இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தூய்மையான உள்ளம்


தமிழர் மறை 


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற - குறள் 034

சி இலக்குவனார் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும். உள்ளத்தில் குற்றம் உடையவனாய்ச் சொல்லுகின்ற நற்சொல்லும் செய்கின்ற நற்செயலும் ஆரவாரத்தின் பாற்பட்டன.

உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம்
 
ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல்கழல் நாய் அன்னது உடைத்து. - (அறநெறிச்சாரம் பாடல் - 137)

விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.

சான்றோரைத் துணையாய்க் கொள்ளல்

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்டுத்திக்
கள்ளப் புலன்ஐந்தும் காப்புஅமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித் துணைபெற்றக் கால்.- (அறநெறிச்சாரம் பாடல் - 138)

விளக்கவுரை சிறந்த குணம் உடையவரை ஒருவர் தமக்குத் துணையாகப் பெறுவாராயின், அவர் தம் மனம் என்னும் சிறந்த குதிரை மீது ஏறி அதைத் தம் வசப்படுத்தி, தம்மை வஞ்சிக்கும் ஐம்புலன்களையும் புறத்தே செல்லாது தடுத்து, 'வெள்ளம்' என்னும் பேரெண்ணின் அளவையுடைய கடந்து வீடு பேற்றினைப் பெறுவர்.

உள்ளத்தை அடக்கி ஆளல்

பரிந்துஎனக்குஓர் நன்மை பயப்பாய்போல் நெஞ்சே!
அரிந்துஎன்னை ஆற்றவும் தின்னல் - புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ.- (அறநெறிச்சாரம் பாடல் - 139)

விளக்கவுரை உள்ளமே! எனக்கு ஒரு நன்மையைச் செய்வதைப் போன்று காட்டி, என்னை மிகவும் அரிந்து தின்னாதே! நீ விரும்பி அடைய நினைப்பவற்றை நான் விரும்பிச் செய்வேன் அல்லேன். பற்று விடுதலை நான் மேற்கொண்டேன்; பேதையே, அப்பாற்போ!

மனம் அடங்கினால் பல நன்மை உண்டாகும்

தன்னைத்தன் நெஞ்சம் கா¢யாகத் தான்அடங்கின்
பின்னைத்தான் எய்தா நலன்இல்லை - தன்னைக்
குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.- அறநெறிச்சாரம் பாடல் - 140

விளக்கவுரை ஒருவன் தன் செயல்களுக்குத் தனது மனத்தையே சான்றாக வைத்துத் தான் அடங்கப் பெற்றான் என்றால், பின்பு, அவன் அடைய முடியாத இன்பம் ஒன்றும் இல்லை தன்னைப் பிறந்த குடியுடன் கெடுக்கின்ற தீய மனத்தினுக்குத் தொண்டு செய்து நடத்தல், பார்வை விலங்காக நிறுத்தப்பட்ட பெண் யானையை விரும்பிக் குழியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல், எப்போதும் வருந்துதற்குக் குறியதாகும்.

உள்ளத்தே உயர்வே உயர்வு

உள்ளூர் இருந்தும்தம் உள்ளம்அறப் பெற்றாரேல்
கள்அவிழ் சோலையாம் காட்டுஉளர் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூர் உளார்.- அறநெறிச்சாரம் பாடல் - 141

 விளக்கவுரை இல்வாழ்வை மேற்கொண்டு ஊரினுள் வாழ்ந்தாலும் தம் மனம் அடங்கப் பெறுவாரானால் அவர், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டில் வாழும் துறவியே ஆவார். துறவற வாழ்வை மேற்கொண்டு, காட்டில் வாழ்கின்றவராயினும் மனம் அடங்கப் பெறார் என்றால், அவர், நாட்டில் உள்ள மனை வாழ்க்கையை அடைந்து தீய செயலைப் பொருந்தி வாழ்கின்ற கயவர் ஆவார்.

மனத்தை அடக்குவார் அடையும் பெரும் பயன்

நின்னை அறப்பெறு கிற்கிலேன் நல்நெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பனேல் பெற்றேன்மற்று ஈண்டே
துறக்கம் திறப்பதுஓர் தாழ்.- அறநெறிச்சாரம் பாடல் - 142

விளக்கவுரை என் நல்ல நெஞ்சமே! உன்னை என் வயமாக்கிக்கொள்ள இயலாதவனாய் உள்ளேன்; இனி யான், யாரை என் வயமாக்கிக் கொள்வேன்? உன்னை என் வயமாக்கிக் கொள்வேன் ஆயின், சொர்க்க உலகினைத் திறப்பதான நிகரற்ற திறவு கோலை, நான் பெற்றவன் ஆவேன்.


இஸ்லாம் 


அல்லாஹ்விடம் தூய உள்ளத் துடன் வருவதைத் தவிர செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது. - அல்குர்ஆன்  26:88

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி 001

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (அறிவித்தார். நூல். முஸ்லிம் 5011)

உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒரு சதை துண்டு அது சீராகிவிட்டால் எல்லாம் சீராகிவிடும். அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும் என்று கூறி அந்த சதை துண்டு தான் கல்பு என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி : 50)

ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப்  புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (குர்ஆன் 91: 7-10)

ஒரு சஹாபி வருகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? பாவத்தை எப்படி நான் புரிந்து கொள்வது? இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு நீண்ட பட்டியலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வாழ்நாள் எல்லாம் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒரு அளவுகோலை தனது கண்ணுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தனது மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர்கள் மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவருக்கு ஒரு அளவை கொடுத்தார்கள். உன்னுடைய உள்ளத்தில் எது உனக்கு உறுத்தலை ஏற்படுகின்றதோ, உள்ளத்தை குறை கூறுகின்றதோ, இதை நீ செய்கிறாயே செய்யலாமா? உன்னுடைய உள்ளத்தை எது உறுத்துகிறதோ குத்துகிறதோ அது பாவம் விட்டுவிடு என்று சொன்னார்கள் - அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், எண்: 4632

அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒருபயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன்26 : 88,89)

துஆ  

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)

“இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)

“மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)


கிறிஸ்தவம் 


மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். 1 தீமோத்தேயு 1:5

எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. - எபிரெயர் 12:14   

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார். - நீதிமொழிகள் 17:3

ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும். நீதிமொழிகள் 27:19