உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை, கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை, தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம், கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம், மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு, காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்தகாலை ..... - (அகம்.86)
முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.
இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே .......... - (அகம். 136)
இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.
பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - (கலி. 69)
திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:
...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - (பெருங். உஞ்சை. 42)
இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.
கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - (குறள் 1087)
இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும். சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களையும் முகத்தையும் மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் படுகிறது.
சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
பொழிப்பு: மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது. பரிமேலழகர்
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப
கற்பு நெறி காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் வீரியம் வாய்க்கின்றது.
உபதேசங்களுக்கு பஞ்சம் இல்லை. பின்பற்ற வேண்டும் என்றால் பஞ்சம்தான். மு வரதராசன்
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. (தொல்காப்பியம்: களவியல் 8)