குறளும் குர்ஆனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறளும் குர்ஆனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகம் கொண்டாடப்பட வேண்டிய இடமல்ல!

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள் :10)

பிறவி - பிறப்பு. இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது;

பெரும் கடல் - இந்த வாழ்க்கையின் அளவையும் அதில் உள்ள துன்பங்களையும், உவமை படுத்த பெரிய கடல் என்கிற பதம் பயன்படுத்த படுகிறது;

நீந்துவர் - நீந்துவார்கள்; வாழ்க்கை கடலில் நீந்தும் பொழுது கேளிக்கைகளுக்கும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பில்லை. 

நீந்தார் - நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; அதாவது கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு நோக்கத்தை மறைந்தவர்.

இறைவன் - தனக்கு உவமை இல்லாத ஒருவன்

அடி-தாள்; சேராதார்-சென்றடையாதார். இங்கு இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.

இஸ்லாம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். (முஸ்லிம்: 5663)

கிறிஸ்தவம்:

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். - ரோமர் 12:2

முடிவுரை:

 இவ்வுலகில் வாழக்கூடிய குறுகிய காலம் என்பது மறுமை என்னும் முடிவில்லா வாழ்க்கையில் வீடுபேறு அலல்து நரகத்தை அடைவதற்கான பரீட்சை ஆகும். எனவே இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் கடலில் நீந்துவதை போலவோ, சிறையில் இருப்பதை போலவோ தேவைகளையும் இன்பங்களையும் தவிர்த்து பயணியை போல வாழ வேண்டும். 

திருக்குறளும் திருக்குர்ஆனும்

இறைவனின் திருப்பெயரால்...

குறளும் குர்ஆனும்

முன்னுரை

இதற்குமுன் பலமுறை திருக்குறளை படித்து இருக்கிறேன், சமீபமாக இஸ்லாமிய கொள்கைகளை எனது நெறியாக நான் எடுத்துக்கொண்ட பிறகு திருக்குறளை மற்றும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது, அதிசயிக்க நேர்ந்தது.

ஆம் குறளின் கடவுள் கொள்கைக்கும் குரானின் கடவுள் கொள்கைக்கும் அணு அளவோ அதைவிட சிறிய அளவோ வேறுபாடு இல்லை.

எனவே இரண்டையும் ஒப்பிடு பார்க்க நினைத்தோம். இதைப்பற்றி புத்தகங்கள் ஏதும் வந்துள்ளதா என்று இணயத்தளத்தில் துழவும்பொழுது முருகன் என்பவர் எழுதிய புத்தகம் கண்ணில் பட்டது. ஆனால் அவர் முஸ்லிம் அல்லாதவர் என்பதால் இஸ்லாத்தை பற்றிய புரிதல் எந்த அளவு இருக்குமோ என்ற அச்சத்தினால் அதனை வாசிக்கும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் தமிழக முதல்அமைச்சராக திரு மு.கருணாநிதி அவர்கள் இருந்தபொழுது இந்த தலைப்பிலான ஆராய்ச்சிக்கு நிதி ஒதிக்கியதாக படித்தேன், அவற்றின் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிவந்ததாக என் அறிவுக்கு புலப்படவில்லை.

எனவே ஒப்பீடு செய்து படிக்க நாமே தொடங்கிவிட்டோம். மேலும் இரண்டு காரணங்களுக்காக நான் கற்பதை தொடராக பதிவிட முடிவு செய்து உள்ளேன், ஒன்று செய்தி பரிமாற்றதிக்காக, இரண்டு என் புரிதல் தவறாக இருந்தால் தெரிந்தவர்கள், அறிஞர்பெருமக்கள் தெளிவுபடுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்.

முன்னால் முதல் அமைச்சர் கலஞர் அவர்கள் நிதி ஒதுக்கிய செய்தியின் பினூட்டத்தில் "நிச்சயமாக இது சரியான மோசடி வேலையாகத்தான் இருக்க வேண்டும். எந்த முகமதியனும் குரானை விட்டுக் கொடுக்கமாட்டான். ஆகவே இப்படி போலித்தனமாக “திருக்குறளும், திருக்குர்ஆனும்”, ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) பணம் வேறு கொடுப்பது என்ன நியாயம்?", யார் பணத்த ஆருக்கு செலவழிக்குது இந்த அரசு போன்றவைகள் இடம் பெற்று இருந்தது.

அவர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை பல உள்ளது,
1) இஸ்லாத்தை ஏற்காதவரை நாமும் அவர்களில் ஒருவராக இருந்தோம்,
2) நாமும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துள்ளோம்,
3) தமிழர்களுக்கு பிரச்னை என்ற பொழுது நாமும் மொழிப்பற்றொடு போராட்டங்களில் கலந்துகொண்டோம்,
4) நாமும் வரி கட்டுகிறோம்,
5) நாமும் இந்த சமுதாய வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளோம்,
6) நம்மால் அந்நிய செலவாணி பல ஆயிரம் கோடி நாம் நாட்டிற்கு இலாபம் எய்தி தருகிறோம்,
7) வட்டி-யை வாங்காததால் பெறப்படாத பணம் 75-ஆயிரம் கோடிக்கு மேல் RBI-கு லாபம், என எண்ணிலடங்கா சேவைகள் தமிழுக்கும் இந்தியாவுக்கும் எங்களால் தொடரும்..

குறளும் குர்ஆனும் 001


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. குறள் - 01:01

விளக்கம்: அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)

மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்குர்ஆன் : 01:01

விளக்கம் : உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மயான அதாவது படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

குறிப்பு : ஆதிபகவனே வணங்க தகுதியானவன் மேலும் அவனது குணங்களாக திருக்குறளில் குறிப்பிடுவதும் அல்லாஹ்வின் குணங்களாக இஸ்லாத்தில் குறிப்பிடுவதும் ஒரு வார்த்தையை இரு மொழிகளில் எழுதியது போல் உள்ளது. மேலும் விரிவான பதிவுக்கு குரல் 9-ஐ வாசிக்கவும்

குறளும் குர்ஆனும் 002


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்குறள் - 01:02

விளக்கம்: நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது" குர்ஆன் : 30:56-57

விளக்கம் கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்

குறளும் குர்ஆனும் 003


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - குறள் - 01:03 

விளக்கம் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்த நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன். குர்ஆன் : 2:207
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! - குர்ஆன் 3:136.

விளக்கம் இறைவனின் பொருத்தத்தை நாடி உயிரைக்கூட விட துணிந்தவர், இறைவனின் கருணையால் சுவர்கத்தில் நிலைத்து வாழ்வார்.


குறளும் குர்ஆனும் 004


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - குறள் - 01:04

விளக்கம் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறுவீராக. - குர்ஆன் : 27:40.

விளக்கம் : எந்த தேவைகளுமற்ற இறைவனை பொருந்த எண்ணி நன்றி செலுத்துபவர் அவருக்கு அவரே நன்மை செய்துக்கொள்கிறார் எனவே அவருக்கு எப்பொழுதும் எங்கும் அவருக்கு துன்பம் இல்லை.

குறளும் குர்ஆனும் 005


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - குறள் - 01:05

விளக்கம் : இறைவனுடைய கீர்த்தியை விரும்பி அருஞ்செயல் புரிந்தவருக்கு, துனபம் சேர்க்ககூடிய இருவினைகளும் சேராது.

"... எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே (அறஞ்செயல்களே) மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்". - குர்ஆன் : 30:38
- "...அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்". -  & 2:262.

விளக்கம் : எவர்கள் அல்லாஹ்வுடைய கீர்த்தியை விரும்புகின்றார்களோ அவர்கள் புரிவதற்கு அறஞ்செயல்கள் மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள், அவர்களை துன்பம் தீண்டாது.

குறளும் குர்ஆனும் 006


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - குறள் - 01:06.

விளக்கம் : மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
 
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். - குர்ஆன் : 91:7-10

விளக்கம் : நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.

குறளும் குர்ஆனும் 007


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் - 01:07.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.. - குர்ஆன் : 10:25 & 26

விளக்கம் : இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கவலை சூழ்ந்து கொள்ளாது.

குறளும் குர்ஆனும் 008


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - குறள் - 01:08

விளக்கம் : அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.

குறிப்பு : அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்

"இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .." குர்ஆன் 4:139.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்." குர்ஆன் 3:102.
"இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை" - குர்ஆன் 3:185.

விளக்கம் : முஸ்லிம்களையே நண்பர்களாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு வழிபட்டவர்களாக முஸ்லிம்களாகவே மரணியுங்கள். இல்லயேல் மயக்கும் இவுலக வாழ்க்கையை கடப்பது கடினமாகும்

குறிப்பு : இங்கு முஸ்லிம் என்பது சாதியல்ல, பிறப்பால் முஸ்லிமாக இருந்தும் பாழிப்பாவத்திற்கு அஞ்சாது இறைவனின் கட்டளையான அறத்தை பேணாது இருக்கும் முஸ்லிம்கள் இதில் அடக்கம் இல்லை. அந்தணன் முஸ்லிம் இரண்டுமே படைத்த உவமையற்ற ஒரே இறைவனுக்கு அடிபணிந்தவன் என்னும் ஒரே பொருள் தரக்கூடியது.

குறளும் குர்ஆனும் 009


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - குறள் - 01:09

விளக்கம் : குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - குர்ஆன் - 2:171
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - குர்ஆன் 22:77

விளக்கம் : இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.

குறிப்பு : * கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
எண்குணத்தோன் என்பதற்கு பரிமேலழகர் போன்ற சமணர் ஒருவகையிலும் பாரதி ஒருவகையிலும் பொருள் தந்து உள்ளனர் மேலும் பலரும் பலவகை பொருள் தருகின்றனர்.. "எண்குணத்தோன்" என்ற சொல்லுக்கு விளக்கம் தருபவர்களை விட வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டிர்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.  

1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).

 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்) 

குறளும் குர்ஆனும் 010


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - குறள் - 01:10

 விளக்கம் : பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.

(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.).. குர்ஆன் - 13:24.

விளக்கம் : இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை. -