கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளமல் (கருத்தை மறுத்து பிழை என்று நிருவாமல்) தனிநபரை வசைபாடும் அணுகுமுறை சரியா? பிழையா? இவ்வாறு செய்யும் ஒருவரை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 100% பிழையான அணுகு முறை.

அவர்களை மன நோயாளிகளாக பார்க்கிறேன். முற்றிய மன நோயாளிகள்தான் எதிர் இருப்பவர் யார்? என்ன பேசுகிறார்? எதற்காக பேசுகிறார்? என்று எதையும் நோக்காமல் அவரை எதிரியாக கருதி அவரை காயப்படுத்துவத்திலே குறியாக இருப்பார். அவர்களுக்காக பரிதாப பாட்டு கடந்து செல்வதே சிறந்தது.

சமயங்கள் கூறும் அறநெறிகளான பணிவு, அன்பு, மறைநூல் வரி சான்றுகள் ஆகியவற்றை கொண்டு அவர்களிடம் பேசினாலும் தொடர்ந்து வசை சொற்களையே பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடம் வெகுவாக இருக்கிறது.

அதீத வெறுப்பு ஆன்மாவுக்கும், அமைதிக்கும், ஆரோக்கியத்துக்கும் தீங்கு தரும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைத்துவிட முடியாது.

ஆன்மீக ஈடுபாடு உடைய ஒருவர் இன்னொரு ஆன்மீக தத்துவத்தை நம்புகிறவரை வெறுப்புடன் கையாள முடிகிறதென்றால் அவரின் ஆன்மீகமும் அவர் வாசிக்கும் மறை நூல்களும் அவருக்கு எவ்வித பலனையும் தரவில்லை என்று பொருள்.

எந்த சமயத்தை சார்ந்தவராயினும் அது இன்னொருவரை வசைபாடுவதால் எந்த ஒன்றையும் சாதித்து விட முடியாது என்று அவரவர் மறைநூல் கூறுகிறது.

கிறிஸ்தவம்

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

உங்களை எல்லா வகையிலும் நல்ல செயல்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுங்கள், உங்கள் போதனையில் நேர்மை, கண்ணியம் மற்றும் கண்டிக்க முடியாத தெளிவான பேச்சைக் காட்டுங்கள் - டைட்டஸ் 2:7-9

இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் இறை நமபிக்கையினுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். - நூல் : திர்மிதி (1950)

வீணா­ன­வற்றைக் கடக்­கும்­போது கண்­ணி­ய­மாகக் கடந்து விடு­வார்கள். அல்­குர்ஆன் (25 : 72)

அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.” நூல்: புகாரி (6018)

தமிழர் சமயம்

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் - (நல்வழி வெண்பா : 33)

விளக்கம்: பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பொருள்: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பொருள்: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி

இருப்பக் காய்கவர்ந் தற்று. (௱ - 100)

பொருள்: இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!

நாம் பிழை என்று கருதுவதை இன்னொருவர் சரி என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நமது அடுத்த நகர்வு, நமது நம்பிக்கையை நாம் ஏன் சரி என்று கருதுகிறோம் என்று ஆரயாவதும், அவரது நம்பிக்கை ஏன் பிழை என்று நாம் கருதுகிறோம் என்பதையும் முறையாக தெரிவிப்பதும் என்றவாறு இருக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பில் வசைபாடுவது, அவரது கல்வி அவருக்கு எந்த வித பயனும் அளிக்கவில்லை என்பது கண்கூடாக வெளிப்படும் நிலை ஆகும். அவருக்கு பதில் அளிக்காமல் கடந்து செல்வது தான் அனைத்து சமய மறை நூல்களும் தரும் வழிகாட்டுதல் ஆகும், அதை செய்வது தன் நமது கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக