

விளக்கம்: வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் 'செல்வம்' எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135

விளக்கம்: கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.

தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல். 136

விளக்கம்: படகு செலுத்துபவனைப் பழமையான சாதிகளில் கீழ்ச்சாதியைச் சார்ந்தவன் என இகழமாட்டார்கள் மேலோர்! நீ காண்பாயாக! அப்படகு ஓட்டுபவனின் துணைகொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும். நல்ல சாத்திரங்களைக் கற்ற கீழ்மகனின் துணைகொண்டு நூல் பொருளைக் கற்றல்.

தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி. 137

விளக்கம்: குற்றமற்ற, பழமையான நூற்கேள்வியுடையவராய், பகைமையில்லாதவராய், கூர்மையான அறிவுள்ளவராய் விளங்கும் கற்றோர் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்தலைவிட இன்பம் உடையதாயின், அகன்ற வானத்தின் மேல் தேவர்கள் வாழும் திருநகரைக் காண முயல்வோம். (கற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பத்தை விடத் துறக்க இன்பம் சிறந்ததன்று.)

கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு. 138

விளக்கம்: ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய வேந்தனே! கற்றறிந்தவா¢ன் நட்பு, நுனியிலிருந்து கரும்பைத் தின்பது போலாம். அதன் அடிப்பகுதியிலிருந்து தின்பது போலாம், நற்பண்பும், அன்பும் இல்லாதார் நட்பு.

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139

விளக்கம்: பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதிரிப்பூவைச் சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது, தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்குத் தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரையும் நறுமணமுள்ளதாக்கும். அதுபோல கல்லாரே ஆயினும் கற்றாரைச் சார்ந்து அவர்போல் நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர். (புதிய மண்பானையானது பாதிரிப்பூவைச் சேர்தலால் தன்னிடமுள்ள தண்ணீருக்கு நறுமணம் தருவது போல, கல்லாதார்க்கும் கற்றவர் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்பது கருத்து).

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல். 140

விளக்கம்: எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பதெல்லாம் 'கலகல' என்னும் வீணான சலசலப்பே யாகும்! இத்தகைய இவ்வுலக அறிவு நூல்களைக்கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தைப் (துன்பத்தை) போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை. 

வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) 
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்

கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார் 

திருமந்திரம் .1ம் தந்திரம் - 20. கல்வி

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.  1 

பொருள் : உடல்வந்த காரணத்தை அறிந்தேன். உயிர் அந்த உடலோடு பொருந்திச் செறிந்துள்ளதை அறிந்தேன். அதனால் தேவ தேவனாகிய இறைவனும் எவ்விதமான தடையுமின்றி என் மனத்தைத் தனக்கு இடமாக்கிக் கொண்டான். உவர்த்தல் இல்லாத மிகுகின்ற அனுபவ அறிவைப் பெற்றேன். 

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே.  2 

பொருள் : உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகியது. அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர் கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறர்க்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கும்படி செய்வர். கற்றறி - கல்+தறி = கற்றூண். கயல்- மீன். கண்ணுக்கு ஆயிற்று. 

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே.  3 

பொருள் : எடுத்த உடலில் உயிருள்ள போதே உடல் நிலையாமையை உணர்ந்து உயிர்க்கு உறுதிபயக்கும் நிலையான போருளான இறைவனுடைய ஞானத்தைப் பெற முயலுங்கள். உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். சொல்லில் வழுவின்றி இறைவனை ஏத்துங்கள். அவ்வாறு ஏத்தினால் ஒப்பிட்டுக் கூற முடியாத சுய சோதியான சிவன் விளங்கித் தோன்றுவான். 


கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந்து உண்கின்றார்
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.  4 

பொருள் : உண்மையில் பிரணவ அறிவில்லாத உலகியல் கல்வி கற்றவர்கள் பிரணவத்தினின்றும் விலகிய வழியில் செல்கின்றனர். உலகியல் பற்றுடையோர் குண்டலியின் ஆற்றலைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை நினைந்து வழிபாடு செய்யுங்கள். இரசவாதம் செய்யப்பெற்ற பொன்போலக் குண்டலினி ஆற்றலால் அழியா உடல் (பிரணவ தேகம்) அமையும். 

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.  5 

பொருள் : இறைவழிபாடு செய்வார்க்குத் தூய்மையான சோதி துணையாக வரும். நல்ல பிரணவம் அவர்களுக்குத் துணையாக விளங்கும். சுக்கிலம் கெடாது தூய்மையுற்று உடலுக்கு உறுதுணையாய் ஒளியாகி நிற்கும். பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் இருந்து வீடு பேற்றை அளிக்கும். 

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.  6 

பொருள் : உடம்பிலுள்ள சுழுமுனை நாடியைப் பற்றிச் சிரசின் உச்சிடல் பிரமரந்திரம் செல்ல மாட்டாதார், காம விகாரம் கொண்டால் சிவ யோகத்தில் பயன் கிட்டாது கெடுவர். முதுகந்தண்டைப் பற்றிச் சிரசின் மேல் சென்றவரிடம் இந்திரியங்கள் சேட்டை செய்யா. இதனை அறியாமல் கீழேயுள்ள தத்துவங்களின் இயல்பில் மயங்கி நன்மை அறியாமல் கெடுகின்றனர். 

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.  7 

பொருள் : சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவம் நாத தத்துவத்தில் வெளிப்படுவான். நாதத்தில் விளங்கும் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும். அவ்வாறு பொருந்திய சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு, தகுதிவாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும். 

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.  8 

பொருள் : ஞானம் பெற வாயிலாகப் பிறவி நோய்க்கு மருந்தாக இருந்த நூலேணி பற்றியோர் முன்பு அவ்வாறு பற்றாதவர் கழிக்கப்பட்ட துணையாகும். பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான் சிந்தையின் பழைய நிலையை ஒழிக்கத்தக்க துணையாவான். தேவ சொரூபம் பெற்று ஏழ் உலகங்களுக்குச் செல்லும் வழித்துணையாகவும் உள்ளான். 

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.  9 

பொருள் : வாழ்வில் பற்றுக்கோடாக ஒரு தெய்வத்தை வழிபட வேண்டில் மேலான சிவபெருமானையே பற்றி வழிபடுங்கள். முழுமுதல் கடவுளாகிய அவனது அருளைப் பெற்று விட்டால் எல்லாம் இனிது முடி எய்தும். உபாயத்தில் வல்ல மிகுந்த தேசுடைய தேவர்கள் அனுபவக் கல்வியடையோரைக் காட்டிலும் பேரின்பம் பெற்று நின்றாரோ ? இல்லை. 

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.  10 

பொருள் : பரந்த கடலைத் தனக்குச் சொந்தமாக உடையவன். அதே போன்று உயர்ந்த மலையையும் உடையவன். ஐம்பூதங்களையும் தனக்குத் திருமேனியாக உடையவன். இப்பூதங்கள் அழிந்து மாறுபடும் போது பல தடவைகளிலும் ஒளியே வடிவான இடபத்தில் விளங்கும் தேவதேவன். தன்னையே நினைந்து தமக்குரிய இடத்தை அமைத்துக் கொண்டவர் உள்ளத்தின் ஒளியில் அவனிருந்து அருளுவான். 


முதல் தந்திரம் - 25. கல்லாமை

பதிகம் எண் :25.கல்லாமை (10பாடல்கள்)
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. - பாடல் எண் : 1

பொழிப்புரை : `கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. - பாடல் எண் : 2

பொழிப்புரை : கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. பாடல் எண் : 3

பொழிப்புரை : நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது 

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே. பாடல் எண் : 4

பொழிப்புரை : நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
 
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. பாடல் எண் : 5

பொழிப்புரை : கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. பாடல் எண் : 6

பொழிப்புரை : நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. பாடல் எண் : 7

பொழிப்புரை : நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப்பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம்.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. பாடல் எண் : 8

பொழிப்புரை : கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.  பாடல் எண் : 9

பொழிப்புரை: சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
 
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. பாடல் எண் : 10

பொழிப்புரை : உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.


மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றுய வசிகூடு முழவின்(புறம்,128-1,2)
மன்றப் பலவின் மால்வரை பொருந்தியென் (புறம்,374-15)
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் (புறம்,76;4)
மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து (புறம்,79;2)
மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப (புறம்,371;7)

என்னும் புறநானூற்று அடிகள் மூலம் அறியலாம் இங்ஙனம் ஊர்ப்பொது மன்றங்களில் பலர் கூடி வாதிடவும் கல்வி கற்கவும் பயன்படுத்தப் பெற்றிருந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது.

யாதுமூரே யாவரும் கேளிர்(புறம்,192;1)
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே (புறம்,192,1)
ஆற்றவுங் கற்றார் அறிவுடையார்(பழமொழி நானூறு,4)

பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலாற் தாயுதனந் திரியும் (புறம்,183;3,4)

அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

மிகப் பெரெவ்வ முறினு மெனைத்தும்
உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்
நல்லறிவுடை யோர் நல்குர
வுள்ளதும் பெருமயா முவந்து நனிபெரிதே (புறம்,197;15-18)

பால் புளிப்பினும் பகல் இருளினும்
நால் வேதநெறி திரியினும்
திரியாச் சுற்றம் (புறம்,2;17-19)

........நன்பல
கேள்வியால் முற்றிய வேள்வியந்தணர்.(புறம்,361;3,4 )

செறுத்த செய்யுட்செய் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறம்,53;11,12)

கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை

 உண்டால் அம்ம இவ்வுலகம் (புறம்,182)

கீழ்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவன் அவன்கட் படுமே ( புறம், 183)

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாதவருள்
அறிவுடையோனால் அரசுஞ் செல்லும் –புறநானூறு

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே – புறநானூறு
 
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், 5
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே, 10 - புறநானூறு 183. கற்கை நன்றே!

 பொருள்: ஆசிரியருக்குத் துன்பம் நேரும்போது உதவ வேண்டும். அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்கவேண்டும். அவரைப் பின்பற்றி நடப்பதற்குத் தயங்கக் கூடாது. இப்படிக் கல்வி கற்பது முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும். ஏனென்றால், தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில் சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும். ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும். பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்.

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை,15)

 அறநெறிச்சாரம்

கற்றவர்க்குரிய ஒழுக்கம் 

தேசும் திறன்அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை - ஆசு இன்றிக்
கற்றல் கடன்அறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி. பாடல் - 71

விளக்கவுரை புகழும், நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த உள்ளத்தின் உறுதியும் உடையவராய், மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து உள்ளத்தில் குற்றம் இன்றிப் பிழையறக் கற்றலும், தன் கடமையை அறிதலும், கற்றவர் இனத்தவராய் நிற்றலுமான எல்லையை உடையதே கற்றவர்க்கு உரிய ஒழுக்கம்.

கல்வியின் இன்றியமையாமை

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு
மக்கட் பிறப்பின் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். -  பாடல் - 72

விளக்கவுரை எந்தப் பிறவியாயினும் மக்களது பிறவியைப் போன்று ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. அந்த மக்கள் பிறவியில் கற்க வேண்டியவற்றைக் கற்றலும் கற்றவற்றைச் சான்றோரிடத்துக் கேட்டுத் தெளிதலும் கேட்ட அந்நெறியில் நிற்பதும் கைகூடப் பெற்றால்!

கல்விக்கு அழகு 

கற்றதுவும் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றுஒருபால் போக மறித்திட்டுத் - தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல்பட்டாற் போன்று. - பாடல் - 73

விளக்கவுரை கற்கத் தக்கனவற்றைக் கற்றதனால் ஆன அறிவு ஒழுக்கத்தில் சிறிதும் கலவாது ஒரு புறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவு அந்நூல் துணிவுளில் மாறுபட மற்றொரு புறம் போகவும், நல்ல வழியின் செலவைத் தடுத்து உள்ளத்தில் விரைய தீய எண்ணம் தோன்றுமானால், உண்ணப் புகுந்த அப்பக் கூட்டத்துள் பொருந்திய கல்லைப் போல் அது மிக்க துன்பத்தை அளிப்பதாகும்.

கற்றவர் தவற்றைப் பலரும் காண்பர் 

விதிப்பட்ட நூல்உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கைஇகந்து ஆக்கிப்
பதிப்படடு வாழ்வார் பழிஆய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு. - பாடல் - 74

விளக்கவுரை ஒழுக்க விதிகளை உடைய நூலைக் கற்று உணர்ந்து, அவற்றுக்குள் உடன்படாதவற்றைச் செய்யாது அகற்றி, ஞான நூலை எல்லை இல்லாமல் உலகவர் பொருட்டாகச் செய்து, இறைவனை அடைய விரும்பி வாழ்பவர், மற்றவர் பழித்தற்குக் காரணமானவற்றைச் செய்தல் சந்திரனிடத்தில் ஏற்பட்டுள்ள களங்கம் போன்றதாகும்.

 மேலும் பல தமிழ் நூல்கள்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் – கொன்றை வேந்தன்

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி – கொன்றை வேந்தன்

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் — உலக நீதி

இளமையிற் கல்; ஓதுவது ஒழியேல்; வித்தை விரும்பு – ஆத்திச்சூடி

கேள்வி முயல்; நூற் பல கல்; எண் எழுத்து இகழேல் – ஆத்திச்சூடி 

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை

தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு – நான்மணிக் கடிகை

கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் – நான் மணிக்கடிகை

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் – வெற்றி வேற்கை
கல்லாத மூத்தானைக் கைவிட்டுக் கற்றவன் இளமை பாராட்டும் உலகு – நான் மணிக்கடிகை

நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கல்வியழகே அழகு – நாலடியார்

வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) 
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்

கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார்

கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை – திரிகடுகம்

எண் அவன் காண் எழுத்து அவன் காண்
இன்பக் கேள்வி இசை அவன் காண் – அப்பர் தேவாரம்

நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமற் பாகம் படும் — பழமொழி

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – வாக்குண்டாம்

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின்காழ் இனியதில் — இனியவை நாற்பது

பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே – இனியவை நாற்பது 

கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –– நீதிநெறிவிளக்கம்

கிறிஸ்தவம்  


பைபிளின் கருத்து கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா?
“விவரம் தெரியாதவரே கல்வி கற்பதை வெறுப்பர்.” —பூப்ளியுஸ் சைரஸ், மாரல் சேயிங்ஸ், பொ.ச.மு. முதல் நூற்றாண்டு.
பைபிள் நம்மை “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும் காத்துக்கொள்ள” துரிதப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21, NWஅறிவின் ஊற்றுமூலரான யெகோவா, தம்மை வணங்குபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்(1 சாமுவேல் 2:3; நீதிமொழிகள் 1:5, 22ஆனால் பைபிளில் பதிவு செய்யப்பட்ட சில வாக்கியங்கள் ஒருவேளை கேள்விகளை எழுப்புபவையாய் இருக்கலாம். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் தன் உயர் கல்வி உட்பட, தன்னுடைய பழைய வாழ்க்கையின் நாட்டங்களைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “நான் இவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்.” (பிலிப்பியர் 3:3-8டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இன்னொரு கடிதத்தில் அவர் இவ்விதம் வலியுறுத்துகிறார்: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.”—1 கொரிந்தியர் 3:19.

இஸ்லாம் 

கல்வி – ஒரு இஸ்லாமியப் பார்வை

உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.” (திருக்குர்ஆன் 58:11) 
‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள்தாம் அறிஞர்கள்” (திருக்குர்ஆன் 35:28) 
மேலும் அல்லாஹ் கூறினான் ‘அதனை அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 29:43) 
மேலும் அல்லாஹ் கூறினான்: ‘நாங்கள் (செவி தாழ்த்திக்) கேட்டிருந்தாலோ, அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரக வாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள்.” (திருக்குர்ஆன் 67:10) 
மேலும் கூறுகிறான்: ”றிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?’ (திருக்குர்ஆன் 39:09) 
கல்விக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் நெருங்கிய பிணைப்பை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? “சீனம் சென்றேனும் ஞானம் கல்” என்ற இஸ்லாமிய பழமொழி எத்தனை பேருக்குத் தெரியும்? 
‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். – புகாரி 
உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றதொரு நபிமொழியில், ‘யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார். ”அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். (ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் "1) நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா) 2) பயனளிக்கக் கூடிய அறிவு 3) தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை- ஆதாரம் : முஸ்லிம்.  

 

  யூதர்களின் திட்டம்