தூதர்கள்

திருக்குறள் - அதிகாரம் : தூது

குறள்:681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அன்பான குணமும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பவரே தூது சொல்பவனின் தகுதிகளாகும்.

குறள்:682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

குறள் விளக்கம்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

குறள்:683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக இருத்தல் வேண்டும்.

குறள்:684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

குறள் விளக்கம்:
இயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.

குறள்:685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
செய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படியும் சொல்லி நன்மையைச் செய்பவனே தூதனாவான்.

குறள்:686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

குறள் விளக்கம்:
நீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.

குறள்:687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

குறள் விளக்கம்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.

குறள்:688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

குறள் விளக்கம்:
பொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், அச்சமற்ற துணிவு இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

குறள்:689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.

குறள் விளக்கம்:
தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்று அரசரிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

குறள்:690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

குறள் விளக்கம்:
தான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.
_______________________________________

திருமூலர் திருமந்திரம்

வேதத்தைச் செப்ப வந்தேனே' - 77
'ஆகமம் செப்ப லுற்றேனே' - 73


https://www.ytamizh.com/thirukural/kural-690/
source : https://shaivam.org/scripture/Tamil/1927/thirumandira-araichiyum-oppumai-pakuthiyum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக