இரவுத் தவம்

தமிழர் சமயம் 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே. (ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன் 2) 
 
பதவுரை: பூசனை - வணங்கு; பானு - சூரியன், ஒளி; இந்து - நிலவு; தேய்முறை - காலைக் கதிரவனால் நிலவொளி தேயும் முறை; உபயம் - இரண்டு, தானம், உரிமையான; சிவம்: செம்மை, முழுமை.

பொழிப்புரை: சந்திரன் சூரியன் சேர்ந்து வானில் வரும் காலத்தில், சூரியன் உதிக்கும் முன் உள்ள ஒளியில் அதாவது விடியற்காலையில் (அ)  சூரியன் உதிக்கும் முன், நிலவு வந்து தேயும் (அ) மறையும் நேரத்தில் அதாவது விடியற்காலைக்கு முன் உள்ள இரண்டு பொழுதும் உரிமையான நிலத்தில் பூசனை அதாவது இறைவனை வணங்குவோருக்கு சிந்தை தெளியும், முழுமை பெறுவார்.

இஸ்லாம் 

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

 ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் (அதிகாலை) தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18) 

கிறிஸ்தவம்

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். - (லூக்கா 6:12)

இந்து மதத்திலும் மற்ற மதங்களைப் போன்று தன் கடவுளைத் தொழவில்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனும் கோட்பாடு ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் அதை ஓதி உணர்ந்தவர் குறைவு. சமய நெறிகளை பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தான் இன்று இந்து மதம் உள்ளது. ஆன்மிகம் சார்ந்த கேள்விகளுக்கு மறைநூலில் மட்டுமே பதில் தேடவேண்டும் என்கிற அடிப்படையை இந்த நிலம் மறந்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கருதுகிறேன்.

நாம் தமிழர்களாக இருப்பதால், தமிழரின் சைவ சமய வேத ஆதாரங்களை பார்ப்போம். நமக்கு சம்ஸ்கிருத சனாதன சமய ஆதாரம் தேவை இல்லை. இவ்விரண்டும் வேறு வேறு என்கிற அறிவு பலருக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1) உடல் மற்றும் உயிர் சேர்ந்த உருவம் இறைவனை தொழவில்லை என்றால் அது ஏழாவது நரகில் அழுந்தும்.

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)

பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வணங்காமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர். 
 
2) தனது சமய சின்னங்களை மட்டும் அணிந்து அது கூறிய அறத்தை பின்பற்றாதவர்களை தெய்வம் மறுமையில் தண்டிக்கும், இங்கே தண்டிப்பது அரசனின் கடமை

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

3) நெறிதவற துன்பம் நேரும்

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

முடிவுரை

எனவே வணங்காது இருந்தாலும் அவனை வழிபாடாது இருந்தாலும் அதாவது அவன் வேதத்தில் சொன்ன அறத்தை பின்பற்றாது இருந்தாலும் தண்டனை இம்மையிலும் மருண்மையும் உண்டு.

நாம் அறியவேண்டிய உண்மை என்னவென்றால், உலகம் ஒன்று, அதை படைத்த்ட்ட இறைவன் ஒன்று, அனைத்து வேதங்களையும் தந்தவன் ஒன்று. அப்படி இருக்க அதன் போதனைகள் மட்டும் எப்படிவேறுபடும்?

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், கடவுளை வழிபடுவது என்றால், நமது விருப்பத்துக்கு வணங்க வழிபட முடியாது. அது கடவுள் விரும்பியாடிதான் அமையவேண்டும். அதற்கு நாம் சைவ சமய வேதத்தை வாசிக்க வேண்டும். ஆனால் இன்று அதற்கு உள்ள சாத்தியகூறுகளை சிந்திக்கவேண்டி உள்ளது.

தேவர்களின் எண்ணிக்கை என்ன?

தேவர்கள் என்றதும் பெரும்பாலானோர் சம்ஸ்கிருத வேதங்களில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை தேடி செல்கின்றனர். நாம் நமது மொழியில் வந்த வேதத்திலும், நமது மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதங்களையும் தேடி பார்ப்போம் வாருங்கள். 

தமிழர் சமயம்

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

குறிப்பறிந்தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந்தேன் மிகுதேவர் பிரானை
மறிப்பறியாது வந்துள்ளம் புகுந்தான்
கறிப்பறியா மிகும் கல்வி கற்றேனே.

குறிப்பு: உள்கருத்து
செறிப்பு: செறிவு, நெருக்கம்
மிகு தேவர்: அளவில்லா தேவர்கள்
மறிப்பு: தடை
கறிப்பு: காரம், கடினம் 

விளக்கம்: உடலோடு உயிர் கூடிய உட்கருத்தை தெரிந்து கொண்டேன், எண்ணிலடங்கா தேவர்களின் தலைவனுடைய நெருக்கம் அறிந்தேன். தடையேதும் இல்லாமல் உடனே என் உள்ளத்தில் புகுந்து வீட்டிருப்பதையும் தெரிந்து கொண்டேன். தானாக பெருகும் குணமுடைய கல்வியை கடினம் அறியாமல் கற்றேன்.

இஸ்லாம்

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (குர்ஆன் 74:30)

கிறிஸ்தவம்

11 Then I looked and heard the voice of many angels, numbering thousands upon thousands, and ten thousand times ten thousand. They encircled the throne and the living creatures and the elders.

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது (வெளி 5) 

முடிவுரை  

தேவர்களின் எண்ணிக்கையை யாரும் அறியார். அதை முப்பத்து முக்கோடி என்று கூற எந்த வேத ஆதாரமும் இல்லை.