தர்மம் எதற்காக செய்யவேண்டும்?


மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா
லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க
வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். - நாலடியார் 37

கருத்துரை: நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.

விசேடவுரை: (நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.

பதவுரை
    மக்களால்= மனிதர்களால்,
    ஆய= உண்டாய,
    பெரும்= பெரிய,
    பயனும்= விளைவும்,
    ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
    எத்துணையும்= எவ்வளவும்,
    ஆற்ற= மிக,
    பல ஆனால்= பலவாயிருந்தால்,
    தொக்க= பொருந்திய,
    உடம்பிற்கே= உடலுக்கே,
    ஒப்புரவு= தருமத்தை,
    செய்து= பண்ணி,
    ஒழுகாது= நடவாமால்,
    உம்பர்= சுவர்க்கத்தில்,
    கிடந்து= இருந்து,
    உண்ண=அநுபவிக்க,
    பண்ண= தருமங்கள் செய்ய,
    படும்= தகும்.


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். நாலடியார் 3328

பதவுரை 
சிறுகாலை = இளமை
வல்சி = உணவரிசி
தோள்-கோப்பு = கட்டுச்சோறு

கருத்துரை 
இளமையாக இருக்கும்போதே பிற்காலத்துக்கு (மறுமைக்கு) உதவும் நல்லறப் பொருளைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளியூர் செல்வோர் இறுக்கி இறுக்கிக் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வது போலச் சேர்த்து வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். இருக்கும் செல்வத்தை இறுக்கி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பவர் அறிவிர்ராத பேதை ஆவார். அவர் வைத்துக்கொண்டிருக்கும் பொன் பழுக்காத புளிப்புத் தன்மையுள்ள விளாங்காய் போன்றது. விளாங்காய் தின்றால் தொண்டை விக்கும். அப்போது தண்ணீர் பருகினாலும் தண்ணீரும் விக்கும்.

இஸ்லாம் 

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

கிறிஸ்தவம்

இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.  - (மத்தேயு 19:21)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக