பெரும்பாலும் இந்துக்களின் கோவில்களில் ஏன் "காளை மாடு" சிலை வைக்கபட்டுள்ளது? "காளை மாடுகளை வழிபாடு" எப்படி வந்தது?

 இந்து கோவில் என்று நீங்கள் குறிப்பிடுவது சிவன் கோவிலை என்று நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்து வேறெந்த கோவிலிலும் கர்பகிரகத்திற்கு எதிராக மாட்டின் சிலை வைக்க பட வில்லை. இருந்தால் உங்கள் தகவல்கள் வரவேற்க்கப் படுகிறது, அறிய ஆவலாக உள்ளோம்.

இந்த கேள்விக்கு நேரடியாக பதில் தரும் முன், சில அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அந்த காளை மாட்டை நந்தி என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே நந்தி என்றால் யார்? மக்கள் மத்தியில் நந்தி என்ற பெயருக்கு பொருளாக என்னவெல்லாம் சொல்லப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்ய சில இணைய தரவுகளை காண்போம்.

ஆன்மீகம் : இதில் நந்தியை ஒரு மனிதர் போல சித்தரித்து வயது வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவர் அமரர் அதாவது தேவர் இனத்தை சேர்ந்தவர் என்று வேறு சில தகவல்கள் கூறுகிறது.

ஆன்மீகம்.இன்: நந்தியின் நிறம் வெண்மை என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவர் சிவ பெருமானின் வாகனமாக கூறப்படுகிறது அதற்கும் வேதங்களில் ஆதாரமில்லை. "நம்மை வணங்குவோரை" என்று பன்மையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. "ஒருவனே தேவன்" என்று உறுதியாக கூறுவதில் சைவ ஆகமங்கள் பிரதானமாக உள்ளது.

மாலை மலர்: நந்தி அவர்கள் எந்த தடையையும் விளக்க வல்லவர் அல்ல. அவர் திருமூலர் போன்ற முனைவர்களுக்கு ஆசானாக இருக்கும் பணியை செய்பவர். எனவே இவரிடம் நாம் பிராத்தனை செய்யவோ அல்லது அவரை வணங்குவதோ எந்த பலனையும் தராது.

விகடன்: நந்தி என்ற சொல்லுக்கு திருமந்திரம் கூறும் பொருள் வேறு. சிவனை வழிபடும் முறையை சிவனின் அறத்தை ஆகாமத்தை சித்தர்களுக்கு உபதேசிக்கும் வேலையை செய்யும் தேவர் அவர். அவர் தனிமனித வளர்ச்சிக்கு எதையும் செய்ய கூடியவராக திருமந்திரம் கூறவில்லை. நந்திகள் நால்வர் என்று திருமந்திரம் தெளிவாக கூறுகையில் ஐந்தாவது நந்தி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

விக்கி: விக்கியில் சொல்லப்படும் சில செய்திகள் திருமந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காளையாக சித்தரிக்க படுவதாக கூறப்படும் செய்தி திருமந்திரத்தில் இல்லை.

ஆன்மீக மலர்: முற்றிலும் தவறான விளக்கங்கள்.

இவைகள் மட்டுமல்லாமல் பல வகையில் சுவாரஸ்யமாக பல கதைகள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எதார்த்தம் என்னவென்றால் உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எனவே அவரை பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றது என்று முதலில் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

திருமந்திர ஆகம வேதத்தின் படி நந்தி என்பவர் கீழ்கண்ட பண்புகளை உடையவர்.

  • நந்திகள் நால்வர் (சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர்). - நந்தி ஒருவல்ல, நால்வர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் உண்டு.
  • நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு பொறுப்பாளி. எனவே உலகில் உள்ள அனைத்து திசைகளுக்கும், மொழிகளுக்கும், நாடுகளுக்கும், சமயங்களுக்கும் வேதத்தை கொண்டு சேர்ப்பது இவர்களின் பிரதான வேலை.
  • நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே - நந்தி தேவர் இனத்தை சேந்தவர்கள் (மாடு அல்ல)
  • மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் - நந்தியின் நாதன் (ஆசிரியன்) சிவன். எனவே நந்தியும் சிவனும் வேறு வேறு.
  • நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் - மனிதர்களுக்கு குருவாய் இருந்த திருமூலர் போன்ற முனிவர்களுக்கு ஆசிரியனாக நந்தி இருந்தார்.
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. - நந்தி என்பது பெயரல்ல, பதவி. இறைவனின் போதனைகளை (வேதத்தை) மனிதரில் உள்ள புனிதர்களுக்கு போதிக்கும் வேலையை செய்யும் தேவர்களுக்கு நந்தி என்று பெயர்.

திருமந்திரம் கூறும் நந்தியின் வரையறைக்கு முரணான கருத்துக்களையே மேலே குறிப்பிட்ட அனைத்து இணையங்களும் பேசுகின்றன. அநேகமாக அவர்கள் கூறும் கருத்துக்கள் சிவபுராணம் அல்லது நந்தி புராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாக இருக்கலாம். ஆனால் இந்த புராணங்கள் அடிப்படையிலேயே ஆகமங்களுக்கு முரன்படக் கூடியவைகள் ஆகும்.

தமிழில் தொல்காப்பியம் முதல் திருவாசகம் வரை வந்த நூல்கள் அனைத்தும் வெவ்வேறு முனைவர்கள் மூலம் கொடுக்கப்பட்ட ஆகமங்கள் ஆகும். ஆனால் 18 புராணங்கள் அனைத்தும் ஒரே முனிவரால் எழுதப்பட்டது என்கிற செய்தி அதன் நம்பக தன்மையை கேள்விக்குறியாக ஆக்குகிறது. மேலும் அந்த புராணங்கள் இது போன்ற அடிப்படைகளில் ஆகம வேதங்களுக்கு நேரடியாக முரண்படுகிறது என்கிற செய்தியும் அதை வலுப்படுத்துகிறது. எனவே நந்தி என்பவர் மாடு என்கிற கருத்தை கூறும் புராணங்கள் வாயிலாக நந்தியை கோவிலில் வைக்க எண்ணிய அவர்கள் கோவிலில் கர்பகிரகத்துக்கு எதிராக காளை மாட்டின் சிலை வைத்து இருக்கலாம்.

அது சரி நந்தியின் சிலையை அவர்கள் குறுக்கே வைக்க எண்ணியதன் காரணம் என்ன? நந்தி என்பவர் தான் சிவனுக்கும் திருமூலருக்கும் இடையே இருந்து செய்தி பரிமாறிய வேலையை செய்தவர் ஏனென்றால் மனிதன் நேரடியாக உபதேசங்களை கடவுளிடம் இருந்து பெற முடியாது. அதாவது இறைவனை இவர் மூலம் தான் அறியவும் அடையவும் முடியும் என்று கருதியதால் மனிதர்களுக்கும் சிவனுக்கும் இடையே இந்த நந்தி வைக்கப்பட்டு உள்ளார். இந்த கருத்துக்கள் மீது சந்தேகம் உடையோர் திருமந்திரம் வாசிப்பதொடு பொழிப்புறையை ஆய்வு செய்யத் தொடங்கட்டும். நன்றி.

திருமூலர் போன்ற முனிவர்கள் மட்டுமே நந்தியிடம் இதுபோன்ற உபதேசங்களை பெற முடியும் என்பதும், தமிழர் வேதங்கள் சிலை வழிபாடுகளை அல்லது பல தெய்வ வழிபாடுகளை ஆதரிக்கவில்லை என்பதும் வேறு தலைப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக