தேவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களா?

தமிழர் சமயம்

தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்

சிவத்து இடை நின்றது தேவர் அறியார்

தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்

பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே. (திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 13 பாடல் 1685)

விளக்கம்இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.

இஸ்லாம் 

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே” என்று கேட்டனர். “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர். “ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான். (குர்ஆன் 2:30-32)

(இன்னும்) நீர் கூறுவீராக: ‘இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார் (அல்-குர்ஆன் 27:65) 

மறைவானவற்றின் சாவிகள் என்னிடம் தான் இருக்கின்றது. அவனைத்தவிர வேறு யாரும் அவற்றை அறியமாட்டார்கள். (குர்ஆன் 6:59)

கிறிஸ்தவம் / யூதம் 

இயேசு கூறினார் "அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்தில் இருக்கும் தேவதூதர்களும், குமாரனும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்." (மத்தேயு 24:36

முடிவுரை 

தேவர்கள் கூட அனைத்தையும் அறிந்தவர்கள் அல்ல. ஆனால் மனிதர்கள் சிலர் அனைத்தையும் அறிந்தவர்கள், முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இறைவன் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன், முக்காலமும் உணர்ந்தவன். 

நந்தி என்பவர் யார்? - தேவரா? பசுவா? சிவனா?

நந்தி என்கிற பாத்திரம் சைவ சமயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். 

சிவபுராணம், சிவன்கோவில், சிவஆகமம், பிரதோஷம் போன்ற இன்றைய சிவ மதம் சாந்த கூறுகளில் இந்தப் பாத்திரம் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. 

  • ஆனால் நந்தி என்கிற இந்த பாத்திரம் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? 
  • அல்லது வேதமும் ஆகமமும் சொன்னபடி நாம் புரிந்து வைத்துள்ளோமா? என்பது ஆய்வுக்குரியது.
  • ஆனால் வேதங்களையும் ஆகமங்களையம் நம்மைப் போன்ற சாதாரண மக்களால் ஆய்வு செய்ய முடியுமா? 

முடியும். ஏனென்றால் சைவமதம் சார்ந்த வேதங்கள் அனைத்தும் தமிழில் மட்டும்தான் உள்ளது. 

தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரம் போன்றவைகள்தாம் அவைகள். இவைகள் பாடல் வடிவில் இருந்தாலும், சம்ஸ்கிருத வேதங்களை போலல்லாமல் கொஞ்சம் முயற்சி செய்து தொடந்து படித்தால் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். மேலும் அதில் உள்ள பிழைகளை எவ்வாறு களைவது போன்ற அணுகுமுறைகள் மற்றும் இலக்கணங்கள் தமிழில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதை வேறு ஒரு தலைப்பில் விளக்கமாக காணலாம். 

நந்தி பற்றி விளக்கமாக திருமந்திரம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம். 

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் தரும் முன், சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த காளை மாட்டை நந்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே நந்தி என்றால் யார்? மக்கள் மத்தியில் நந்தி என்ற பெயருக்கு பொருளாக என்னவெல்லாம் சொல்லப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்ய சில இணைய தரவுகளை காண்போம்.

ஆன்மீகம் : இதில் நந்தியை ஒரு மனிதர் போல சித்தரித்து வயது வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவர் அமரர் அதாவது தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று வேறு சில தகவல்கள் கூறுகிறது.

ஆன்மீகம்.இன்: நந்தியின் நிறம் வெண்மை என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவர் சிவ பெருமானின் வாகனமாக கூறப்படுகிறது அதற்கும் வேதங்களில் ஆதாரமில்லை. "நம்மை வணங்குவோரை" என்று பன்மையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. "ஒருவனே தேவன்" என்று உறுதியாக கூறுவதில் சைவ ஆகமங்கள் பிரதானமாக உள்ளது.

மாலை மலர்: நந்தி அவர்கள் எந்த தடையையும் விளக்க வல்லவர் அல்ல. அவர் திருமூலர் போன்ற முனைவர்களுக்கு ஆசானாக இருக்கும் பணியை செய்பவர். எனவே இவரிடம் நாம் பிராத்தனை செய்யவோ அல்லது அவரை வணங்குவதோ எந்த பலனையும் தராது.

விகடன்: நந்தி என்ற சொல்லுக்கு திருமந்திரம் கூறும் பொருள் வேறு. சிவனை வழிபடும் முறையை சிவனின் அறத்தை ஆகாமத்தை சித்தர்களுக்கு உபதேசிக்கும் வேலையை செய்யும் தேவர் அவர். அவர் தனிமனித வளர்ச்சிக்கு எதையும் செய்ய கூடியவராக திருமந்திரம் கூறவில்லை. நந்திகள் நால்வர் என்று திருமந்திரம் தெளிவாக கூறுகையில் ஐந்தாவது நந்தி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

விக்கி: விக்கியில் சொல்லப்படும் சில செய்திகள் திருமந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காளையாக சித்தரிக்க படுவதாக கூறப்படும் செய்தி திருமந்திரத்தில் இல்லை.

ஆன்மீக மலர்: முற்றிலும் தவறான விளக்கங்கள்.

இவைகள் மட்டுமல்லாமல் பல வகையில் சுவாரஸ்யமாக பல கதைகள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எதார்த்தம் என்னவென்றால் உண்மை இது போல பலவாக இருக்க முடியாது, மாறாக ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எனவே மனித கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாத விடயங்களை புரிந்துகொள்ள நந்தி பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்று முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருமந்திர ஆகம வேதத்தின் படி நந்தி என்பவர் கீழ்கண்ட பண்புகளை உடையவர்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

    • நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
    • நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
    • நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
    • மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன். எனவே நந்தியும் சிவனும் வேறு வேறு.
    • நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியனாக நந்தி இருந்தார்.

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

திருமந்திரம் கூறும் நந்தியின் வரையறைக்கு முரணான கருத்துக்களையே மேலே குறிப்பிட்ட அனைத்து இணையங்களும் பேசுகின்றன. அநேகமாக அவர்கள் கூறும் கருத்துக்கள் சிவபுராணம் அல்லது நந்தி புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆனால் இந்த புராணங்கள் அடிப்படையிலேயே ஆகமங்களுக்கு முரன்படக் கூடியவைகள் ஆகும்.

தமிழில் தொல்காப்பியம் முதல் திருவாசகம் வரை வந்த நூல்கள் அனைத்தும் வெவ்வேறு முனைவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆகமங்கள் ஆகும். ஆனால் 18 புராணங்கள் அனைத்தும் ஒரே முனிவரால் எழுதப்பட்டது என்கிற செய்தி அதன் நம்பக தன்மையை கேள்விக்குறியாக ஆக்குகிறது. மேலும் அந்த புராணங்கள் இது போன்ற அடிப்படைகளில் ஆகம வேதங்களுக்கு நேரடியாக முரண்படுகிறது என்கிற செய்தியும் அதை வலுப்படுத்துகிறது. எனவே நந்தி என்பவர் மாடு என்கிற கருத்தை கூறும் புராணங்கள் வாயிலாக நந்தியை கோவிலில் வைக்க எண்ணிய அவர்கள் கோவிலில் கர்பகிரகத்துக்கு எதிராக காளை மாட்டின் சிலை வைத்து இருக்கலாம்.

அது சரி நந்தியின் சிலையை அவர்கள் குறுக்கே வைக்க எண்ணியதன் காரணம் என்ன? நந்தி என்பவர் தான் சிவனுக்கும் திருமூலருக்கும் இடையே இருந்து செய்தி பரிமாறிய வேலையை செய்தவர் ஏனென்றால் மனிதன் நேரடியாக உபதேசங்களை கடவுளிடம் இருந்து பெற முடியாது. அதாவது இறைவனை இவர் மூலம் தான் அறியவும் அடையவும் முடியும் என்று கருதியதால் மனிதர்களுக்கும் சிவனுக்கும் இடையே இந்த நந்தி வைக்கப்பட்டு உள்ளார். இந்த கருத்துக்கள் மீது சந்தேகம் உடையோர் திருமந்திரம் வாசிப்பதொடு பொழிப்புறையை ஆய்வு செய்யத் தொடங்கட்டும். 
 
திருமூலர் போன்ற முனிவர்கள் மட்டுமே நந்தியிடம் இதுபோன்ற உபதேசங்களை பெற முடியும் என்பதும், தமிழர் வேதங்கள் சிலை வழிபாடுகளை அல்லது பல தெய்வ வழிபாடுகளை ஆதரிக்கவில்லை என்பதும் வேறு தலைப்புகள்.

"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது எவ்வளவு பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.

மேலும் வாசிக்க:

  

கடவுளை வாசித்து அறிதல்

 தமிழர் சமயம்

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே (திருமந்திரம் 1:128)

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தோடின. உயிர்த் தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

குறிப்பு: இறைவனை அறிய முயற்சி செய்ய வேண்டும் என்று இந்த பாடல் கூறுகிறது. 

 கிறிஸ்தவம் / யூதம் 

கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும் (நீதிமொழிகள் 9:10

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பதுபெயர்கள் உள்ளன. அவற்றை பொருள் அறிந்து (அந்த பண்புப் பெயர்கள் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். (புகாரீ 2736)

 நபி(ஸல்)அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக இறங்கிய அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய தெய்வம் இல்லை என்பதற்கு அல்லாஹ் (அவனே) சாட்சியாக இருக்கிறான், மேலும் வானவர்களும், கற்றறிந்தவர்களும் சாட்சிகளாக உள்ளனர். இதற்கு). அவனுடைய படைப்பை நியாயமாகப் பராமரித்தால், எல்லாம் வல்ல, ஞானமுள்ள அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. [3:18]

அறிந்தவர்கள் அறியாதவர்களுடன் சமமா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” . [39:9] 

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (35:28)

 மேலும் இந்த உருவகங்களை நாம் மனித குலத்திற்காக உருவாக்குகிறோம், ஆனால் அறிவுடையவர்களைத் தவிர யாரும் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” [29.43]

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தை பற்றிய புரிதலை வழங்குகிறான்." [புகாரி & முஸ்லிம்).

எனவே அல்லாஹ்வை பற்றி அறிவை ஆங்காங்கே குர்ஆன் புகட்டுவதோடு அல்லாஹ்வை அறிந்தவர்களின் பண்புகளையும் எடுத்து கூறுகிறது. 

முடிவுரை

கடவுளை அறியவேண்டும் என்பதை சமயங்கள் வேறுவேறு கோணத்தில் சொல்கிறது தவிர, கடவுளின் பண்புகளை அறிவதை அனைத்து மதங்களும் கட்டயப்படுத்துகிறது.

காரணம், கடவுள் யார்? அவனது பெயர் என்ன? அவனது பண்புகள் என்ன? அவன் எதை செய்கிறான்? எப்படி செய்கிறான்? ஏன் செய்கிறான்? போன்ற அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, கடவுள் அல்லாதவர்களை வணங்கும் மோசமான நிலையிலிருந்து பாதுகாக்கப் படுவோம்.