வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

வேதங்களை ஒப்பு நோக்குவது கல்வியின் ஒரு இன்றியமையாத பகுதி. அது உண்மை வேதம், உண்மை குரு, உண்மை தெய்வம் மற்றும் பொய் வேதம், பொய் குரு, பொய் தெய்வங்களுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குவதுடன் அதில் உண்மையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும். உண்மை பிறப்பறுத்து வெற்றிக்கு வழிகாட்டும். வேதங்களை ஒப்பு நோக்கும் காரணத்தையும் அவசியத்தையும் நான்மறைகள் கீழ்கண்டவாறு விளக்குகிறது. 

தமிழர் சமயம் 


உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது. (ஏலாதி 64)

பொருள்: எல்லாரினும் உயர்ந்தவன் தலைவனாவா என்று ள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு. (ஏலாதி  75)

விளக்கவுரை ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்து உணர்ந்து, மறு வரவில் ஆராய்ந்து நீக்கி தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்கி. மறுவரவின் ஆசிரியனாக மீண்டும் சொல் மாற்றுதலே ஆசாரியனின் அமைவு. (இது வழி நூல் வரும் முறையை சொல்கிறது)

இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். - (அறநெறிச்சாரம் பாடல் - 39)
 
விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!  
 
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு - (அறநெறிச்சாரம்: அறத்துக்கு இன்றியமையா 4: 3)

விளக்கவுரை: அறத்தை உரைப்பவனையும், அந்த அறத்தைக் கேட்பவனையும் உரைக்கப்படும் அறத்தையும், கூறியதால் ஏற்படும் பயனையும் குற்றம் இல்லாமல் ஆராய்ந்து, அந்நான்கினுள்ளும் குற்றமானவற்றை அகற்றி, (நல்லனவற்றை) நிலைபெறும்படி செய்தல் உயர்ந்தவர் கடனாகும்.   

1) தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்
3) மூவர் தமிழும் 4) முனிமொழியும் 5) கோவை
திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலக வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் -  சித்தர் பாடல்கள்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்,  திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் அவிழ்வது எளிது.

குறிப்புரை: "திருக்குறளை விரும்பி ஓதி தெளிந்தவர்க்கு மறைநூல்கள் அனைத்தின் விளக்கம் கிடைப்பது எளிது" என்பதன் பொருள் திருக்குறள் என்னும் மறைநூலைஓதி உணர்ந்து விரும்புபவர்களுக்கு நான்மறை மறைநூல்களை ஒப்பு நோக்கினால் அவைகளிடம் ஓர் இணக்கப்பாட்டை காணமுடியும், அவைகள் ஒரே கருத்தை உரைப்பனவாகவும் இருக்கும், இதைக் கொண்டு மற்ற மறை நூல்களை அடையாளம் காணமுடியும் என்பதாம். எனவே தற்செயலாக குறளை கீதையுடனும், பைபிளுடனும், குர்ஆனுடனும் சிலர் ஓப்பு நோக்கி நூல்கள் எழுதி இருப்பதை காண முடிகிறது. 
 
தமிழர் சமயம் கூறும் நான்மறை பற்றியும், ஆறு சமயம் பற்றியும் முதல் மற்றும் வழி நூல் பற்றியும் அறிவோர் வேத மற்றும் சமய ஒப்பு நோக்கின் காரணத்தை அறிவர்.    
 

 இஸ்லாம்


“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (அல்குர்ஆன் 3:64
 

கிறிஸ்தவம் 


வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். - (ஏசாயா 1:18)

பச்சை குத்துதல் *

கிறிஸ்தவம் 


மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர். (லேவியராகமம் 19:28) 
 
மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். (வெளி 14:9

இஸ்லாம் 


அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று கூறினார்கள்... (ஸஹீஹுல் புகாரீ - தொடர் » 65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4886)

சவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி. 

மருந்து

இந்துமதம் 


உணவும் மருந்தும் எனது 

गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: || 15- 13||

கம் = பூமியில்
அவிஸ்ய = நுழைந்து
ச = மேலும்
பூதாநி = உயிர்களைத்
தாரயாமி = தாங்குகிறேன்
அஹம் = நான்
ஒஜஸா = சக்தியால்
புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்
ச = மேலும்
ஔஷதீ: = மருந்தாக
ஸர்வா: = அனைத்து
ஸோமோ = சாறாக, அமிர்தமாக
பூத்வா = ஆனபின்
ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்

பொருள்: நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் பலப் படுத்துகிறேன். மேலும் மருந்தாக அனைத்தின் சாரமாக ஆனபின் அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்.  - (கீதை - 15.13)
 

இஸ்லாம்


அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி : உஸாமாபின்ஷரீக் (ரலி), நூல் : அபூதாவூத் 3855, 3357, திர்மிதீ 1961) 
 

 கிறிஸ்தவம் & யூத மதம்


உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். - (யாத்திராகமம் 23:25
 


அத்தனைக்கும் ஆசைப் படலாமா?

தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உண்டாகும் ஆசை தீயகுணம் ஆகும், மட்டுமில்லாமல் அச்செல்வம் தீய வழிகளுக்கான வாசலை திறந்துவிடும்.

இவ்வகையான ஆசையை பேராசை, அவா, காமம், மோகம் என்று தமிழர் சமயத்திலும் நஃப்ஸ் என்று இஸ்லாமிய சொல்வழக்கிலும் கூறுவதுண்டு.

ஆசையின் தன்மை என்ன? அதன் விளைவு என்ன? இவ்வாறு ஆசைப்பட சொல்லும் நூல்களும் ஆசிரியர்களும் எப்படிப் பட்டவர்கள் என்று மறை நூல்கள் சொல்கிறது? என்று காண்போம்.

தமிழர் சமயம்


சை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்!
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்!
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்!
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே! (திருமந்திரம், 2615)

அழுக்கை அறுங்கள்; அழுக்கை அறுங்கள். பதவிக்காக அல்ல, ஈசனோடு சும்மா ஒட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும்கூட ஆசையை விட்டுவிடுங்கள். ஆசைப்பட்டீர்கள் என்றால், ஆசைப்பட்டதை அடையவும் அடைந்த இடத்தைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ளவும் படாத பாடுபட வேண்டியிருக்கும். அது மாபெரும் துன்பம். ஆசையை விட்டீர்கள் என்றால், ஏதோ ஒன்றை அடைய வேண்டுமே என்கிற துடிப்பும் அடைந்ததைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே என்கிற பொறுப்பும் இல்லாமல் விட்டு விடுதலையாகிவிட்ட பெரும் பேரின்பம்.

அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்வது உங்களை நீங்களே காணாமல் தொலைத்துவிடுகிற உலகியல் என்றால், ஆசையிலிருந்து நீங்கி, ஈசனுக்கும்கூட ஆசைப்படாமல் ஒதுங்கி, தானாய், தனியாய் நிற்பது உங்களை நீங்களே கண்டுபிடித்துக்கொள்கிற உயிரியல்.

  
நற்காட்சி வேண்டுபவை

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை
மெய்பெற இன்னவை நான்கு - 14.

 பொருள்: (இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி பொருள்களில்) ஆசையின்மை,(துறவோரிடம்)அருவெறுப்பு இன்மை, ( பிற சமயநெறிகளை நம்பும்) மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும்.

அவா இன்மை

தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்
வடுமாற்(று) அவாஇன்மை நற்கு- 18.

பொருள்: நிலையற்ற புலன் இன்பங்களில் பற்று வைக்காமை தான் பிறவியை ஒழிக்கும் நல்ல அவாமின்மை உறுப்பாகும்  
 
பொருள் வரைதல்

பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை
இருள்தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம். - 77

பொருள்: தேவைப்பட்ட பொருளையே வைத்திருத்தலும் , பொருளாசையை அடக்குதலும், பிறர்வழி பொருளைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவிரதமாம். 

தீயன கேட்டல்

மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொற்கேட்டல்
பாவச் சுருதி எனல் - 95.
 
பொருள்: ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் ‘பாவச் சுருதி’ எனப்படும்.
 

அறவுரையின் இன்றியமையாமை

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடை யார். - பாடல் 2

விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

அவா உடையார் ஆசிரியர் ஆகார் 

மாடமும் மண் ஈடும் கண்டுஅடக்கம் இல்லாரைக்
கூடி வழிபடும் கோளமை - ஆடுஅரங்கின்
நோவக மாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்றது உடைத்து. - பாடல் 53

விளக்கவுரை சிறிய வீட்டையும் பெரிய மாளிகைகளையும் பார்த்து அடங்காத ஆசை உடையவரைத் தலைப்பட்டு ஆசிரியர் எனக் கருதி வழிபடும் தன்மை, அமைக்கப்பட்ட நடன சாலையில் வருத்தம் உடையவனாய் நிற்பவனான கூத்தன் நடிக்க, அவன் கொண்ட அரச கோலத்தைக் கண்டு மயங்கி, அவனை ஊரார் தம்மை ஆள்க என்று சொல்லிப் பணி செய்து நிற்பதைப் போன்றதாகும்.

அவ்விநயம் ஆறு

அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர். - பாடல் 60

விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்

நற்காட்சிக்கு உரிய எட்டு உறுப்புகள் 

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்குஇன்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல் - மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கம் செய்தலோடு
என்றுஇவை எட்டாம் உறுப்பு. - பாடல் 68

விளக்கவுரை சந்தேகமும் ஆசையும் வெறுப்பும் மயக்கமும் என்ற இவை இல்லாமையும், பழியினின்று மனத்தை மீட்டலும், மன மொழி மெய்களை நல்ல நெறியில் நிறுத்துதலும், உயிர்களிடம் எப்போதும் மாறாத அன்புடைமையும், சிறந்த அறத்தைப் பலர்க்கும் செய்வதும் ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

காம எண்ணத்தின் கொடுமை

சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னைநீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கஒட்டாய் - ஓவாதே
கட்டுஅழித்துக் காமக் கடற்குஎன்னை ஈர்ப்பாயே
விட்டுஎழுங்கால் என் ஆவாய் சொல். - பாடல்  90

விளக்கவுரை மனமே! நீ கெடுவாயாக! கலக்கம் அடைந்த என்னை நல்ல நெறியில் ஒன்றிலும் நிற்கும்படி விடாமல் ஒழிவின்றி உறுதியைக் கெடுத்து, ஆசை என்னும் கடலுக்கு என்னை இழுக்கின்றாய். பொருளின் மீதுள்ள பற்றை விட்டு நான் எழும்போது நீதான் எந்த நிலையை அடைவாய் கூறுவாயாக!

உன்னை அடக்கினால் ஊரை அடக்கலாம் 

ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுஉரைப்பை யாகில் - கறுத்துஎறிந்த
கல்கறித்துக் கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லாப்
பல்கழல் நாய் அன்னது உடைத்து. - பாடல் 137

விளக்கவுரை என்னை ஊர்ந்து செலுத்தும் அவாவை அடக்கேன்; எனக்கு இடையூறு செய்யும் பிறரை அடக்குவேன் என எண்ணினால் நெஞ்சே! அது, கல்லால் தன்னை எறிந்தவரைச் சினந்து கடியாமல், அவர்களால் சினந்து எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழந்த நாயினது செயலை ஒக்கும்.

 உள்ளத்துத் துறவுடையார் மயங்கார் 

அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலாது ஆகும் அலைவுஇல்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே
மலம்கடிவு ஆளா தவர்க்கு. - பாடல் 147

விளக்கவுரை அலைகளையுடைய நீருள் நின்றாலும் தாமரைக்கொடியில் உள்ள இலையில் நீரானது ஒட்டி நில்லாது. (அதைப் போன்று) சஞ்சலத்தைத் தரும் ஐம்பொறிகளுடன் கூடியிருந்தாலும் துறவிகளை அழிவைத் தரும் ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா. அவர்களும் மறதியால் அவற்றின் பிடியில் சிக்குதல் இல்லை.

பற்றற்றால் வீடுபேறு கிட்டும் 

அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
விழைவு இன்பத் தால்வளரும் காமம்அக் காம
விழைவுஇன்மை யால்வளரும் வீடு. - பாடல் 195

விளக்கவுரை துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்வதால் அறமானது வளரும். முயற்சியால் பெருவாழ்வு உண்டாகும். எக்காலத்தும் செல்வத்தால் செல்வமானது பெருகும். மயக்கம் தரும் சிற்றின்பத்தினால் ஆசை பெருகும். ஆசையை விடுவதால் வீடுபேறு கிட்டும் 
 

இஸ்லாம் 

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. (குர்ஆன் 3:14)

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (குர்ஆன் 57:20)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது. (அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-5292)

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (அறி : அபூதர் (ரலி), நூல் : புகாரி-2388)

அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். (மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் : முஸ்லிம்-5668)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் ‘என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். உடனே அந்த நபரிடம், ‘என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!’ எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, ‘நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன… பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ… அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்” எனக் கூறினார்கள். (புஹாரி :1465 அபூஸயீத் அல்குத்ரி ரலி)

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1) இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2) நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 6420 அபூஹுரைரா ரலி)

கிறிஸ்தவம்   

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - (1 தீமோத்தேயு 6:10)

‘பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான். - (உபாகமம் 5:21)

அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான். (நீதிமொழிகள் 5:23)

சோம்பேறி மேலும் மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும். - (நீதிமொழிகள் 21:25-26)

ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள். - (நீதிமொழிகள் 27:20)


காரணமின்றி மரங்களை வெட்டாதே

தமிழர் சமயம்


பயனில் செயல்

பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயம்இல் பமாதம் எனல். - (அருங்கலச்செப்பு 93)

 பொருள்: காரணமிண்றி தாவரங்களை அழிப்பதும் , பூமியை அகழ்வதும் பயனற்ற ‘பிரமாதம்” எனப்படும். 
 

இஸ்லாம்


முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்களிடையே) எழுந்து நின்று, 'அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த போதே மக்காவைப் புனிதப்படுத்திவிட்டான். எனவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போரிடுதல் அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது'' என்று கூறினார்கள். உடனே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறதே'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, 'இத்கிரைத் தவிரத் தான் ஏனெனில், அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி தமிழாக்கம் அத்தியாயம் 64/2 (நபிகளார் காலத்துப்) போர்கள் 4313)
 
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி))

"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.

இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.

கிறிஸ்தவம் & யூதமதம் 


“நீ நெடுங்காலமாக ஒரு நகரத்தை முற்றுகையிட்டு, அதைக் கைப்பற்றுவதற்காக அதற்கு எதிராகப் போர் செய்து, அதன் மரங்களுக்கு எதிராக கோடாரியைக் காட்டி அழிக்கக் கூடாது. நீங்கள் அவற்றை உண்ணலாம், ஆனால் அவற்றை வெட்ட வேண்டாம். உன்னால் முற்றுகையிடப்பட வேண்டிய வயலில் உள்ள மரங்கள் மனிதர்களா? - (உபாகமம் 20:19)

பூமியில் உள்ள புல்லையோ, பசுமையான செடிகளையோ, மரங்களையோ சேதப்படுத்தக் கூடாது என்றும், ஆனால் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. - (வெளிப்படுத்துதல் 9:4

உங்களுக்குத் தெரிந்த மரங்கள் மட்டுமே உணவுக்கான மரங்கள் அல்ல, நீங்கள் அழித்து வெட்டலாம், உங்களுடன் போரிடும் நகரம் விழும் வரை முற்றுகைகளைக் கட்டலாம். -  (உபாகமம் 20:20)