விரும்புவோர் தீர்க்கதரிசியாக மாறமுடியுமா?

இல்லை, இறைவன் மட்டுமே அவர்களை தேர்ந்தெடுக்கிறான்

இந்து மதம்


அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான தூதர், அக்னியை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். இந்த எங்கள் தியாகத்தில் திறமையானவர். (RIG 1.1.12 மந்திரம் 12:1)

தமிழர் சமயம்


நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம் - திருமந்திரம் 130

பொருள்: திருமூலர் ஆசிரியராக நந்தியின் மூலம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்

இஸ்லாம்

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். 4:79

 முகமது நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிகழ்வு: நபி(ஸல்)அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தனர், தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கி இருந்து) வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவை தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதேப் போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.

(ஒருநாள்) ஒரு வானவர் ஓதுவீராக என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை பின்வருமாறு விளக்கினார்கள்: ‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும், ஓதுவீராக என்றார். (அப்போது) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுக கட்டியணைத்து என்னை விட்டு விட்டு மீண்டும் ஓதுவீராக, என்றார் (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு, படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை அலக்கில் (கருவளர்ச்சியின் ஆரம்ப நிலை) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார்; மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது, பிறகு இதயம் படபடத்தவர்களாக- அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)விடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்றார்கள். கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)விடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் வராகாவிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல் அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். வராகா அறியாமைக் காலத்திலேயே கிருஸ்தவ சமயத்தை தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும். இன்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி), என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வராகா நபி (ஸல்) அவர்களிடம் , என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள்; தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். (அதைக் கேட்டதும்) வராகா (நபி (ஸல்) அவர்களிடம்) இவர் தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள், மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமாக உதவி செய்வேன் என்று கூறினார். அதன் பிறகு வராகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதற்செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. - புகாரி-3: ஆயிஷா (ரலி)

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் நம்முடன் வாழும் சிலர் தன்னை சித்தராக, நபியாக, ரிஷியாக பிரகடனப்படுத்துகின்றனர். ஆனால் அவரை ஏற்கும் முன் அவரைப் பற்றிய வேத முன்னறிவுப்புகளை ஆய்ந்து அறிவது அவசியம். ஏனென்றால் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் அவரைப்பற்றிய பல செய்திகள் முன்னரே அறிவிக்கப் பட்டு இருக்கும். அவ்வாறு நாம் அதை ஆய்ந்து அறிரும் பொழுது பொய்குருக்களிடம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குர்ஆனின் வாக்குறுதி படி முகமது நபி-தான் கடைசி தீர்க்கதரிசி குர்ஆன்-தான் கடைசி மறை நூல். எனவே இதன் அடிப்படையில் கிபி 650-க்கு பிறகு எழுதப்பட்ட வேத நூல்களையும் தீர்க்கதரிசிகளையும் எளிதாக நிராகரிக்கலாம். ஆனால் நூல்களின் காலம் சரியாக கண்டறியப் பட்டுள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

9 கருத்துகள்:

  1. https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/19132801/Believers-of-the-Prophet-Muhammad.vpf

    பதிலளிநீக்கு

  2. Deuteronomy 18:15
    உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

    Deuteronomy 18:18
    உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

    Judges 6:8
    கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

    https://tamilchristiansongs.in/tamil/hashtag/bible/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

    பதிலளிநீக்கு


  3. IV. குரு பாரம்பரியம்

    # 67. நந்தி அருள் பெற்ற எண்மர்
    நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி , வியாக்கிரமர்
    என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.

    நந்தியின் அருள் பெற்ற குருநாதர்கள் எண்மர் ஆவர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் நால்வர் ஆவர்.
    இவர்களோடு சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் மூவரையும் என்னையும் சேர்த்தால் எண்மர் ஆவோம்.


    #68. நந்தியின் அருள்

    நந்தியின் அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்;
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
    நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
    நந்தி வழி காட்ட நான் இருந்தேனே.

    சிவன் அருளால் குருநாதர் ஆகும் தகுதியை அடைந்தோம். சிவன் அருளாலே மூஆதரதில் விளங்கும் மூர்த்தியை நாடினோம். சிவன் அருள் எதையும் சாதிக்க வல்லது இந்த பூவுலகினில். சிவன் வழி காட்ட மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறி தலையின் மேல் சஹஸ்ர தளத்தில் நான் நிலை பெற்றேன்.

    #69. மாணவர் எழுவர்

    மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமனுத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவருமென் வழியாமே.

    திருமந்திர உபதேசத்தை முறையாகப் பெற்ற என் மாணவர்கள் எழுவர். மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி மற்றும் கஞ்ச மலையான் என்னும் எழுவர் என் வழித் தோன்றிய மாணவர்கள் ஆவார்.

    பதிலளிநீக்கு


  4. #70. நால்வர் உபதேசம்

    நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
    நால்வரும் நானா விதப் பொருள் கைக்கொண்டு
    நால்வரும் நான் பெற்றதெல்லாம் பெறுகென
    நால்வரும் தேவராய் நாதரானார்களே.

    சனகன் முதலிய நால்வரும் திசைக்கொருவர் என்று நாலு திசைக்கும் நான்கு குரு நாதர்கள் ஆவார்கள். அவர்கள் நால்வரும் தாம் பெற்ற பல்வேறு அனுபவங்களை மற்றவருக்கு எடுத்துரைத்து மேன்மையான குருநாதர் ஆயினர்.


    # 71. சிவன் செய்த உபதேசம்

    மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
    ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்
    செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
    கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

    சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் என்ற மூவர்க்கும், மற்றும் சனகர் முதலிய நால்வருக்கும் உபதேசம் செய்தார். அது பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் ஒழிக்கும் பெருமை பெற்ற நல்ல நெறியாகும்.ஆதவன், சந்திரன், அக்கினி என்ற முச்சுடர் வடிவான ஈசன் நமக்கு குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லவே அல்ல.

    #72. கடன்கள் தடை படவேண்டாம்

    எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
    செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்
    கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
    அழுந்திய நால்வருக் கருள் புரிந்தானே.

    “பெரிய மழை பொழிந்து எட்டு திசைகளிலும் நீர் எழுந்தாலும் முன்னேறத் தேவையான கடமைகளை விடாது செய்யுங்கள்!” எனக் கொழுவிய, பவழம் போன்ற, செவ்வொளி வீசும் குளிர்ந்த சடைமேல், அன்பு கொண்டு அதில் அழுந்தி இருந்த சனகர் முதலிய நால்வருக்கும் ஈசன் அருள் புரிந்தானே.

    பதிலளிநீக்கு


  5. # 73. ஆகமம் செப்பலுற்றேன்

    நந்தி திருஅடி நான் தலைமேற்கொண்டு
    புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றி செய்து
    அந்தி மதி புனை அரனடி நாள்தொறும்
    சிந்தை எய்து ஆகமம் செப்ப லுற்றேனே.

    என் குருவாகிய சிவனின் இரு திருவடிகளை என் சிரமேற்கொண்டேன். அந்தப் பெருமானை என் அறிவில் நிறுத்தி நான் வணங்கி வழிபட்டேன். புருவ மத்தியாகிய முச்சந்தியில் பொருந்தியுள்ள மதியணி நாதனின் சிறந்த திருவடிகளை தியானித்து இந்தத் திருமந்திரம் என்னும் இந்த ஆகம நூலைத் தொடங்குகின்றேன்.


    #74. தனிக் கூத்துக் கண்டேன்!

    செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
    அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்றத்
    தப்புஇலா மன்றில் தனி கூத்துக் கண்டபின்
    ஒப்பில் ஏழு கோடி யுகம் இருந்தேனே.

    சிவாகமம் சொல்ல வல்லவன் என்ற தகுதியைப் பெற்றேன். அந்தத் தகுதியை அளித்த குருவின் திருவடிகளைப் பெற்றேன்.

    தலை உச்சியில் உள்ள சிதாகாசத்தில், ஒப்பில்லாத சூரிய சந்திரர்களின் ஒளிக் கதிர்களின் அசைவுகளை நான் கண்டு தரிசித்தேன். ஏழு ஆதாரச் சக்கரங்களும் விளங்குமாறு நெடுங்காலம் அமைந்திருந்தேன்.

    உடலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்கள் உள்ளிருந்து வெளிப்படும் கதிரவனின் கலைகளையும், வெளியிருந்து உள்ளே புகும் சந்திரக் கலைகளையும் இயக்குகின்றன. சிவயோகியர் ஒளிக்கதிர்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இணைவதை அறிவர். உடலே ஆன்மா என்று மயங்கி நிற்கும் சராசரி மனிதர்கள் இதனை அறிய முடியாது.


    #75. அருந்தவச் செல்வி

    இருந்தவக் காரணங் கேளிந்திரனே
    பொருந்திய செல்வப் புவனா பதியாம்
    அருந்தவச் செல்வியைச் சேவித்தடியேன்
    பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே.

    இங்ஙனம் நான் ஆதார சக்கரங்களில் பொருந்தி இருந்த காரணத்தைக் கேள் இந்திரன் என்னும் மாணவனே! புவனங்களின் நாயகியாகிய பராசக்தி அங்கு பொருந்தி உள்ளாலள். அந்த அருந்தவத்துக்கு உரிய செல்வியை பக்தியுடன் அடைந்து வணங்கி விட்டு அவளுடன் நான் மீண்டும் திரும்பினேன்.

    சஹஸ்ர தளத்தில் உறையும் சிவனை நோக்கிச் செல்லும் பொழுது மூலதாரத்தில் மண்டலமிட்டு இருக்கும் குண்டலினி சக்தி நிமிரும். ஆதாரச் சக்கரங்கள் வழியே சிவத்தை அடையும். அதனுடன் இணையும். சமாதிக்குப் பின் மீளும் போது குண்டலினி சக்தியும் கீழே இறங்கி விடும்.


    சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
    மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
    இதாசனி யாதிருந் தேன் மனம் நீங்கி
    உதாசனி யாதுடனே உணர்ந்தோமால்.

    தத்துவத்தையும், முத்தமிழையும், வேதத்தையும் பெரிதும் நுகர்ந்து அனுபவித்தேன் நான். அந்த வேளையில் உடலுக்கு இதமான உணவையும் கூட உண்ணாமல் இருந்து வந்தேன் நான். மனம் தெளிந்து விருப்பு வெறுப்பு என்ற இரண்டும் இல்லாமல் நான் உதாசினமாக இருந்ததால் உண்மைப் பொருளை உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு

  6. #77. திருக் கூத்தைக் கூற வந்தேன்!

    மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம்
    நீலாங்க மேனியள் நேரிழை யாளோடு
    மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
    சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.

    மாலாங்கன் என்னும் என்னுடைய மாணவனே! தென் திசைக்கு நான் வந்த காரணம் இதுவே. நீல நிற மேனியையும், சிறந்த அணிகலன்களையும் உடைய சிவகாமி தேவியுடன், மூலாதாரத்தை இடமாகக் கொண்டு சதாசிவன் நடத்தும் ஐந்தொழிக் கூத்தின் சிறப்பை விளக்கும் வேதத்தை எல்லா மக்களுக்கும் எடுத்துக் கூறுவதற்காகவே.

    உலகைப் படைக்கும் ஆற்றல் நீல ஒளியில் உள்ளது. எனவே பராசக்தி தேவியின் நிறம் நீலம். சிவந்த ஒளி அறிவு மயமானது. அறிவு சிவ மயமானது. இந்த இரண்டு ஒளிகளின் சேர்க்கையால் உலகம் படைக்க படுகின்றது. ஐந் தொழில்கள் நடக்கின்றன. இதுவே யோகத்தின் ரகசியம் ஆகும்.

    #78. பதம் சேர்ந்திருந்தேன்

    நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்
    பேருடையாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;
    சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்
    சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே.

    சிறந்த அணிகலன்களை அணிந்தவள் பராசக்தி. சிவானந்தவல்லி என்னும் பெயர் பெற்றவள். என் பிறப்பை நீக்கி என்னை ஆட்கொண்டவள். எல்லையில்லாத சிறப்பை உடையவள் அவள். ஜீவர்களைப் பக்குவம் அடையச் செய்வதற்காகச் சிவன் எழுந்தருளிய தண்டில் சக்தியும் பொருந்தி இருப்பாள். அத்தகைய தேவியின் திருவடியில் நான் சேர்ந்திருந்தேன்.

    #79. நாமங்களை ஓதினேன்

    சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன்பங்கனைச்
    சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை;
    சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்;
    சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.

    உமையொரு பாகனாகிய சிவபெருமனைச் சேர்ந்து வழிபட்டேன். ஜீவர்களைப் பக்குவம் செய்யும் சிவபெருமான் உறையும்
    தண்டின் உச்சியில் உள்ள சஹஸ்ர தளத்தில் சேர்ந்திருந்தேன். சிவம் என்னும் அறிவின் நீழலில் நான் சேர்ந்திருந்தேன்.
    அவ்வமயம் நான் சிவன் நாமங்களை ஓதியபடி இருந்தேன்.


    #80. இரவு பகல் அங்கு இல்லை!

    இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;
    இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே;
    இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
    இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.

    எண்ணில்லாத காலம் இந்த உடலில் தங்கி இருந்தேன். இரவு பகல் என்னும் வேறுபாடுகள் இல்லாத சுயம்பிரகாசவெளியில் நான் தங்கி இருந்தேன். தேவர்கள் போற்றும் பதத்தில் நான் இருந்தேன்.என் குருநாதனான சிவபெருமானின் திருவடிகளில் நான் பொருந்தி இருந்தேன்.

    பதிலளிநீக்கு


  7. # 81. தமிழ் செய்யப் படைத்தான்

    பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
    முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

    பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்! நான் நல்ல தவம் செய்திருந்தேன். இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான். தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும், அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான்.

    #82. திருவடியில் பொருந்தி இருந்தேன்

    ஞானத் தலைவி தன் நந்தி நகர் புக்கு
    ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
    ஞானப் பாலாட்டி நாதனை அர்ச்சித்து
    நானுமிருந்தேன் நற் போதியின் கீழே.

    ஞானத் தலைவியான சக்தியுடன் சிவன் விளங்கும் நகரில் புகுந்தேன். ஊனம் இல்லாத ஒன்பது முடிவுகளின் சந்திப்பில் இருந்து கொண்டு, சிவனைத் தோத்திரம் செய்தென். அறிவு மயமாகிய அவன் திருவடிகளின் கீழே நானும் இருந்தேனே.

    ‘ஒன்பது முடிவுகளின் சந்திப்பு’ என்பது ஏழு ஆதாரச் சக்கரங்கள், நாதம், பிந்து என்ற ஒன்பது இடங்களைக் குறிக்கும்.

    #83. வான் வழியே வந்தேன்

    செல்கின்ற வாற்றில் சிவமுனி சித்தசன்
    வெல்கின்ற ஞானது மிக்கோர் முனிவராய்ப்
    பல்கின்ற தேவரசுரர் நரர் தம்பால்
    ஒல்கின்ற வான் வழியூடு வந்தேனே.

    கயிலையில் இருந்து வரும் பொழுது, சிவபெருமானை நினைத்து மன்மதனை வெல்லும் ஆற்றல் கொமண்ட முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இவர்களிடம் உள்ள நுட்பமான விண் வழியே நான் வந்தேன்.

    #84. அத்தன் அருளினான்

    சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
    உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
    ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
    அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

    சித்தத்தில் விளங்கும் நூல்களில் சிறந்தது வேதம். சொற்களே வேதத்தின் உடல் ஆகும் என்றால் உற்பத்தியாகும் அந்த உடலில் வேதத்தின் பொருள். இறைவன் இவற்றைத் தன் கருணையால் எனக்கு அளித்தான்.

    பதிலளிநீக்கு


  8. #85. சிவம் வந்து பொருந்தும்

    நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
    வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்
    ஊன்பற்றி நின்ற உணர்வு உறு மந்திரம்
    தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

    நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் முழுவதும் பெறட்டும். வானைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான். அறிவே வடிவாக அமைந்தவன் ஆவான் நம் சிவபெருமான். அவனைப் பற்றிச் சிந்தித்தால் சிரசில் ஓர் உணர்வு உண்டாகும். அந்த உணர்வை நாம் முயன்று பற்றிக் கொண்டோம் என்றால் அந்த சிவம் நம்மைத் தேடி வந்து நம்மிடம் பொருந்தி விடும்.

    #86. உறைப்பொடு ஓதவேண்டும்

    பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.

    பிறப்பும் இறப்பும் இல்லாதவன் சிவபெருமான். அவன் திருப் பெயர் நந்தி என்பது ஆகும். விண்ணுலகத்தோர் சென்று வணங்குவர் சிவனை. உள்ளத்தில் அவனை மறவாதவர்கள் மந்திர மாலையால் பக்தியுடன் பாராயணம் செய்து அவன் அருள் பெறலாம்.

    #87. மிகாமல் வைத்தான்

    அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்
    எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
    தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
    பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.

    உடலை நமக்கு அளித்தவன் சிவ பெருமான். அந்த உடலில் ஜடராக்னியை மிகாமல் வைத்தான். பூவுலகம் கடல் பொங்கி அழியாமல் இருப்பதற்கு வடவாக்கினியை சிவன் கடலில் மிகாமல் வைத்தான். உள்ளத்தில் குழப்பம் தங்கி மிகாமல் இருப்பதற்காகச் சிவன் தந்தான் தமிழ் ஆகமமான திருமந்திரம். அத்தனை பொருட்களும் பொங்கி மிகாமல் இருக்க
    இந்த திருமந்திரத்தில் வைத்தான் சிவபெருமான்.

    #88. படி கண்டிலர்!

    அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
    படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
    அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
    முடிகண் டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

    “சிவ பெருமானின் திருவடிகளையும் திருமுடியையும் காண்போம்” என்று எண்ணினர் அரியும் அயனும் ஒருமுறை. எத்தனை முயன்றும் அடி முடியைக் காணவே முடியவில்லை. மீண்டும் பூமியில் சந்தித்தனர் இருவரும். “நான் அடியைக் கண்டிலேன்!” என்று உண்மை உரைத்தார் அரி. “நான் முடியைக் கண்டேன்” என்று பொய் உரைத்தான் அயன்.

    #89. என் முடி மீது தன் அடி வைத்தான்!

    பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற
    தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
    அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்
    நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.

    காளை, மான், மழு இவற்றைப் பிரியாதவன் அனைத்துக்கும் மேலான நம்
    சிவபெருமான். கற்பனையாக அமைந்தது இந்த உலக வாழ்வு. இதிலிருந்து எனக்கு ஒழிவைத் தந்தான் சிவன். என் சிரம் மீது தன் திருவடிகளைச் சூட்டினான்!

    # 90. முற்றும் விளக்கினேன்

    ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
    மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை
    ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர
    வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே.

    அறியப்படும் பொருளையும் ( ஞேயம்), அறியும் அறிவையும் (ஞானம்),

    அறிபவனையும் (ஞாதுரு) மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை முதலிய சக்தியின் கூட்டத்தையும், அச்சக்திகளில் விளங்கும் சிவத்தையும், வித்தாகிய சிவத்தின் பிரபாவத்தையும் இவை அனைத்தையும் நான் திருமந்திரத்தில் விளக்கினேன்.


    #91. அவன் ஆணையிட்டான்

    விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ்ஞானச் சோதி
    அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
    துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
    வளப்பின் கயிலை வழியில் வந்தேனே.

    இவற்றை எனக்கு நன்றாக விளக்கியவன் நம் சிவபெருமான். அகோசர வித்து நிலையில் இருப்பான் அறிவு மயமான ஜோதியாக. அளவில்லாத பெருமைகளை உடையவன் அந்த ஆனந்த நந்தி. அசைவற்று இருக்கும் அந்த ஆனந்த நடராசன் இட்ட ஆணையின் படி சிறந்த கயிலாய மலையிலிருந்து நான் இங்கே வந்தேன்.

    பதிலளிநீக்கு


  9. #92. மெய்ஞானம் தந்தான்

    நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்
    நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்;
    நந்தி அருளால் மெய் ஞானத்துள் நண்ணினேன்
    நந்தி அருளாலே நான்இருந் தேனே.

    சிவகுருவின் அருளால் நான் மூலாதாரத்தில் உள்ள ருத்திரனை நாடினேன். சிவகுருவின் அருளால் நான் சதாசிவன் என்னும் பெயர் பெற்றேன். சிவகுருவின் அருளால் நான் உண்மையான ஞானத்தைப் பெற்றேன். சிவகுருவின் அருளால் நான் நிலை பெற்றிருந்தேன்.

    #93. நாதாந்ததில் வீசும் பொன்னொளி

    இருக்கில் இருக்கும் எண்இலி கோடி
    அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
    அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
    உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

    இருக்கு வடிவான வேதத்தில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன. மூலாதாரத்தில் உள்ள சிவசக்தி மேலே சென்று உச்சியை அடையும். மந்திரங்கள் நாத மயமானவை. அவை பிரணவத்தில் முடிவாகும், பிரணவம் முடிந்த நாதாந்த நிலையில், சூரிய சந்திரர்களின் கதிர் ஒளியில், பிரணவ உச்சியில், ஆன்மாவானது பேரொளி மயமாக விளங்கும்.அந்நிலையில் அது பொன்னொளி போன்ற கிரணங்களுடன் ஒளி வீசும்.

    #94. எப்போதும் புகழ்வேன்

    பிதற்றுகின்றேன் என்றும் பேர்நந்தி தன்னை
    இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
    முயற்றுவன் ஓங்கு ஒளிவண்ணன் எம்மானை
    இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே.

    பதிலளிநீக்கு