அனுபவ அறிவா? வேதமா?

ஒருவர் தான் வாழும் முறையினை நெறிப்படுத்த மறைநூலின் அவசியம் உண்டா? அல்லது அவரவர் அனுபவப்படி நம்மை தீமையை வரையறுத்து வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் சிறந்ததா?

இறைமறுப்பாளர்கள் மட்டும் அல்ல, இறை நம்பிக்கை உடைய பலரும், மறைநூல்களை பொருட்படுத்தாமல் தனது அனுபவத்தை மட்டுமே சார்ந்து உள்ளனர். அதிலும் சிலர் முன்னோர்களின் கருத்துக்களையும் ஏற்கின்றனர் ஆனால் மறைநூல்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

ஏனென்றால் மனிதனின் அனுபவத்தில் விளைந்த அறிவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மறை நூல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் மறைநூல்கள் மனிதனின் அறிவின் மூலம் விளைந்த நூல்கள் என்று இவர்களால் கருதப்படுகிறது.

  1. (மறை)நூல் என்றால் என்ன? இறைவனால் வெளிப்படது நூல் ஆகும்.
  2. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நூல் உண்டா? உண்டு.
  3. உலகின் அனைத்து மறைநூல்களுக்கிடையில் தொடர்பு உண்டா? உண்டு.

இவையெல்லாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் பேசப்பட்டுவிட்டது. எனவே இக்கட்டுரையில் மறைநூலை சார்ந்தது இராமல் சுயஅறிவை மட்டும் அல்து அனுபவ அறிவை மட்டும் சார்ந்து இருத்தல் தகுமா? எனபதை கற்று அறிவோம் வாருங்கள்.

தமிழர் சமயம்


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. - (திருமந்திரம்)

விளக்கம்அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (குறள் 636)

விளக்கம்: மதி நுட்பமும் உள்ளவர்கள் நூலின் வழிகாட்டுதலோடு நின்றால் அவர் முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்?

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்என்றல் சால அஃதுஆகும் - அதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்மகட்குக்
கல்லினும் வல்என்னும் நெஞ்சு. (அறநெறிச்சாரம் 31)

விளக்கம்: நாள்தோறும் நீரினுள்ளே கிடந்தாலும் கல்லுக்கு மென்மை அடைதல் சிறிதும் இல்லை! அதைப் போல் நாள்தோறும் நல்ல அறநூல்களை கல்லார் கூறக் கேட்டாலும், கீழ் மக்களுக்கு மனமானது கல்லைவிடத் திண்மையுடையதாகவே இருக்கும்.


தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. (அறநெறிச்சாரம் 47)


இட்டம்: விருப்பம், இஷ்டம் 
திருட்டம்: தெளிவு, விளக்கம் 
திறம்: கூறு, வகை 
மாறா: நிலையான 
பித்தர்: பைத்தியக்காரன்

நோற்றல்: தவஞ்செய்தல்

மால்: மயக்கம், ஆசை 


விளக்கம்: வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தங்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு விளக்கம் கூறி, அவர்கள் கூற்றுடன் எதுவும் பொருந்தாதபடி சொல்பவரை பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய்ந்நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்று தவம் செய்பவரும் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உடையது.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்

விண்ணுறுவார்க் கில்லை விதி. (நல்வழி வெண்பா 37)


விளக்கம்வினைப் பயன்களை போக்குவதற்கான முதல் வழி வேதம் ஆகும், மற்ற எல்லா நூல்களிலும் அந்த பயன் இல்லை. அவ்வாறு உலக நூல்களை வாசிப்போர் பொறாமை படுவதை தவிர வேறென்னே சிந்திக்க முடியும். உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.


சொற்ப்பொருள்: ஆயம்: இரகசியம்; கண்ணூறு: பொறாமை; விண்ணூறு: சொர்கத்தை அடைவோர்.


கிறிஸ்தவம்

அதற்கு இயேசு, "மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல, மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது" என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். (மத்தேயு 4:4)

 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. (மாற்கு 12:24)

யூதம் 

 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. (யாத்திராகமம் 18:20)

இஸ்லாம் 

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (குர்ஆன் 7:40)

முடிவுரை 

இறைவனின் வழிகாட்டுதல் என்பது அறம், நூல், வேதம், சட்டம், வார்த்தை, வசனம் அல்லது வேதவாக்கியம் என்று வெவேறு பன்பாடுகளில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகிறது.  
 
மனிதனின் தினசரி செயல்பாடுகளில் இறைவனின் வழிகாட்டுகள் பேணப்பட வேண்டும். ஏனென்றால் உலகம் அவனை விதித்த விதிகளின்படிதான் இயங்குகிறது. மனிதர்களின் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே கொண்டு வெற்றியும் நிம்மதியும் பெறமுடியாது என்பது உலக நெறிகள் கூறும் வாய்மை ஆகும்.

வேதம் படித்து அதை அறிவு கொண்டு செயல்படுத்த வில்லை என்றாலும் நட்டம், உலக அறிவு இருந்து அதை மறைநூலோடு சேர்த்து புரிந்து கொள்ள முயலவில்லை என்றாலும் நட்டம். இந்த தத்துவத்தை தான் மேற்சொன்ன பலசமய நூல் வரிகள் தெளிவு படுத்துகிறது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக