இந்து மதத்திலும் மற்ற மதங்களைப் போன்று தன் கடவுளைத் தொழவில்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனும் கோட்பாடு ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் அதை ஓதி உணர்ந்தவர் குறைவு. சமய நெறிகளை பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தான் இன்று இந்து மதம் உள்ளது. வேதம் தான் அனைத்துக்கும் ஆதாரம். நமது ஈருலக வாழ்ககைக்கு தேவையான வழிகாட்டுதல் மறைநூல் அல்லாமல் வேறொன்றி தேடுவது பிழை.

நாம் தமிழர்களாக இருப்பதால், தமிழரின் சைவ சமய வேத ஆதாரங்களை பார்ப்போம். நமக்கு சம்ஸ்கிருத சனாதன சமய ஆதாரம் தேவை இல்லை. இவ்விரண்டும் வேறு வேறு என்கிற அறிவு பலருக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1) உடல் மற்றும் உயிர் சேர்ந்த உருவம் இறைவனை தொழவில்லை என்றால் அது ஏழாவது நரகில் அழுந்தும்.

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)

பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வணங்காமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர். 
 
2) தனது சமய சின்னங்களை மட்டும் அணிந்து அது கூறிய அறத்தை பின்பற்றாதவர்களை தெய்வம் மறுமையில் தண்டிக்கும், இங்கே தண்டிப்பது அரசனின் கடமை

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

3) நெறிதவற துன்பம் நேரும்

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

முடிவுரை

எனவே வணங்காது இருந்தாலும் அவனை வழிபாடாது இருந்தாலும் அதாவது அவன் வேதத்தில் சொன்ன அறத்தை பின்பற்றாது இருந்தாலும் தண்டனை இம்மையிலும் மருண்மையும் உண்டு.

நாம் அறியவேண்டிய உண்மை என்னவென்றால், உலகம் ஒன்று, அதை படைத்த்ட்ட இறைவன் ஒன்று, அனைத்து வேதங்களையும் தந்தவன் ஒன்று. அப்படி இருக்க அதன் போதனைகள் மட்டும் எப்படிவேறுபடும்?

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், கடவுளை வழிபடுவது என்றால், நமது விருப்பத்துக்கு வணங்க வழிபட முடியாது. அது கடவுள் விரும்பியாடிதான் அமையவேண்டும். அதற்கு நாம் சைவ சமய வேதத்தை வாசிக்க வேண்டும். ஆனால் இன்று அதற்கு உள்ள சாத்தியகூறுகளை சிந்திக்கவேண்டி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக