வரி

இன்றைய இந்திய அரசாங்கம் பல்வேறு வகையிலான வரிகளை வானளாவிய அளவில் விதித்து வருகிறது. எனவே வரி பற்றி சமயங்கள் என்ன சொல்கிறது என்று ஆராய துவங்கி உள்ளோம். 
தமிழர் சமயம் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (குறள்: கொடுங்கோன்மை - 552)  
 
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. —மு. வரதராசன்


முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். —மு. வரதராசன் 
 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. (புறநானூறு 184)

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாகும் நெல் அதிகமாகும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக. 
 
 “குடி புரவு இரக்கும் கூதிலாண்மைச் சிறியோன்” - புறநானூறு 75  
 
என மன்னன் சோழன் நலங்கிள்ளி இந்த பாடலில் ஏளனவரிகளை விதித்தவனாகச் குறிப்பிடபப்ட்டு இகழப் படுகிறான். 

சங்க காலத்தில் ஆறில் ஒரு பகுதி தான் வரி இருந்தது என்று ஒரு தி ஹிந்து கட்டுரை கூறுகிறது.  


இந்துமதம் 


ராமாயணம் ஆறில் ஒரு பங்கு அதாவது 16.6% க்கு மேல் வரி விதிப்பது அதர்மம் என்கிறது.

அர்த்தசாஸ்திரத்தின்படி வைசியர்கள் அதாவது வியாபாரிகள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்

யூதம் 

ஒரு யூதர் அனைத்து நிகர லாபத்தில் பத்தில் ஒரு பங்கை (10%) தொண்டுக்கு கொடுக்கிறார். - Chabad.org  

கிறிஸ்தவம் 

23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் (10%) கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள் (மத்தேயு 23:23-24)

இன்றும் கிறிஸ்தவ நாடுகளில் சர்ச் வரி என்று 0.7% இலிருந்து 2% வரை வசூலிக்கப்படுகிறது .  

ஆனால் அக்காலத்தில் ரோமானிய அரசாங்கம் அதன் குடிமக்கள் மீது மிகப்பெரிய வரிச்சுமையை சுமத்தியது. இஸ்ரவேல் ஜனங்களும் சர்ச்கும் அரசுக்கும் தனித்தனியே வரி செலுத்த வேண்டியிருந்தது.  இயேசு கிறிஸ்து தனது வரிகளை முழுவதுமாக செலுத்தினார் மற்றும் ரோமானியர்களின் ஊழல் அமைப்பின் கீழும் அவ்வாறு செய்வது தான்  சரியானது என்று கற்பித்தார் - தி அசவுண்டிங் ஹிஸ்ட்ரியன் ஜெர்னல்

இஸ்லாம் 

 மழை, மற்றும் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ந்து விளைந்த பொருளாக இருக்குமானால், அதற்கு 10% ஜகாத் கொடுக்க வேண்டும். செலவு செய்து நீர் பாய்ச்சி விளைந்ததாக இருக்குமானால் அதற்கு 5% ஜகாத் கொடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் இவ்வேறுபாடு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை அதாவது, அன்பளிப்பு, வாரிசுரிமை போன்ற சிரமம் அற்ற வழிமுறைகளில் செல்வம் கிடைத்திருக்குமானால், அதற்கு கூடுதல் சதவிகிதமும், சிரமத்தோடு தொழில் செய்து பொருளீட்டியிருந்தால் அதற்கு குறைவான சதவிகிதம் வழங்கவேண்டும் என யாரும் கூற மாட்டார்கள்.

எல்லா நிலையிலும் பொருளாதாரத்திற்கான ஜகாத்தின் சதவிகிதம் 2.5 சதவீதமாகவே உள்ளது. - இஸ்லாம் கல்வி 

இஸ்லாத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான  ஜிஸியா வரி கூட 10% தான் உள்ளது. அது அவர்கள் நாட்டில் செலுத்தும் அதே 10% தான் இஸ்லாமிய ஆட்சியின் கீழும் செலுத்துகிறார்செலுத்தினார்கள். 

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) - (நூல் : புகாரி 7144)

முடிவுரை

எந்த சமயத்தை பின்பற்றும் அரசும் 10 முதல் 16.6% வரை மட்டுமே வரி விதித்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு வரி இல்லை என்றும், செல்வந்தர்களுக்கு 16.6% (அதிகப்படியாக) என்றும் உள்து. மேலும் மறைமுக வரிகளும் பெரும்பாலும் இல்லை என்று கூறலாம்.  

இன்றைய இந்திய அரசு ஒரு சாமானியனுக்கு 30% வரை நேரடி வரி விதிக்கிறது ஆனால் ஒரு வியாபாரிக்கு கடனையும் கொடுத்து அதை தள்ளுபடியும் செய்கிறது. ஒரு ஏழை தான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 5% முதல் 28% வரை மறைமுக வரி விதிக்கிறது. சராசரியாக ஒரு நடுத்தர வர்க்க இந்தியன் 50%  வரை வரி செலுத்தும் நிலை உள்ளது. இதன் மூலம் தான் ஒரு கொடுங்கோன்மை அரசு என்று ஆளும் கட்சி நிறுவுகிறது. 

உலகில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் 2% வரி செலுத்தினாலே உலகில் உள்ள வறுமை போய்விடும் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி இருக்க இந்தியாவில் ஒரு தனி நபர் ஏறக்குறைய 50% வரி செலுத்தியும் இந்தியாவில் வறுமை ஒழியாதது ஏன்?


 

4 கருத்துகள்:

  1. 2 நாளாகமம் 31:5 (NIV)
    “உத்தரவு போனவுடனே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய தானியங்கள், புது திராட்சரசம், ஒலிவ எண்ணெய், தேன் மற்றும் வயல்களில் விளைந்த எல்லாவற்றின் முதற்பலனையும் தாராளமாகக் கொடுத்தார்கள். அவர்கள் ஒரு பெரிய தொகையைக் கொண்டு வந்தார்கள், எல்லாவற்றிலும் தசமபாகம்."

    பதிலளிநீக்கு
  2. லேவியராகமம் 27:30 (NIV)
    “நிலத்தில் உள்ள தானியங்கள், மரங்களிலிருந்து கிடைக்கும் தானியங்கள் என எல்லாவற்றிலும் தசமபாகம் கர்த்தருடையது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் செல்வங்களாலும், உங்கள் பயிர்களின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள்.

    — நீதிமொழிகள் 3:9, NIV

    பதிலளிநீக்கு
  4. “நிலத்தின் விதையாக இருந்தாலும், மரங்களின் கனியாக இருந்தாலும், நிலத்தின் ஒவ்வொரு தசமபாகம் கர்த்தருடையது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது."
    — லேவியராகமம் 27:30,

    பதிலளிநீக்கு