வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

ஆம், வேதம் ஓதி வீடுபெறலாம்.

தமிழர் சமயம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பதவுரை: நண்ணல் - நெருங்குதல் 
 
பொழிப்புரை: மூலன் உரைசெய்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் காலையில் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் உலகத்தின் தலைவனை நெருங்கலாமே. 
 
இஸ்லாம்

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் (மறுமையில் செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படும்) நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்)

இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழி தவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி)

கிறிஸ்தவம் & யூதமதம் 

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். - (சங்கீதம் 1:2-6) 

 

ஆனால் ஓதினால் மட்டும் போதாது, பிறருக்கும் கூற வேண்டும் 

கிறிஸ்தவம்யூதமதம்  
 
இயேசு கூறினார் “ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்" (மத்தேயு 5:19,20)

தமிழர் சமயம்


யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147) 
 
பொருள்"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."  
 
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.   
 

இஸ்லாம்

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)  
 
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44) 
 
ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -  (குர்ஆன் 103:3) 

பிறருக்கு உபதேசித்தல் மட்டும் போதாது, நாமும் அது கூறும் அறத்தின் படி வாழ வேண்டும்!

தமிழர் சமயம்

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

பொருள்: அரு மறை –  மறை நூல்களை; சோரும் – கடைபிடிக்காது தவறும்; அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்; செய்யும் – செய்து கொள்வர்; பெரு மிறை – பெரிய துன்பத்தை; தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
 பேதையார் இல். - (திருக்குறள் : பொருட்பால் : பேதைமை 834)

பொருள்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அதை செய்யாத பேதையார் போலப் பேதையார் உலகத்தில் இல்லை

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக. - (குறள் 391)
 
பொருள்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! - (சிவவாக்கியம் 140)

வேதம் உரைத்தானும் ஆகிலன்
வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. - (திருமந்திரம் 3. வேதச் சிறப்பு - 2)

பொருள்: வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி ("வேள்விஎன்பதற்கு அறச்செயல் என்று பொருள்) செய்வதற்காக, உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

இஸ்லாம்

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44)

நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகி விட்டது. (குர்ஆன் 61:3)

நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” -  (குர்ஆன்  2:38

கிறிஸ்தவம்

இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8)

பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(மத்தேயு 23:1-3)

ஏனென்றால் வேதத்தை விட்ட அறமில்லை!

கிறிஸ்தவம் 


அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)   

தமிழர் சமயம்  


வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.  

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. (திருமந்திரம் பாடல் எண் : 52)

பொருள் : வேதத்தை ஒத்துகின்றவன் வெஹியான் அல்ல, வேதத்தை ஓத வேண்டும் அதை விளங்கி கொள்வதற்கு, வேதத்தை ஓதி அதை செயல் படுத்தவேண்டும், இதுதான் வேதம் உரைத்தல் என்பதன் மெய்ப்பொருள் ஆகும்.

இஸ்லாம்  

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது. (திருக்குர்ஆன் 16 : 64)

முடிவுரை


வேதத்தை ஓதி மட்டும் வீடுபேறு அடைய முடியாது ஏனென்றால் வேதம் வழங்கப்பட்ட காரணம் அதை ஓதி அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகவே. எனவே நாம் ஓதும் வேத பாடல்களின் வசனங்களின் பொருள் உணராமல் ஓதுதல் ஆகாது.  எனவே ஓதுதல் மட்டும் நோக்கமல்ல, ஓதுவதை புரிந்து நாமும் அதன்படி வாழ்ந்து பிறர்க்கும் உபதேசிப்பது நோக்கமாகும்.


ஓதி, உணர்ந்து, பிறர்க்கு சொல்லி, தானும் கடைபிடிப்பவன் வீடுபேறு அடைவான்!

வேதத்தில் ஒன்றை பின்பற்றி ஒன்றை விட அனுமதி இல்லை! *

கிறிஸ்தவம் 

ஒருவன் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, ஒரேவொரு கட்டளையை மட்டும் மீறினால், அவன் எல்லா கட்டளைகளையும் மீறியவனாக ஆகிவிடுவான். - (யாக்கோபு 2:10)

இஸ்லாம் 

நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கிறவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. (குர்'ஆன் 2:85)

(நபியே!) ...பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்...” - (குர்ஆன்13:36) 


தமிழர் வேதம்



வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். -  (தொல்காப்பியம் மரபியல் 640)

என்-னின் நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (96)

1. வினை என்பன இருவினை. `இன்' நீக்கத்துக்கண் வந்தது. `விளங்கிய அறிவு 'என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவின் என நின்ற 'இன்' சாரியை இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவன் எனப்படும். முன்னோனை முனைவன் என்பது ஓர் சொல் விழுக்காடாம். (தொல்.பொருள்.649.பேரா)

முனைவனால் செய்யப்படுவதோர் நூல் இல்லை என்பார் அவன் வழித்தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பால் பொருள்கேட்டு முதனூல் செய்தார் எனவும் அம்முனைவன் முன்னர் ஆகமத்துப்பிறந்தோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவர் எனவும் அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலும் சார்பு நூலும் எனப் பலவுஞ் செய்தார் எனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்தநூல் அன்மையின் அவை தேறப்படா.... அவை தமிழ்நூல் அன்மையின் ஈண்டு ஆராய்ச்சி இல என்பது.

மற்று மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெரிதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின் தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராதலின் தாமே தலைவராயினார். நூல்செய்யின் முதனூலாவதெனின் அற்றன்று தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலகாரலின் தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதனூல் என்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமான் அடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் 'வினையினீங்கி விளங்கிய அறிவினான் ' முதனூல் செய்தான் என்பது அறிவித்தற்கும் இது கூறினான் என்பது. எனவே அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம்.(தொல்.பொருள்.649.பேரா.)

641 வழியெனப் படுவ ததன்வழித் தாகும்.

என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு.
அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (97)

642. வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்

643 தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே.

என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

இது வழிநூலா னாயபயன். (99)

1. இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இதுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொல்.பொருள்.652.பேரா.)

 நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - திருமந்திரம் 135.

(ப. இ.) ஆலமர் செல்வனாம் நந்தியெங் கடவுளின் திருவடியினைத் தலைமேற் கொண்டு, கொண்டவாறே இறுப்பு மெய்யாம் புத்தியின்கண் நிலைபெறச் செய்து செந்தமிழ்ப் போற்றித்தொடர் புகன்று வழிபட்டு வளரும் மதியினைப் புனைந்த திருச்சடையினை உடைய சிவபெருமானை நாடொறும் உள்ளத்தின்கண்ணே நாடி உயிர்க்கு உறுதி பயக்கும் செந்தமிழ்ச்சிவாகமம் மொழியலுற்றேன் என்பதாம். ஆகமம் - இறைவன் நூல். ஆவி நிறைவாம் முறைநூல் எனவும் படும். ஆ - ஆவி. கமம் - நிறைவு. புந்தி - அறிவு. சிந்தை செய்து - இடையறாது நாடி ஆகமம் - தமிழாகமம். ஆகமம்: ஆவியின் அறிவை நிறைவிக்கும் நூல்.

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - திருமந்திரம் 138. 

(ப. இ.) திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! சிவவுலகை நீங்கி ஓங்கிய தென்தமிழ் நாட்டகத்துக்கு அருள் என்னைக் கொண்டுவந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் திருமலைக்கண் அழகிய நீலவண்ணத் திருமேனியும், நேரிய பொன்மணி அணிகளும் பூண்ட அம்மையுடன் திருவைந்தெழுத்தே திருவுருவாகக் கொண்டு ஒலிமுடிவாம் நாதாந்தத்துச் செய்தருளும் திருக்கூத்தின் அடிப்படை யுண்மைக் காரணங்களை மொழிந்தருளினன். அத்தகைய அருளொழுக்கு நிறைந்த தமிழ்முறையினை வேதமெனவும் சிவாகமம் எனவும் கூறுப. அதைச் செப்புதற் பொருட்டே யான் வந்தேன். நீலாங்கம் - கரிய அழகிய. மூலாங்கம் - அடிப்படை யுண்மைக் காரணங்கள். சீலம் - ஒழுக்கம்.

(அ. சி.) நீலாங்க . . . . . வேதம் - தமிழ் நான்மறை. (அறம் - பொருள் - இன்பம் - வீடு.)

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே. - திருமந்திரம் 145. 

(ப. இ.) சிவபெருமான் திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்கண்ட மேலோர் உள்ளத்தில் அமையும் நூல்களில் தலைமையாக இறைவன் எழுப்ப முறையாக எழுந்து ஓதப்பெறும் ஒண்தமிழ் மறைமுறையாகிய முன்னை வேதாகமங்களை யொப்பச் சொல்லையும் பொருளையும் அடியேற்கு உள்நின்று அத்தன் அருளால் உணர்த்தியருளினன்.

(அ. சி.) உடல் - சொல் - உற்பத்தி - பொருள்.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149. 

(ப. இ.) அருளோனாகிய சதாசிவக் கடவுள் அருளிச் செய்த என்றும் மாறா மெய்ம்மை மறை முப்பொருள் தேற்றும் தமிழ்மறை. ஒருபுடையாக முத்தமிழினை முறையே உயிர் உள்ளம் உடல் என உலகியலிற் கொள்ளலாம். முத்தமிழ்: இயல் இசை கூத்து. அவற்றையே வீட்டியலிற் கொள்ளுங்கால் இறை உயிர் தளை எனக் கொள்ளுதல் சாலும். இத்துணை நாளும் அளவாயுண்ணும் அமைவுடையவனாக விருந்தேன். முத்தமிழ் வேதத்துக்கு உறைவிடமாக உள்ளத்தினையே அமைத்தேன். அம் மறையினைப் புறக்கணிக்காது திருவருளுடன் கூடியுணர்ந்தோம். மிதாசனி - மித + அசனி: அளவாயுண்போன். இதாசனி - உள்ளத்தை உறைவிடமாக நல்கியோன்.

(அ. சி.) சதா . . . வேதம் - படைப்புக் காலத்தில் சதாசிவனுடைய தத்துவமாகிய சாதாக்கிய தத்துவத்தினின்றும் வெளிப்பட்ட தமிழ் வேதம்.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
   
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
   
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

அரு மறை – அரிய வாழ்வியல் செய்திகளைக் கூறும் நீதி நூல்களைச் (வேத)
சோரும் – கடைபிடிக்காது தவறும்
அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்
செய்யும் – செய்து கொள்வர்
பெரு மிறை – பெரிய துன்பத்தை
தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவா ரில் - (நாலடியார், பொருட்பால், 14. கல்வி 140)

(பொ-ள்.) அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் - அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது,
கலகல கூம் துணையல்லால் - கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால், 
கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாண்டும் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)

நூற்பா விளக்கம்: உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி ஆகும். (மறை என்பது உலக நிகழ்வை விடுத்து தனித்து நிற்பதல்ல என்பது இதன் மூலம் தெளிவு)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி 40

(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.