ஊணன் - foodie (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)

தமிழர் சமயம்


மிகுதியாய் உண்ணக் கூடாது 

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் - புலன்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத் துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன்.  - அறநெறிச்சாரம் பாடல் - 135 

விளக்கவுரை உள்ளமே! பின்னால் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பத்தின் பொருட்டுத் தீவினைக்குரிய செயல்களைச் செய்யாதே! அத் தீவினைகள் உன்னை ஒறுக்கும்போது அப்பொறிகள் ஐந்தும் உனக்கு அறிவுரை கூறுதற்கேற்ற துணையும் ஆகா. ஆதலால் புலன் நுகர்ச்சி காரணமாக மிக்க உணவை விரும்பாது அளவுடன் உண்பது கடமையாகும்.

மிக்க உணவால் வரும் கேடு 

புகாப்பெருக ஊட்டின் புலன்கள் மிக்கூறி
அவாப்பெருகி அற்றம்தருமால் - புகாவும்ஓர்
பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன். - அறநெறிச்சாரம் பாடல் - 136

விளக்கவுரை வயிற்றுக்கு உணவை மிகுதியாக ஊட்டினால் ஐம்பொறிகள் அடங்காமல் ஆசை மிகப்பெற்று அழிவை அளிக்கும்; ஆகவே உணவைக் கரணங்கள் தொழிப்படுவதற்கு ஏற்ற நிலையில் சிறிதளவே உண்டு இந்த உடலால் வீடு பேற்றுக்கு உரிய செயல்களைச் செய்துகொள்வதே அற நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் கடமையாகும்.

 உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 7)

பதவுரை: உண்டி - மிக்க உணவை, உறு பிணி - மிகுந்த நோய்

பொருள்: உணவினை மிகுதியாக விரும்புபவர்களுக்கு நோய் உண்டாகும்.

 மீதூண் விரும்பேல்” (ஆத்திச்சூடி 91)  

பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே. 

 

இஸ்லாம்


இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!

(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), (ஆதாரம்: புகாரி.)

கிறிஸ்தவம் 

...எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.. - (நீதிமொழிகள் 23:1-3)

19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. 20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! 21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள். - (நீதிமொழிகள் 23:19-21)

6 கருத்துகள்:

  1. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திடப் பறந்து போம் - நல்வழி வெண்பா : 26

    விளக்கம்: ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.

    பதிலளிநீக்கு
  2. வயிறே நின்னுடன் வாழ்தல் அரிது

    ஒருநாளும் நீதரியாய் உண்என்று சொல்லி
    இருநாளைக்கு ஈந்தாலும் ஏலாம் - திருவாளா
    உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ்வுடம்பே
    நின்னோடு வாழ்தல் அரிது. பாடல் - 36

    விளக்கவுரை பசியால் வருந்தும் உடம்பே! உணவற்ற காலத்தில் ஒரு நாளும் பொறுத்திராமல் உண்பாய் என்று கூறி (செல்வம் மிக்க காலத்தில்) இரண்டு நாள்களுக்கு உணவு அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டாய்! திருவுடையவனே! உன்னுடன் கூடி வாழ்வதால் அடையும் பயன் சிறந்தது என்றாலும், உன்னுடன் வாழ்வது என்பது துன்பம் தருவதாகும்

    பதிலளிநீக்கு
  3. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின். – 942

    முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
    — மு. வரதராசன்

    அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)

    முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். — மு. வரதராசன்

    அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து. (௯௱௪௰௪ - 944)

    முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
    — மு. வரதராசன்

    மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)

    மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. (௯௱௪௰௫)
    — மு. வரதராசன்

    இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய். (- 946)

    குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
    — மு. வரதராசன்

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். (947)

    பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
    — மு. வரதராசன்

    https://www.thirukkural.net/ta/kural/kural-0942.html

    பதிலளிநீக்கு
  4. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

    பதிலளிநீக்கு
  5. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.
    (குறள் 944: மருந்து அதிகாரம்)

    அற்றது அறிந்து – எவ்வுணவு உண்டால் நன்றாக செரிமானம் ஆனது என்று அறிந்து கொண்டு
    கடைப்பிடித்து – அதையே பழக்கமாகக் கைக்கொண்டு
    மாறல்ல துய்க்க – அப்பழக்கத்தினிறும் மாறாமல் உண்ணுக
    துவரப் பசித்து – நன்றாகப் பசித்த பிறகு.

    “பசித்துப் புசி” என்றொரு சொலவடை உண்டு. அதை வலியுறுத்துவதே இக்குறள். முன்னர் செரித்த உணவு வகைகள் என்னவென்று அறிதலும், புரிதலும், பின்னர் அதையே பழக்கமாகக் கொள்ளுதலும், அந்த உணவு உண்ணும் பழக்கம் (உண்ணும் நேரம், அளவு, கால இடைவெளி இவற்றை உள்ளடக்கியது) மாறாமல், ஆனாலும், நன்றாகப் பசித்த பிறகே ஒருவர் அடுத்த வேளைக்கான உணவை ஒருவர் புசிக்க வேண்டும்.

    மு.வரதராசன் விளக்கம்:
    முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
    மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
    தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
    நன்மை பயத்தல் இல. . . . .[திரிகடுகம் 10]

    கணக்கிடுவோர் இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும், அளவு பார்த்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது

    பதிலளிநீக்கு