இறைவனின் அரியணை

தமிழர் சமயம் 

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே - (8ம் தந்திரம் - 14. அறிவுதயம் 2356.)

அங்கே அடற்பெரும் தேவரெல்லாம் தொழச்
சிங்காதனத்தே சிவன் இருந்தானென்று
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்கு ஆர் குழலியும் போற்றி என்றாளே

கிறிஸ்தவம் 

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:4-5)

 இஸ்லாம் 

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 57:4)

நாகூர் தர்கா பற்றி கூற முடியுமா?

 நாகூர் மட்டுமல்ல வேறு எந்த தர்காவும் இஸ்லாத்துக்கு தொடர்புடையது அல்ல.

1. படைத்த இறைவனை தவிர மற்றவர்களை வணங்க கூடாது.

ஏனென்றால் இறந்தவர்கள் எவ்வளவு பெரிய அவுலியாவாக இருந்தாலும், முகமது நம்பியாகவே இருந்தாலும் அவர்களை வணங்க எவருக்கும் அனுமதி இல்லை.

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்ஆன் 17:23)

ஏனென்றால் முகமது நபி அவர்களும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்! " - (நூல்: புகாரி 3445)

முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 827

2. அது இறைவனைக்கு இணையாக வேறொன்றை கருதுவது ஆகும்

ஏனென்றால் இவ்வாறு உலகு அனைத்தையும் படைத்த கடவுளைத் தவிர வேறெவரும் வணங்கப்பட தகுதி அற்றவர்கள். அவ்வாறு செய்தால் அது படைத்து பாதுகாத்து அழிக்கும் இறைவனுக்கு இணையாக வேறொன்றை கருதுவது போல் (ஷிர்க்) ஆகும்.

இவ்வாறு படைத்து பரிபாலிக்கும் இறைவனைத் தவிர வேறு எதை வணங்கினாலும் மனிதனுக்கு நிம்மதி அற்றுப் போகும்.

3. அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யவோ அல்லது அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கவோ மரணித்தவர்களால் செய்ய முடியாது

அல்ல, நாங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டி நல்லடியார்களிடம் பிராத்தனை செய்ய மட்டுமே செல்கிறோம் என்று சிலர் கூறுவதுண்டு. அவர்களிடம் அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். - (திருக்குர்ஆன் 39:3

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. - (குர்ஆன் 27:80)

அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்று சிலரும் சொல்வதுண்டு ஆனால் அதுவெல்லாம் வெரும் பசப்பு வார்த்தைகளே.. ஏனென்றால் கடமையாக விதிக்கப்பட்ட தொழுகை, நோன்பு, ஜக்காத், பொருமை உட்பட பல அமல்களை விடுத்து கட்டாயமாக்கப்படாத ஒன்றை இவர்கள் செய்வது எவ்வகையில் பொருத்தமாகும்? எப்படி உண்மையாகும்?.

4. மண்ணறைகளை உயர்த்தி கட்டக் கூடாது

மேலும் மனிதர்கள் புதைக்கப்பட்ட இடத்தை தர்கா கட்டிடம் போன்று அல்ல, சிறிதளவு கூட உயர்த்தி கட்ட இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, முஸ்லிம் – 921, அபூதாவூத் – 3227, நஸாயீ – 703, முஅத்தா – 414, தாரமி – 1403, அஹ்மத் – 1884, நஸாயீயின் குப்ரா – 782, பைஹகீ – 7010, அபூயஃலா – 5844, தப்ரானி (கபீர்) – 393-411 - இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

(கப்ருகளை) இறந்தவர்களை புதைத்த இடங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி) நூல்: அஹ்மத் 1602

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை மஸ்ஜித்களாக தர்காக்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 437

‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி) நூல்: முஸ்லிம் 827

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதை தர்காவை கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்” எனக் கூறினார்கள். நூல்: புகாரி 427, 434, 1341, 3873

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் 1746

இவ்வளவு தெளிவாக வேறு எந்த மார்க்கத்திலும் குறிப்பிடவில்லை. எனவே தர்காவில் வணங்கும் ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்து கொள்கிறார்.

வழிபாடு

வழிபாடு - வழிபடுதல் - வழிப்படுதல் - கட்டுப்படுத்தல்

வழிபாடு எனும் சொல் இறைவணக்கம் எனும் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள். இறைவனுக்கு கட்டுப்படும் பொழுது அவனை வணங்குவது ஒரு பகுதி, ஆனால் இறைவணக்கம் மட்டுமே வழிபாடு ஆகாது.  வழிபடுதல் எனது இறைவன் நான்மறைகளில் கொடுக்கப்பட்ட அறத்தை தொடர்ந்து பின்பற்றி பாவத்தை விடுவதன் மூலம் தூய உள்ளத்தை அடைவதுதான் வழிபாடு ஆகும். 

தமிழர் சமயம்

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)


கருத்து: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்.

கிறித்தவம்

ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இஸ்லாம்

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 24:52)

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இறைத்தூதருக்கும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்." (அல்குர்ஆன் 4:59)

முடிவுரை

இறைவனை வணங்குவது மட்டும் இறைவனின் எதிர்பார்ப்பல்ல. அவன் வேதத்தில் வழங்கிய அறத்துக்கும், நீதிக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பதுதான் இறைவணக்கத்தை பூர்த்தி செய்யும். அல்லாதவருக்கு அவன் துணை நிற்க மாட்டான், வெற்றியை அளிக்க மாட்டான், சொர்கத்தை வழங்கமாட்டான் என்பதே இறைவனின் வாக்குறுதியாக உள்ளது.