தீமையின் மூலம் நன்மை விளையாது

தமிழர் சமயம்


கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும் (அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:658)

பொழிப்பு (மு வரதராசன்): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். 
 

இஸ்லாம்


..."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (குர்ஆன்  6:151)

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- (புகாரி, முஸ்லிம்
 

கிறிஸ்தவம் 

அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை பின்பற்றாமல்  போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான். (2 இரா. 22:13)


இரப்பவர் யாராயினும் இடுக

தமிழர் சமயம்


ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்;
பார்த்து இருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினரே (திருமந்திரம் 250)

‘இவருக்கு இடு, அவருக்கு இடாதே,’ ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்றெல்லாம் பழைய மரபுகள் பலவாறு சொல்லும்; அவற்றையெல்லாம் போற்ற வேண்டாம். இரப்பாரை அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.

இஸ்லாம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒரு பிச்சைக்காரன் குதிரையில் வந்தாலும் அவருக்குக் கொடுங்கள்" என்று ஜயத் இப்னு அஸ்லமிடமிருந்து மாலிக் என்னிடம் கூறினார். (நூல்: முவத்தா மாலிக், சதக்கா, புத்தகம் 58, ஹதீஸ் 1846) 


கிறிஸ்தவம்

இயேசு, “உன்னிடம் கேட்கும் அனைவருக்கும் கொடு. உங்கள் பொருட்களை எடுத்துச் செல்பவரிடமிருந்து அவற்றைத் திரும்பக் கேட்காதீர்கள்” (லூக்கா 6:30)

இரக்கம்

தமிழர் சமயம்  

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும் (அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:575)

பொழிப்பு: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் (இரக்கம்) என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

குறிப்பு: கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர்.  

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம் (உலக நீதி 67) 

பொருள்: இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே

கிறிஸ்தவம்  

எனவே சுதந்திர சட்டத்தின் கீழ் நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்களாக பேசுங்கள் மற்றும் செயல்படுங்கள். ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பு. தீர்ப்பின் மீது கருணை வெற்றி பெறுகிறது. (ஜேம்ஸ் 2:12-13)

இஸ்லாம் 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: எவர் படைப்பினங்களின்‬‪ கருணை காட்டவில்லையோ‬ அவன் மீது படைத்தவன் கருணை காட்ட மாட்டான். - (ஸஹீஹ் புஹாரி 6013)

ஒப்பாரி


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும். (10 நல்வழி)

பொருளுரைபெரிய பூமியிலுள்ள மனிதர்களே; வருடம் முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் திரும்பி வருவரோ, வரமாட்டார்; ஆதலினால், அழ வேண்டுவதில்லை; நமக்கும் அம்மரணமே வழியாகும்; 

அழுவது பயன் தருமா?  உலகத்து இயற்கை என்னவென்று அறியாமல் அழுவது பயன் தருமா? உலக இயற்கை சொல்கிறது குண்டலகேசிப் பாடல் ஒன்று:

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?

பொருள்: பச்சிளம் குழந்தையராக இருந்தோம். அந்தக் குழந்தைமை செத்துவிட்டது. குழந்தைமையைக் கொன்றுதான் பிள்ளையரானோம். அந்தப் பிள்ளைமை செத்துவிட்டது. பிள்ளைமையைக் கொன்றுதான் காளையரானோம். காளைத் தன்மை செத்துவிட்டது; காமவேகம் ஊட்டுகிற இளமையும் செத்துவிட்டது. இளமையைக் கொன்று மூத்தோம்; காமத்தைக் கொன்று கனிந்தோம். இதுதான் இயல்பு. பழையது சாகும். பழையதன் சாவில் புதியது பிறக்கும். புதியதும் சாகும்-குருத்தையும் குலையையும் ஈன்று வாழை தான் சாவதைப் போல. குருத்திலிருந்து வாழை, மீண்டும் வாழையிலிருந்து குருத்து என்று இது ஒரு சுழற்சி. சாவதற்காக அழுவதென்றால் அழுவது மட்டுமே வாழ்வாக இருக்கும்-ஏனென்றால், ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோம்.

உறக்கமும் சாவும் ஒன்று - வாசிக்க  

இஸ்லாம் 

"இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் ‎அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பரம்பரையை குறைகூறுதல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்‎" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.‎ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎ - (நூல்: முஸ்லிம் 100‎)

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா (ரலி) ஜஅஃபர் (ரலி) இப்னு ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, ‘அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து’ எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்துவிட்டனர்” என்றார். ”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, ‘அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். (புஹாரி: 1299 ஆயிஷா (ரலி))

ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம் (ரலி) உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத் (ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண், (புஹாரி: 1306 உம்மு அதிய்யா (ரலி))

நாங்கள் (மகளிர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரி வைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் ‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரி வைத்து) விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள். (புஹாரி: 4892 உம்மு அதிய்யா (ரலி))

 (துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)  (நூல் : புகாரி 1294)

 உமர் (ரலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கள்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  (நூல் : புகாரி 1304) 

உமர் பின் அல்கத்தாப் (ரலி) (கத்தியால்) குத்தப்பட்டபோது, அவர்களுக்காக (அவர்களுடைய மகள்) ஹஃப்ஸா (ரலி) சப்தமிட்டு அழுதார்கள். அப்போது உமர் (ரலி), “ஹஃப்ஸா! ‘சப்தமிட்டு எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுகின்றார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். (அவ்வாறே உமர்மீது அதிக அன்புகொண்டிருந்த) ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழுதபோதும் “ஸுஹைப்! ‘சப்தமிட்டு எவருக்கு அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). (நூல் முஸ்லீம், அத்தியாயம்: 11, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1542)

கிறிஸ்தவம் & யூதமதம் 

இறந்தவருக்காக அழாதே, அவனுக்காக துக்கப்படாதே, போனவனுக்காக எப்பொழுதும் அழாதே; ஏனென்றால் அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார், அல்லது தனது சொந்த நிலத்தைப் பார்க்க மாட்டார். (எரேமியா 22:10)


முகமது நபி ﷺ இஸ்மாயீலின் சந்ததிதான்!


வாழ்த்துக்கள் சகோ,

உங்களது ஆய்வில் உள்ள சில பிழைகளை சுட்டிக்காட்ட இந்த பதிவு, ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம்.

முதலில், "இஸ்மவேல் என்று கிறிஸ்தவத்திலும் இஸ்மாயீல் என்று இஸ்லாத்திலும் அழைக்கப்படுகிறவர்" என்று நீங்கள் கூறுவது பிழை. பைபிளும் இஸ்மாயீல் (Ismayel) என்றுதான் அழைக்கிறது, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பின் நிலை இவ்வாறு உள்ளது.

இரண்டாவது, "நம்பிக்கை அடிப்படையிலே முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்" என்று கூறுவதன் மூலம் எந்த நம்பிக்கையும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூற வருவதாக நான் புரிந்து கொள்கிறேன். 
 
உங்களிடம் உள்ளது கர்த்தரிடம் வந்த, இயேசு அவர்கள் மூலம் வெளிப்பட்ட, உண்மை பைபிள் என்பதற்கான ஆதாரம் என்ன? இல்லை என்பதற்கான ஆதாரம் கிறிஸ்தவ இணைய தலங்களிலேயே விரவிக் கிடக்கிறது. சில ஆதாரங்கள் கீழே ஒன்றன் பின் ஒன்றாக விளக்கப் பட்டுள்ளது.

மூன்றாவது, "புஹாரி நூலானது முகமது நபிக்கு 200 வருடத்துக்கு பிறகு தொகுக்கப் பட்டுள்ளது" என்பதை குறிப்பிடுவதன் மூலம் அதன் மீதான உண்மைத் தன்மையை கேள்வி எழுப்புகின்றீர்கள். ஆனால் பைபிளை பற்றிய பின்வரும் செய்தியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

"27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல் , 4 ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப் அதானசியஸ் 367 AD இல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் உள்ள ஹிப்போ (393 AD) மற்றும் கார்தேஜ் (397 AD) சபைகளின் போது முதன்முதலில் முறையாக நியமனம் செய்யப்பட்டது" - New Testament wikipedia
 
சில நூல்களில் கிறிஸ்துவுக்கு பிறகு 45 முதல் 95 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டது என்கிறது.

நான்காவது, "ஹதீஸ் நூலகளைப் பற்றி முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது" என்று கூறுவதன் மூலம் அனைத்து ஹதீஸ் நூல்களையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்க விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன்.

புஹாரி நூலானது குர்ஆனுக்கு அடுத்த நம்பகமான நூல். 1200 வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் விளக்கவுரை எழுதி உள்ளனர். அதில் எவரும் இதன் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ் நூல்கள் உண்டு, அவை அனைத்தும் ஒரே தரமுடையதல்ல. எதிரிகள் அவர்கள் விருப்பட்டதை எழுதி ஹதீஸ் நூல் என்று சொன்னால் அதை எவ்வாறு தரம் பிரிப்பது என்று அறிவியல் ரீதியான ஒரு முறையினை கையாண்டு எழுதப்பட்ட நூல் புஹாரி. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் இமாம் புஹாரியால் சேகரிக்கப்பட்டு வெறும் 7000 மட்டுமே நூலில் பதியப்பட்டுள்ளது. மற்றவைகள் ஏன் பதியப்படவில்லை?, இவைகள் ஏன் பதியப்பட்டுள்ளது? என்பதற்கு தனி தொகுப்புடைய நூல்கள் உள்ளது. நீங்கள் கூறும் நூலின் பெயர் ஸஹீஹ் புஹாரி. ஸஹீஹ் என்றால் உண்மையான என்று பொருள்.

உதாரணமாக, பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தை எடுத்து கொள்வோம். கிறிஸ்துவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட பைபிளில், ஜான் எழுதிய சுவிசேஷம், இயேசு அவர்களின் சீடரான ஜான் தான் எழுதினார் என்பதற்கும், ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அவர் எழுதிய சுவிசேஷம் மட்டும் தான் அதில் உள்ளது என்பதற்கும், அதில் பின் வந்தவர்கள் இடைச்சொருகல்கள் செய்யவில்லை என்பதற்கும், என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு? வெறும் நம்பிக்கை மட்டுமே உங்களிடம் உண்டு, ஆதாரம் இல்லை.!

ஐந்தாவது, பைபிளின் வசனத்தை அடிப்படையாக கொண்டு, குர்ஆனின் செய்தியை மறுக்க முடியாது. பைபிள் பரிசுத்தம் இல்லாதது என்கிறது குர்ஆன். இது வெற்று நம்பிக்கையல்ல, ஆதாரம் இதோ.

விருத்தசேதனம் ன்பது ஆப்ரஹாமின் சந்ததிகள் கர்த்தருடன் செய்துகொண்ட கால எல்லையற்ற உடன்படிக்கை ஆகும்.

இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். - (ஆதியாகமம் 17:10)

ஆனால் இப்படி ஒரு கேள்வி பைபிளில் உள்ளது! 

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? - (ரோமர் 3:1)

கட்டளையிட்டவர் உலகம் அனைத்தையும் படைத்த இறைவன் என்பதைவிட வேறு சிறப்பு வேண்டுமா?

ஆனால், இயேசுவுக்கு பின் வந்தவ பால் என்ன சொல்கிறார்?  

ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். - (1 கொரி 7:19)

விருத்தசேதனம் செய்வதே கர்த்தரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாகும் அல்லவா?

கர்த்தருடன் இப்ராஹிமின் சந்ததி செய்து கொண்ட உடன்படிக்கையை, கர்த்தரோ அல்லது அவரது தீர்க்கதரிசியான இயேசுவோ தானே முறிக்க முடியும்? இயேசுவின் காலத்துக்கு பிறகு பால் என்று யாரோ ஒரு மனிதர் தன்னைத்தானே இயேசுவின் சீடராக அறிவித்து, கர்த்தருடனான விருத்தசேதன உடன்படிக்கையை முறித்து விடுகிறார். அவரைப்பற்றி முன்னறிவிப்போ அல்லது விருத்த சேதனத்திற்க்கான கால எல்லையோ பைபிளில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. 

பைபிள் கறைபடிந்தது என்பதற்கு இதைவிட சான்று என்ன தேவை?  

ஆறாவது, "சாராள் மகனுக்கு எகிப்துலிருந்து ஒரு பெண்ணை தன் மகனுக்கு கண்டுபிடித்தாள்" என்ற பைபிளின் செய்தியானது, "ஆப்ரகாமினால் வனாந்திரத்தில் விடப்பட்ட சாராள், விடப்பட்ட இடத்தின் வழியே வந்த ஏமன் நாட்டு கூட்டத்தாரின் பெண்ணை பிற்காலத்தில் இஸ்மாயில் திருமணம் செய்தார்" என்கிற புகாரியின் செய்தியோடு முரண்படுகிறது என்கிறீர்கள். இதன் மூலம் முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி அல்ல என்று நிறுவ முயல்கிறீர்கள்.

ஆனால், 1) கர்த்தருக்கும் இப்ராஹிமின் சந்ததிக்கும் இடையிலேயான "விருத்தசேதன ஒப்பந்தம்" முகமது நபியின் காலத்துக்கு முன்னமே அங்கே பின்பற்றி வந்ததற்கான வரலாற்று சான்றுகள் பல உண்டு. இஸ்மாயில் அங்கே வாழ்ந்திராமல் அது சாத்தியமில்லை.

மேலும் நீங்கள் சொல்லும் முரண்பாட்டில், தவறான தகவலாக பைபிளில் உள்ளத்தைத்தான் கருத முடியும். ஏன்?

2) ஆதியாகமம் 21:21 இல் இஸ்மாயீல் மற்றும் இஸ்மாயீல்களுடன் பரான் தொடர்பு இருப்பதை புவியியலாளர் யாகுத் அல்-ஹமாவி உறுதிப்படுத்துகிறார், அவர் " பரான், ஒரு ஹீப்ரு வார்த்தை, தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள மெக்காவின் பெயர்களில் ஒன்றாகும்." என்று கூறுகிறார் - Desert of Paran wiki

எனவே அரேபியாவிலிருந்து சாராள் எகிப்துக்கு சென்று பெண்ணை கண்டுபிடித்தால் என்பதைவிட, பிற்காலத்தில் தன் இடம் நோக்கி வந்த மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் தேர்ந்தெடுத்தாள் என்பதுதான் பொருத்தமானதாகும்.

மேலதிகமாக, 3) இஸ்மாயில் அவர்களுக்காக உருவான நீரூற்று என்பது என்றென்றும் வெளிப்படும் கெட்டுப்போகாத, எண்ணிலடங்கா நன்மைகள் நிறைந்த ஜம்ஜம் நீராக அல்லாமல் வேறெந்த இடத்தில் உள்ள நீராக இருக்க முடியும்? கர்த்தரின் அற்புதம் அல்லவா அது?

ஏழாவது, முகமது நபியின் வம்சம் பற்றியுள்ள முரண்பாடுகளை அர்-ரஹீக்குல் மக்துமில் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மைதான்.  

ஆனால் அதைக் கொண்டு புகாரியின் செய்தியை பொய் என்று நிறுவமுடியாது. ஏன்?

ஏனென்றால் அந்த முரண்பாடுகள் தரவுகளின் குறைபாட்டால் ஏற்பட்டது. வேறு தரவுகள் இருந்தாலும் இல்லையென்றாலும் புகாரியின் செய்தி உண்மையானதே. 

உதாரணமாக ஆதம் ஏவாளின் செய்திகளை பைபிள் சொன்னதால் நம்பும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வேறு இடங்களில் தேடி அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரத்தின் அடிப்படையில் பைபிளில் சொன்ன செய்திகளை நீங்கள் ஏற்பதில்லை. 

முகமது நபி அவர்களின் வம்ச செய்தியை பின்னாளில் பொய் என்று கூறி எடுத்துவிட்டார்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு நபிமொழி-யின் தரம் தான்தோன்றித்தனமாக நிணயிக்கப் படுவதில்லை என்கிற செய்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

அதற்கென்று விதிகள் உள்ளன.அந்த விதிகளின் நோக்கம், அந்த செய்தி உண்மையிலேயே முகமது நபியால் சொல்லப்பட்டாதா அல்லது இடையிலே எதிரிகளால் சொருகப் பட்டதா என்று பிரித்தறியும் விதத்தில் அமைந்து உள்ளது. 

எட்டாவது, குர்ஆனின் 3:84, 6:156,157, 28:46 போன்றவைகளை குறிப்பிட்டு, "இஸ்மாயிலுக்கும், இஸ்மாயயிலின் சந்ததிக்கும் வேதம் கொடுக்கப்பட்டுள்து" என்று சில வசனத்திலும்,"வேதம் கொடுக்கப்படாத சமுதாயம் அரபு சமுதாயம்" என்று சில வசனத்திலும் குறிப்பிட்டுள்ளதை முரண்படுவதாக கருத தேவையில்லை. 

 காரணம் 1) நபி, ரசூல் என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் உண்டு. அதன் வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. தமிழிலே தேவாரம் திருவாசகம் போன்றவைகள் பெரியதாகவும் இருப்பதற்கும், ஆத்திச்சூடி சிறியதாக இருப்பதற்கும் காரணம் உண்டு. மோசஸின் நான்கு புத்தகங்கள் பெரியதாகவும் ரூத்தின் செய்தி சிறியதாக இருப்பதற்கும் இருக்கும் காரணமுண்டு.

காரணம் 2) இஸ்மாயீலின் காலத்துக்கும் முகமது நபியின் காலத்துக்கும் இடையில் சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இத்தனை ஆண்டுகள் வேதம் கொடுக்கபடாத மக்களை வேதம் கொடுக்கப்படாதவர் என்றுதானே குறிப்பிட முடியும். சில நூறு ஆண்டுகள் இடைவெளியே மக்களின் குணத்திலும் செயலிலும் கலாச்சார பண்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்கிற பொழுது "சில ஆயிரம் ஆண்டுகள்" என்பது மிக மிகப் பெரிய இடைவெளி. 

எனவே முகமது நபி இஸ்மாயிலின் சந்ததி என்பதற்கு இவைகள் போதுமான ஆதாரங்கள்.

இறுதியாக, முகமது நபி அவர்கள் ஆதாமின், நோவாவின் சந்ததி தான் என்று நிறுவத் தேவையில்லை என்று கருதுகிறேன். 

மேலும் வாசிக்க