அறமும் ஆன்மீகமும் முதுமையிலா? இளமையிலா?

தமிழர் சமயம்  


அறநெறிச்சாரம்  

இளமைப் பருவத்தில் அறம் செய்க

இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக,
வன்சொல் களைகட்டு, வாய்மை எருஅட்டி,
அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். (அறநெறிச்சாரம் பாடல் - 16)

விளக்கவுரை: இனிமையான சொல்லே விளை நிலமாகவும் ஈகையே விதையாகவும் கடுஞ்சொல்லான களையைப் பிடுங்கி, உண்மையான எருவினை இட்டு, அன்பு என்னும் நீரைப் பாய்ச்சி அறம் என்ற கதிரை ஈனுவதாகிய ஒப்பில்லாத பசுமையான பயிரை, இளம் பருவத்திலேயே மனமே, செய்வாயாக.

இளமையில் அறம் செய்தலின் இன்றியமையாமை

காலைச் செய் வோம்என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு. (பாடல் - 17)

விளக்கவுரை: தருமத்தை இளமையிலேயே செய்வோம் என எண்ணி உறுதியாகக்கொண்டு மிக செய்பவரே சிறந்தவர் ஆவர். இரவில் படுத்தவள் காலைப் போதில் விழித்து எழுவது அருமை. (அங்ஙனமிருக்கவும்) தருமத்தை இளமையிலேயே செய்யாதிருத்தல் என்ன காரணமோ! 

இளமையில் அறம் செய்யாமையால் ஏற்படும் இழிவு

சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வுஅரிது - என்று ஒருவன்
நன்மை புரியும் நாள்உலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். (பாடல் - 18)

விளக்கவுரை : ஆயுளில் கழிந்த நாட்கள் எல்லாவற்றையும் சிறு விரல்களால் எண்ணிக் கணக்கிட்டு விடலாம். இனி இருக்கும் நாட்களை எத்தகையவர்க்கும் இத்தனை என்று அளவிட்டு அறிய இயலாது என எண்ணி, ஒருவன் நல்வினையை விரைவாகச் செய்யாது ஆயுள் நாள் வீணே கழியும்படி விட்டிருப்பதால் ஏற்படும் துன்பம் பின்னர் மிகும். 


நாலடியார்

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல் (நாலடியார் - 2. இளமை நிலையாமை 16)

விளக்கவுரைவெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவாரிடத்து இல்லை!

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல். - (நாலடியார் 52)

விளக்கவுரைவாழ்வில் எதுவும் நிலை இல்லாதது, நோய் வரும், முதுமை வரும், சாவு வரும் என்று எண்ணிக்கொண்டு தலைமைப் பண்பு உள்ளவர்கள் தம் செய்யவேண்டிய அறச்செயலை செய்வர். இடையறாமல் குறியும் சோதிடமும் பார்த்துப் பிதற்றிக்கொண்டு பேதையர் வாழ்வர். இவர்களைப் போலப் பித்தர் வேறு யாரும் இல்லை. 

 

திருமந்திரம்

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. - (1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை: 3)

பொழிப்புரை: சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே நந்தியின் போதனையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. - (பாடல் எண் : 5)

பொழிப்புரை: ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற இறைவனின் திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. - (பாடல் எண் : 9)

பொழிப்புரை : பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. - (பாடல் எண் : 10)

பொழிப்புரை: வரையறுக்கப்பட்ட இளமை கழிவதன் முன் உள்ளநாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது ஏத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர். இதனைப் பொருந்திய நாள்களில் இருந்து கண்டேன் என்க. கண்டேன்: நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன். 
 

வளையாபதி : இளமை நிலையாமை 2 - கலிவிருத்தம்

கலிவிருத்தம் (கருவிளம் காய் கூவிளம் கூவிளங்காய்)

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றவல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். வளையாபதி 41 

பொருளுரை: இன்பம் நுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராமல் நீரில் குமிழி போல அழிந்து போகும். நுகரும் இன்பங்களும் நிலைத்து நிற்கும் இயல்புடையன அல்ல. அதே போல, அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பன அல்ல. அவ்வின்பம் நிலையாததோடு வாழ்க்கையில் நாள்தோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன. ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நமக்கு இருக்கிறதென்று கர்வம் கொள்ளாமல், விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மக்கள் வரும் எதிர் ஆண்டிற்கு அவ்விளைச்சலில் இருந்து விதைநெல் சேமித்துக் கொள்வது போல, நீங்களும் நாள்தோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக அறமாகிய வித்தினை நாட்களை வீணாக்காமல் செய்துகொள்ளக் கடவீர் எனப்படுகிறது.

 விளக்கம்: நீங்கள் இளமை முதலியன அழிந்துவிடும் என்பதை உணர்ந்து, இளமை முதலியவற்றால் மகிழ்ந்து சும்மா இருந்து விடாமல் இப்பொழுதே அறம் முதலியன செய்து இறைவன் திருவடியைச் சேர்ந்து சுவர்க்கம் அடைவதற்கு ஆக்கம் செய்து கொள்ளுங்கள்.

புறநானூறு 

 

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு             5
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை         10
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே? - (புறநானூறு 243. யாண்டு உண்டுகொல்)

பொருள்: திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

விளக்கம்:  அப்போது இருக்கமான மணலில் பாவை செய்து அதற்குப் பூக்களைக் கோத்துவிட்டு விளையாடிய மகளிர் குளத்தில் நீராடும்போது அவர்களோடு கை கோத்துக்கொண்டும், தழுவிக்கொண்டும், ஒருவர்மீது ஒருவர் தொங்கிக்கொண்டும், ஒளிவு மறைவு இல்லாமல், கள்ளம்-கபடம் இல்லாமல் விளையாடியதும், மகளிரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அத் துறையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மருதமரத்தில் நீரோரமாகச் சாய்ந்திருந்த கிளையில் ஏறி, கரையில் உள்ளவர் மருளும்படியும், நீரலை பெரிதாகிக் கரையில் பிதிரும்படியும், விரிவான, ஆழமான குட்டையில் ‘துடும்’ என்னும் ஓசை உண்டாகும்படி நீரில் பாய்ந்து, மூழ்கி, ஆழத்திலிருந்த மண்ணை எடுத்துக்கொண்டு மேலே வந்து, கள்ளம்-கபடம் இல்லாத (கல்லா) இளமையானது இப்போது எங்கே போய்விட்டது? அந்தோ! அந்த இளமை இரங்கத் தக்கது. இப்போது தலையில் வளையல்-பூண் கட்டிய தடியை ஊன்றிக்கொண்டு தலையும் உடலும் நடுங்க, தொடர்ந்து பேசமுடியாமல் இடையிடையே சிற்சில சொற்களைப் கொண்டு, பெருமூதாளராக (தொடுதொடு கிழவராக) இருக்கும் என்னிடம் அன்று இருந்த அந்த இளமை எங்கே இருக்கிறது? இன்று என் இளமை செத்துவிட்டது. ஒருநாள், நானும் …!   

பழமொழி நானூறு - தருமம் செய்யுங்கள்

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'. - 6

பொருள்: தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

இஸ்லாம் 


உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(வ), அம்ர் இப்னு மைமூன்(வ) நூல்: நஸாஈ 11832, ஹாகிம் 7846)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன் அரிய வாய்ப்புக்களாய்க் கருதுவீராக!
1. நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையயும்,
2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும்,
3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும்,
4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும்,
5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும்
நீர் அரிய வாய்ப்புக்களாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக!” (ஹாகிம்: 7846, நஸாயீ: 11832)

 இளைமை பருவத்தை வணக்கத்தை அல்லாஹ்வுக்காக கழித்த மனிதர்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்.உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ - (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-660)

கிறிஸ்தவம் 


ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான் - நீதிமொழிகள் 22:6

 இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். (பிரசங்கி 11:9)

நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை. பிரசங்கி 12:1

“யூதா, நீ பாதுகாப்பை உணர்ந்தாய். ஆனால் நான் உன்னை எச்சரித்தேன்! ஆனால் நீ கேட்க மறுத்தாய். நீ இவ்வாறு உனது இளமைகாலம் முதல் வாழ்ந்திருக்கிறாய். உனது இளமை காலத்திலிருந்து நீ எனக்கு கீழ்ப்படியவில்லை. யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும். அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும். சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய். ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும். பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய். நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய். - எரேமியா 22:21&22

என் இளமையின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினைவில் கொள்ளாதே; கர்த்தாவே, உமது கருணையின்படி உமது நன்மைக்காக என்னை நினைவில் வையுங்கள். சங்கீதம் 25: 7 

7 கருத்துகள்:

  1. நாலடியார் - 2. இளமை நிலையாமை

    நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
    குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
    மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
    இன்னாங் கெழுந்தீருப் பார். 11

    விளக்கவுரை: நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.

    நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
    அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
    வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
    ஆழ்கலத் தன்ன கலி. 12

    விளக்கவுரை: நட்பாகிய கயிறுகள் அற்றுப் போயின; பெண்களும் அன்பில் குறைந்தனர்; சுற்றத்தாரின் அன்பாகிய கயிறும் அவிழ்ந்து வீழ்ந்தது; மனத்திலே யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி உயிரோடு இருப்பதில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இல்லை.

    சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
    பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
    காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
    ஏம நெறிபடரும் ஆறு. 13

    விளக்கவுரை: பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பொரிதும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் போரின்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

    தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
    வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
    மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
    அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. 14

    விளக்கவுரை: முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும். (இந்தக் கிழவி இளமையோடிருந்தபோது, இவள் மீது ஆசை உண்டாகியிருக்கும் என்றதனால், இப்போது இளமையோடிருப்பவர், நாளை முதுமையடைந்து வெறுக்கத்தக்க நிலையடைவர் என்பது உணர்த்தப்பட்டது.)

    எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
    தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
    ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
    ஏகும் அளித்திவ் வுலகு. 15

    விளக்கவுரை: எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டு விட்டுத் தனக்கொரு தாயைத் தேடிப் போனாள். (இறந்துவிட்டாள்) அப்படிப் போன என் தாய்க்குத் தாயாக இருந்த என் பாட்டியும், தனக்கொரு தாயைத் தேடிச் சென்றாள். இத் தன்மையாய் இந்த உலகம் ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டு செல்லும் எளிமை உடையது! (எத்தகைய இளமை அழகுடையோரும் இறந்துபடுவர் என்பது கருத்து)

    பதிலளிநீக்கு

  2. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
    முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
    மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
    அறிவுடை யாளர்கண் இல். 16

    விளக்கவுரை: வெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவா¢டத்து இல்லை!

    பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
    வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
    கோல்கண்ண ளாகும் குனிந்து. 17

    விளக்கவுரை: இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.)

    பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
    இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
    உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
    எண்ணார் அறிவுடை யார். 18

    விளக்கவுரை: வயது எத்தனை ஆயிற்று? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்கிறதா? இரு புறங்களிலும் மென்று தின்ன முடிகிறதா?' என்று வயதானவர் நிலையைக் கேட்டறிவதால், அறிவுடையோர், இளமையின் உடல் வலிமையை நிலையானது என்று கருதமாட்டார்கள்.

    மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
    முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு. 19

    விளக்கவுரை: நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு. (பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து)

    ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
    தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
    பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
    கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 20

    விளக்கவுரை: ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது!

    பதிலளிநீக்கு
  3. திருமந்திரம்: 1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை

    கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
    விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே. - பாடல் எண் : 1
    பொழிப்புரை: நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

    ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
    பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
    நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
    தூண்டு விளக்கின் சுடரறி யாரே. - பாடல் எண் : 2

    பொழிப்புரை : மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

    தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
    ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
    பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
    ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. - பாடல் எண் : 3

    பொழிப்புரை: சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவ பெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

    விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
    கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
    அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
    கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. - பாடல் எண் : 4

    பொழிப்புரை: முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.

    பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
    காலங் கழிவன கண்டும் அறிகிலார்
    ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
    மேலுங் கிடந்து விரும்புவன் நானே. - பாடல் எண் : 5

    பொழிப்புரை: ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

    பதிலளிநீக்கு
  4. திருமந்திரம்: 1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை

    காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
    மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
    சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
    ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. - பாடல் எண் : 6

    பொழிப்புரை :நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.

    பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
    பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
    பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
    பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. - பாடல் எண் : 7

    பொழிப்புரை: நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.

    கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
    உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
    விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
    எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. - பாடல் எண் : 8

    பொழிப்புரை : திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபது யாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.

    ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
    நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
    கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
    சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. - பாடல் எண் : 9

    பொழிப்புரை : பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

    எய்திய நாளில் இளமை கழியாமை
    எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
    எய்திய நாளில் எறிவ தறியாமல்
    எய்திய நாளில் இருந்துகண் டேனே. - பாடல் எண் : 10

    பொழிப்புரை : மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக் கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை
    சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்
    செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும்
    குறுகார், அறிவுடையார். திரிகடுகம் 14


    இளமையில் தவறு செய்வது இயல்பு என்றாலும் தவறாகும். அறிவுடையோரால் விலக்கப்பட்டதைச் சொல்லுதல் அறியாமை. எப்போதும் சினத்தோடு நிற்றல் ஈனத்தன்மையாகும். இவற்றைக் கொண்டவரிடம் அறிவுடையார் நட்பு கொள்ளமாட்டார்.
    http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_3.html

    பதிலளிநீக்கு
  6. தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல்
    தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது;
    அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்,
    நிழற்கண் முயிறு, ஆய்விடும். சிறுபஞ்ச மூலம் 96

    அழல் - நெருப்பு
    முயிறு - செவ்வெறும்பு

    இளையவன் தவஞ் செய்தல் நல்லது. செல்வமுடையோன் விரதம் இருத்தல் நல்லது. கற்புடைய பெண்ணின் வனப்பு நல்லது. குளிர்ந்திருக்கும் தோள்களையுடைய மனைவி அறிவில்லாது இருந்தால் மிகுதியான துன்பத்தைத் தருவாள்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  7. நல்வழி வெண்பா : 39

    முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
    முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
    தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
    கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
    முலையளவே ஆகுமாம் மூப்பு.

    விளக்கம்
    ஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.

    பதிலளிநீக்கு