நாம் ஏன் அடுத்தவர்களை குறை கூறுகிறோம்? காரணமென்ன?

 நாம் நம்மை குறையற்றவர்களாக கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று பலநேரங்களில் நாமே உணர்கிறோம்.

மனிதர்கள் எல்லோரும் பாவம் (அ) தவறு செய்பவர்கள் தான் என்று உணர வேண்டும்.

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். - யோவான் 8:7

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274)

அதை உணர்ந்தால் மற்றவரை குறைகூறுவது குறைந்துவிடும்.

நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மேலும் குறை கூறினால் நமக்கு என்ன நடக்கும்?

குறை கூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்'' குர்ஆன் (104:1)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் - 
குறள் 186

விளக்கம்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா?

முகமதுவும் இயேசுவும் வருவதை சித்தர்கள் கணித்தார்களா? ஆம் என்றால் தமிழர்களாகிய நாம் ஏன் அவர்களின் குரான் மற்றும் சுன்னாவைப் பின்பற்றுவதில்லை?

இயேசு வருவதை முன்கூட்டியே எந்த சித்தரும் சொன்னதில்லை.. அது தேவையும் இல்லை. ஏனென்றால் இயேசு யூதர்களுக்கு மட்டும் வந்ததவர்.

அதற்கு இயேசு, "நான் இஸ்ரேலின் காணாமல் போன ஆடுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார். (மத்தேயு 15:24)

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)

ஆனால் முகமது தான் உலகம் முழுமைக்கும் வந்த தூதராக கூறினார்.

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 34:28)

மேலும் அவர் வருவதை முன்னமே உலக வேதங்கள் கூறுவதாக குர்ஆன் கூறுகிறது.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை [முகம்மதை] அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - (குர்ஆன் 2 :146)

உலகில் உள்ள வேதங்களை போல, தமிழர் வேதமும் அவரின் வருகையை பேசுகிறது.

பகவர்க்கு ஏதாகிலும் பண்பு இலர்ஆகிப்

புகுமத்தராய் நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஓத்து நின்ற ஊழி தோறூழி

அகமத்தராகி நின்று ஆய்ந்து ஓழிந்தாரே - (திருமந்திரம் பாடல் - 1865)

பதவுரை

பகவர்-க்கு - (பகவன், பகவர்) மனிதர்க்கு, அடியார்க்கு

ஏதாகிலும் - எது ஆகினாலும்

பற்று இலர் ஆகி - விருப்பு வெறுப்பு இன்றி

புகுமத்தர்-ஆய் - அதிக உற்சாகம் உள்ளவன்

நின்று - நின்று

பூசனை- அன்றாட இறை வணக்கம்

செய்யும் - செய்யக்கூடிய

முகமத் - ஓடு - முகமத் உடன்

ஒத்து - சேர்ந்து, இணங்கி

நின்று - நின்று

ஊழி தோறூழி-ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவர்

அகமத் - தராகி - அகமத் தராகி

நின்று - நின்று

ஆய்ந்து - தெரிந்தெடு, களைந்து எடு, ஆராய்; நுட்பமாய்ப் பார்

ஒழிந்தாரே - நீக்கினார்

விளக்கம்: அடியார் அவர்க்கு எது ஆகினாலும் விருப்பு வெறுப்பின்றி அதிக ஈடுபாட்டோடு நின்று அன்றாட இறை வணக்கம் செய்யக்கூடிய முகமத் உடன் சேர்ந்து நின்று ஊழி தோறூழி செய்து அகமத் தராகி நின்று ஆய்ந்து நீக்கினார்.

குறிப்பு: மேற்சொன்ன பாடல்கள் முழுவதும் முகமது நபி அவர்களை பற்றிய தீர்க்க தரிசனமாகும். இதில் பயன்படுத்திய வார்த்தை முகத்தை பற்றியும் அகத்தை பற்றியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்னும் பெயரல்ல என்போர் சிலர். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொகாப்பியத்தின் சொற்களுக்கான புணர்ச்சி விதிப்படி, முகம்+அது+ஓடு = முகமதோடு என்றும் அகம்+அது+ராகி = அகமதராகி = என்றுதான் இடம்பெற முடியுமே தவிர "முகமத்" அல்லது "அகமத்" என்று இடம்பெறாது. முகமத்+ஓடு=முகமத்தோடு என்றும் அகமத்+தராகி=அகமத்தராகி என்பதே சரியான பகுப்பு. எனவே இது தெளிவாக முகமது நபியை பற்றிய முன்னறிவுப்புதான் என்று கூறலாம்.

ஆனால் தமிழர்கள் ஏன் அவரை வாசிப்பதோ பின்பற்றுவதோ இல்லை?

  • ஒரு சமயத்துக்கு வேதம் தான் அடிப்படை என்று அறியாதார் பலர் அதாவது வேதமல்லாமல் ஒரு சமயம் தோன்றவோ நிலைக்கவோ முடியாது என்ற அடிப்படையை அறியாதார் பலர்.
  • தமிழில் வேதம் இருப்பதை அறியாதார் பலர்
  • சமஸ்கிருத வேதத்தை ஏற்றோர் பலர்
  • அறிந்தவர்கள் கூட அதற்கு பார்ப்பனர்களின் பொழிப்புறையை வாசிகின்றனர் அதாவது தமிழ் வேதத்துக்கு சமஸ்கிருத வேதத்தை மட்டுமே வேதம் என்று நம்புவோரின் பொழிப்புரையை அல்லது புராணங்களை நம்புவோரின் பொழிப்புரையை வசிக்கின்றனர். அவர் எப்படி சரியான பொழிப்புரை கொடுப்பார் அல்லது கொடுக்க முடியும்?
  • நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற அறிவு இல்லாமல் சமஸ்கிருத வேதங்களை நால் வேதம் என்று கருதுவோர்.
  • வேற்று மொழியில் உள்ள வேதத்தை அதாவது அரபியில் உள்ள வேதத்தை தனதாக ஏற்க மறுப்பது. அடிப்படையில் அவ்வாறு ஏற்க்க தேவை இல்லை ஆனால் அவரவர் மொழியில் உள்ள வேதத்தில் தான் அடுத்த குருவை அறியும் வழிகாட்டுதல் உண்டு. அதை கற்காததும் ஏற்க்காததும் இந்த நிலையில் தான் மனிதனை விடும். குறிப்பு: இது சமஸ்கிருதத்தில் உள்ள வேதத்துக்கு பொருந்தாது என்பதை நான்மறை தத்துவத்தை திருமந்திரத்தில் வாசித்தால் புரியலாம்.
  • எவ்வித ஆன்மீக அக்கறையும் இல்லாமல் அதாவது சரி பிழை எதையும் பற்றி கவலைப்படாமல் தற்காலிக நன்மை, பொருளாதாரம், பெருமை ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செயல்கள் செய்யப்படுகிறது.
  • உதாரணமாக, வேதம் என்பது வாழ்வில் சோதனை ஏற்படும், நன்மை தீமை இரண்டும் மனிதனுக்கு ஏற்படும், எந்த துன்பத்திலும் நன்மையே செய்ய வேண்டும், நிலையாமை வாழ்க்கையின் அடிப்படை, அன்றாட வாழ்வில் இது இது சரி, இதெல்லாம் பிழை என்று வரையறுத்தி கூறுவதுடன் பல எதார்த்தங்களை சத்தியத்தை பேசும் ஆனால் ஜோதிடம் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டுமா? வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமா இதை இதை செய்யுங்கள் என்று கூறும். எனவே இறைவன் மனிதனுக்கு கொடுத்த வலிகட்டுதல்களான வேதத்தை விட்டு ஜோதிடத்தை நம்புவது எளிமையாக உள்ளது. இவர்கள் நம்பும் ஜோதிடம் 100இல் ஒரு முறை நடந்தால் கூட, அதைத்தான் நம்புகிறார்கள். அதே போல தமது மொழியில் உள்ள வேதத்தை விட்டு இதிகாச புராணங்களை நம்புகிறார்கள்.
  • தற்காலத்தில் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் ஆன்மீகத்தை மக்கள் ஏற்று நடக்கின்றனர். இரண்டும் அடிப்படையிலே முரனானது. எனவே அவர்களது ஆன்மீகம் ஏற்க்கதகுந்தது அல்ல என்கிற அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கின்றனர்.

சுருக்கமாக மக்கள் உண்மையை புரிந்துகொள்வதை தடுக்க என்னவெல்லாம் வழிகள் உள்ளதோ அத்தனையும் மக்கள்மீது ஒரு யுத்தம் போல தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த உண்மைகளை ஆய்ந்து தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் எழுதும் நம்க்கு வரும் விமர்சனங்களும் வசைச்சொல்லும் ஒன்று இரண்டு அல்ல. ஆனால் இதை ஏற்ப்பதில் யாருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் வாசித்து பெறட்டும்.

நா காக்க

தமிழர் சமயம் 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் 127)

விளக்கம்: எவற்றைக் காக்கா விட்டாலும் நாவை காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

கிறிஸ்தவம் 

மரணமும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் உள்ளன, அதை விரும்புவோர் அதன் கனிகளை உண்பார்கள். ( நீதிமொழிகள் 18:21)

இஸ்லாம் 

 யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்ம ஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்கம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

சிவராத்திரி என்றால் என்ன?

சைவம் பொறுத்தவரை வணக்க வழிபாடுகள் அனைத்தும் சைவ ஆகம விதிப்படிதான் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் அறிவோம்.

எந்த சைவ ஆகமத்தில் சிவராத்திரி பற்றி, என்ன குறிப்பிடப் பட்டுள்ளது என்று அறிய விரும்புகிறேன். ஏனென்றால் சிலர் எழுதிய கட்டுரைகளில், சிவனே நேரடியாக சிவராத்திரி பற்றி கூறியதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறி உள்ளனர்.

முதலில், சிவராத்திரி என்றால் என்ன? இதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.

கருத்து 1:

கருத்து 2:

கருத்து 3:

கருத்து 4:

கருத்து 5: 


மேலே குறிப்பிட்டுள்ள எந்த கதையும் சிவா ஆகமமான தேவாரம், திருவாசகம் மற்றும் திருமந்திரத்தில் குறிப்பிட்டவைகள் அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் பாடல்களை குறிப்பிட்டு இருப்பார்கள்.

சிவன் யார்? எப்படிப்பட்ட பண்புகளையும் உருவ அமைப்பையும் கொண்டு உள்ளான் என்று சிவ ஆகமத்தில் ஒன்றான திருமந்திரம் கூறுவதை பார்ப்போம்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)

பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன்.

சிவனுக்கு யாரும் உரை செய்ய முடியாது. இந்த கருத்தை நாம் எப்படி புரிந்துகொள்வது? சிவன் உருவத்திலும் ஆற்றலிலும் இவ்வாறு இருப்பான் என்று மனிதர்கள் யாரும் யாரும் வரையறை கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுக்கும் வரையறைகள் பிழையானவை. ஏனென்றால் சிவனை கண்டவர் யாரும் இல்லை.

எனவே சிவனை நாம் அறிந்துகொள்ள சிவ ஆகமம் கூறும் வரைவிலக்கணங்கள் தான் சரியான அணுகுமுறை. சிவனை பற்றி பின்வரும் பாடல் கூறும் கருத்தை காண்போம்.

சிவன் லிங்கத்தில் இல்லை

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

- (திருமந்திரம் - 7ம் தந்திரம் - 11 சிவபூசை 1)

சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

சிவன் பாலினமற்றவன் எனும் செய்தி அவன் துணைவியை கொள்ள தேவையற்றவன் என்ற கருத்தை கூறுகிறது. அந்த வகையில் அவனுக்கு மகன்கள் இருக்க முடியாது.

சிவன் ஒருவனே கடவுள்

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)

சிவன் ஈடு இணையற்றவன்

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)

மேற்சொன்ன இரு கருத்துக்களும் கூறவருவது என்னவென்றால், அவனுக்கு இணையாக கூறப்படும் பிரம்மன் விஷ்ணு போன்ற கதாபாத்திரங்கள் ஒன்றே இல்லை என்பதாம்.

இந்த வரையறைகள் சிவராத்திரிக்கு கூறும் அனைத்து கருத்துக்களையும் மறுக்கிறது. ஏனென்றால் சிவனுக்கான சிவாகமம் கூறும் இந்த வரையறைகளோடு சிவராத்திரி கதைகளில் கூறப்படும் சிவன் பாத்திரம் முரண் படுவதை நீங்கள் அறியலாம்.

சரி நாங்கள் இதை கொண்டாடுவதால் சிவன் என்ன கோபித்து கொள்ள போகிறானா? இல்லை ஆனால் ஈசன் யார் என்று அறியாமல் நாம் செய்யும் அனைத்தும் வீண் என்று சிவ ஆகமம் கூறுகிறது.

காலை சென்று கலந்துநீர் மூழ்கில்என்?

வேலை தோறும் விதிவழி நிற்கில்என்?

ஆலை வேள்வி அடைந்துஅது வேட்கில்என்?

ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே! (தேவாரம் 5:99:5)

என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். காலையில் எழுந்ததும் நீராடி விட்டால் சரியாகிவிடுமா? செய்ய வேண்டிய கருமங்கள் எல்லாவற்றையும் விதிப்படிச் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஒரு வேள்விச் சாலைக்கு உரிமை பெற்று வேள்விகள் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஈசனே இறைவன் என்று அறிந்து ஒழுகாமல் எதுவும் சரியாகாது.

எனவே சிவராத்திரி என்பது சிவ ஆகமம் கூறும் சிவனின் வரையறைகளுக்கு முரணாக உள்ளது,மேலும் அது சிவனால் அவனது ஆகமத்தில் கூறாத ஒரு நடைமுறை அல்லது விழா ஆகும். 

ஆகம் கூறாத ஒன்று அன்றைய போலிசாமியார்களால் ஏற்படுத்தப் பட்டது, இன்றைய போலி சாமியார்களால் வியாபாரம் செய்யப் பயன்படுத்தப் படுகிறது. 

உலகின் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு இணையான நூல் எதுவும் உள்ளதா?

எமது கோணமும் பதிலும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் சத்தியம் நிறைந்தது.

உலகின் பொதுமறை என்று திருக்குறளை யார் முதன் முதலில் அழைத்தது என்று தெரியவில்லை. எந்த சங்க நூலிலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. தமிழின் மீள் எழுச்சிக்கு பிறகு அதாவது கடந்த நூற்றாண்டில் பலர் இவ்வாறு கூற கேள்விப்படுகிறோம். காரணம் அதில் சொல்லப்படும் அறங்கள் அனைத்தும் ஞாலம், உலகம் முழுமையையும் குறிப்பிட்டு கூறப்படுவதால் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம். மேலும் எந்த கடவுளின் பெயரையும் தனியாக குறிப்பிடாமல் கடவுள், இறைவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று பண்புகளை குறிப்பிட்டு பொதுப்படையாக பேசுவதால் கூட இருக்கலாம்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் குறளின் சுருக்கமான ஆத்திசூடியும், குறளின் விரிவுரையான நாலடியாரும் உலகப் பொதுமறை என்று அழைக்கப்பட வேண்டுமே?

திருக்குறள் உலகப் பொதுமறை என்றால் தேவாரமும், திருவாசகமும், திருமந்திரமும், உலக நான்மறைகள் அனைத்தும், சித்தர்கள் நூல்களும் உலகப்பொதுமறையாக இருத்தல் வேண்டுமே? ஆதாரம்?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

திருக்குறள் சிறந்த நூல், மறை நூல் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உலகப்பொதுமறை என்று அதை மட்டும் குறிப்பிடுவதை விட உலகில் உள்ள அனைத்து நூல்களையும் உலகப்பொதுமறை என்று அழைப்பதுதன் சரியான வாதம் ஆகும்.

ஆனால் திருக்குறளையும் மேலே குறிப்பிட்டு உள்ள நூல்களையும் மறைநூல்களாக அதாவது வேதமாக ஏற்க்காதோர் பலர் உண்டு. இந்து என்ற பெயரில் அவர்களை பின்பற்றுவோர் தான் இங்கே அதிகமாக உள்ளனர். இவைகள் ஞானம் தரும் மறைநூல்கள்கள், வாழ்க்கையின் பிரச்னைக்கு தீர்வு தரும் நூல்கள், மன அமைதிக்கு வழி தரும் நூல்கள், படித்தால் புரியும் நூல்கள் எனபதை அவர்கள் உணர்வதில்லை.

இதனை நாம் படிக்காததால் ஏற்படும் ஒரே ஒரு நஷ்டத்தை கூறுகிறேன், மற்றதை நீங்களே கணித்து கொள்ளுங்கள். சைவம் தமிழரின் சமயம், சிவன் தமிழின் கடவுள், சிவ ஆகமங்கள் தமிழில் மட்டும்தான் உள்ளது ஆனால் நம்மவர்கள் வடக்கில் உள்ள காசிக்கு செல்கின்றனர். திருமந்திரம் கொண்ட நாம், சிவாகமம் இல்லாத அவர்கள் எழுதிய அமரகோஷ் நாவலை நாம் படித்து கொண்டு இருக்கிறோம். வேடிக்கை.

குறளுக்கு இணையான நூல்கள் தமிழில் மட்டுமல்ல, உலகில் வெவ்வேறு மொழிகளிலும் உண்டு. அதை அறியாமல் (அ) காழ்ப்புணர்வுடன் (அ)  தற்பெருமை கொண்டு நாம் அதை ஏற்பதில்லை, அவ்வளவுதான்.