தமிழில் வேதம் உண்டா?

இந்த கேள்விக்கு பல சகோதரர்கள் உண்மைக்கு நெருக்கமாக பதிலை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதில் தமிழில் உள்ள அனைத்து சங்க இலக்கியங்களையும் இலக்கணங்களையும் சமண சைவ வைணவ நூல்களையும் பட்டியல் இட்டு உள்ளனர்.

சிலர்"என்னை பொறுத்தவரை" என்று தான் விரும்பியதை கூறி உள்ளனர். இவ்வாறு வேதம், ஆன்மீகம், கடவுள், சமயம் மற்றும் குரு போன்றவைகளுக்கு ஏதேனும் வரையறை உண்டா அல்லது இவ்விடயம் தொடர்பாக நமது விருப்பத்துக்கு கருத்துக்களை உருவாக்கி கொள்ளலாமா என்பதையும் நாம் ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் வேதங்கள் யாது? என்ற கேள்விக்கு முன் அது உள்ளடக்கிய வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறிந்து இருக்கவேண்டும். அதோடு சேர்த்து சில உப கேள்விகளுக்கும் பதில் தெரிந்து இருக்க வேண்டும். அவற்றில் சில..

  1. வேத நூல் என்றால் என்ன?
  2. மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா?
  3. வேதத்துக்கும் வேதம் அல்லாத நூல்களுக்கும் என்ன வேறுபாடு?
  4. தமிழில் வேதம் உண்டா?
  5. வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியுமா?
  6. வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?
  7. தமிழ் கடவுளின் மொழியா? அப்பொழுதுதான் தமிழில் வேதம் இறங்க முடியும்!

இப்பொழுது இதற்கான பதில்களை காணலாம்.

1) வேதம் என்றால்,

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

இன்று பொதுவாக எழுதப்படும் அனைத்தும் நூல் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இறைவனால் கொடுக்கப்படுவது தான் நூல் ஆகும்.

எடுத்துகாட்டாக, பைபிள் என்ற கிரேக்க சொல்லுக்கும் புத்தகம் என்றுதான் பொருள்.

குர்ஆனின் மற்றொரு பெயர் கித்தாப் (புத்தகம்) ஆகும். 

முதலில் நூல் என்று மட்டும் அழைக்கப்பட்டது, காலத்து ஏற்ப தொடர் நூல்கள் வந்த பொழுது முதல் நூல், வழி நூல் என்று பிரித்து அழைக்கப் பட்டது. பின்னாளில் மக்களும் நூல்கள் எழுத துவங்கியதும் அது மறை நூல்கள் என்று அழைக்கப்பட்டது. வேற்று சமய கலப்பு ஏற்படும் பொழுது அவைகள் ஆகமம் என்றும் வேதம் என்றும் சொல்லப்பட்டது. எனவே வேதம் என்றல் இறைவனால் வழங்கப்பட்டது ஆகும். அதன் பெயர்தான் மேற்சொன்னபடி காலவோட்டத்தில் மாற்றப்பட்டது.

2) மனிதன் தன் அனுபவத்தை கொண்டு வேதத்தை எழுத முடியுமா? என்று கண்டறிய விரும்பினால்,

மேல் சொன்ன அருங்கலச்செப்பு, பாடல் 9 தெளிவாக கூறுகிறது "என்றென்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு" என்று.. எனவே இவைகள் அனுபவத்தின் ஊடாக அல்லாமல், என்றென்றும் உள்ளேனன்றும் உருவாகியது ஆணால்நது அவனால் வெளிப்படுவது எப்போது என்றால் அதை தொல்காப்பியம் தெளிவாக விளக்குகிறது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். - (தொல்காப்பியம் மரபியல் 640)

இதன் பொருள், அனுபவத்தின் மூலம் அல்லாமல் இருக்க கூடிய அறிவை முனைவன் கண்டது (எழுதியது அல்ல) முதல் நூல் அல்லது முதல் வேதமாகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். (தொல்காப்பியம் மரபியல் 641)

வேதம் ஒன்றுமட்டுமல்ல, அது தொடந்து பல காலகட்டங்களில் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என்கிறது தொல்காப்பியம்.

உதாரணமாக, 1) பைபிள் வெவ்வேறு நபர்கள் எழுதிய 60 க்கும் மேற்ப்பட்ட நூல்களை உள்ளடக்கியது. 2) ரிக், யஜுர் சாம வேதங்களும் 600 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளடக்கியது, 3) தமிழிலும் அவ்வாறுதான். புறநானூறு 150 பேரால் எழுதப்பட்டுள்ளது, தேவாரம் மூவரால் எழுதப்பட்டுள்ளது. இவாறாக நான்கு சமய பாரம்பரியங்கள் உள்ளது. அதுதான் நான்மறை என்று அழைக்கப் படுகிறது.

இங்கே நாம் சிந்திக்க வேண்டியது ஒருவர் எழுதிய நூலில் இன்னொருவர் எழுத எப்படி முடிந்தது? ஏனென்றால் அது வேதம் என்பதால். இந்நூல்களின் முறைப்பகுதியை எழுதியவர்கள் அதன் உரிமையாளர்கள் அல்ல. பின் எழுதுபவர்களும் அதன் உரிமையாளர்கள் அல்ல. எல்லோரும் அந்த நூலின் உரிமையாளன் கூறியபடி அவனின் அனுமதியோடு அந்நூலில் எழுதுகிறார்கள். ஏனென்றால் எழுதுவது அவர்களின் சொந்த அனுபவமோ ஞானமோ திறமையோ அல்ல.

3) வேதத்துக்கும், வேதம் அல்லாதவைக்கும் என்ன வேறுபாடு?

மேற்சொன்ன வரையறையின் படி, மனிதனின் தனது அனுபவத்தால் அல்லது பக்தியில் இறைவனை புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களும், சுய சிந்தனையினால் உந்தப்பட்டு எழுதப்பட்ட கதைகள் எதுவும், சில பல வேதங்களை கற்று அதன் சாரத்தை கூறுவதும் வேதம் ஆகாது. வேதம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட நேரடி வார்த்தைகளே.. வேதத்தின் மொழிபெயர்ப்பு கூட மனிதனின் அறிவை கொண்டு செய்யப்பட்டால் வேதம் ஆகாது.

4) தமிழில் வேதம் உண்டா?

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147)

பொருள்: வானில் இருந்து வந்த மறைபொருளை அறிவது நான் பெற்ற இன்பம் அது இவையகமும் அதை பெற வேண்டும் என்று விரும்புகிறார் திருமூலர். .

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149.

இப்பாடல்கள் மூலம் திருமூலர் தமிழில் வேதம் கொண்டு வந்தது நிரூபணமாகிறது. அதோடு இவ்வேதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கு அனைவருக்கும் என்று கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் உண்டு.

5) வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுமா?

1)தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்

3) மூவர் தமிழும் 4)முனிமொழியும் - 5) கோவை

திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

(பதவுரை) 1) திருவள்ளுவருடைய திருக்குறளும், 2) நான்கு வேத பாரம்பரியங்களின் முடிவும், 3) மூவர் தமிழும் - (திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவர்களுடைய தேவாரமும், 4) சிவவாக்கியர் போன்ற முனிவர்களின் மொழியும் - 5) மாணிக்கவாசகரின் கோவை திருவாசகமும், 6) திருமூலருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு மூலத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று அறிவாயாக. 

எனவே சமண நூல் என்று அறியப்பட்ட குறளும், சைவ நூல்களான தேவாரமும் திருவாசகமும் திருமந்திரமும், சித்தர்கள் எழுதிய நூல்களும், உலகில் உள்ள அனைத்து சமய நூல்களை உள்ளடக்கிய நான்மறையும் ஒன்றுதான் என்று கூறுகிறது இந்த பாடல். எனவே இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படாது. 

முதல் நூலை வழித்து வந்தது வழி நூல் என்று தொல்காப்பியம் வரையருப்பதன் மூலமும், நல்வழி பாடல் 40 தின் மூலமும், முதலும் வழியும் மற்றும் நான்மறைகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்படுவதாக தோன்றுவதற்கு காரணம் நமது கல்வியின் குறைபாடு ஆகும். மறை நூல்கள் அல்லது அறநெறி நூல்கள் போன்றவைகள்பணம் சேர்க்கும் கருவியாக இல்லாமல் இருப்பதால் அதை கற்று அறியாமல், தொழிற்கல்வியை பிரதானமாக கற்றதன் விளைவு உலகில் உள்ள அனைத்து சமய வேதங்கள் ஒன்றுக்கொன்று முரன்படுவது போல தெரிகிறது.

6) வேதங்கள் என்று சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் வேதமா?

எவர் வேண்டுமென்றாலும் ஏற்கனவே உள்ள வேதத்தை படித்து, தான் ஒரு நூல் எழுதி அதை வேதம் என்று வாதிடலாம். அதற்கு அவருக்கு தேவை வாத திறமை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு. இது கால காலத்துக்கு தீயவர்களின் கைகளுக்கு எட்டும் விடயமாகவே இருந்து வருகிறது. எனவே இவ்வாறு உள்ளவர்கள், தான் எழுதிய நூலை வேதம் என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டவோ அல்லது மக்களிடத்தில் பிரகடன படுத்தவோ முடியும். எனவே இதற்கிடையில் உண்மை வேதத்தை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு எதேனும் வழிமுறை உள்ளதா என்றால்? உண்டு.

தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. - (அறநெறிச்சாரம் பொய்ந்நூல்கள் பாடல் - 47)

பொருள்: தங்கள் தங்களின் விருப்பம், தத்தமது காட்சி/விளக்கம் என இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய் நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்றுவணங்கி வழிபடுபவர் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உள்ளவர்கள் இல்லை.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடை யார். பாடல் - 2

விளக்கவுரைபாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில் - (நாலடியார்பொருட்பால், 14. கல்வி 140)

விளக்கம்அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

வேதம் என்று ஏற்கனவே அறியப்படும் நூல்களுக்கு முரண்படும் நூல்கள், ஆசையை வளர்க்கும் நூல்கள், உலக வாழ்க்கைக்கு மட்டும்  பயன்படும் நூல்கள் ஆகியவை வேத நூல்கள் அல்ல.

7) தமிழ் கடவுளின் மொழியா?

மக்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் வாழும் அனைத்து திசைக்கும் வேதம் வழங்கியது அதே இறைவன்தான் எனவே மொழிகள் அனைத்தும் அதே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் தேவ பாஷா என்று எதும் இல்லை.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருமூலர் போன்ற மக்களுக்கு குருவாக இருக்கும் மனிதர்களுக்கு உபதேசிக்கும் நந்திகள் மொத்தம் நான்கு பேர், அவர்கள் திசைக்கு ஒருவராய் அவர்களது பணியை செய்தனர். நான்கு திசையில் ஒரே மொழி பேசியவர்களா இருந்தனர்? இல்லை, வெவ்வேறு மொழி பேசிய, பேசும் மக்கள் தான் இருந்து வந்துள்ளனர். எனவே எல்லா மொழிகளுக்கும் வேதம் உண்டு, எனவே தேவ பாஷை என்று எதும் இல்லை.

முடிவுரை:

மேலே தரப்பட்ட கேள்விகளும் பதிலும் இந்த நீண்டந்தலைப்பில் ஒரு முன்னுரை போன்றே. உங்களுடைய நியாயமான கேள்விகள் வரவேற்க்கப் படுகிறது.

இந்த சிறு ஆய்வின்படி, மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின் படி, கீழ்கண்ட நூல்கள் தமிழ் வேதங்களாக இருக்கலாம்.

  1. அகத்தியம்
  2. தொல்காப்பியம்
  3. புறநானூறு
  4. அகநானூறு
  5. குறள்
  6. ஞானக்குறள்
  7. நாலடியார்
  8. ஆத்திசூடி,
  9. நல்வழி,
  10. மூதுரை
  11. திரிகடுகம்,
  12. பழமொழி 400
  13. தேவாரம்,
  14. திருவாசகம்,
  15. திருமந்திரம்,
  16. சிவவாக்கியம்
  17. அறநெறிச்சாரம்,
  18. அறுஞ்செக்கலப்பு
  19. ஆசாரக்கோவை
  20. ஏலாதி
  21. சிருபஞ்ச மூலம்
  22. முதுமொழி காஞ்சி
  23. இன்னா 40,
  24. இனியவை 40

இவைகள் மேற்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் எனது ஆய்வுகளின் மூலம் வேதமாக இருக்கலாம் என்று நான் கருதியவைகள். எனவே தமிழில் வேதங்கள் இவைகள் மட்டுமல்ல, வைணவம் இன்னும் ஆய்வு செய்யப்படாத பகுதியாக உள்ளது.

அடிமை முறை

அடிமை முறை எந்தெந்த சமூகத்தில் இருந்தது, சமயங்கள் அதை ஊக்குவித்ததா?

தமிழர் சமயம் 

தச்சச்சிறா அர் நச்சப்புனைந்த
வூரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலியம் பெண்டிர்தம் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சும் அழகுடை வியனகர்”
என்று பெரும்பாணாற்றுப்படை ( 248 - 52 ) என்று பேசுகிறது.

செல்வர் மனைகளில் அவர்தம் பிள்ளைகளுக்கு அடிமைகளான செவிலியர் தம் முலைப்பாலை உண்பித்துப் பசி போக்கி உறங்கச் செய்தனர் என்ற செய்தியை நமக்குக் கூறுகிறது. 

அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் ஆடவரும் மகளிருமான அடிமைகள் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மகளிர் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் நெல்குற்றுவோராகவும் பணிசெய்தனர். இதனை, 

‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி” 
 
என்று புறநானூறு ( 399 ) கூறுகிறது.

கொண்டிர் மகளிர்

போரில் தோல்வியுற்ற பகைவர் மனைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பகைவர் மனையோராய்ப்பிடித்து வரப்பட்ட மகளிர் “ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். அப்பெண்கள் சமையல் காரிகளாகவும், சலவைக் காரிகளாகவும் நெல் குற்று வோராகவும், பணியமர்த்தப்படடனர் என்பதை முன்னர்க் கண்டோம். இம்மகளிருள் இளமையும் அழகும் உடையார் அரசர் மற்றும் செல்வர்களின் ஆசைநாயகியர் ஆக்கப்பட்டனர். இதனை,

‘மழையெனமருளும் மகிழ்செய் மாடத்து
இழையணிவரப்பினின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப்பல்கால்
வாக்குபுதரத்தர”

(இழையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் பெண்கள் உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை, மழையென்னும்படி மாடத்திடத்தே பலகாலும் ஓட்டமற்ற பொன்னற் செய்த வட்டில்கள் நிறையத்தந்து உண்பித்தனர்) என்று பொருநராற்றுப்படை அறிவிக்கிறது.

பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட இப்பெண்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர். இவ்வடிமைப் பெண்கள் நீருண்ணும் துறையிலே சென்று மூழ்கிக்கோயில்களைத் தூய்மை செய்யவும் அந்திக் காலத்தே கோயில்களில் விளக்கேற்றவும், தறிகளுக்குப் பூச்சூட்டவும் பணியமர்த்தப்பட்டனர். ‘பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார், அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காரணமும் விளக்கமும் கூறினார்.

இக்கொண்டிமகளிர் பரத்தையர் ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ‘ கொண்டி மகளிர் “ என்ற தொடர் பரத்தையர் என்ற பொருளில் ‘பயன்பல வாங்கி வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் என்று மணிமேகலையிலும் மதுரைக்காஞ்சியிலும் கூறப்படும் செய்தி மேற் குறித்த கூற்றுக்கு அரண் செய்கிறது எனலாம்.

 அரசர்களின் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகளான பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமையல் காரர்களாகப் பணிபுரிந்தனர்;.

‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை”

(வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியுடைத்தாகிய கையினையுடைய மடையன் (சமையல்காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசை) என்று பெரும்பாணாற்றுப்படை(471-472) இது குறித்துக் கூறுகிறது.

 போர்க்களத்தில் அடிமைகள்

அரண்மனைகளில் குற்றேவல் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அடிமைகளான பெண்களையும் பாணர் துடியர் முதலான அடிமைகளையும் அரசர்கள் போர்க் களங்களுக்கு உடனழைத்துச் சென்றனர். அரண்மனைகளில் மட்டுமல்லாது, போர்க்களங்களிலும் அரசர் படைத்தலைவர் முதலாயினர்க்குப் பணிவிடை செய்யவும் அவர்களின் காமப்பசிக்கு இரையாகவும் அடிமை மகளிர் உடன் கொண்டு செல்லப்பட்டனர், குற்றவேலும் பணிவிடையும் செய்யப் பணிக்கப்பட்டனர்.

‘குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ்சிறுபுறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடியொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட”

(சிறிய வளையலணிந்த முன் கையையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகையும் உடையோரும் திண்ணிய கைப்பிடியையுடைய வாளைக் கச்சிலே பூண்ட வரும் நெய்வழிகின்ற திரிக்குழாயையுடையவரும் ஆன அடிமைப்பெண்கள், நெடியதிரியை எங்கும் கொளுத்தின ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அணையுந் தோறும் தம்கையிற்பந்தத்தால் கொளுத்தினர்) என்று முல்லைப்பாட்டு (45 - 49) கூறுகிறது.

போருக்குச் செல்லும் வீரர்கள் அவ்வப் போர்த்துறைக்குரிய பூவைச் சூடிச் செல்வது மரபு, அரசர்கள் அதற்கேற்பவீரர்களுக்குப் பூ வழங்குவர். போர்ப் பூ வழங்கும் செய்தி வீரர்களுக்குப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அப்பணியைத் துடியன் இழிசினன் முதலான அடிமைகளே செய்தனர். அடிமையாகிய இழிசினன் யானை மீதமர்ந்து பறை முழக்கிப் போர்ப் பூவைப் பெற்றிட வருமாறு வீரரை அழைத்தான். இழிசினன். அங்ஙனம் அழைத்ததனை.

‘கேட்டியோ வாழிபாண பாசறைப்
பூக்கோளின் றெறன்றையும
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” புறநானூ : 289


(பாணனே பாசறையிடத்தே போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று அறிவிக்கும் புலையன் முழக்குகின்ற பறையின் ஓசையைக்கேட்பாயாக); என்று, புலையன் போர்ப் பூவைப் பெற்றுச் செல்லப் பறைமுழக்கி வீரரை அழைத்த காட்சியைப் புலவர் கழாத் தலையார் காட்டுகிறார்.

‘நிறப்படைக் கொல்காயானை மேலோன்
குறும்பர்க் கெறியும் ஏவற்றண்ணுமை”

(குத்துக் கோலுக்கு அடங்காத யானைமேலிருப் போனாகியவள்ளுவன், அரண்புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும், பூவைக் கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமை (பறை) என்று, வள்ளுவன் யானை மேலமர்ந்து வீரரைப் போர்ப் பூவைப்பெறுவதற்குப் பறையறைந்து அழைத்த காட்சியைப் புறநானூறு :293 காட்டுகிறது.

துடியன், பறையன், பாணன், புலையன் இழிசினன் முதலான அடிமைகள் பாசறைகளிலும் பாடி வீடுகளிலும் அரசர்க்குப் பணி விடை செய்வதற்காகப் போர்க்களத்துக்கு உடனழைத்துச் செல்லப்பட்டனர். துடியர் பறையர் என்போர் போர்க்களத்தில் துடியையும் பறையையும் முழக்கு வோராகப் பணிபுரிந்தனர். இதனை, ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (துடிப்பறை கொட்டுபவனே பறையை முழக்கும் குறுந்தடியைக் கொண்டு நிற்கும் புலையனே) என்றும் ‘உவலைக்கண்ணித்துடியன்” என்றும் புறநானூறு கூறுகிறது.

போரில் தலைவன் வீழ்ந்து பட்டால் அவனது போர்க் கருவிகளான வேல் கேடகம் முதலானவற்றை, உடன் அழைத்துச் செல்லப்பட்ட துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர்.

‘பாசறையீரே பாசறை யீரே
துடியன் கையது வேலேயடிபுணர்
வாங்கிரு மருப்பிற்றீந் தொடைச் சீறியாழ்
பாணன்கையது தோலே” புறநானு : 285.

(மாற்றார் எறிந்த வேல்மார்பிற்பட்டு தலைவன் மண்ணிற் சாய்ந்தானாக அவனது வேல் துடிகொட்டுவோன் கையதாயிற்று தலைவனது கேடகம் பாணன் கையதாயிற்று) என்று தலைவன் போரில் வீழ்ந்து பட்டானாக அவனது வேலும் தோலுமாகியவற்றைத் துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர் என்ற செய்தியை அரிசில் கிழார் கூறுகிறார்.

சுறாஅர் துடியர் பாடுவன் மகா அர்
தூவெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென்” - புறநானூறு: 291

(அடிமைகளான துடியர்களே பாணர்களே தூய வெள்ளிய ஆடையணிந்த கரியனாகிய தலைவனை அணுகி, கரிய பறவைகள் செய்யும் ஆரவாரத்தை நீக்கு வீராக, யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப்பாடி, தின்ன வரும் குறுநரிகளை யோட்டுவேன்.) என்று, போரில் வீழ்ந்து பட்ட வீரனது மனைவி, போர்க்களத்துக்குத் தலைவனுடன் சென்றிருந்த துடியனையும் பாணனையும் பார்த்துக் கூறியதாக நெடுங்களத்துப் பரணர்; கூறுகிறார். இவ்வாறு போர்க்களத்துக்கு அடிமைகளான பெண்களும் துடியரும் பாணரும் தலைவர்களால் உடனழைத்துச் செல்லப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது.

பாணரும் பாடினியரும் துடியரும் பறையரும் ஆண்டைகளின் அடிமைகளாக அவர்களின் ஆதரவில் வாழ்ந்தனர். போரில் ஆண்டையாகிய தலைவன் வீழ்ந்து பட்ட போது அவனது பராமரிப்பில் வாழ்ந்து வந்த துடியர் பாணர் முதலியோரது நிலை இரங்கத்தக்க தாயிற்று. இதனை

‘துடிய பாண பாடுவல் விறலி
என்னாகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ அரிதே ‘ புறநானூறு : 280

(துடி கொட்டுபவனே பாணனே பாடல் வல்ல விறலியே நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கீர், இது காறும் இருந்தாற் போல இனி இவ்விடத்தே இருந்து வாழலாம் என்பது அரிதே) என்று போரில் இறந்து பட்ட தலைவனது மனைவி, துடியர் பாணர் முதலானோரது நிலைக்கு இரங்கிக் கூறியதாக மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

பாணர் அடிமைகளாக ஆண்டைகளின் தயவில் வாழ்ந்தனர்;. அவர்களைப் பரத்தையரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டைகளுக்காகப் பரத்தையர் பால் தூது சென்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் மருதத்திணை சார்ந்த பாடல்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. ‘பாணர் அடிமைகளாகப் பரத்தையர் வீடுகளுக்கும் உடன் சென்றனர், பாடி வீடுகளுக்கும் உடன் சென்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஈமத்தொழிலில் அடிமைகள்

புலையன் இழிசினன் முதலான அடிமைகளை ஆண்டைகள் பிணஞ்சுடுதல் போன்ற இழிபணிகளைச் செய்யவும் ஏவினர். ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்களும் இடுதலும் சுடுதலுமாகிய ஈமத்தொழில்களைச் செய்தனர்.

கள்ளியேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுளாங்கண்
உப்பில்லா அவிப்புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோனீயப் பெற்று
நிலங்கலனாக விலங்குபலிமிசையும் -புறநானூறு :363

(கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின் கண் உப்பின்றி வேக வைத்த சோற்றைக் கையிற் கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று நிலத்தையே உண் கலனாகக் கொண்டு வைத்து வேண்டாத பலியுணவை ஏற்கும் ) என்றும்

‘கள்ளிபோகிய களரி மருங்கில்
வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்திட சில்லவிழ்வல்சி
புலையனேவப் புன் மேலமர்ந்துண்
டழல்வாய்ப் புக்கபின்’ - புறநானூறு :360

(கள்ளிகள் ஒங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய தருப்பைப் புல்லின் மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவைப் புலயைன் உண்ணுமாறு படைக்க, தருப்பைப் புல்லின் மேல் இருந்துண்டு சுடலைத்தீயில் எரிந்தனர்) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன.

‘இழிசினனாகிய புலையன் பிணத்துக்கு உப்பில்லாத சோறும் கள்ளும் பின்புறம் திரும்பிப் பாராமல் படைத்தலாகிய சடங்கைச் செய்தலோடு பிணத்தை இடுதலும் சுடுதலும் ஆகிய ஈமத்தொழிலையும் செய்தான் என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

இழிந்தவையும் கடினமானவையுமான தொழில்களைச் செய்யுமாறு அடிமைகாளகிய சகமனிதர்களை ஆண்டைகள் வற்புறுத்தி ஏவினர். வயல்களில் உழுதல், நீர்பாய்ச்சுதல், தொளிகலக்குதல், நாற்று நடுதல், களைபறித்தல், காவல் காத்தல், நெல்லரிதல், பிணையலடித்தல், பொலி தூற்றுதல், நெல்லை ஆண்டைகளின் மனைகளில் உள்ள நெற் கூடுகளில்சேர்த்தல் போன்ற கடினமான பணிகளைக் கடையர் கடைசியர் உழவர் உழத்தியர் களமர் முதலானவர்களே செய்தனர். இவர்கள் கீழ் மக்கள் எனப்பட்டனர். தமிழ் இலக்கணநூல்களும் இலக்கியநூல்களும் அங்ஙனமே குறித்துக் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் இத்தகைய தொழில் செய்தாரைக் குறிக்கும் பொழுது ‘சிறு’ அல்லது ‘சிறார்’ என்னும் சொல்லுடன் சேர்த்தே குறிப்பிட்டனர். தச்சச் சிறார். வேட்கோச் சிறார், சிறுகுறுந் தொழுவர் என்று குறிக்கப்பட்டனர். அவர்களை அடிமைகள் அல்லது கீழ் மக்கள் என்று குறிப்பதற்காகவே இச் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன. ‘சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்’ என்று துடியரும் பாணரும் சிறார் என்று அழைக்கப்பட்டதைப் புறநானூறு ( 291) காட்டுகிறது. இங்ஙனம் தச்சர், வேட்கோவர், குறுந்தொழுவர், துடியர் பாணர் முதலியவர்களை அடிமைகள் என்று குறிப்பதற்காவே அச்சொற்களுடன் சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன.

வயதில் மூத்தவர்களான அடிமைகளையும் கீழ்ச்சாதியாரையும் இளையோரான ஆண்டைகளும் ஆதிக்க சாதியாரும் மரியாதை இல்லாமல் அடே என்று அழைப்பதும் வாடா போடா என்று ஏவுவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் அடிமைச் சமூகம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்ட வழக்கமாகும். இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதையே, தச்சர் வேட்கோவர் முதலான சொற்களோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ள சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் உணர்த்துகின்றன.

உழவர், களமர், புலையர் முதலான அடிமைகள் ஊருக்குள் வாழ அனுமதிக்கப்;படவில்லை. ஊருக்கு வெளியே ஓதுக்குப் புறமான சேரிகளில் வசிக்கவே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். சுரண்டும் வர்க்கத்தவர் ஆன ஆண்டைகள் வாழ்ந்த ஊர்களையும் அரண்மனைகளையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் உழைப்பாளிகளும் அடிமைகளும் ஆன கீழ் மக்கள் வாழ்ந்த சேரிகளைப்பாடாமல் ஒதுக்கினர். இது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பழைய சோறே அடிமைகளுக்கு உணவாக ஆண்டைகளால் வழங்கப்பட்டது. ஆண்டைகள் உடுத்துக்களைந்த பழைய ஆடைகளே அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்டன. பிற்காலத்தில் ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் வளமனைகளில் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்தப் படுத்தப்பட்டனர். இவ்வடிமைகள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவ்வழக்கம் சங்க காலத்திலும் நிலவியது. அண்மைகாலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையிலும் நீடித்திருந்தது.

அடிமைக் கொடை

அடிமைகளைச் சங்க காலத்தில் விலைக்குவிற்கும் வழக்கம் இல்லை. அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. அக்காலத்தில் அடிமை வாணிகம் தோன்றாமைக்கு வணிகமுறை வழக்கத்துக்கு வாராததும் ஒரு காரணமாகும். அந்தக் காலகட்டத்தில் வாணிபம் என்பது பண்டமாற்று முறையாகவே இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆண்டைகள் அடிமைகளைப் பரிசிலர்க்கு தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது.

சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்பவன் குண்டுகட்பாலியாதனார் என்ற புலவருக்கு யானை குதிரை ஆநிரை நெற்போர் முதலியவற்றோடு அடிமைகளையும் தானமாக வழங்கினான் என்ற செய்தியைப்புறநானூறு ( 387 ) கூறுகிறது.

குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறை நிரையென்கோ
மனைக்களம ரொடு களமென்கோ
ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்
நல்கியோனே நசைசால்; தோன்றல்

( மலை போன்ற யானைகளும் கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும் மன்றிடம் நிறைந்த ஆநிரைகளும் மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமைகளான களமரும் ஆகிய அவற்றைக் கனவு என்று மயங்குமாறு நனவின்கண் விரைவாக நல்கினான் ) என்பது பரிசில் பெற்ற புலவர் பாலியாதனரின் கூற்று ஆகும்.

ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்கு யானை குதிரை அணிகலன் தேர் முதலியவற்றையும் எருதுகளையும் தேரைச் செலுத்தும் பாகனையும் பரிசிலாகக் கொடுத்தான் என்ற செய்தியைச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ( 257 - 61 )

கடுந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்து பெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெலவொழிக்கும் மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்கு மவன் பரிசில்’

( பாண்டில் எருது, வலவன் வண்டி யோட்டி) ( வலிய தொழிலைச்செய்யும் தச்சருடைய கையாற் செய்யும் உருக்கள் எல்லாம் முற்றுப் பெற்ற தேரினையும் தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் அழகும் வலிமையும் உடைய கால் களையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடைய நாரை எருத்தையும் அதனைச் செலுத்தும் பாகனையும் யானைகுதிரை அணிகலன்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும் ) என்பது இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நமக்குக் கூறும் செய்தியாகும். இவ்வாறு அடிமைகளை ஆண்டைகள் புலவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆண்டைகள் ஊர்ந்து சென்ற சிவிகைகளை அடிமைகள் சுமந்து சென்ற காட்சியை வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை” - குறள்

என்பது வள்ளுவர் காட்டும் காட்சியாகும், இங்கு சிவிகை பொறுத்தார் அடிமைகள் ஊர்ந்தார் ஆண்டைகள். ஆடவரும் மகளிருமான அடிமைகளை ஆண்டைகள் அனைத்து விதமான பணிகளையும் செய்யுமாறு ஏவிப் பணி கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. வலியோராகிய சிலர் எளியோராகிய பலரை - சகமனிதர்களை - மனிதக்கால் நடைகளாகக் கருதிப் பணியமர்த்திய கொடுமை தனியுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக மனித குலவரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும்.

கிறிஸ்தவம் 

பைபிளில் அடிமை வியாபாரம்: 

 இஸ்ரவேலர்கள் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஆணையிடுகிறார். உதாரணமாக “உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும், அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம் உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு,அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம். அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக் கொள்ளலாம்,; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம், உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.” (லேவி.25:44-46) கீழ்க்கண்ட வசனங்களையும் படித்து பாருங்கள் யாத்;.21:2-11, எபூசி.6:5, 1திமோத்.6:1-2, லூக்கா.12:47-48,யாத்.21:20-21

யாத்திராகமம் 21: 16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

யாத்திராகமம் 21 பிற சட்டங்களும், கட்டளைகளும்

21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.

2 “நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை. 3 ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம். 4 அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.

5 “ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். 6 இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.

7 “ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை. 8 எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான். 9 அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.

10 “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும். 11 அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

26 “ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும். 27 ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.

போரில் கைதான பெண்கள்

10 “நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள். 14 அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.

இஸ்லாம் 


அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ”அடிமைக் கடற்கரைகள்” என்றே அழைக்கப்பட்டன.

ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் 1790ல் மட்டும் 75,000.

அந்த அடிமைகளை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் சிறியதாகவும், அசுத்தமானவையாகவும் இருந்தன. அந்த ஆப்பிரிக்க மக்கள் கப்பலில் சரக்கு வைக்கப்படும் பகுதியில் ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டார்கள். அவ்வறைகளின் கூரையைத் தொடுமளவிற்கு ஒருவர் மீது ஒருவராகத் திணிக்கப்பட்டார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் மரத்தாலான சிறு அறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில் அவர்களால் அசையக்கூட முடியாது. ஏனென்றால் அச்சிற்றறைகளின் அகலம் 18 அங்குலம்தான். இவ்வாறு ஒருவரின் தலைக்கு மேல் இன்னொருவராக அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறையான உணவோ, நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடிக்கப்பட்ட மனிதர்களில் 20 சதவிகிதத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கடற்கரைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்ததாக மேலை நாட்டு நூலாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடியாகும். என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அடிமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஓயாது வாய்கிழிய அவதூறு பேசுவோரின் வரலாறுதான் இது.

”உலகில் அடிமை முறையை ஒழித்தவர்கள் நாங்கள் தாம்” என்று மேலை நாட்டினர் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அதற்கு முன்னால் மேற்கத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்காவில் பெருமளவில் நுழைந்து அங்கு வாழ்ந்த சுதந்நிர மனிதர்களைப் பிடித்து அடிமைப்படுத்தி தங்கள் புதிய குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து இனி இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகளைப் பார்ப்போம்.

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்.

//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

இஸ்லாம்தான் உலகில் அடிமை முறையை உருவாக்கியது என்பது தவறானக் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அதற்கும் முன்னும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலும் அடிமை முறைகள் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆகவே அடிமை முறையை இஸ்லாம் உருவாக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே இருந்த அடிமை வழக்கத்தை இஸ்லாம் அங்கீகரித்து – அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி – அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது. எந்த அளவுக்கு தூண்டியது என்றால் – அடிமைகளை விலை கொடுத்து வாங்க வசதிபெற்ற – நபித்தோழர்கள் விலை கொடுத்து வாங்கி பிறகு விடுதலை செய்து, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள். எனவே அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.

2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.

3. போர் கைதிகளை அடிமைகளாக – அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.

4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.

எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ”நீயும் நானும் சமம்” என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ”நீயும் நானும் சமம்” என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,

சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)

அடிமைகள் பற்றி திருக்குர்ஆன் இரு வசனங்கள்:.

4:36.மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

24:32.இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான .உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

//இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

அடிமைகள் பற்றிய வாதம் மட்டுமிருந்தால் இப்பதிவில் பின்னூட்டலாம் நன்றி!


சாட்சி *

கிறிஸ்தவம் 

ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம்.  உபாகமம் 17:6

இஸ்லாம் 

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (அல்குர்ஆன் 2:282)

கொலை - மாபெரும் பாதகம்

கொலை செய்ய அனுமதி உண்டா?  


சமகாலத்தில் எதற்க்கெடுத்தாலும் கொலை. 
  • வாக்குவாதத்தால் கொலை, 
  • கள்ளத்தொடர்பால் கொலை, 
  • அரசியல் கொலை, 
  • சாதி ஆணவக் கொலை, 
  • கொள்ளை அடிக்கும் பொழுது கொலை, 
  • சைக்கோவின் தொடர் கொலைகள், 
  • மத மோதல்களால் கொலை, 
  • பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கொலை, 
  • கட்சிகளுக்கு இடையிலையான பூசல்கள் காரணமாக கொலை, 
  • பதவி மோகத்தால் கொலை, 
  • பொருளாதாரத்தை அடைய கொலை 
என அடுக்கி கொண்டே போகலாம்.  

பொதுவாக ஒரு உயிரை எடுப்பதற்கு எவருக்கும் அனுமதி இல்லை, அது நரகத்தில் சேர்க்கும் மாபெரும் பாவம் என்பது அனைத்து சமயமும் கூறும் ஒற்றை செய்தி ஆகும். 

தமிழர் சமயம் 


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும் - (குறள் 321) 
 
உரைநல்வினை யாதெனின், கொல்லாமை ; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால் (என்றவாறு) இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. - (குறள் 323)

 உரை: இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (குறள் 325)

உரை: மறுமை பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எல்லாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையை ஏற்றவன் உயர்ந்தவனாவான்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (குறள் 329)

 உரை: உயிரை உடம்பிலிருந்து நிக்கியவர் (கொலைசெய்தவர்கள்) எனப்படுவர்கள் குற்றமுள்ள உடம்புடன் போகக்கூடா தீயுடன் வாழ்க்கை வாழ்வார்கள்.

இஸ்லாம்  

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி-6533)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், “பொய் கூறுவதும்‘ அல்லது “பொய்ச் சாட்சியம் சொல்வதும்‘ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். அறிவிப்பவர் அனஸ் (ரலி), (நூல்: புகாரி-6871)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகின்ற போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி-6809)

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான். (திருக்குர்ஆன்:25:68.)

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ ) அன்றி , மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் ' ' என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் . மேலும் , நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் ; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 5:32
 

கிறிஸ்தவம் & யூதம் 


“எவனாவது ஒரு கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை உண்டு. (லேவியராகமம் 24:17)

‘யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்(உபாகமம் 5:17)

 “கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திரகாமம் 20:13)

கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள் (நீதிமொழிகள் 29:10)

இயேசு அவனிடம்,, “என்னை ஏன்நல்லவர் என்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார். “எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” என்று பதில் சொன்னார். (மத்தேயு 19:17-19) 
 

யாருக்கு கொலை செய்ய அனுமதி உண்டு? 


கொலையைப் பொறுத்தவரை அடிப்படையில் மூன்று வகைப்படும்.
  • தனிமனிதன் செய்யும் கொலை, 
  • அரசு செய்யும் கொலை, 
  • யுத்தத்தில் செய்யப்படும் கொலை 
என்று வகைப்படுத்தலாம். தனிமனிதனாக கொலை செய்ய எந்த சமயமும் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் அரசின் உதவியோடு தான் அடைந்த அநியாயத்திற்க்காக நியாயம் பெரும் நோக்கில் அரசின் வழிமுறைக்கு ஏற்ப செய்யலாம். அல்லது ஒருவர் செய்த கொலை தண்டனைக்கு உரிய குற்றம் நிரூபிக்கப் படும் பட்சத்தித்தில் அரசு கொலை செய்யலாம். யுத்தத்தில் நிகழும் கொலை தொடர்பாக "யுத்தம்" என்கிற தனி தலைப்பில் பார்க்கலாம்.  
 

தமிழர் சமயம் 


நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. (குறள் 328)

உரை: நல்லதாக மாறும் பெரிய காரியம் ஆகும் என்றாலும் சான்றோர்களுக்கு கொன்றுதான் ஆகவேண்டும் என்பது வேறு வழியில்லாமல் செய்யப்படும் இறுதி செயலே

எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அனைத்து அறமும் பின்பற்றப்பட்டு ஒரு உயிர் எடுக்கப்படுவதை மேற்கண்ட குறள் அனுமதிக்கிறது. 

இஸ்லாம்  


(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால் , அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதில் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன் : 17:33)

அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:179)

கிறிஸ்தவம் & யூத மதம்


12 “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும்."
 
14 ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.

15 “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

17 “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

18 “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது. 
 
19 தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்." 
 
23 ..ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும். 
 
24 கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும், 
 
25 சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும். (யாத்திராகமம் 21) 

முடிவுரை 

கொலைக்கு கொலை அனுமதிக்கப்பட்டு இருந்தும், மன்னிப்போரை இறைவன் நேசிக்கிறான். 

கிறிஸ்தவம் 

மத்தேயு 5 பழிவாங்குதல் பற்றிய போதனை

38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்

43 ,“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும். 
 

இஸ்லாம் 


ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் ( கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனாகிய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப் படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு ( உங்களில் ) யார் வரம்பு மீறுகிறாரோ , அவருக்குக் கடுமையான வேதனையுண்டு . (அல்குர்ஆன் : 2:178) 

அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (குர்ஆன் 3:134)