குறித்த நேரம் வந்துவிட்டால் *

தமிழர் சமயம் 


இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - (நாலடியார், செல்வம் நிலையாமை 6)

கருத்து: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

(பொ-ள்.) இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

இஸ்லாம்  


ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும்.’ (ஆலுஇம்ரான்: 185)

மேலும் கூறுகின்றான்: ‘நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’ (அந்நிஸா: 78)

மேலும் கூறுகின்றான்: ‘(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எந்த மரணத்தை விட்டும் நீங்கள் விரண்டோடிச் செல்கின்றீர்களோ அம்மரணம் உங்களைச் சந்தித்தேயாகும்.’ (அல்ஜுமுஆ: 08)

2 கருத்துகள்:

  1. 228. எய்திய நாளில் இளமை கழியாமை
    எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
    எய்திய நாளில் எறிவ தறியாமல்
    எய்திய நாளில் இருந்துகண் டேனே.

    (ப. இ.) வினைக்கீடாக வரையறுக்கப்பட்ட இளமை கழிவதன் முன் உள்ளநாட்களில் பொருள்சேர் புகழால் திருமுறைவழி இடையறாது ஏத்துங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட நாள்களில் அருள் துணையால் மாசறுத்துத் தூயராய் இறை நினைவுடன் வாழுதல் வேண்டும். இங்ஙனம் ஒழுகாமல் மனம்போல் ஒழுகி வழுக்குற்று இழுக்கடைவாரும் பலர். இதனைப் பொருந்திய நாள்களில் இருந்து கண்டேன் என்க. கண்டேன்: நன்றாற்றுதலாகிய நல்லறஞ் செய்யாது இளமை சிலர்க்குப் பயன் இன்றிக் கழியக் கண்டேன்.

    (அ. சி.) இசையினால் - புகழக்கூடிய அறச்செய்கைகளினால். எய்தியநாள் - குறிக்கப்பட்ட நாள் . எறிவது - அழிவது.

    பதிலளிநீக்கு
  2. நபியே உமக்கு முன்னர் எந்தவொரு மனித ருக்கும் (மரணமற்ற) நிரந்தரத்தன்மையை நாம் ஏற்படுத்த வில்லை. நீர் மரணித்து விட அவர்கள் நிரந்தரமாக இருப்பார்களா?(21:34)

    பதிலளிநீக்கு